
கருவளர்சேரி அகஸ்தீஸ்வரர் கோவில்
மழலைச் செல்வம் அருளும் அகிலாண்டேஸ்வரி
மண்ணால் ஆன சுயம்பு திருமேனி உடைய அம்பிகை
திரையிடப்பட்டு இருக்கும் அம்பிகையின் பாதி திருமேனி
கும்பகோணம் - வலங்கைமான் பாதையில் மருதா நல்லூரில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது கருவளர்சேரி. இறைவன் திருநாமம் அகஸ்தீஸ்வரர். இறைவியின் திருநாமம் அகிலாண்டேஸ்வரி. இக்கோவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. அகத்திய முனிவர் சிவலிங்க பிரதிஷ்டை செய்து, தனது மனைவி லோப முத்திரையுடன் வழிபட்ட தலம் இது.
இத்தலத்து அம்பிகை அகிலாண்டேஸ்வரி மண்ணால் ஆன சுயம்பு திருமேனி உடையவள். அதனால் அம்பாளுக்கு இங்கு அபிஷேகம் கிடையாது. அர்ச்சனை மூல ஸ்ரீ சக்ர மகா மேரு மற்றும் ஸ்ரீ சக்ரத்திற்கும் செய்யப்படுகிறது. இப்படி மண்ணாலான சுயம்பு திருமேனி உடைய அம்பிகையை நாம் வேறு தளத்தில் பார்ப்பது அரிது. மேலும், அம்பாளின் முழு உருவத்தை சிவராத்திரி மற்றும் நவராத்திரியின் ஒன்பது நாட்களில் மட்டுமே நாம் காண முடியும். மற்ற நாட்களில் அம்பாளின் பாதி உருவம் மட்டுமே பார்க்கும் அளவிற்கு திரையிடப்பட்டு இருக்கும். அதாவது சாதாரண நாட்களில் நாம் அம்பிகையின் முகத்தை மட்டுமே தரிசிக்க முடியும்.
அகிலாண்டேஸ்வரி கரு வளர்க்கும் நாயகி என்று அழைக்கப்படுகிறார் - கரு வளர அருள் புரியும் தெய்வம். கருவில் இருக்கும் சிசுவிற்கு வளர்ச்சி வரம் தருகிறாள். இத்தலத்துக்கு அருகாமையில் உள்ள புகழ் பெற்ற திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை கோவிலை இந்த ஆலயம் நிறைவு செய்கிறது. கருவைக் காக்கும் தெய்வம் கர்ப்பரட்சாம்பிகை. அந்த அம்பிகை கருவில் இருக்கும் சிசுவிற்கு பாதுகாப்பு அருளுகிறாள். இதனால் கர்ப்பிணிகளுக்கு ஒரு புனித தலத்தில் (கருவளர்சேரி) வளர்ச்சியும், மற்றொரு இடத்தில் (திருக்கருகாவூர்) பாதுகாப்பு வரமும் கிடைக்கும்.
கருவளர்சேரி திருத்தலத்துக்கு வந்து அகிலாண்டேஸ்வரி அம்பிகையை வழிபடுவோருக்கு குழந்தை வரம் கிடைக்கும் என்பது ஐதீகம். மேலும் கர்ப்பம் தரித்த பெண்களும் இங்கு வந்து வழிபடுவதால், சிக்கலற்ற பிரசவம் நடக்கும். திருமணமாகி வெகுநாட்களாகியும் குழந்தையில்லாமல் ஏங்கும் பெண்கள் இக்கோவிலுக்கு வந்து அன்னையை மனமுருக வேண்டி, படி பூஜை செய்து, நெய் தீபம் ஏற்றி வழிபடவேண்டும். வழிபாட்டுக்குப் பின் சன்னிதியில் பூஜை செய்த மஞ்சள் கிழங்கினை வாங்கி வந்து, தொடர்ந்து பூஜித்து வர வேண்டும். இங்கு தரப்படும் மஞ்சள் பிரசாதம் சக்தி வாய்ந்தது. இப்படிச் செய்தால், தடைகளை எல்லாம் நீக்கி, கருவளர் நாயகி மகப்பேற்றை அருள்வாள் என்பது பக்தர்களின் நம்பிக்கை. கர்ப்பிணிகளும் இந்த பூஜையை செய்து பயன்பெறலாம். பூஜை செய்து வழிபட்டுச் சென்ற பெண்கள் சில மாதங்களிலேயே கருவுற்று, மீண்டும் இக்கோவிலுக்கு வந்து தொட்டில், தங்களுக்கு வளைகாப்பு நடைபெறும்போது கொடுக்கப்படும் வளையல் ஆகியவற்றை தங்கள் நேர்த்திக்கடனாக சமர்ப்பிக்கிறார்கள்.
மேலும், கருவளர்சேரிக்கு வந்து சுவாமி தரிசனம் செய்யும் அனைவரின் உடல் ரீதியாக உள்ள தோஷங்கள் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

கீழ கபிஸ்தலம் ஏகாம்பரேசுவரர் கோவில்
திருமண வரம் வேண்டி அம்பிகைக்கு சாற்றப்படும் கண்ணாடி வளையல் மாலை
தஞ்சாவூர் - கும்பகோணம் நெடுஞ்சாலையில் உள்ள பாபநாசம் என்ற ஊரிலிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது கீழ கபிஸ்தலம் ஏகாம்பரேசுவரர் கோவில். திவ்ய தேசமான கபிஸ்தலம் கஜேந்திர வரதப் பெருமாள் கோவிலுக்கு அருகில் அமைந்துள்ளது இத்தலம். இறைவன் திருநாமம் ஏகாம்பரேசுவரர். இறைவியின் திருநாமம் காமாட்சி அம்மன். இக்கோவில் தொண்டை மண்டலத்தில் உள்ள காஞ்சிபுரம் ஏகாம்பரேசுவரர் கோவிலுக்கு இணையானது.
இத்தலத்து காமாட்சி அம்மன், நின்ற கோலத்தில் நான்கு திருக்கரங்களுடன் காட்சியளிக்கிறார். மேல் வலது கரத்தில் தாமரை மலரையும், மேல் இடது கரத்தில் அங்குசத்தையும் தாங்கி, கீழ் இரு கரங்களில் அபய, வரத, ஹஸ்த முத்திரைகளுடன் அருள்பாலிக்கிறாள்.
தனக்கு நல்ல கணவன் அமைய வேண்டும் என்று வேண்டும் கன்னிப் பெண்களுக்கு, அவர்கள் வேண்டுதலை நிறைவேற்றும் கருணை உள்ளம் கொண்ட தாயாக விளங்குகின்றாள் இத்தலத்து காமாட்சி அம்மன். திருமணமாகாத கன்னிப் பெண்கள் தங்களுக்கு நல்ல கணவன் வாழ்க்கைத் துணையாக வேண்டும் என்று இந்த அம்பிகையிடம் வேண்டிக் கொள்கிறார்கள். தங்கள் வேண்டுதலின் போது, அவர்கள் கண்ணாடி வளையல்களை மாலையாகக் கோர்த்து, அம்பிகையின் கழுத்தில் அணிவித்து வணங்குகிறார்கள். பின், அந்த வளையல்களை பிற பெண்களுக்குப் பிரசாதமாகக் கொடுக்கின்றனர். அவர்கள் கண்ணாடி வளையல் மாலை அணிவித்த 90 நாட்களுக்குள், அந்தப் பெண்களுக்கு திருமணம் நிச்சயமாவது உறுதி என்கிறார்கள் இத்தலத்து பக்தர்கள்.
குழந்தை பாக்கியம்
குழந்தைப் பேறு இல்லாதவர்கள் இங்கு நடைபெறும் பிரதோஷத்தில் 11 நாட்கள் கலந்து கொண்டு இறைவன், இறைவிக்கு அர்ச்சனை செய்து பிரார்த்தனை செய்தால், அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டுகின்றது.

