
மருங்கப்பள்ளம் மருந்தீசுவரர் கோவில்
அம்பிகைக்கு அர்த்தநாரீஸ்வரர் அலங்காரம்
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியிலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது மருங்கப்பள்ளம். இத்தலத்து இறைவன் திருநாமம் மருந்தீசுவரர், ஔஷதபுரீசுவரர். இறைவியின் திருநாமம் மருத்துவ நாயகி ,பெரியநாயகி. சகல நோய்களையும் இறைவன் குணப்படுத்துவதால் இந்த பெயர் ஏற்பட்டது. இக்கோவில் 1200 ஆண்டுகள் பழமையானது.
இத்தலத்து இறைவி பெரிய நாயகி மேல் இரு கரங்களில் தாமரை மலர்களைத் தாங்கி கீழ் இரு கரங்களில் அபய, வரத முத்திரைகளுடன் புன்னகை தவழ நின்றகோலத்தில் காட்சிதருகிறாள். அம்பிகை, இவளை வணங்குவோர் குடும்பத்தில் நிம்மதி நிலவும். ஒற்றுமை நிலைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. அதனை நிரூபிப்பதுபோல், இந்த ஆலயத்தில் இவளுக்கு அர்த்தநாரீஸ்வரர் அலங்காரம் செய்யப்படுகிறது. வழக்கமாக இறைவனின் உற்சவமூர்த்திக்கே செய்யப்படும் இந்த அலங்காரம், தேவியின் மூலமூர்த்திக்கே செய்யப்படுவது சிறப்பானது.

திருநாங்கூர் மதங்கீசுவரர் கோவில்
கருவறையில் ஊஞ்சலில் ஆடும் காளியம்மன்
சீர்காழியில் இருந்து 10 கி.மீ.தொலைவில் உள்ளது திருநாங்கூர் மதங்கீசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் 'ராஜமாதங்கீசுவரி,
இக்கோவில் பிரகாரத்தின் வடக்கு புறத்தில் 'ஆனந்த வடபத்ரமாகாளியம்மன்' தனிச்சன்னதியில் தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறாள். மரத்தினால் ஆன திருமேனி உடையவள். தனது எட்டு கைகளிலும் வெவ்வேறு ஆயுதங்களை ஏந்தியபடி அருளுகிறாள். கருவறையில் இவள் ஊஞ்சல் மீது அமர்ந்தபடி காட்சி தருகிறாள். இப்படி கருவறையில் ஊஞ்சலில் அமர்ந்து காட்சி தரும் அம்மனை வேறு எந்த தலத்திலும் நாம் தரிசிக்க முடியாது. ஊஞ்சலில் ஆடும்போது இந்தக் காளியம்மனின் தரிசனம் பெறுவது விசேஷம். பவுர்ணமியில் காளி சன்னதியில் மாவிளக்கு ஏற்றி, சர்க்கரைப்பொங்கல் நைவேத்யம் படைத்து வணங்குகின்றனர். பத்ரகாளி அம்மனின் மூலவர் விக்கிரகமே விழாக்காலங்களில், வீதி உலாவிற்கு எடுத்துச் செல்லப்படுகிறது.

பெரியதிருமங்கலம் அருங்கரை அம்மன் கோவில்
பெண்கள் வந்து வணங்க அனுமதி இல்லாத அம்மன் கோவில்
கரூர் மாவட்டம் சின்ன தாராபுரத்தில் இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளது பெரிய திருமங்கலம். இந்த ஊரில் பாயும் அமராவதி ஆற்றின் கரையில் அம்மன் கோவில் உள்ளது. நல்லதாய் என்று முதலில் பெயர் பெற்றிருந்த இந்த அம்மன், பின்னர் ஆற்றின் கரையில் எழுந்தருளி இருப்பதால் அருங்கரை அம்மன் என்று அழைக்கப்படுகின்றார்.
இந்தக் கோவிலுக்கு உள்ளே செல்ல பெண்களுக்கு அனுமதியில்லை. அவர்கள் வாசலில் நின்று வழிபடலாம். பெண் குழந்தைகள் கூட கோவிலுக்குள் செல்ல அனுமதி கிடையாது. வெளியில் நின்று வணங்கும் பெண்கள், அமராவதி ஆற்றில் குளித்துவிட்டு, தலை முடியாமல், ஈரத்துணியுடன் வழிபட வேண்டும். ஆண்கள் மட்டுமே கோவிலுக்குள் சென்று வழிபடுகின்றனர். மேலும், இங்கு செவ்வாய்க்கிழமை மட்டுமே கோயில் திறக்கப்பட்டு நள்ளிரவில் பூஜை நடக்கிறது. மற்ற நாட்களில் கோவில் இரவும், பகலும் அடைக்கப்பட்டே இருக்கும்.