திருநாரையூர் (நாச்சியார் கோவில்) ஆகாச மாரியம்மன் கோவில்
சமயபுரம் மாரியம்மன் அருவமாக எழுந்தருளி இருக்கும் தலம்
கண்ணாடி வளையல்கள், மல்லிகை, முல்லை பூக்களை ஏற்றுக் கொள்வதற்காக ஆகாய மார்க்கமாக வரும் சமயபுரம் மாரியம்மன்
தர்ப்பை புல்லாலான ஆகாச மாரியம்மன்
கும்பகோணத்தில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் 10 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது திருநாரையூர் ஆகாச மாரியம்மன் கோவில். ஆனால் இந்தக் கோவிலில் ஆகாச மாரியம்மனுக்கு திருவுருவத் திருமேனி கிடையாது. சமயபுரம் மாரியம்மனே இந்த கோவிலில் அருவமாக இருந்த ஆட்சி செய்கிறாள். இந்தக் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும், வைகாசி மாதம் அமாவாசையை அடுத்த வெள்ளிக்கிழமை தொடங்கி, பதிமூன்று நாட்களுக்கு திருவிழா மிகச் சிறப்பாக விழா நடைபெறுகிறது. அப்போது சமயபுரம் மாரியம்மன் ஆகாய மார்க்கமாக இங்கு வந்து, திருவிழாவுக்கு என்று செய்யப்படும் விக்கிரகத்தில் சேர்ந்து தரிசனம் கொடுப்பதாக ஐதீகம். இந்த ஊர் மக்கள் அளிக்கும் கண்ணாடி வளையல்கள், மல்லிகை, முல்லை பூக்களை ஏற்றுக் கொள்வதற்காகவே சமயபுரத்தாள் ஆகாய மார்க்கமாக இந்த ஊருக்கு வந்து திருவிழாவில் கலந்து கொள்கின்றாள். இதன் பின்னணியில் சமயபுரம் மாரியம்மனின் திருவிளையாடல் உள்ளது.
திருநாரையூரில், 600 ஆண்டுகளுக்கு முன்பு, கவரைச் செட்டியார்கள் என்ற வணிக சமூகத்தார், பாரம்பரியமாக கண்ணாடி வளையல் வியாபாரம் செய்து வந்தனர். ஊர் ஊராக சென்று வியாபாரம் செய்து வரும் பழக்கத்தை உடைய அவர்கள், ஒருமுறை சமயபுரம் கோவிலுக்கு வந்து இரவு தங்கினர். அவர்கள் உறங்கிக் கொண்டிருந்தபோது, சமயபுரம் மாரியம்மன் இளம்பெண் வடிவம் எடுத்து வியாபாரி ஒருவரின் கனவில் தோன்றினாள். வியாபாரி அவள் கைகளுக்கு கண்ணாடி வளையல்களை அடுக்க ஆரம்பித்தார். ஆனால் வளையல்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக உடைந்தது. வியாபாரி குழப்பமடைந்து, இளம்பெண்ணின் கைகளை அலங்கரிக்க முடியவில்லை என்று வருத்தப்பட்டார்.
வியாபாரி , 'தாயே, வளையல்கள் அனைத்தும் உடைந்து விடுகிறதே. உனக்குத் தகுந்த வளையல்கள் போட வேண்டும் என்றால் தயவு செய்து நீ எங்கள் ஊருக்கு வா. இரண்டு கைகள் நிறைய வளையல்களைப் போட்டு விடுகிறேன். உனக்கு முல்லை, மல்லிகை மலர்களைச் சூட்டுகிறேன். எங்கள் ஊருக்கு வா தாயே!' என்று அன்புடன் வேண்டினார்.
அதற்கு அந்த இளம்பெண், 'உங்கள் ஊருக்கு வந்தால்தான் வளையல் போடுவாயா? இப்போதே உங்கள் ஊர்காரர்களிடம் எழுந்தருள்கிறேன்' என்று சொல்லிவிட்டு மறைந்தாள். வியாபாரி கனவு கலைந்து எழுந்தார். அருகில் பாதுகாப்பாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த வளையல்கள் அனைத்தும் உடைந்திருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டார். தவிர, அவருடன் வந்திருந்த மற்ற வியாபாரிகளுக்கு அம்மை போட்டிருப்பதையும் கண்டார். இது சமயபுரத்தாளின் சோதனை என்பதை அறிந்த அவர், 'எங்களை மன்னித்துவிடு தாயே' என்று கோவிலை நோக்கிக் கைகூப்பினார்.
விடிந்ததும் காலையில் கோவில் குருக்கள் அந்த வியாபாரியிடம்,""ஐயா, வெளியூரிலிருந்து வந்திருக்கும் வளையல் வியாபாரி தாங்கள் தானே? இந்தாருங்கள் பொற்காசு. உடைந்த வளையல்களுக்கு உரிய தொகை. இதை உங்களிடம் சமயபுரத்தாள் கொடுக்கச் சொன்னாள்' என்றார். மேலும், அம்மை கண்டவர்களுக்கு மாரியம்மன் பிரசாதமாக குங்குமத்தை நெற்றியில் பூசினார் குருக்கள். அம்மை கண்டவர்கள் உடனே குணமடைந்து எழுந்தார்கள்.
கனவில் வளையல் போட்டுக் கொள்ள வந்தவள் சமயபுரம் அன்னையே என்பதை உணர்ந்து கொண்ட அவர், மற்றவர்களிடம் கூறவே, அவர்கள் அனைவரும் தங்களுக்கும் அன்னை காட்சி தரவேண்டும் என்று வேண்டினார்கள். அதை ஏற்று அன்னை ஆகாயத்தில் அன்ன வாகனத்தில் காட்சி தந்து அருளாசி வழங்கினாள். அன்னையை தரிசித்த வியாபாரிகள், 'தாயே, எங்கள் ஊருக்கு வந்து அருளவேண்டும்' என்று மனமுருக வேண்டினார்கள்.
சமயபுரம் மாரியம்மன் அவர்களிடம், 'உங்கள் ஊர் எது?' என்று கேட்க, 'நளிர்வாய் முல்லை முறுவலிக்கும் திருநாரையூர்" என்றனர். அவர்களது பக்தியை மெச்சிய அன்னை, ""முல்லைக்கும் மல்லிக்கும், முன்கை வளையல்களுக்கும் ஆண்டுதோறும் வைகாசி மாத அமாவாசைக்கு அடுத்த வெள்ளிக்கிழமை சமயபுரத்திலிருந்து ஆகாச மார்க்கமாக திருநாரையூருக்கு வந்து, பத்து நாட்கள் தங்கிவிட்டு மீண்டும் சமயபுரம் திரும்பிவிடுவேன்' என்று அருளினாள்.
சமயபுரத்தாள் சொன்னதுபோல் ஒவ்வொரு வருடமும் திருநரையூர் தலம் வந்து, பத்து நாட்களுக்குத் தங்கி அலங்காரத்துடன் காட்சி தந்து அருள்புரிகிறாள் என்பது ஐதீகம். இந்த விழா தற்பொழுது பத்து நாள்களுக்கு மேல் நடந்து பதிமூன்றாம் நாள் நின்ற கோலத்தில் தேரில் சமயபுரத்திற்கு எழுந்தருள்வதுடன் விழா நிறைவு பெறுகிறது. அச்சமயம் அம்மன் கையில் வெள்ளிக்குடம் கொடுத்து வீதியுலா நடைபெறும். இதன்மூலம், அம்மன் சமயபுரம் செல்கிறாள் என்பது ஐதீகம்.
இக்கோவிலில், ஆண்டுக்கு 10 நாட்கள் தவிர, அம்மன் உருவமற்றவராக அதாவது சூட்சும ரூபத்தில் இருக்கிறார். விளக்கு மட்டுமே அம்மன் என்று வழிபடப்படுகிறது. வைகாசி அமாவாசைக்குப் பிறகு, உள்ளூர் மக்கள் தர்ப்பை புல்லைப் பயன்படுத்தி அம்மன் சிலையை உருவாக்கி, மல்லிகைப் பூக்கள் மற்றும் கண்ணாடி வளையல்களால் அலங்கரிக்கின்றனர். உடையக்கூடிய தர்ப்பை புல்லால் மூர்த்தி கட்டப்படும் கோவிலை நாம் வேறு எங்கும் காண முடியாது.
ஒவ்வொரு நாளும் புதிதாக தர்ப்பை புல் சேர்க்கப்படும், இதனால் வடிவம் படிப்படியாக வளரும். மற்றும் அலங்காரங்களும் தினமும் மாற்றப்படும். லட்சுமி, சரஸ்வதி, மதனகோபாலன் போன்ற பல்வேறு வடிவங்களில் அவள் சித்தரிக்கப்படுகிறாள், கடைசி நாளில் ராஜ ராஜேஸ்வரி வடிவத்தில் உச்சம் பெறுகிறாள்.

திருவேற்காடு தேவி கருமாரி அம்மன் கோவில்
கருணை மழை பொழியும் தேவி கருமாரியம்மன்
சென்னைக்கு மேற்குத் திசையில் 18 கி.மீ தொலைவில் உள்ளது, மிகப் பிரசித்தி பெற்ற அம்மன் தலமான திருவேற்காடு கருமாரி அம்மன் கோவில். ஆதிகாலத்தில் வேப்பமரங்கள் அடர்ந்த காடாக இருந்ததால் 'வேலங்காடு' என்று அழைக்கப்பட்டது இந்த இடம். நாளடைவில் திருவேற்காடு ஆகியது. கரிய மழை மேகம் போல் அம்மன் தன் அருளை வாரி வழங்குவதால் கருமாரி என்று பெயர் பெற்றாள். சகலமுமாய் இருப்பவள் தேவி கருமாரியம்மன். எனவேதான் அவளை,
'காற்றாகி, கனலாகி கடலாகினாய், கருவாகி, உயிராகி உடலாகினாய்
நேற்றாகி, இன்றாகி நாளாகினாய் நிலமாகிப் பயிராகி உயிராகினாய்...'
என்று நெகிழ்கிறது கருமாரியம்மன் பதிகம்.
கருவறையில், கருமாரியம்மன் சுயம்பு வடிவில் காட்சி அளிக்கிறாள். இவள் சாந்த சொரூபத்துடன், தங்க விமானத்தின் கீழ் பராசக்தி அம்சமாக விளங்குகிறாள்.
இவளுக்குப் பின்புறம் ஓர் அம்பிகை சிலை உள்ளது. இவள் அக்னி ஜ்வாலையுடன், கைகளில் கத்தி, கபாலம், டமருகம், சூலம் ஏந்தி பத்ம பீடத்தின் மீது அமர்ந்திருக்கிறாள். அம்மனின் சந்நிதியில், ஒரு விளக்கு அணையாமல் எரிகிறது. இதைப் 'பதி விளக்கு' என்கிறார்கள். அம்மனையும், இந்த விளக்கையும் சேர்ந்து தரிசித்தால் குடும்பத்தில் எந்தக் குறையும் இருக்காது என்பது பக்தர்களின் நம்பிக்கை.
ஒருமுறை ஈசன் தேவர்களின் துன்பம் நீக்கச் சென்றபோது, இறைவன் அம்பிகையிடம் 'நீயே சிவனும், சக்தியுமாகி ஐந்தொழில்களையும் செய்யவேண்டும்!' என்று கூற, அம்பிகை சம்மதித்து அகத்தியரிடம் தான் ஆட்சி செய்யத் தகுந்த இடம் கேட்க, அகத்தியர் 'வேற்காட்டை'க் காட்டுகிறார். மாயாசக்தியான அவளிடம் மகாவிஷ்ணு 'நீ பாம்பு உருவாக புற்றில் இருந்து அருளாட்சி செய். கலியுகத்தில் இப்போது இருக்கும் உருவத்துடன் திருக்கோயில் பெற்று விளங்குவாய்!' என்று கூற அன்னை கருமாரியாக கருநாக வடிவம் எடுத்து புற்றில் அமர்ந்தாள். அந்தப் புற்று இன்றும் திருக்கோயில் அருகே உள்ளது. ஈசனிடமிருந்து திருநீற்றைப் பெற்றே அம்பிகை ஐந்தொழில்களையும் செய்தாள். அதுவே தீர்த்தமாக உருமாறி விட்டது.
பிரார்த்தனை
சகல நோய்களையும் தீர்க்கும் மருந்தாக இங்கு வேப்பிலை பிரசாதமாக வழங்கப்படுகிறது. பௌர்ணமி, செவ்வாய் வெள்ளி கிழமைகளில் கோயிலில் பக்தர்களின் வருகை பெருமளவில் இருப்பது சிறப்பு. கடன், வியாதி, வழக்கு, திருமணத்தடை, குழந்தையின்மை என்று அனைத்துவித பிரச்சனைகளுக்கும் பக்தர்கள் இங்கு வேண்டிக் கொள்கிறார்கள். திருவிளக்கு பூஜை, வேப்பஞ்சேலை அணிதல், தேர் இழுத்தல், முடி காணிக்கை, குங்கும் அபிஷேகம், உப்பு காணிக்கை என்று பலவித பிரார்த்தனைகள் இங்கு நிறைவேற்றப்படுகிறது.

உத்தமபாளையம் காளத்தீஸ்வரர் கோவில்
ஆற்றில் மூங்கில் கூடையில் மிதந்து வந்த அம்பிகை
தேனியில் இருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ள உத்தமபாளையம் என்ற ஊரில், சுருளியாற்றங்கரையில் அமைந்துள்ளது காளத்தீஸ்வரர் கோவில். இறைவன் திருநாமம் காளத்தீஸ்வரர். இறைவியின் திருநாமம் ஞானாம்பிகை. ஆந்திர மாநிலத்தில் இருக்கும் காளஹஸ்திக்கு இணையான தலம் என்பதால் இக்கோவிலை. பக்தர்கள் தென்னகத்து காளகஸ்தி என்று அழைக்கின்றனர்.
இராணி மங்கம்மாள் ஆட்சிக் காலத்தில், பிச்சை என்ற சிவ பக்தர் உத்தமபாளையம் பகுதியில், ராணியின் படைப்பிரிவில் பணியாற்றி வந்தார். இவர் ஆண்டுதோறும் மகா சிவராத்திரி நாளில் ஆந்திர மாநிலத்திலிருக்கும் காளகஸ்திக்குச் சென்று, அங்கிருக்கும் காளாத்தீஸ்வரரை வணங்கி வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். வயதான காலத்தில் அவரால் அங்கு செல்ல இயலாமல் போனது. இதனால் மனம் வருந்திய அவர் இறைவனை நினைத்து உண்ணா நோன்பு இருக்கத் தொடங்கினார். அவரது கனவில் தோன்றிய இறைவன், செண்பக மரத்தின் கீழே லிங்க வடிவில் தான் இருப்பதாகவும், அங்கு இருந்து தன்னை எடுத்துச் சென்று விரும்பும் இடத்தில் கோவில் கட்டி வழிபடலாம் என்றும் தெரிவித்தார்.
மறுநாள் தான் கண்ட கனவினை ஊர்மக்களிடம் தெரிவித்த அவர், ஊர்மக்கள் துணையுடன் செண்பக மர வனம் சென்றார். அங்கு அவரது கனவில் இறைவன் சொன்னபடி செண்பக மரத்தின் கீழாக லிங்கம் ஒன்று இருந்தது. அவரும், ஊர்மக்களும் அந்த லிங்கத்தை வழிபட்டுத் தாங்கள் கொண்டு சென்றிருந்த வண்டியில் அந்த லிங்கத்தை எடுத்துக் கொண்டு ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். ஊருக்கு அருகில் வந்த போது ஒரு இடத்தில், அந்த வண்டியின் அச்சு முறிந்து, வண்டி நின்று போனது. அதன் பின்பு எவ்வளவு முயன்றும் அந்த வண்டியை அங்கிருந்து நகர்த்த முடியவில்லை. அப்போது அந்த இடத்தில் ஆறுமுகத்துடனான முருகன் சிலை ஒன்று இருப்பதைக் கண்டனர். அதன் பிறகு, அவர்கள் அந்த இடத்திலேயே காளத்தீஸ்வரருக்கும், ஆறுமுகப்பெருமானுக்கும் தனித்தனியாகச் சன்னதிகள் அமைத்துக் கோவிலமைத்தனர்.
அதன் பின்னர் இக்கோவிலில் அம்மனுக்குத் தனிச் சன்னதி அமைத்திட முடிவு செய்த ஊர் மக்கள், அம்மன் உருவத்தைச் சிலையாக வடிவமைக்க பல சிற்பிகளைக் கொண்டு முயற்சித்தனர். ஆனால், அந்தச் சிற்பிகளால் அம்மன் உருவத்தைச் சிலையாக உருவாக்க முடியாமல் போனது. இதனால் மனம் வருந்திய பிச்சை, கோவிலில் அம்மன் சிலை அமைக்கத் தங்களுக்கு அருள்புரிய வேண்டுமென்று இறைவனிடம் தொடர்ந்து வேண்டிக் கொண்டிருந்தார். இந்நிலையில் மீண்டும் அவர் கனவில் தோன்றிய இறைவன், 'பக்தனே, இன்னும் சில நாட்களில் மழை பெய்து ஊருக்குக் கிழக்காக ஓடும் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வரும். அந்த ஆற்று வெள்ளத்தில் அம்மன் மூங்கில் கூடையில் அமர்ந்து வருவார். அந்த அம்மன் சிலையைக் கொண்டு வந்து, கோவிலில் அம்மன் சன்னதி அமைத்து வழிபடுங்கள்' என்று சொல்லி மறைந்தார். இறைவன் சொன்னபடி சில நாட்களில் பெரும் மழை பெய்தது. மழையினால் ஏற்பட்ட ஆற்று வெள்ளத்தில் இறைவன் சொன்னபடியே ஒரு மூங்கில் கூடை மிதந்து வந்தது. அக்கூடையில் அம்மன் சிலையும், விநாயகர் சிலையும் இருந்தன. அந்தச் சிலைகளை ஊர் மக்கள் காளத்தீஸ்வரர் கோயிலுக்கு எடுத்துச் சென்றனர். அம்மனுக்கான சன்னதியில் அம்மன் சிலையை வைத்து அம்மனுக்கு திருக்காளகஸ்தியிலிருக்கும் ஞானாம்பிகை என்ற பெயரையேச் சூட்டி வழிபட்டனர். கோயிலில் விநாயகர் சிலையை நிறுவிச் செல்வ விநாயகர் என்று பெயர் சூட்டினர்.
திருக்கல்யாணத்தின் போது அம்பிகைக்கு வரும் பிறந்த வீட்டு சீர்
இக்கோவிலில் இடம் பெற்றிருக்கும் ஞானாம்பிகை அம்மன் சிலை, இத்தலம் அமைந்திருக்கும் இடத்திலிருந்து சற்று தூரத்திலுள்ள கோகிலாபுரம் என்ற ஊரின் ஆற்றில்தான் கிடைக்கப் பெற்றது. எனவே, இந்த ஊரை அம்பிகையின் பிறந்த வீடாகக் கருதுகின்றனர். இக்கோவிலில் நடத்தப் பெறும் திருக்கல்யாண விழாவின் போது, இவ்வூரிலிருக்கும் பக்தர்கள், அம்மனுக்குப் பிறந்த வீட்டுச் சீரும், தங்களது மருமகனான சிவபெருமானுக்கு ஆடைகளும் கொண்டு வருகின்றனர். திருக்கல்யாணத்தின் போது, காளாத்தீஸ்வரர், ஞானாம்பிகை அம்மனுக்கு இந்த ஆடை அணிகலன்களை அணிவித்துத்தான் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன.

ஈரோடு கோட்டை பெரிய மாரியம்மன் கோவில்
பிள்ளை வரம் தரும் மாரியம்மன்
ஈரோடு நகரத்தின் மையத்தில் அமைந்துள்ளது, ஈரோட்டுக்கு காவல் தெய்வமாக விளங்கும் கோட்டை பெரிய மாரியம்மன் கோவில். இரண்டு ஓடைகளுக்கு நடுவே அமைந்ததால், இந்த ஊருக்கு ஈரோடை என்ற பெயர் இருந்தது. அதுவே, மருவி 'ஈரோடு' என்றாகியது. மாமன்னர்கள் கோட்டை கட்டி ஆண்டதால், கோவில் இருக்கும் பகுதிக்கு கோட்டை என்றே பெயர். அம்மனுக்கும் கோட்டை மாரியம்மன் என்று அடைமொழி ஆகிவிட்டது. இக்கோவில் 1200 ஆண்டுகள் பழமையானது. கருவறையில், கரங்களில் நாக பந்தத்துடன் உடுக்கை, பாசம், கபாலம், கத்தி ஆகியவற்றுடன் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறாள் பெரிய மாரியம்மன்.
ஈரோட்டில் கோட்டை பெரிய மாரியம்மன், சின்னமாரியம்மன், வாய்க்கால் மாரியம்மன் திருக்கோவில் என மூன்று மாரியம்மன் திருக்கோவில்கள் உள்ளன. எல்லாவற்றுக்கும் தலைவியாக, கோட்டை பெரிய மாரியம்மன் அருள்பாலிக்கிறாள். கொங்கு மண்டலத்தின் 24 நாடுகளுக்கும் காவல் தெய்வமாக வீற்றிருக்கிறார் பெரிய மாரியம்மன்.
உலகம் எங்கும் உள்ள அனைத்து உயிரினங்கள், மரம் செடி கொடிகள் என்று எல்லாவற்றுக்கும் தண்ணீரை வாரி வழங்குவது மழை. வேறுபாடுகள், பேதங்கள் ஏதுமின்றி மழை தனது தண்ணீரை அளிப்பதுபோல, மக்களின் மனங்களில் வேறுபாடுகள் இருந்தாலும், அவற்றை எல்லாம் கருதாது, வரங்களை அள்ளித்தரும் தாயாக இருப்பவர் மாரியம்மன்.
பக்தர்கள் பெரிய மாரியம்மனை, பிள்ளை வரம் தரும் அம்மன் என்பர். மகப்பேறு வேண்டுவோர் வெள்ளிக்கிழமை கோவிலுக்கு வந்து வணங்கி, அர்ச்சனை செய்து, வழிபட்டு வந்தால், மகப்பேறு வாய்க்கும் என்பது இக்கோவிலின் சிறப்பம்சமாகும். அம்மை நோய் வராமல், பெரிய மாரியம்மன் அருள்பாலிக்கின்றார். நோய் வந்தோர்க்கு விரைவில் சுகம் அளிக்கிறார்.
ஆடி மாத செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் வெளியூர் பக்தர்களும் இங்கு வந்து அம்மனை வழிபட்டு வருகின்றனர். நேர்த்திக் கடனாக கூழ் காய்ச்சி அம்மனை வேண்டி வருவோருக்கு வழங்குவது, மா விளக்கு போடுதல், பூக்கள் மற்றும் உப்பினை படைத்து வழிபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
மஞ்சள் நகராம் ஈரோடு முழுமையும் மஞ்சள் நிறமாக மாறும் திருவிழா
நேர்ச்சைக் கடனாக வீசும் உப்பு, தார் சாலையையே வெள்ளை நிறமாக மாற்றும் திருவிழா
ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் முதல் செவ்வாய்க் கிழமை விழா தொடங்கும். இரவு பூச்சாற்றுதல் நடை பெறும். தொடர்ந்து கம்பம் நடுதல், மாவிளக்கு, பொங்கல் வைத்தல், கரகம் எடுத்தல், தேரோட்டம் என்று மிக விமரிசையாகக் கொண்டாடப்படும். மூன்று மாரியம்மன் கோவில்களிலும் இணைந்து நடக்கும் இத்திருவிழாவில், பெண்கள் கூட்டம் அலைமோதும். இங்கு, கம்பம்-தேவியின் அம்சமாகக் கருதப்படுகிறது. கம்பம் நட்டதும், நாளும் பெண்கள் மஞ்சள் நீரை விடுவர். அது தேவியை அபிசேகம் செய்வது போலாகும். பெரிய மாரியம்மன் கோவில் கம்பம் பிடுங்கும் விழா, மஞ்சள் நீராட்டு விழா மிக சிறப்பு மிக்கது. மூன்று கோவில்களில் இருந்தும் கம்பத்தை பிடுங்கி ஊர்வலமாக நகரில் வீதி உலா நடைபெறும். அப்போது பக்தர்கள் நேர்ச்சைக் கடனாக வீசும் உப்பு, தார் சாலையையே வெள்ளை நிறமாக மாற்றும். இறுதியில் கம்பம், வாய்க்காலில் விடப்படும். அப்போது, பக்தர்கள் ஒருவர் மீது ஒருவர் மஞ்சள் நீரை ஊற்றி மகிழ்வர். மஞ்சள் நகராம் ஈரோடு முழுமையும் மஞ்சள் நிறமாக மாறும் காட்சி அன்று நடைபெறும். . அது, வடநாட்டு 'ஹோலி' என்ற பண்டிகையை நினைவூட்டும்.
பெரிய மாரியம்மன் திருவிழா என்பது ஈரோடு நகரத்தின் மிகப் பெரிய திருவிழாவாகும். பொங்கல் துவங்கி மஞ்சள் நீராட்டு விழா வரை இளைஞர்களும், பெரியவர்களும், மகளிரும் மாறுவேடமணிந்து கோவிலுக்கு வந்து வழிபாடு செய்வது சிறப்பம்சமாகும்.