மஞ்சள், குங்குமம் பிரசாதத்திற்கு பதிலாக மடப்பள்ளி அடுப்பு சாம்பல் பிரசாதம்
அம்பாள் கோயில்களில் வழக்கமாக தரப்படும் மஞ்சள், குங்கும பிரசாதமும் இங்கு தரப்படுவதில்லை. அவளுக்கு நைவேத்தியம் தயாரிக்கும் அடுப்பிலுள்ள சாம்பலையே தருகின்றனர். அம்பாளுக்கு பூஜை முடிந்தபின்பு, படைக்கப்பட்ட பூஜைப் பொருட்கள், மற்றும் நேர்த்திக்கடனாக செலுத்தும் வாழை, தானியங்கள் போன்றவற்றை கோயில் முன் மண்டபத்தில் இருந்து "சூரை' (எறிதல்) விடுகின்றனர். இதனை பெண்கள் தங்களது சேலையில் பிடித்துக் கொள்கின்றனர். அம்பாள் பிரசாத பொருட்களின் வடிவில் பெண்களுக்கு அருளுவதாக நம்பிக்கை.
கோவில் வரலாறு
முன்னொரு காலத்தில் இப்பகுதியில் வசித்த மீனவர்கள், அமராவதி ஆற்றில் வலைவீசிய போது, பெட்டி ஒன்று சிக்கியது. அதற்குள் ஒரு அம்மன் சிலை இருந்தது. ஆற்றங்கரையிலுள்ள மரத்தின் அடியில் அம்பாளை வைத்து வழிபட்டு வந்தனர். காலப்போக்கில் அவர்கள் அவ்விடத்தை விட்டு சென்றுவிடவே, மணல் மூடி பெட்டி மண்ணுக்குள் புதைந்து விட்டது. பின்னர் நல்லதாய் என்ற கால்நடைகளை மேய்க்கும் தொழிலைச் செய்து வந்த சிறுமி, ஒரு நாள் மாடு மேய்த்துக் கொண்டிருந்தபோது ஒரு பசு மட்டும் மரத்தின் அடியில் இருந்த மணல் மேட்டின் மீது பால் சொரிந்ததைக் கண்டாள் வியப்புற்று அருகில் சென்று பார்த்தபோது ஒரு மேடு இருந்தது அதன் மீது அவள் அமர்ந்தாள் அதன்பின் எழவில்லை. சிறுமியைக் காணாததால் ஊரில் இருந்த ஆண்கள் அவளைத்தேடி இங்கு வந்தபோது சிறுமி மணல் திட்டில் அமர்ந்திருந்ததைக் கண்டனர் அவர்கள் சிறுமியை வீட்டிற்கு வரும்படி அழைத்தனர் அங்கிருந்த வர மறுத்த சிறுமி அவர்களிடம், "நான் இங்கேதான் இருக்க விரும்புகிறேன் என்னைக்கண்ட இந்தநூளில் இதே நேரத்தில் மட்டும் எனக்கு பூஜை செய்து வழிபடுங்கள் என்று சொல்லிவிட்டு ஜோதியாக மாறி மறைந்துவிட்டாள் பின் அவர்கள் சிறுமியை அம்பாளாக எண்ணி உருவம் ஏதுமில்லாமல் வழிபட்டு வந்தனர் பிற்காலத்தில் இங்கு கோயில் கட்டப்பட்டது.

பஞ்சட்டி அகத்தீசுவரர் கோவில்
மரகத திருமேனியுடன், நெற்றியில் மூன்றாவது கண்ணுடன் சத்ருசம்ஹார கோலம் கொண்ட அம்பிகை
சென்னை - கல்கத்தா நெடுஞ்சாலையில், 31 கி.மீ தொலைவில், செங்குன்றம், காரனோடை ஊர்களைக் கடந்தால் வரும் தச்சூர் கூட்டு ரோட்டில் இருந்து, சுமார் 500 மீட்டர் தொலைவில் உள்ளது பஞ்சட்டி அகத்தீசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் ஆனந்தவல்லி. அகத்தியர் வந்து வழிபாடு செய்ததால் இறைவனுக்கு, அகத்தீசுவரர் என்ற பெயர் ஏற்பட்டது.
அம்பாள் ஆனந்தவல்லி தெற்கு நோக்கி, இடது காலை முன்வைத்து நின்ற கோலத்தில் எழுந்தருளி இருக்கிறாள்.அம்பிகையின் திருமேனி பச்சை மரகதக்கல்லால் ஆனது. அம்பிகையின் நெற்றியில், சிவபெருமானைப் போல் மூன்றாவது கண் அமைந்திருப்பது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும்.
அகத்திய முனிவர், சுகேது என்ற அரக்கனுடைய சாப விமோசனத்திற்காக இத்தலத்தில் ஐந்து யாகங்கள் செய்தார். அவர் செய்த ஐந்து யாகங்களுக்கு பஞ்ஜேஷ்டி என்று பெயர். இஷ்டி என்றால் யாகம். ஐந்து யாகங்கள் என்பதால் பஞ்ச இஷ்டி. அதுவே இத்தலப் பெயரானது.
அந்த யாகத்துக்கு அசுரர்கள் தடை ஏற்படுத்திட முயல, அகத்திய முனிவர் அம்பிகையிடம் காத்தருள வேண்டினார். உடனே அம்பிகை மூன்று கண்களைக் கொண்ட திரிநேத்ரதாரணியாக இத்தலத்தில் தோன்றி, தனது இடது காலை முன் வைத்து, மூன்றாவது கண்ணால் அந்த அசுர சக்திகளை எரித்துச் சாம்பலாக்கினாள். தீய சக்திகளை அழிக்க புறப்பட்டதினால், அம்பிகை இங்கு இடது காலை முன்வைத்து காட்சி தருகிறாள். அம்பாளின் இத்திருக்கோலம் சத்ருசம்ஹார திருக்கோலம் ஆகும். பிறகு அகத்திய முனிவர், அம்பிகைக்கு தனது நன்றியைத் தெரிவிக்கும் பொருட்டும், அவள் சாந்த நிலைக்குத் திரும்பவும் அம்பாளுக்கு முன்பாக மிகப் பெரிய துர்க்கா மகா யந்திரத்தை பிரதிஷ்டை செய்தார்.
அம்பாள் ஆனந்தவல்லியாக ஆனந்தத்தையும், அதே நேரத்தில் நம்மை வாட்டி வதைக்கும் தீய சக்திகளைப் பொசுக்கிக் காத்தருளும் முக்கண்ணுடையவளாகவும் அருள் பாலிக்கிறாள்.இங்கு யாகங்கள் செய்தால் பலன்கள் பல மடங்காக கூடும் என்று கூறப்படுகிறது. அகத்தியரால் செய்யப்பட்ட ஐந்து யாகங்களில், அன்னதானத்தையே மிகச் சிறப்பாகச் செய்துள்ளார். எனவே இந்த ஆலயத்தில் அன்னதானம் செய்தால் இழந்த பதவிகள் மீண்டும் கிடைக்கும் , உயர் பதவிகள் தேடி வரும் என்பது ஐதீகம். அம்பாளின் அருள் நம் செயல்களில் ஏற்படும் தடங்கல்கள், எதிர்ப்புகள் அனைத்தையும் விலக்கி விடும்.
அம்பாளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், ராஜகோபுரம் தெற்கு நோக்கி அம்பாளின் முன் அமைந்திருப்பதும் ஒரு தனிச்சிறப்பாகும். இவ்வாறு தெற்கு நோக்கி ராஜகோபுரம் அமைந்திருந்தால் அத்தலத்தை பரிகார தலம் என்பார்கள. ராஜகோபுரத்தில் இருக்கும் நவக்கிரகங்கள், அட்டதிக்கு பாலகர்கள் ஆகியோர், அம்பாளுக்கு எதிரில் கட்டுப்பட்டு இருக்கின்றனர். அதனால் திருமண தோஷம் ,நவக்கிரக தோஷம் ,சத்ரு தோஷம் ,வாஸ்து தோஷம் ஆகியவைகளுக்கு பரிகார தலமாக இக்கோவில் விளங்குகின்றது.

பெரியபாளையம் பவானி அம்மன் கோவில்
ராஜபோக வாழ்க்கை அருளும் ராஜமாதங்கி அம்மன்
சென்னையில் இருந்து 45 கி.மீ. தொலைவில், திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற பெரியபாளையம் பவானி அம்மன் கோவில். கோவிலுக்குள் நுழைந்தவுடன் விநாயகரை தரிசித்து விட்டு செல்லும்போது தனி சன்னதியில் நமக்கு காட்சி தருபவள் ஸ்ரீ சர்வ சந்தோஷ சக்தி மாதங்கி அம்மன். இவள் ராஜ மாதங்கி என்றும் அழைக்கப்படுகின்றாள். மாதங்கி அம்மனை வணங்கிவிட்டு தான், கருவறையில் உள்ள பவானி அம்மனை வணங்கத் செல்ல வேண்டுமென்பது ஐதீகம். அன்னை ஸ்ரீ லலிதாம்பிகையின் கையில் இருக்கும் கரும்பு வில்லே ராஜ மாதங்கியாக உருவெடுத்தது என்றும் கூறப்படுகிறது.
குபேரரின் கடைக்கண் பார்வையை பெற்றுத் தருவதால் இந்த அம்மனுக்கு ராஜமாதங்கி என்ற சிறப்பு பெயர் வந்தது. கலைமகள், மலைமகள், அலைமகள் என மூவரின் அம்சமும் கொண்டவள் ராஜ மாதங்கி. அம்மன் ஒரு கரத்தில் வீணையும் , மறுகரத்தில் கிளியுடனும் காட்சி தருபவள். வீணையின் அம்சம் கலைகளில் வெற்றியும் , கிளியின் அம்சம் வாக்கு வன்மையும் குறிக்கும் . மதுரை மீனாட்சி அன்னையே ராஜ மாதங்கியின் அம்சம்தான் என்பதால், மீனாட்சியை வணங்குவதே, ராஜ மாதங்கியை வணங்குவது போல்தான். இதனால் அரச பதவி வேண்டுவோர், அன்னை ராஜ மாதங்கியை முக்கிய தெய்வமாக எண்ணி வழிபடத் தொடங்கினர். வெள்ளிக்கிழமை தோறும். ராஜமாதங்கி அம்மனை வழிபட்டால் கலைகளில் மேன்மையும் , ராஜபோக வாழ்க்கையும் கிடைக்கும். இந்த அம்மனை நாம் மனதில் உருகி வழிபட ,செல்வத்திற்கு அதிதேவதையான குபேரரின் கடைக்கண் பார்வையை பெற்றுத்தருவதற்கும்,கல்வி, கலை ,ஞானம்,வீரம் ஆகிய கலைகளில் சிறந்து விளங்குவதற்கும் பாக்கியம் கிட்டும்.