உடுமலைப்பேட்டை மாரியம்மன் கோவில்
மங்கள வாழ்வு அருளும் மாங்கல்ய மாரியம்மன்
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலைப்பேட்டையில் அமைந்துள்ளது 500 ஆண்டுகளுக்கு மேல் பழமையான மாரியம்மன் கோவில். அரைச்சக்கரவடிவில் ஊரைக்காக்கும் அரணாக மலை அமைந்திருந்ததால் 'சக்கரபுரி' என்றும், அம்மலையில் உடும்புகள் நிறைந்து காணப்பட்டதால் "உடும்புமலை' என்றும் அழைக்கப்பட்ட இவ்வூர், காலப்போக்கில் உடுமலைப்பேட்டை என்று அழைக்கப்படுகிறது. உடுமலைப்பேட்டை மாரியம்மன் பக்தர்களின் மனக்குறைகளை தீர்க்கும் மாங்கல்ய மாரியம்மனாக சுயம்பு மூர்த்தியாக,அருள்பாலிக்கிறார்.
இக்கோயிலில், வருடந்தோறும் மார்கழி திருவாதிரையில், 108 தம்பதியர்களை வைத்து 'மாங்கல்ய பூஜை' நடத்தப்படுகிறது. இப்பூஜையில், அம்மனுக்கு மாங்கல்யம் சாத்தி விசேஷ ஹோமங்கள், பூஜைகள் நடத்தி, பெண்களுக்கு தாலிக்கயிறு வழங்கப்படுகிறது. பூஜை செய்த தாலியை பெண்கள் அணிந்து கொள்வதால், அவர்கள் வாழ்வில் பிரச்னைகள் இன்றி, சிறந்து விளங்குவர் என்பது நம்பிக்கை. இதனால் இந்த அம்மனுக்கு மாங்கல்ய மாரியம்மன் என்ற பெயரும் உண்டு.
பிரார்த்தனை
கண்நோய், அம்மை நோய் தீர, திருமணத்தடை, புத்திரதோஷம், நாகதோஷம் நீங்க பக்தர்கள் இங்கு வழிபடுகிறார்கள்
நேர்த்திகடன்
அம்பாளுக்கு அவல், தேங்காய் பூ, சர்க்கரைப்பொங்கல் நைவேத்யம் படைத்து பால்குடம், அக்னிசட்டி எடுத்தல், அங்கபிரதட்சணம், அன்னதானம் செய்தல், முடிகாணிக்கை செலுத்துதல் போன்றவற்றை பக்தர்கள் நேர்த்திக்கடனாக செலுத்துகிறார்கள்.

கீழ்வேளூர் கேடிலியப்பர் கோவில்
சகல பாவங்கள், தோஷங்கள் நீங்க அருள் புரியும் அம்பிகை
நாகப்பட்டிணம்-திருவாரூர் சாலையில் 12 கீ.மீ. தொலைவில் உள்ள தேவாரத் தலம் கீழ்வேளூர். இறைவன் திருநாமம் கேடிலியப்பர். இறைவியின் திருநாமம் சுந்தர குஜாம்பிகை. இக்கோவிலின் தல மரம் இலந்தை. முற்காலத்தில் இந்த இடமே இலந்தை மரக் காடாக இருந்திருக்கின்றது. அதனால் இத்தலத்திற்கு தட்சிண பத்ரி ஆரண்யம் என்ற பெயர் ஏற்பட்டது.
பார்வதிதேவி, கைலாயத்தில் தினமும் ஆறுகால சிவபூஜை செய்வது வழக்கம். ஒரு சமயம் பார்வதி தேவி தனது பூஜையை முடித்துவிட்டு, இலந்தை மரக் காடாக இருந்த இத்தலத்துக்கு வந்தபோது பாம்பும் கீரியும் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்ளாமல், விளையாடிக் கொண்டிருந்த அதிசயக் காட்சியை கண்டாள். மேலும் அங்கு சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளி இருந்த கேடிலியப்பரை தரிசித்தாள். தனது அடுத்த கால சிவபூஜைக்கு நேரமாகி விட்டதால், அந்த இலந்தை( பத்ரி) மரக்காட்டில் இருந்த கேடிலியப்பருக்கு பூஜை செய்து முடித்தாள். இதனால் இத்தலத்து அம்பிகைக்கு, பதரி வனமுலை நாயகி என்ற பெயரும் உண்டு. . கருவறையில் அம்பிகை தன் மேலிரு கரங்களில் அட்சமாலை, தாமரை மலர் தாங்கியும், இடது கையைத் தொடையில் வைத்து வலது கையைத் தூக்கி, அபயம் அளிக்கும் கோலத்தில் அழகு மிளிர காட்சி அளிக்கிறாள்.
இறைவன், இறைவி ஆகியோரின் திருப்பெயர்கள், கோவில் ஆகியவை தேவாரப் பாடலில் போற்றப்பட்ட சிறப்பு
வனமுலைநாயகி என்று இறைவியின் பெயரை திருஞானசம்பந்தர் தனது மின் உலாவிய சடையினர் என்று தொடங்கும் இவ்வூர்ப் பதிகம் இரண்டாம் திருப்பாட்டில் "வாருலாவிய வனமுலையவளொடு மணி சிலம்பு அவை ஆர்க்க" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் இத்திருக்கோவிலைப் பெருந்திருக்கோயில் என்று இவ்வூர்ப் பதிகத்தில் பல பாடல்களில் ஞானசம்பந்தர் கூறியுள்ளார். எனவே இத்தலத்தின் இறைவன், இறைவி ஆகியோரின் திருப்பெயர்கள், கோவில் இவைகள் எல்லாம் தேவாரத்தில் போற்றப்பட்ட சிறப்புடையனவாகும்.
பிரார்த்தனை
வேண்டுவோருக்கு இல்லையெனாது அனைத்தையும் அள்ளி வழங்கும் கருணை உடையவள் சுந்தர குஜாம்பிகை. பக்தர்கள், சகல பாவங்கள், தோஷங்கள் நீங்க இந்த அம்பிகையிடம் வேண்டிக் கொள்கிறார்கள்
சித்ரா பவுர்ணமியில் பிரமோத்சவம் நடைபெறுகிறது. ஆடி வெள்ளி, ஆடிப்பூரம், நவராத்திரி, தீபாவளி, வருடப்பிறப்பு, பொங்கல், மாசிமகம், பங்குனி உத்திரம் ஆகிய விசேஷ நாட்களில் அம்பிகைக்கு அபிஷேக ஆராதனைகள் மற்றும் சிறப்பு அலங்காரம் நடைபெறுகிறது.

நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில்
பக்தர்கள் மாரியம்மனுக்கு காவடி எடுக்கும் தலம்
புதுக்கோட்டையில் இருந்து சுமார் 18 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது, 300 ஆண்டுகள் பழைமை வாய்ந்த நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில். தேவரிஷியான நாரத மாமுனி இங்குள்ள மலையில் தவம் செய்ததால், நாரதமலை என்று அழைக்கப்பட்டு, பின்னாளில் நார்த்தாமலை என மருவியதாக தல புராணம் விவரிக்கிறது. கருவறையில் அமர்ந்த திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறாள் முத்துமாரியம்மன். கட்கம், கபாலம், டமருகம் மற்றும் சக்திஹஸ்தம் கொண்டு நான்கு கரங்களுடன் காட்சி அளிக்கிறாள். இத்தலத்தில் முத்துமாரியம்மன் சன்னதியில், வடபுறத்து சுவற்றில் கல்லிலான முருகன் எந்திரம் பதிக்கப்பட்டிருக்கிறது. இதில் மிகவும் அற்புதமான சக்தி உள்ளது என்கின்றனர் பக்தர்கள்.
பொதுவாக முருகப்பெருமானுக்கு பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடனாக காவடி எடுப்பார்கள். இத்தலத்து மாரியம்மன், முருகப் பெருமானுக்கே உரிய சக்தி ஹஸ்தத்துடன் காட்சி தருவதால், பக்தர்கள் முத்துமாரியம்மனுக்கு காவடி எடுத்தும் வழிபடுகின்றனர். பக்தர்கள் மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் இந்த நடைமுறை, இத்தலத்தின் தனிச்சிறப்பாகும்.
பிரார்த்தனை
அம்மை நோய் கண்டவர்கள், இத்தலம் வந்து வழிபட்டால், அந்த நோய் குணமாவதால் இங்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை ஏராளம். குழந்தை பாக்கியத்திற்கும் இந்த ஆலயம் புகழ்பெற்று விளங்குகிறது. குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், இங்கு வந்து கரும்பு தொட்டில் செய்து ஆலயத்தைச் சுற்றி வலம் வந்து வழிபட்டால், விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும். அக்னி கரகம் எடுத்தால், தீராத நோய்களும் தீரும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
முக்கிய திருவிழாக்கள்
இத்தலத்தில் 10 நாட்கள் நடைபெறும் பங்குனி திருவிழா மிகவும் சிறப்பு பெற்றது. அத்திருவிழாவில் 5 லட்சம் பக்தர்கள் திரள்வது முத்துமாரியம்மன் அருளுக்கும், ஆட்சிக்கும் சாட்சி. ஆடி கடைசி வெள்ளி அன்று நடைபெறும் ஒரு நாள் திருவிழாவின் போதும், பல லட்சக்கணக்கான பக்தர்கள் இத்தலத்தில் கூடுவார்கள்.