திருநாங்கூர் மதங்கீசுவரர் கோவில்
ஸ்ரீ லலிதா திரிபுரசுந்தரியின் அமைச்சராக விளங்கும் ஸ்ரீராஜமாதங்கீசுவரி
சீர்காழியில் இருந்து 10 கி.மீ.தொலைவில் உள்ளது திருநாங்கூர் மதங்கீசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் ஸ்ரீராஜமாதங்கீசுவரி. இறைவிக்கு அஞ்சனாட்சி, கடம்பவனவாசினி என்று மேலும் 16 பெயர்கள் உண்டு. அம்பிகை, . ஸ்ரீ சக்கரத்தில் எழுந்தருளி இருக்கும், அரசர்க்கெல்லாம் அரசி என்று போற்றப்படும் ஸ்ரீ லலிதா திரிபுரசுந்தரியின் அமைச்சராக விளங்குபவள்.
பிரம்மதேவனின் புதல்வரான மதங்க முனிவரின் மகளாக பிறந்தமையால், மாதங்கி என அழைக்கப்படுகிறார். அம்பிகை மாதங்கி, சிவபெருமானை இத்தலத்துக்கு அருகில் உள்ள திருவெண்காட்டு தலத்தில் திருமணம் புரிந்தாள். அதனால் இங்கு திருமண கோலத்தில் எழுந்தருளி இருக்கிறாள். மேல் இரு கரங்களில் பத்மத்தையும், சக்கரத்தையும் சுமந்து கீழ் இரு கரங்களில் அபய, வரத முத்திரைகளுடன் காட்சி தருகிறாள்.
சரஸ்வதி தேவிக்கு கல்வி உபதேசம் செய்தவள்
சகல கலைகளுக்கும் அதிபதியாக விளங்குபவள் மதங்கீசுவரி. சரஸ்வதி தேவிக்கு குருவாக இருந்து கல்வி உபதேசம் செய்தவள் என்பதால் இவளிடம் வேண்டிக்கொள்ள கல்வியில் சிறக்கலாம் என்பது ஐதீகம். புதிதாக பள்ளியில் சேர்க்கும் குழந்தைகளை பௌர்ணமி மற்றும் அஷ்டமி தினங்களில் அம்பாள் சன்னதி முன்பு நாக்கில் தேன் வைத்து எழுதி 'அக்ஷராப்பியாசம்' செய்கின்றனர். இவ்வாறு செய்வதால் அவர்களது கல்வி சிறக்கும் என்கிறார்கள். பேச்சு வராத குழந்தைகளை அன்னையின் சன்னிதி முன் அமரச் செய்து, அவர்கள் நாக்கில் தேனைத் தடவி மூல மந்திரத்தை எழுத, அவர்கள் மெல்ல மெல்ல பேசத் தொடங்குகின்றனர். இந்த அம்பிகையை தரிசிப்பவருக்கு கலை, கல்வி, தேர்வில் தேர்ச்சி, உயர் பதவி, தொழில் மேன்மை, பேச்சு வன்மை அனைத்தும் கிடைக்கப்பெறும்.
திருமண தடை நீங்க மட்டை தேங்காயுடன் அர்ச்சனை
திருமணத் தடை உள்ளவர்கள்அஷ்டமி அன்று இவளுக்கு பாசிப்பருப்பு பாயாச நைவேத்யம் படைத்து, மட்டை உரிக்காத முழு தேங்காயை அர்ச்சனை பொருட்களுடன் தட்டில் வைத்து அன்னைக்கு அர்ச்சனை செய்கின்றனர். பின் அந்த தேங்காயை, 11 மாதங்கள் வீட்டில் வைத்து, மாதந்தோறும் அஷ்டமி அன்று பூஜை செய்து வர வேண்டும். அப்படி செய்தால் 11 மாதங்களுக்குள் அவர்கள் திருமணம் நடைபெறுவது உறுதி என்கிறார்கள். திருமணத்திற்கு பின்னர், தம்பதிகள் ஆலயம் வந்து, அன்னைக்கு அபிஷேகம் செய்து, புத்தாடை அணிவித்து, சன்னிதியை 11 முறை வலம் வருவார்கள். பிறகு அந்த தேங்காயை அம்மன் சன்னிதிலேயே கட்டிச் செல்வது வழக்கமாக உள்ளது.