மதுரை வண்டியூர் மாரியம்மன் கோவில்
துர்க்கையாகவும், மாரியம்மனாகவும் தரிசனம் தரும் அம்மன்
வித்தியாசமாக அமர்ந்திருக்கும் நிலையில் காட்சி தரும் மாரியம்மன்
மதுரையின் கிழக்கே 5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது வண்டியூர் மாரியம்மன் கோவில். மதுரையை ஆள்பவள் மீனாட்சி என்றால், மதுரையின் காவல் தெய்வம் வண்டியூர் மாரியம்மன்தான். இப்பகுதியில் வசிக்கும் மக்கள் எந்த விசேஷங்கள் நடத்தினாலும், முதலில் இவளிடம் உத்தரவு கேட்டுவிட்டு, அதன்பின்பே நடத்துகிறார்கள். மதுரையில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் விழா நடக்கும் முன்பு, முதல் பூஜை இவளுக்கே செய்யப்படுகிறது.
ஆரம்ப காலத்தில், இவளை, 'துர்க்கை'யாக பாவித்து வணங்கினர். மதுரையை ஆட்சி செய்த மன்னர்கள், போருக்கு செல்லும் முன்பு வீரத்துடன் செயல்படவும், வெற்றி பெறவும் இவளை வணங்கியுள்ளனர். பிற்காலத்தில் நாட்டில் மழை பொய்த்தபோது, மன்னர்கள் இவளிடம் மழை வேண்டி பூஜைகள் செய்து வணங்கினர். மாரி தரும் தெய்வமாக வணங்கப்படுபவள் மாரியம்மன். துர்க்கையாக இருந்தாலும், மழை பெற வேண்டி வணங்கப்பட்டதால் இவளுக்கு, 'மாரியம்மன்' என்ற பெயரே நிலைத்து விட்டது.
இத்தலத்து அம்மன், துர்கையாகவும் மாரியம்மனாகவும் சேர்ந்தே தரிசனம் தருகிறார். கருவறையில், பிற அம்மன் கோவில்களில் இல்லாத விதமாக மாரியம்மன், தனது வலக்காலை இடக்காலின் மீது மடக்கிய நிலையில், இடது காலை மகிஷாசுரன் தலைமேல் வைத்து உட்கார்ந்த நிலையிலும், உற்சவ அம்மனாக நின்ற நிலையிலும் அருள்பாலிக்கிறாள். கையில் பாசம், அங்குசம் ஏந்தி அம்பாள் சிரித்த கோலத்தில், காட்சி தருகிறாள். பொதுவாக மாரியம்மனின் காலுக்கு கீழே அசுரன் உருவம் மட்டுமே இருக்கும். ஆனால், இவள் துர்க்கையின் அம்சமாக இருப்பதால் காலுக்கு கீழே, மகிஷாசுரன் இருக்கிறான். மூலவராக மாரியம்மன் இருப்பதால், வேறு பரிவார தெய்வங்கள் கிடையாது.
பிரார்த்தனை
இத்தலத்தில் தரப்படும் தீர்த்தம் மிகவும் விசேஷமானது. அம்பிகைக்கு அபிஷேகம் செய்யப்படும் தீர்த்ததை , மூலஸ்தானத்தில் பெரிய பாத்திரத்தில் எடுத்துத் வைக்கிறார்கள். கண்நோய், அம்மை போன்ற நோய் உள்ளவர்கள் இங்கு அம்பிகையை வணங்கி, தீர்த்தம் வாங்கிச் செல்கிறார்கள். இந்த தீர்த்தத்தை பருகினால் நோய்கள் நீங்குவதாக நம்பிக்கை. ஒரு நாளில் மட்டும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் இவ்வாறு தீர்த்தம் வாங்கிச் செல்வது சிறப்பம்சம். தோல் வியாதி உள்ளவர்கள் அம்பிகைக்கு உப்பு நேர்த்திக்கடன் செலுத்தி வேண்டிக்கொள்கிறார்கள். இத்தலத்து மாரியம்மனை வணங்கிட, சகல சௌபாக்கியங்களும் பெருகி, குடும்ப பிரச்னைகளும், தொழில் பிரச்னைகளும் தீரும். பயம், திருமணத்தடை நீங்கி, குழந்தைப்பேறு கிட்டும். சுற்றியிருக்கும் ஊர் மக்கள்கூட, உடல் நலக்குறைவு ஏற்பட்டால் இந்த அம்மனைதான் வேண்டிக்கொள்கிறார்கள். அம்பிகை, துர்க்கையின் அம்சம் என்பதால் இங்கு எலுமிச்சை தீபமேற்றியும் வேண்டிக்கொள்கிறார்கள்.
பால்குடம், தீச்சட்டி எடுத்தல், கண்மலர் காணிக்கை, அம்மனின் உருவப் பொம்மைகள் வாங்கி வைத்தல், பானை முழுவதும் மையினால் புள்ளி வைக்கப்பட்ட பானை கொண்டுவருதல் (இதற்கு ஆயிரம் கண் பானை என்று பெயர்), மாவிளக்கு போன்ற பல நேர்த்திக் கடன்களை பக்தர்கள் நிறைவேற்றுகின்றனர்.
ஆடி மாதத்தில் கூழ் வார்த்தலும், பூச்சொரிதல் விழாவும் இங்கு மிகச் சிறப்பாக நடைபெறுகிறது.
தெப்பக்குளம்
திருமலை நாயக்கர் மன்னர் காலத்தில் மகால் கட்டிய போது, அதன் கட்டுமான பணிகளுக்குத் தேவையான மணலை தற்போது அம்மன் அருட்காட்சி தரும் கோவிலுக்கு வலப்புறம் அமைந்துள்ள பகுதியில் இருந்து தோண்டி எடுத்துகட்டினார். மணல் தோண்டியதால் பள்ளமாக இருந்த அப்பகுதியை சீரமைக்க எண்ணிய மன்னன் அப்பகுதியை சதுர வடிவில் வெட்டி, தெப்பக்குளமாக மாற்றி அதன் நடுவே வசந்த மண்டபம் ஒன்றினையும் கட்டினார். கோவிலுடன் சேர்ந்துள்ள தெப்பக்குளம், மதுரை வட்டாரத்திலேயே மிகப்பெரிய தெப்பக்குளம் எனும் பெருமையினை உடையது.

திருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோவில்
ருத்ராட்சத்தாலான திருமேனி கொண்ட அபூர்வ அம்பிகை
திருநெல்வேலியில் இருந்து பாபநாசம் செல்லும் சாலையில் 28 கி.மீ. தூரத்தில் உள்ள வீரவநல்லூர் என்ற ஊரிலிருந்து பிரியும் சாலையில் 7 கி.மீ. தூரம் சென்றால், திருப்புடைமருதூர் திருத்தலத்தை அடையலாம். இறைவன் திருநாமம் நாறும்பூநாதர். இறைவியின் திருநாமம் கோமதி.
இத்தலத்து அம்பிகையின் திருமேனி ருத்ராட்சத்தாலான, சுயம்பு திருமேனி ஆகும். அம்பிகையின் திருமேனி சிற்பி வடித்த சிலை இல்லை. இந்த விக்கிரகம் இமய மலையின் ஒரு பகுதியில், கோமாதி மலையில் இயற்கையாகவே கண்டு எடுக்கப்பட்ட சிலை ஆகும், இதனால்தான் கோமதி அம்பாள் என்று பெயர் வந்தது. இந்த ருத்ராட்ச திருமேனியை பால் அபிஷேகம் செய்யும் போது தெளிவாக தரிசிக்கலாம். கருவறையில் அம்பிகை அழகே உருவாக, புன்முறுவல் பூத்த முகம் கொண்டு, ஒரு கரத்தில் மலர் ஏந்தியும் மறுகரத்தை தொங்கவிட்ட படியும், சற்றே இடை நெளிந்து, நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறான்.
அம்பிகை திருமண பாக்கியமும், குழந்தை பேறும் அருளும் வரப்பிரசாதி
இக்கோவில் முக்கியமான ஒரு கல்யாணத் தலமாகும். இக்கோவிலில், சுவாமி இடது புறமும் அம்பாள் வலது புறமும் இருப்பதனால் இங்கு திருமணம் செய்தால் புத்திர பாக்கியத்துடன், நீண்ட ஆயுள் பெற்று நலமுடன் வாழ்வார்கள்.
இந்த அம்பிகை சிறந்த வரப்பிரசாதி. தங்கள் திருமணத் தடை நீங்கவும், குழந்தை பாக்கியம் பெறவும், பக்தர்கள் இந்த அம்பிகையிடம் வேண்டிக் கொள்கிறார்கள்.
திருமணத்தடை நீங்க பரிகாரம்
நீண்ட நாட்களாக திருமணத் தடைபடும் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும், அவர்களுக்கு உரிய பரிகாரமாக, இக்கோவிலில் ஐப்பசி மாதம் திருக்கல்யாணம் வைபோகம் நடக்கும் அன்று தங்களுடைய ஜாதகத்தை சுவாமியின் பாதத்தில் வைத்து, சுவாமிக்கு பட்டு வேஷ்டியும், துண்டும், அம்பாளுக்கு பட்டுப் புடவையும், குங்குமமும். தாலியும் தாம்பூலத்தில் வைத்து சுவாமி ஊரை வலம் சுத்தி வரும் பொழுது சுவாமியுடன் சுற்றி வந்து, கோவிலில் வைத்து சுவாமிக்கும் அம்பாளுக்கும் சாத்தி. பொட்டுத்தாலியை அம்பாளின் கழுத்தில் அணிவித்து, அன்னதானம் செய்து வழிபட்டால், நீண்ட நாட்களாக தடைப் பெற்ற திருமணம் நடக்கும். சுவாமியையும், அம்பாளையும் தங்கள் குழந்தைகளாக பாவித்து திருமணம் செய்து வைத்து வழிபட்டதால், இந்த புண்ணியம் உங்கள் குழந்தைகளுக்கும் சேரும்.
குழந்தை பாக்கியம் கிடைக்க பரிகாரம்
இக்கோவியில் ஆடி மாதம் அம்பாளுக்கு வளைகாப்பு நடக்கும் அன்று பட்டு புடவையும், அனைத்து வகையான வளையல்களும், அனைத்து வகையான சீர்வரிசை பொருட்களையும் அம்பாளின் பாதத்தில் தாம்பூலத்தில் வைத்து, அன்னதானம் செய்து வழிபட்டால் நீண்ட நாட்களாக குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு, குழந்தை பாக்கியம் கிட்டும். அம்பாளை உங்கள் குழந்தையாக பாவித்து வளைகாப்பு நடத்தி வழிபட்டதால், உங்கள் குழந்தைகளுக்கும் இந்த புண்ணியம் சேரும்.