திரிசூலம் திரிசூலநாதர் கோவில்
மன அமைதி தரும் திரிபுரசுந்தரி அம்மன்
சென்னை விமான நிலையம் எதிரில் அமைந்துள்ள திரிசூலம் ரயில் நிலையத்திலிருந்து 1 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது திரிசூலநாதர் கோவில். பிரம்மன் வழிபட்ட தலம் இது. நான்கு வேதங்களே, நான்கு மலைகளாக இக்கோயிலைச் சுற்றி இருக்கின்றது. சுரம் என்றால் வளம் நிறைந்த மலை என்று பொருள். மலைகளுக்கிடையே வீற்றிருக்கும் இத்தல இறைவனுக்கு திருச்சுரமுடையார் என்றும் பெயர். இந்த திருச்சுரம் என்பது மருவி. பின்னர் திரிசூலமாகி விட்டது.
இறைவன் திரிசூலநாதர் லிங்க வடிவில் கிழக்கு நோக்கி எழுந்தருளி இருக்கிறார். சுவாமி அருகில் சொர்ணாம்பிகை கருவறையில் இருக்க, மற்றொரு பிரதான அம்பாள் திரிபுரசுந்தரி தனி சந்நிதியில், தெற்கு நோக்கி எழில்கோலத்துடன் அருள்புரிகிறாள். அம்பிகையின் திருக்கரங்களில் அட்சத மாலையும், தாமரைப் பூவும் திகழ்கின்றன. இதன் மூலம் ஞானத்தையும் செல்வத்தையும் ஒருசேர அருள்பிரசாதமாகத் தருகிறாள் அன்னை திரிபுரசுந்தரி.
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் திரிபுரசுந்தரி அம்மன் சந்தனக்காப்பு அலங்காரத்தில் காட்சி தருவாள். அன்று அவளை வழிபடுவர்களுக்கு மன அமைதி உண்டாகும் என்பது நம்பிக்கை. கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக திரிபுரசுந்தரிக்கு வெள்ளிக்கிழமைகளில் சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. அதுவும் ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் பூப்பாவாடையுடன் சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்படுகிறது.
திரிசூலநாதர் கருவறையில் சொர்ணாம்பிகை எழுந்தருளி இருப்பதற்கு, ஒரு பின்னணி வரலாறு உண்டு. அந்நியர் படையெடுப்பின்போது கோவிலில் இருந்த சொர்ணாம்பிகை தாயாரின் கையில் கட்டைவிரல் சேதமடைந்துவிடுகிறது. அதனால் பின்னப்பட்ட சிலையை வழிபடக்கூடாது என்று கூறி, தனியே வைத்துவிடுகிறார்கள்.அப்போது அர்ச்சகரின் கனவில் வந்து தனது பின்னத்தை சரிசெய்து, மீண்டும் திரிசூலநாதரின் அருகே வைக்குமாறு தாய் அருள் கூற, அதன்படி சிலையின் பின்னப்பட்ட விரலுக்கு பதிலாக தங்கத்தில் விரல் செய்து பின்னர் திரிசூலநாதரின் அருகிலேயே சொர்ணாம்பிகையை இருக்கச் செய்திருக்கிறார்கள்.

அம்மாசத்திரம் சப்தரிஷீஸ்வரர் கோவில்
மூன்று முகங்கள் கொண்ட அபூர்வ விஷ்ணு துர்க்கை
கும்பகோணத்திலிருந்து 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது அம்மாசத்திரம் சப்தரிஷீஸ்வரர் கோவில். ருத்ராட்சப்பந்தலின் கீழ் இறைவன் அமைந்துள்ளார். இறைவியின் திருநாமம் ஞானாம்பிகை. தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 கோவில்களில், இக்கோவிலும் ஒன்றாகும்.
ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் அம்சமாக, தனது நான்கு கைகளில் இரண்டில் சங்கமும், சக்கரமும் ஏந்தி காட்சி தருபவள் விஷ்ணு துர்க்கை எனப்படுகிறாள். பதினெட்டு அல்லது எட்டு அல்லது நான்கு கைகளுடனும் ஒவ்வொரு கைகளிலும் கத்தி சூலம் போன்ற ஆயுதங்களுடனும், அசுரர்களை எதிர்த்து போரிடும் உக்கிர சொரூபமாகக் காட்சிக் கொடுப்பவள் சிவதுர்க்கை எனப்படுகிறாள். இந்தக் கோவிலில் எழுந்தருளி இருக்கும் விஷ்ணு துர்க்கை மூன்று முகங்களுடன் அபூர்வ கோலத்தில் காட்சி தருகிறாள். இப்படி மூன்று முகம் கொண்ட விஷ்ணு துர்க்கை தமிழ் நாட்டில் வேறு எங்கும் இல்லை.