சேலம் கோட்டை மாரியம்மன் கோவில்
மிகச் சிறிய கருவறை கொண்ட மாரியம்மன் கோவில்
மாரியம்மனுக்கு நைவேத்தியங்களை ஊட்டி விடும் வித்தியாசமான நடைமுறை
சேலம் மாநகரின் மையப் பகுதியில் உள்ளது கோட்டை மாரியம்மன் கோவில். சேலத்தில் உள்ள எட்டு மாரியம்மன்களில் கோட்டை மாரியம்மன் தான் பெரியவள். எட்டு மாரியம்மன்களுக்கும் தலைமையாக விளங்குவதால், 'எட்டுப்பேட்டைகளைக் கட்டியாளும் அன்னை கோட்டை மாரி' என்ற சிறப்புப் பெயரும் உண்டு. இந்தக் கோவில் மணிமுத்தாறு நதிகரையில் அமைத்துள்ளது,
இந்தக் கோவிலின் கருவறை மிகவும் சிறியது.. தமிழ்நாட்டிலேயே சிறிய கருவறை உள்ள அம்மன் கோவில் இதுவாகத்தான் இருக்கும். எவ்வளவு பெரிய அந்தஸ்து உள்ளவர்களும் குனிந்து மண்டியிட்டு தலை வணங்கி கும்பிடவேண்டும் என்பதற்காக இவ்வாறு இருப்பதாகக் காரணம் சொல்லப்படுகிறது. கருவறையில் மாரியம்மனின் சிரசில் ஜூவாலா கிரீடம், அக்னி ஜூவாலையுடன் ஒளி வீசிக் கொண்டு இருக்கிறது. அக்கிரீடத்தில் நாகம் படம் எடுத்துள்ளது போன்ற அமைப்பு உள்ளது. நான்கு கரங்களுடன் அன்னை விளங்குகிறாள். வலது மேற்கரத்தில் நாகபாசமும், உடுக்கையும் ஏந்தி இருக்கிறாள். வலது கீழ்க்கரத்தில் திரிசூலம் விளங்குகிறது. இடது மேற்கரத்தில் அங்குசமும், அமுத சின்னமும் ஏந்தியவளாய் வீற்றிருக்கிறாள். இடது கீழ்கரத்தில் கபாலம் காணப்படுகிறது. அன்னை வலது காலைத் தொங்கவிட்டுக் கொண்டு, இடது காலை மேல் யோகாசனமாக மடித்து வைத்துக் கொண்டு ஈசான திசை நோக்கி எழுந்தருளி இருக்கின்றாள்.
பொதுவாக எல்லா கோவில்களிலும், பூஜா காலங்களில் நைவேத்தியம் தெய்வங்களுக்கு முன் படைக்கப்படும். ஆனால் இக்கோவிலில் நைவேத்தியம், மாரியம்மனுக்கு படைக்கப்படுவதில்லை. மாறாக நைவேத்தியத்தை எடுத்து மாரியம்மனுக்கு ஊட்டியே விடப்படுகிறது என்பது சிறப்பம்சம். இந்த நடைமுறை வேறு எந்த கோவிலிலும் கடைபிடிக்கப்படுவதில்லை.
பிரார்த்தனை
மண் உரு சாத்துதல் : அம்மை நோய் கண்டவர்கள் அம்மனின் தீர்த்தத்தை வாங்கிச் சென்று நோய் குணமான பின்பு நேர்த்திக்கடனாக பொம்மை உருவங்களை தம் தலை மீது சுமந்து கொண்டு, கோவிலை மூன்று முறை வலம் வர வேண்டும்.
கண்ணடக்கம் சாத்துதல் : கண்ணில் பூ விழுந்தாவோ அல்லது வேறு சில நோய்கள் ஏற்பட்டாலோ அம்மனிடம் வேண்டிக் கொண்டால் குணமடையும். நேர்த்திக்கடனாக அம்மனுக்கு பொன்னாலோ அல்லது வெள்ளியாலோ தகடுகள், கண்ணடக்கம் செய்து அம்மனுக்கு சாற்றுவார்கள்.
உருவாரம் சாத்துதல் : நோயால் பாதிக்கப்பட்டவர்கள், அம்மனை வேண்டிக்கொண்டு குணமாகிய பின்பு நோயின் காரணமாக எந்த பகுதி பாதிக்கப்பட்டதோ அதே போன்ற உருவ பொம்மையை காணிக்கையாக அளிப்பார்கள்.
அடியளந்து கொடுத்தல் : பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேற ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து, மூன்று முறை கோவிலை சுற்றி வருகின்றனர். இதற்கு அடியளந்து கொடுத்தல் என்று பெயர்.
உப்பு மிளகு போடுதல் : பக்தர்கள் தங்களுக்கு ஏற்பட்ட குறையோ அல்லது நோயோ நீங்கிட வேண்டும் என்று வேண்டிக் கொள்பவர்கள், குங்குமம் கலந்த உப்பை பலி பீடத்தின் மீது போட்டு நீர் ஊற்றுவார்கள். நீருடன் கலந்து உப்பு எவ்வாறு கரைந்து விடுகிறதோ அதேபோன்று நோயும் நீங்கிவிடுவதாக ஐதிகம்.
ஆடித் திருவிழா
கோட்டை மாரியம்மன் கோவிலின் மிகப்பெரிய விழா, ஆடித் திருவிழா ஆகும். இவ்விழாவின் போது பூச்சாட்டுதல் என்னும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த பூச்சாட்டுதலின் போது சேலத்தில் உள்ள ஏனைய ஏழு மாரியம்மன் கோவில்களுக்கும் இங்கிருந்துதான் பூ எடுத்துச் சென்று, பிற மாரியம்மன் கோவில்களில் பூச்சாட்டுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

மரக்காணம் பூமீசுவரர்கோவில்
இரண்டு துவாரபாலகியருடனும், ஆறு கரங்களுடனும் காட்சியளிக்கும் அபூர்வ துர்க்கை
சென்னை - பாண்டிச்சேரி கிழக்குக் கடற்கரைச் சாலையில், 123ஆவது கிலோமீட்டரில் உள்ள ஊர் மரக்காணம். இறைவன் திருநாமம் பூமீசுவரர். இத்தலத்து இறைவியின் திருநாமம் கிரிஜாம்பிகை. இக்கோவில், தஞ்சைப் பெருவுடையார் கோவிலைக் கட்டுவதற்கு 14 ஆண்டுகளுக்கு முன்பு, சோழ மன்னன் ராஜராஜனால் கட்டப்பட்டது. சங்க இலக்கியங்கள் மரக்காணத்தை `எயிற்பட்டினம்’ என்று குறிப்பிடுகின்றன. 'எயில்' என்பதும் 'சோ' என்பதும் மதிலைக் குறிப்பிடும் சொல்லாகும். இந்தத் துறைமுக நகரைச் சூழ்ந்து மதில் இருந்ததால், இப்பகுதிக்கு 'எயிற்பட்டினம்' என்ற பெயா் ஏற்பட்டது. இக்கோவிலில் வழக்கத்திற்கு மாறாக, அம்மன் முன் நந்தியும், சிவன் முன் பாவை விளக்கும் உள்ளது.
பொதுவாக சிவாலயங்களில் துர்க்கை அம்மன், நான்கு கைகளுடன், மகிஷாசுரன் தலையின் மேல் நின்ற கோலத்தில் காட்சி தருவார். ஆனால் இக்கோவிலில், துர்க்கை அம்மன் இரண்டு துவாரபாலகிகள் உடன் இருக்க, தலைக்கு மேல் குடையுடனும், ஆறு கரங்களுடனும் மகிஷாசுரன் மேல் நின்ற கோலத்தில் இருப்பது, இக்கோவிலின் தனிச்சிறப்பாகும்.

நத்தம் மாரியம்மன் கோவில்
மயில் மீது அமர்ந்த கோலத்தில் இருக்கும் மாரியம்மனின் அபூர்வ தோற்றம்
திண்டுக்கல்லிருந்து 36 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது நத்தம். இங்கு, 400 ஆண்டுகளுக்கு மேல் பழமையான, சுயம்புவாக எழுந்தருளி உள்ள மாரியம்மன் கோவில் இருக்கின்றது.
கருவறையில் மாரியம்மன், எட்டு திருக்கரங்களில் ஆயுதங்கள் ஏந்தி, வலது காலை மடித்து இடது காலை தொங்கவிட்டுக் கொண்டு மயில் மேல் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகின்றாள். இப்படி மயில் மேல் அமர்ந்து மாரியம்மன் காட்சி தருவது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும். வேறு எந்த தலத்திலும் நாம் அம்மனை இப்படி மயில் மீது அமர்ந்த கோலத்தில் தரிசிக்க முடியாது.
பிரார்த்தனை
குழந்தைவரம், அம்மைநோய், உடல் ரீதியான பிரச்சினைகள் தீர பக்தர்கள் இங்கு அம்மனை வேண்டுகின்றனர். குழந்தை இல்லாதவர்கள் இங்கு வந்து வேண்டி,மூலிகை பச்சிலை உண்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். டாக்டர்களால் கைவிடப்பட்ட பல நோய்கள் இங்கு தீர்க்கப்படுகின்றன. வயிற்று வலி உட்பட நிறைய நோய்கள் குணமாக்கப்படுகின்றன.
நேர்த்திக் கடன்
தீச்சட்டி எடுத்தல், தீ மிதித்தல்,கரும்பு தொட்டில் கட்டுதல், கழுகு மரம் ஏறுதல் முதலானவற்றை பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடன்களாக செய்கின்றனர்.
சற்று கடினமான உயரமான யூகலிப்டஸ் மரத்தை வழுவழுவென செதுக்கி, அந்த மரத்தின் மேல் விளக்கெண்ணெய், மிளகு, கடுகு ஆகிய எளிதில் வழுக்கும் பொருட்களை பூசுவார்கள். அந்த மரத்தில் பக்தர்கள் விடாப்பிடியுடன் மேலே ஏறுவார்கள். இந்த நேர்த்திக் கடனுக்கு கழுகு மரம் ஏறுதல் என்று பெயர்.
இக்கோவிலில் மாசி மாதம் நடைபெறும் பூக்குழித் திருவிழா, தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது. பூக்குழிக்கு ஒரு ஆள் உயரத்திற்கு பள்ளம் வெட்டப்படும். அதற்கு மேல் ஒரு ஆள் அடி உயரத்திற்கு கட்டைகள் அடுக்கப்பட்டு பூக்குழி அமைக்கப்படும். சுமார் 45,000 பேர் தங்கள் நேர்த்திக் கடனுக்காக பூக்குழியில் இறங்குவார்கள்.
கொங்குநாடு பண்ணாரி அம்மன் குண்டம் திருவிழாவுக்கு அடுத்து, இக்கோவிலில் தான் அதிக அளவில் மக்கள் பூக்குழி இறங்குவார்கள்.
கீழ்வேளூர் கேடிலியப்பர் கோவில்
முருகனின் சிவபூஜைக்கு இடையூறு வராமல் காத்த அஞ்சுவட்டத்தம்மன்
நாகப்பட்டிணம்-திருவாரூர் சாலையில் 12 கீ.மீ. தொலைவில் உள்ள தேவாரத் தலம் கீழ்வேளூர். இறைவன் திருநாமம் கேடிலியப்பர். இறைவியின் திருநாமம் சுந்தர குஜாம்பிகை.
முருகப் பெருமான் தேவர்களைக் காக்க திருச்செந்தூரில் அசுரன் சூரபத்மனையும், அவனைச் சார்ந்தவர்களையும் அழித்தார். அசுரர்களைக் கொன்றதால் ஏற்பட்ட வீரஹத்தி தோஷம் நீங்க என்ன செய்வது என்று அவரது தந்தையான சிவபெருமானைக் கேட்டார். அதற்கு ஈசன், 'பூவுலகில் தட்சிண பதரி ஆரண்யம் என்ற போற்றப்படும் கீழ்வேளூர் திருத்தலத்தில், சுயம்புலிங்க வடிவில் எழுந்தருளி அருள்பாலிக்கும் என்னை நவலிங்க பூஜை செய்து, வழிபட்டு, தவமியற்றி வந்தால் இந்த தோஷம் நீங்கும்' என்று கூறி அருளினார்.
அவரது அருளாணைப்படியே இத்தலத்திற்கு வந்த முருகப்பெருமான் தன் வேலால் பூமியைப் பிளந்து தீர்த்தம் உண்டாக்கினார். பின்னர் இந்தக் கீழ்வேளூரின் எட்டுத் திசைகளிலும் உள்ள கோவில்கடம்பனூர், ஆழியூர், இளங்கடம்பனூர், பெருங்கடம்பனூர், கடம்பர வாழ்க்கை, வல்ல மங்கலம், பட்டமங்கலம், சொட்டால்வண்ணம், ஒதியத்தூர் ஆகிய ஒன்பது ஊர்களில் நவலிங்கங்களைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். பின்னர் கீழ்வேளூரில் எழுந்தருளியுள்ள சுயம்புமூர்த்தியாகிய கேடிலியப்பரை சரவணப் பொய்கையில் நீராடி, வழிபட்டு, வீரஹத்தி தோஷம் போக்க வேண்டினார். அப்போது வீரஹத்திகளான மாயைகள், முருகப் பெருமானின் தவத்திற்கு இடையூறு செய்தனர். உடனே சாந்த ஸ்வரூபியான சுந்தரகுஜாம்பிகை, பத்ரகாளியாகத் திருவுருவங் கொண்டு வடதிசை நோக்கி பத்து திருக்கரங்களுடன், நான்கு திசைகள் மற்றும் ஐந்தாவது திக்கான ஆகாயத்தில் இருந்தும் குமரனுக்கு இடையூறு வராமல் காத்து நின்றார். எனவே இந்த அம்பிகைக்கு ஸ்ரீ அஞ்சுவட்டத்தம்மன் என்ற திருநாமம் உண்டு.
கீவளூர் காளி எனப்படும் அஞ்சு வட்டத்தம்மண் மிக உக்கிரமானவள். சோழர்கள் போருக்கு செல்லும முன்னர் இந்த கீவளூர் காளியை வழிபாட்டு செல்வார்கள் என்று வரலாறு சொல்கிறது. அஞ்சு வட்டத்து அம்மையின் சன்னிதி முதல் பிரகாரத்தில் முருகன் சன்னிதிக்கு முன்னால் தனியே வட பக்கத்தில் இருக்கிறது. அஞ்சு வட்டத்தம்மண் சுதைவடிவில் பெரிய திருஉருவுடன் பத்து திருக்கரங்களுடன் வடக்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறார்.
இங்கு அமாவாசை மற்றும் ராகு காலங்களில் எலுமிச்சை தீபம் ஏற்றி,கருவறை தீபத்தில் எள் எண்ணெய் சேர்த்து,9 உதிரி எலுமிச்சை பழங்களை சமர்ப்பித்து,குங்குமார்ச்சனை செய்து அஞ்சுவட்டத்துக் காளி அம்மனை வழிபட்டு வர நம்மை பீடித்த நோய்கள்,தீராதநோய்கள், தரித்திரம், வறுமை,ஏவல்,பில்லி, சூன்யம், மாந்திரீகம் என அத்தனை பீடைகளும், தீவினைகளும், தோஷங்களும் விலகி ஓடும். பித்ரு தோஷம்,குலதெய்வ சாபம் விலகும். தொடுவதால்,காற்றுமூலம் பரவுவதால் என பரவும் தொற்றுக் கிருமிகளையும்,தொட்டு தொடரும்,பற்றிப்படரும் தொற்றுநோய்களையும் அடியோடு துடைத்தெறியும் வல்லமைபடைத்தவள் அஞ்சுவட்டத்து அம்மன்.

குரங்கணி முத்துமாலை அம்மன் கோவில்
ராமாயண காலத்தோடு தொடர்புடைய கோவில்
திருநெல்வேலி-திருச்செந்தூர் சாலையில் அமைந்து உள்ள தென்திருப்பேரை என்ற ஊரில் இருந்து 2 கி.மீ. தூரத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்து உள்ளது குரங்கணி முத்துமாலை அம்மன் கோவில். கருவறையில் முத்துமாலை அம்மன் நான்கு திருக்கரங்களோடு, கையில் கிளி ஏந்தியபடி காட்சி தருகிறாள்.
மிகவும் பழமையான இக்கோவில் ராமாயண காலத்தோடு தொடர்புடையது. ராவணன், சீதாதேவியை சிறைபிடித்துச் சென்றான். சீதாதேவியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்ட ராமனுக்கு வானரங்கள் உதவின. இலங்கைக்குச் செல்ல ராமபிரான் தன் வானரச் சேனையை அணிவகுத்து நிற்கச் செய்த இடம் இது. குரங்குகள் அணிவகுத்து நின்றதால் இவ்வூர் 'குரங்கணி' எனப் பெயர் பெற்றது.
சீதாதேவி தான் சென்ற வழியை ராமனுக்கு அடையாளம் காட்ட தன் கழுத்தில் கிடந்த முத்து மாலையை கழற்றி வீசினாள். புஷ்பக விமானத்தில் இருந்து வீசப்பட்ட முத்து மாலை தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள குரங்கணியில் விழுந்தது. முத்து மாலை கிடந்த இடமானதால் இங்கு அமைக்கப்பட்ட அம்மனுக்கு முத்துமாலையம்மன் என்று பெயரிட்டனர்.
ஆங்கிலேய அதிகாரி கூப்பிட்ட குரலுக்கு பதில் அளித்த முத்துமாலை அம்மன்
ஆங்கிலேய அதிகாரி கோவிலுக்கு தந்த இரண்டு மண் குதிரைகள்
பல ஆண்டுகளுக்கு முன் இப்பகுதியை ஆண்டுகொண்டிருந்த நவாப், தாமிரபரணி ஆற்றின் கரையை நேராக அமைக்க எண்ணினார். அதற்கு கோவிலின் சுற்றுச்சுவர் இடையூறாக இருப்பதாக நினைத்த அவர், ஆங்கிலேய அதிகாரி ஒருவரை அனுப்பி கோவில் சுற்றுச்சுவரை அகற்ற உத்தரவிட்டார். அதன்படி ஒரு ஆங்கிலேய அதிகாரி இக்கோவிலுக்கு குதிரையில் வந்தார். கோவில் சுற்றுச்சுவரை இடிக்க முயற்சித்தார். அவருடைய செயலை அவ்வூரைச் சேர்ந்தவகள் தடுத்தனர். அப்போது அந்த அதிகாரி 'இந்த அம்மனுக்கு சக்தி இருக்குமானால், நான் கூப்பிடுகிறேன். அது பதில் சப்தம் தருமா? என கேட்க, அதற்கு அவர்கள் 'நிச்சயம் தரும்' என்றனர்.
ஆங்கிலேய அதிகாரி,'முத்துமாலை அம்மன், முத்துமாலை அம்மன்' என மூன்று முறை கூப்பிட்டார். 'என்ன?' என்ற சப்தம் இடி போன்று கோவில் கருவறைக்குள் இருந்து கேட்டது. சப்தத்தை கேட்ட அதிர்ச்சியில் அந்த அதிகாரி மயங்கி கீழே விழுந்தார். உடன் குதிரையும் மயங்கி விழுந்தது. கூடி இருந்தவர்கள் பயபக்தியுடன் நின்றார்கள். அம்மன் தீர்த்தம் தெளித்து எழுப்பியதும் அதிகாரிக்கும், குதிரைக்கும் சுய உணர்வு வந்தது. கோவிலை இடிக்காமல் விட்ட அதிகாரி, இரண்டு மண் குதிரைகள் செய்து கோவிலில் வைக்க உத்தரவிட்டார். அந்த குதிரைகளை இன்றும் கோவிலில் பெரிய சுவாமி சன்னிதியில் காணலாம்.
இக்கோவிலில் ஆனி பெருந்திருவிழா, தைத் திருமாலை பூஜை விழா மிகவும் விமரிசையாக கொண்டாடப்படும். ஆனி மாதம் கடைசி செவ்வாய்க் கிழமை முத்துமாலை அம்மனுக்கு சொக்கத் தங்கத்தால் திருமேனி அலங்காரம் செய்யப்படும். ஆனி பெருந்திருவிழாவின் போது, வானில் கருடன் வட்டமிடும் அதிசய காட்சி இன்றும் நடைபெற்று வருகிறது.

திருமால்பூர் மணிகண்டீசுவரர் கோவில்
வித்தியாசமான பஞ்சாம்ச பீடத்தின் மீது எழுந்தருளி இருக்கும் அம்பிகை
காஞ்சீபுரத்திலிருந்து 15 கி.மீ தொலைவில் உள்ள தேவாரத்தலம் திருமால்பூர். இறைவன் திருநாமம் மணிகண்டீசுவரர். இறைவியின் திருநாமம் அஞ்சனாட்சி.
இத்தலத்து அம்பிகை யோகமுடி தரித்து, நின்ற கோலத்தில் நான்கு திருக்கரங்களுடன், புன்னகை தவழும் முகத்துடன் காட்சி தருகிறார். இந்த அம்பிகை எழுந்தருளி இருக்கும் பீடமானது சற்று வித்தியாசமாக, நாம் வேறு எந்த தலத்திலும் காண முடியாத அமைப்பாக இருக்கின்றது.
இந்தப் பீடமானது எட்டு லட்சுமிகள், எட்டு யானைகள், எட்டு நாகங்கள், எட்டு சிங்கங்கள் புடைசூழ நடுவில் மகாமேரு அமைந்துள்ளது. இப்படியான பஞ்சாம்ச பீடத்தின் மீது நின்று அபயம் அளிக்கும் கோலத்தில் அம்மன் எழுந்தருளி இருப்பது, இக்கோவிலின் தனிச்சிறப்பாகும்.

கோட்டைமேடு பத்ரகாளி கோவில்
சிங்கத்தின் வாயில் எலுமிச்சை வடிவில் சுழலும் கல் உடைய அபூர்வ சிற்பம்
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் - திருச்செங்கோடு செல்லும் வழியில் 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது கோட்டைமேடு பத்ரகாளி கோவில். 1500 ஆண்டுகள் பழமையான கோவில் இது. இந்த பத்ரகாளியம்மனுக்கு எலுமிச்சை மாலை அல்லது எலுமிச்சையில் விளக்கேற்றி வழிபட்டால் எல்லா பிரச்னைகளையும் தீர்ந்துவிடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
கடையேழு வள்ளல்களில் ஒருவரான பாரி ஆண்டுகொண்டிருந்த நேரம் அது. ஒரு சமயம் மழை இல்லாமல் ஏரிகள் எல்லாம் வற்றிப் போய் விவசாயம் செய்ய முடியாமல் மக்கள் பஞ்சத்தில் இருந்துள்ளனர். ஒரு நாள் மன்னன் பாரியின் கனவில் தோன்றி, நான் பத்ரகாளி என்றும், நான் பஞ்சத்தில் தவிக்கும் மக்களை காக்க ஏரியின் வலது கரையில் மேடான பாறையின் மேல் குடிகொண்டுள்ளதாகவும், இனி ஏரியில் எப்போதும் தண்ணீர் வற்றாது எனவும் கூறி, எனக்கு உடனடியாக ஒரு ஆலயத்தை கட்டி உடனடியாக குடமுழுக்கு செய்ய வேண்டும் என்றும் கூறியிருக்கிறாள், காளி. அகிலத்தையும் காக்கும் நான் மேடான பாறையில் இருப்பேன், இதனால் என்னை மீறி எந்த தவறும் நடக்காது எனவும், நான் தினமும் ஏரியில் குளிக்க வேண்டும் எனவும், அதனால் என்னை தினமும் ஏரிக்கு அழைத்து சென்று குளிப்பாட்ட வேண்டும் எனவும் கூறியிருக்கிறாள்.
மன்னன் உடனடியாக இந்த பகுதிக்கு வந்து பார்வையிட்ட போது எலுமிச்சை பழம் இருந்துள்ளதை கண்டு, கனவில் வந்தது காளிதான் என்று மக்களிடம் கூறி, உடனடியாக பாறையின் மீது ஒரு ஆலயத்தை கட்டியுள்ளார். இதனால் கருவறையானது பாறை மீது காளி அமர்ந்தவாறு மேடான பகுதியில் அமைந்துள்ளது. எனவே கோட்டை போன்ற வடிவமைப்புடன் மேட்டில் குடிகொண்டுள்ளதால், கோட்டை மேடு பத்ரகாளியம்மன் என அழைக்கப்படுகிறாள். மேலும், இந்த பகுதியில் பலவன் என்ற அரக்கன் மக்களை துன்புறுத்தி, தொந்தரவு செய்து வந்துள்ளான். மக்கள் பத்ரகாளியிடம் முறையிட்டு அரக்கனிடம் இருந்து காப்பாற்ற வேண்டியுள்ளனர். இதனால் அரக்கனை, பல்வேறு ஆயுதங்களை கொண்டு வதம் செய்து அழித்ததால் பத்ரகாளி எட்டு கரங்களுடன், அரக்கனை உக்கிரமாக வதம் செய்யும் காட்சியுடன், கருவறையில் வீற்றிருக்கிறாள்.
காளியின் காவலான சிங்கமானது, அடிக்கடி வனவிலங்குகளையும் கால்நடைகளையும் வேட்டையாடி வந்துள்ளது. இதனை தடுக்க மக்கள் வேண்டியதை ஏற்று, சிங்கத்தின் சீற்றத்தை குறைக்க அதன் வாயில் ஒரு எலுமிச்சை பழத்தை வைத்ததாகவும், அதனை குறிக்கும் விதமாக ஆலயத்தில் பத்ரகாளியை பார்த்தவாறு பெரிய சிங்கமானது காட்சியளிக்கிறது. சிங்கத்தின் வாயில் பற்களுக்கு இடையில் கருங்கல்லால் செதுக்கப்பட்ட உருளும் எலுமிச்சை வடிவில், கல் ஒன்று சுழலும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையானது மிகவும் அபூர்வமானது. தமிழகத்தில் வேறெங்கும் இது போன்ற சிலையை காண முடியாது. இது அந்த கால கலைநுட்பத்திற்கு சான்றாக விளங்குகின்றது.
மேலும் இந்த சிங்கத்தின் மீது தினமும் இரவு வேளையில் ஊரை காக்க சலங்கை அணிந்து வலம் வந்ததாகவும், அதனை மக்கள் பார்த்துள்ளதாகவும் பரவசமாக கூறுகின்றனர். இது தவிர காளியின் இரு புறத்திலும், பூதகணங்கள் எனப்படும் இரு காவல் தெய்வங்கள் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்னரே வைக்கப்பட்ட சிலைகளாகும். யானைகள் அடிக்கடி காளியை வணங்கியதாகவும், அதனை குறிக்கும் வகையில் ஆலயத்தின் இருபுறங்களிலும் யானை சிலைகள் நேர்த்தியாக செதுக்கப்பட்ட நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