இந்தக் கோவிலில் எழுந்தருளியுள்ள மூன்று முக விஷ்ணு துர்க்கையைத் தரிசித்தால் முன் ஜன்ம வினைகள் உடனே தீரும். திருமணமாகி மன வேறுபாடு காரணமாகப் பிரிந்து வாழ்ந்து வரும் தம்பதிகள் இங்கு வந்து, இந்த மூன்று முக துர்க்கையைப் பிரார்த்தித்தால், விரைவில் மன வேறுபாடு நீங்கி ஒன்று சேருவார்கள் என தல வரலாற்றில் சொல்லப்பட்டுள்ளது. மூன்றுமுக விஷ்ணு துர்க்கைக்குச் சிவப்பு மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட்டால் வாழ்வு வளம் பெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோவில்
தினமும் குழந்தை, இளம்பெண், பெண் என மூன்று வித தோற்றங்களில் காட்சி தரும் அம்பிகை
கும்பகோணத்திலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத்தலம் திருநாகேஸ்வரம். இறைவன் திருநாமம் நாகநாதசுவாமி. இத்தலத்தில் கிரிகுஜாம்பிகை மற்றும் பிறையணிவாள் நுதல் அம்மை என இரண்டு அம்மன்கள் அருள்பாலிக்கிறார்கள்.
கிரிகுஜாம்பாள் அம்பிகை தனிச் சன்னதியில் தவக்கோலத்தில் காட்சியளிக்கின்றாள். கிரிகுஜாம்பிகையின் வலதுபுறம் வீணையைக் கையில் தாங்கி சரஸ்வதியும், இடதுபுறம் கரங்களில் தாமரை மலரைத் தாங்கி லட்சுமிதேவியும் இருக்கின்றனர் . கிரிகுஜாம்பிகை காலையில் சிறுமியாகவும், மதியத்தில் இளம் பெண்ணாகவும், மாலையில் தேவியாக, பெண்ணாகவும் அலங்கரிங்கப்படுகிறார்.
கிரிகுஜாம்பிகையின் திருவடிவம் சுதையால் ஆனது என்பதால் அபிஷேகம் செய்வதில்லை. புனுகுச் சட்டம் மட்டுமே சார்த்துகிறார்கள். மார்கழி மாதத்தில் 48 நாட்கள் புனுகு சட்டம் மட்டுமே சாற்றுவது வழக்கம். அந்நாட்களில் அம்பிகையை தரிசிக்க முடியாது. இந்நாட்களில் அம்பிகையின் சன்னதி முன்புள்ள திரைச்சீலைக்கே பூஜை நடக்கிறது. தை மாதத்தில் அம்பாளுக்கு, புனுகு காப்புத் திருவிழா நடைபெறும். தை கடைசி வெள்ளியன்று அம்மனது சன்னதி முன்மண்டபத்தில் அன்னம், காய்கறி, பழங்கள் போன்றவற்றை படைத்து சிறப்பு பூஜை நடைபெறும்.
இங்கு முத்தேவியரை வணங்கி, இவர்களை வழிபட குடும்பத்தில் ஐஸ்வர்யம் உண்டாகும் என்பது நம்பிக்கை. இத்தலம் ராகுவிற்கான பரிகார தலமாகவும் விளங்குகிறது.

திருப்பூர் கோட்டை மாரியம்மன் கோவில்
முப்பெரும் தேவியரும் ஒன்றாய் இணைந்திருக்கும் கோட்டை மாரியம்மன்
திருப்பூர் பிச்சம் பாளையம் பகுதியில் அமைந்துள்ளது கோட்டை மாரியம்மன் கோவில். இக்கோவில் திருப்பூர் மக்களிடையே மிகவும் பிரசித்தி பெற்றது. தாயாய் இருந்து இந்தப் பகுதி மக்களை காப்பதால், இக்கோவிலுக்கு தாய்மை கோவில் என்ற பெயரும் உண்டு. விஜயநகரப் பேரரசு காலத்தில் இங்கு கோட்டை கட்டப்பட்டதாகவும், அதையடுத்து கோட்டைக்குள் அம்மனின் விக்கிரகத்தைப் பிரதிட்டை செய்து கோவில் அமைத்ததாகவும், அதனால் அம்மனுக்கு ஸ்ரீகோட்டை மாரியம்மன் எனத் திருநாமம் அமைந்ததாகவும் சொல்கின்றனர்.
ஸ்ரீதுர்கை, ஸ்ரீலட்சுமி, ஸ்ரீசரஸ்வதி ஆகிய மூன்று தேவியரும் ஒருங்கே இணைந்து காட்சி தரும் திருக்கோலத்தில் அமைந்திருக்கிறாள் கோட்டை மாரியம்மன். திருமுகத்தில் லட்சுமி கடாட்சம் பொங்க, யோக நிலை ஸ்ரீசரஸ்வதி தேவியின் அம்சமாகவும், ஆயுதம் ஏந்திய நிலை ஸ்ரீதுர்கையை நினைவூட்டுவதாகவும் இந்த அம்மனின் தோற்றம் விளங்குகின்றது.
பிரார்த்தனை
திருமணத் தடை, தொழிலில் நஷ்டம், குடும்பத்தில் பிரச்னை எனத் தவிப்பவர்கள், செவ்வாய் அல்லது வெள்ளிக் கிழமைகளிலும், மாதாந்திர அஷ்டமி நாட்களிலும் தொடர்ந்து 12 வாரங்கள் வந்து, அம்மனுக்குத் திரிசதி அர்ச்சனை செய்து, நெய் தீபமேற்றி வழிபட்டால், கல்யாண வரம், பிள்ளை பாக்கியம் கைகூடும். தொழில் சிறக்கும். குடும்பத்தில் இருந்த கவலைகள் யாவும் நீங்கும் என்பது ஐதீகம்! கோவிலில் உள்ள நாகர் சந்நிதி மிகவும் சக்தி வாய்ந்தது . வெள்ளிக்கிழமை ராகு கால வேளையில், இங்கு வந்து நாகருக்குப் பாலபிஷேகம் செய்து வேண்டிக் கொண்டால், நாக தோஷம் விலகும். மார்கழி முழுவதும் வந்து அம்மனைத் தரிசித்தால், நிம்மதி தேடி வரும் என்பது ஐதீகம்.

தக்கோலம் ஜலநாதீசுவரர் கோவில்
பிரயோக நிலையில் சக்கரத்தை ஏந்தி இருக்கும் அபூர்வ துர்க்கை
இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்திலிருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத் தலம் தக்கோலம். இறைவன் திருநாமம் ஜலநாதீசுவரர். இறைவி கிரிராஜ கன்னிகை.
இக்கோவில் பிரகாரத்தில் எழுந்தருளி இருக்கும் துர்க்கை நான்கு திருக்கரங்களுடன், ஸ்ரீ திரிபங்கி நிலையில் காட்சித் தருகின்றாள். திரிபங்கி நிலை என்பது தலை, இடை, கால்கள் என உடலின் மூன்று பகுதிகளும், வளைவுகளுடன் மிகவும் ஒய்யாரமாக நிற்கும் நிலையாகும். தலையில் சிம்மமுகத்துடன் கூடிய கரண்டமகுடமணிந்துள்ளார். கண்களில் தாய்மை. இதழ்களில் ஒரு புன்னகை. காதுகளில் மகர குண்டலமும், கழுத்தில் அணிகளன்களுடன் கூடிய சரப்பளிகளை நாம் காணலாம். கையில் சங்கு, சக்கரத்துடன் காணப்படுகிறாள். வலது கையில் இருக்கும். பின் இரு கரங்களில் சங்கு, சக்கரத்தை ஏந்தி இருக்கின்றாள். வலது பின்கையில் உள்ள சக்கரம், பிரயோக நிலையில் இருக்கின்றது. இப்படி பிரயோக சக்கரத்தை ஏந்தி இருக்கும் துர்க்கையை நாம் காண்பது அரிது. இடது முன்கையை எந்த ஒரு முத்திரையும் காண்பிக்காமல் இடது தொடையின் மேல் வைத்துள்ளாள். மார்பில் சன்னவீரம், கொடி இடை, புலிக்கச்சுடன் கூடிய இடை ஆடை. கால்கள் வளைந்த நிலையில் ஸ்வஸ்திகத்தில் உள்ளன. பூத வரியில், பறவை முதற்கொண்டு தலைகீழாக தொங்கும் பூதங்கள், மத்தளம், ஒருகண் சிறுபறை முழக்கும் பூதம், கையில் தாளம் போடும் பூதம், இசை பாடும் பூதம் முதலியவை இருக்கின்றன. துர்க்கை அணிந்திருக்கும் அணிகலன்களின் வேலைப்பாடு நம்மை பிரமிக்க வைக்கின்றது.
துர்க்கை காயத்ரி
துர்க்கை என்றால் துக்கங்களையெல்லாம் போக்குபவள் என்று அர்த்தம். நம் துக்கங்களையெல்லாம் போக்கும் பணியை மேற்கொள்ளும் தேவதைகளில் துர்க்கைக்கு தனியிடம் உண்டு. செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில், துர்க்கைக்கு எலுமிச்சை தீபம் ஏற்றி வழிபடுவதும் ராகுகாலத்தில் தீபமேற்றி வழிபடுவதும் எண்ணற்ற பலன்களை வழங்கவல்லது. அதேசமயம், தினமும் கீழ்க்கண்ட துர்க்கை காயத்ரியை 11 முறை அல்லது 24 முறை அல்லது 54 முறை சொல்வது நல்ல பலனை கொடுக்கும்.
ஓம் காத்யாயனய வித்மஹே
கன்யாகுமாரி தீமஹி
தந்நோ துர்கி ப்ரசோதயாத்
அதாவது, காத்யாயன மகரிஷியின் மகளாக அவதரித்தவளே. நித்திய குமரியாக திகழ்பவளே. உன்னை வணங்கித் தொழுவதால், என்னுடைய மனதை தெளிவுபடுத்துவாயாக. குழப்பமில்லாத மனதையும் அறிவையும் மேம்படுத்துவாயாக. நற்பலன்களை வாரி வழங்கும் உன்னுடைய பாதங்களைப் பணிகிறேன் என்று அர்த்தம்.