சிதம்பரம் வெள்ளந்தாங்கி அம்மன் கோவில்
யானையின் துதிக்கையில் அரவணைத்து இருக்கும் வெள்ளந்தாங்கி அம்மன்
சிதம்பரம் நடராசர் கோயிலைச் சுற்றி நான்கு திசைகளிலும் அமைந்துள்ள நான்கு காவல் தெய்வங்கள் எழுந்தருளி இருக்கிறார்கள். அவர்களில் தெற்கு திசையில் அமைந்துள்ள காவல் தெய்வம் வெள்ளந்தாங்கி அம்மன் ஆவார். சிதம்பரம் சபாநாயகர் தெருவில் இக் கோவில் அமைந்துள்ளது. இது ஒரு சிறிய கோயிலாகும். கருவறையில் வெள்ளந்தாங்கி அம்மன் மேற்கு நோக்கி உள்ளார். யானையின் துதிக்கையில் அரவணைத்து இருப்பதுபோல் அம்மனின் உருவம் உள்ளது. கருறையில் அம்மனின் வலப்பக்கம் சிவலிங்கமும், இடப்பக்கம் சபரி சாஸ்தாவும் உள்ளனர்.
அம்மனுக்கு வெள்ளந்தாங்கி அம்மன் என்ற பெயர் வந்த கதை
சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு பெய்த ஒரு பெருமழையில் சிதம்பரம் நகரம் பெரும் வெள்ளக்காடாக ஆனது. அப்போது ஒரு பெண் வெள்ளத்தில் நீந்தி வந்தாள். அவளை நோக்கியபடி யானை ஒன்று பிளிறியபடி சென்றது. அது அப்பெண்ணை தன் துதிக்கையால் தூக்கிச் சென்று தில்லை நடராசர் கோயிலின் தெற்குப் பகுதியில் விட்டுச் சென்றது. ஊர் மக்கள் அங்கு சென்று பார்த்தபோது அப்பெண் அங்கு இல்லை. ஆனால் யானையின் துதிக்கையில் ஒரு பெண் இருப்பது போன்ற சிலை ஒன்று இருந்தது. வெள்ளம் வடிந்த பிறகு ஊர் மக்கள் தில்லை அந்தணர்களிடம் நடந்த விசயத்தைக் கூறினர். அவர்களின் ஆலோசனையின்படி அச் சிலையை அங்கேயே பிரதிட்டை செய்து வெள்ளந்தாங்கி அம்மன் என்ற பெயரைச் சூட்டி வழிபடத் தொடங்கினர்.
இயற்கை சீற்றத்தில் இருந்து மக்களைக் காத்த வெள்ளந்தாங்கி அம்மனை விவசாயம் செய்யும் அனைவருமே பயபக்தியோடு வந்து தாங்கள் விதைக்கப் போகும் விதையை இங்கு வைத்து பூஜை செய்துவிட்டு பிறகுதான் அதை விதைக்கிறார்கள். அப்படிச் செய்வதால் இயற்கைப் பேரிடர்களில் இருந்து விவசாயத்தையும், தங்களையும் அம்மன் அரவணைத்து காப்பாற்றுவாள் என்று நம்புகிறார்கள்.

பள்ளூர் அரசாலை அம்மன் என்னும் வாராகி அம்மன் கோவில்
வரம் தரும் பள்ளூர் வாராகி அம்மன்
பிராமி, கவுமாரி, வைஷ்ணவி, இந்திராணி, சாமுண்டி, மகேஸ்வரி, வாராகி எனும் சப்த மாதா்களில், வாராகி அம்மன் ஐந்தாமானவள். வாராகி அம்மன், பார்வதி தேவியின் அவதாரம் ஆவாள். மனித உடலும், வராக (பன்றி) முகமும் கொண்டவள். சப்த மாதர்களில் வாராகியை தனி தெய்வமாக வழிபடும் முறை பழங்காலத்தில் இருந்தே நடைமுறையில் உள்ளது. சோழர்களின் வெற்றி தெய்வம் வராஹி.தஞ்சை பெரிய கோவிலில் தனி ஆலயமுள்ளது .
காஞ்சிபுரத்தில் இருந்து 15 கி.மீ. தொலைவில் பள்ளூர் அரசாலை அம்மன் கோவில் உள்ளது. மிகவும் புராதனமான வாராகி அம்மன் கோவில் இது. இங்கு தெற்கு நோக்கி அமர்ந்த நிலையில் வாராகி அம்மன் அருள்கிறாள். பெரும்பாலான அம்மன் கோவில்கள் வடக்கு நோக்கி அமைக்கப்பட்டிருக்கும். அபூர்வமாக சில அம்மன் கோவில்கள் தெற்கு நோக்கி அமைக்கப்பட்டிருக்கும். வழக்கத்திற்கு மாறாக அமைக்கப்பட்டிருக்கும் இக்கோவில்கள், பரிகார கோவில்கள் ஆகும். இங்கு செய்யப்படும் பரிகாரங்கள் உடனுக்குடன் அளப்பரிய பலன்களை அள்ளித் தரக்கூடியவை.
வளர் பிறை மற்றும் தேய் பிறை பஞ்சமி திதி வழிபாடு
பள்ளூர் வாராகி அம்மன் சிறந்த வரப் பிரசாதி. வளர் பிறை மற்றும் தேய் பிறை பஞ்சமி திதியில் வாராகி அம்மனுக்கு, வாழை இலைபோட்டு அதில் பச்சரிசி சிறிது பரப்பி ,தேங்காய் உடைத்து அதன் இரு மூடியிலும் தூய பசு நெய் விட்டு தீபம் ஏற்றி வழிபட்டு வர நம் கோரிக்கைகள் எளிதில் நிறைவேறும். வாராஹிக்கு பூண்டு கலந்த, தோல் நீக்காத உளுந்து வடை, நவதானிய வடை, மிளகு சேர்த்த, வெண்ணெய் எடுக்காத தயிர்சாதம், மொச்சை, சுண்டல், சுக்கு அதிகம் சேர்த்த பானகம், மிளகு சீரகம் கலந்து செய்த தோசை, குங்குமப்பூ, சர்க்கரை, ஏலம், லவங்கம், பச்சைக் கற்பூரம் கலந்த பால், கறுப்பு எள் உருண்டை, சர்க்கரை வள்ளிக் கிழங்கு, தேன் ஆகியவற்றைப் படைத்து வழிபடுவதால் விசேஷ பலன்களைப் பெறலாம். மாதுளை முத்துக்களை தேனில் சிறிது ஊறவைத்து, அதனை வாராகி அம்மனுக்கு வைவேத்தியம் செய்து பஞ்சமி நாட்களின் பின்னிரவில் (இரவு 11 மணிக்கு மணிக்கு மேல்) அல்லது வாராகி நவராத்திரி நாட்களின் பத்தாவது நாளான நிறைவு நாள் வரையிலும் நெய் தீபம் அல்லது நல்லெண்ணெய் தீபம் ஏற்றி, வாராகி அம்மனுக்கு செம்பருத்தி, சிவப்பு அரளி, மரிக்கொழுந்து மாலை சூட்டி வழிபாடு செய்து வரலாம். இந்த வழிபாட்டின் மூலம் நற்பலன்களை அடையலாம்.
பில்லி, செய்வினை, மன நோய், மாந்திரீக பாதிப்பினால் உண்டான உடல்நோய்கள், தீராத எதிரி தொல்லை, முற்பிறவி கர்ம வினைகளால் உண்டான வறுமை , வழக்குகள், காரிய தடைகள் அண்டாது என்பது பக்தர்களின் நம்பிக்கை.
வாராகி அம்மனின் அம்சமான திருக்கடையூர் அபிராமி அம்மன்
திருக்கடையூர் அபிராமி அம்மன் வாராகி அம்சமே. இதனை அபிராமிபட்டர், அபிராமி அந்தாதியில் குறித்து உள்ளார்.
''நாயகி, நான்முகி நாராயணி கை நளின பஞ்ச
சாயகி சாம்பவி சங்கரி, சாமளை சாதி நச்சு
வாய் அகி மாலினி வாராஹி, சூலினி மாதங்கி என்
றாயகி யாதி உடையாள் சரணம் அரண் நமக்கே!”
“பயிரவி பஞ்சமி, பாசாங்குசை பஞ்சபாணி வஞ்சர்
உயிர் ஆவி உண்ணும் உயர் சண்டி காளி ஒளிரும் கலா
வயிரவி மண்டலி மாலினி சூலி, வாராஹி என்றே
செயிர் அவி நான்மறை சேர் திரு நாமங்கள் செப்புவரே!’
என அபிராமிபட்டர் திருக்கடையூர் அபிராமியை வாராகி திருக்கோலத்தில் தரிசித்ததை தமது அபிராமி அந்தாதியில் பதிந்து உள்ளார்.