சங்கரன்கோவில் சங்கர நாராயணர் கோவில்
தெற்குவாசி துர்க்கை
தென்காசியில் இருந்து சுமார் 45 கி மீ தொலைவில் உள்ளது சங்கரன்கோவில். இறைவனின் திருநாமம் சங்கரலிங்கசுவாமி.இறைவியின் திருநாமம் கோமதி அம்மன். பாண்டிய நாட்டின் பஞ்சபூத தலங்களில் சங்கரன்கோவில், பிரித்திவி(மண்) தலமாக விளங்குகின்றது.
பொதுவாக சிவத்தலங்களில் சுவாமியின் கருவறை சுற்றுச்சுவரில், வடக்கு நோக்கி துர்க்கை எழுந்தருளி இருப்பாள். ஆனால் இக்கோவிலில் தெற்கு முகமாக எழுந்தருளி இருக்கும் துர்க்கையைக் காணலாம். அதனால் இந்த துர்க்கையை 'தெற்குவாசி துர்க்கை' என்று அழைக்கின்றனர். தெற்கு என்பது எமதர்மனின் திசையாகும். எனவே, தெற்கு பார்த்தபடி வீற்றிருக்கிற துர்க்கையை, ராகுகாலவேளையில் வணங்கினால், கணவனின் ஆயுள் நீடிக்கும். தாலி பாக்கியம் நிலைக்கும் என்பது நம்பிக்கை. குறிப்பாக, வெள்ளிக்கிழமை ராகுகால வேளையில், எலுமிச்சை தீபமேற்றி வழிபடுவது சிறப்பு.
நான்கு கரங்களுடன் நின்ற கோலத்தில் இருக்கும் இந்த துர்க்கைக்கு, நவராத்திரி நாட்களில் செய்யப்படும் சிறப்பு அலங்காரங்கள், பார்ப்பவரை பரவசமடையச் செய்யும்.

கும்பகோணம் ஏகாம்பரேசுவரர் கோவில்
சுமங்கலிகள் தங்கள் தாலியை அம்மனுக்கு நேர்த்திக் கடனாக செலுத்தும் கோவில்
கும்பகோணம் நாகேஸ்வரன் கீழவீதியில் அமைந்துள்ளது ஏகாம்பரேசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் காமாட்சி. அம்பிகை ருத்திராம்சம் பொருந்தியவள் என்பதால், அம்பிகைக்கு முன் சிம்மத்திற்கு பதிலாக நந்தி இருக்கின்றது.
இக்கோவிலின் திருச்சுற்றில் இராகுகால காளிகா பரமேஸ்வரிக்கு தனியாக சன்னதி உள்ளது. சிவன் கோயிலாக இருந்தாலும் இங்கிருக்கும் காளிகா பரமேஸ்வரி சன்னதியிலேயே கூட்டம் அலைமோதுகிறது.சன்னதியின் முன்புறம் வலப்புறம் விநாயகரும், இடப்புறம் நாகமும் காணப்படுகின்றன. கருவறையில், அசுரனை வதம் செய்யும் கோலத்தில் எட்டு கரங்களுடன் அஷ்டபுஜ காளியாக கன்னிகா பரமேஸ்வரி வீற்றிருக்கிறாள். கத்தி, கேடயம் ஆகியவை கைகளில் உள்ளன. இந்த அம்மனுக்குத்தான் தென்னிந்தியாவிலேயே முதன்முறையாக ராகுகால வழிபாடு நடத்தப்பட்டது. செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிறு நாட்களில் ராகு கால நேரத்தில் பரமேஸ்வரி அன்னைக்கு விசேஷ பூஜைகள் நடைபெறுகின்றன.
பிரார்த்தனை
ராகு கால காளிகா பரமேஸ்வரி மிகவும் சக்தி வாய்ந்த தெய்வம் என்று பக்தர்கள் சிலிர்ப்போடு கூறுகின்றனர். கன்னிப் பெண்கள் நல்ல கணவன் அமைய, கன்னிகா பரமேஸ்வரியை வேண்டிக் கொள்கிறார்கள். தீராத நோய்களால் அவதிப்படும் தங்கள் கணவர் குணமாக வேண்டும் என்று பெண்கள் கன்னிகா பரமேஸ்வரியிடம் பிரார்த்தனை வைக்கிறார்கள். தங்கள் கணவர் குணமானபின், தாங்கள் வேண்டியபடி தங்கள் கழுத்திலுள்ள மாங்கல்ய நாணில் உள்ள தாலியையே கழற்றி உண்டியலில் போட்டு நன்றிக் கடன் செலுத்துகின்றனர். இப்படி தாலியையே அம்மனுக்கு நேர்த்திக் கடனாக செலுத்தும் பழக்கம் இந்த கோவிலில்தான் இருக்கின்றது. குழந்தை பேறு வேண்டும் பெண்கள் தங்களது வேண்டுதல் நிறைவேறியதும் வெள்ளியில் செய்த சிறிய தொட்டிலை உண்டியலில் செலுத்தி தங்கள் நன்றியை தெரிவிக்கின்றனர்.

கஞ்சாநகரம் காத்ர சுந்தரேசுவரர் கோவில்
சிவபெருமானை கிளி வடிவில் தன் இடது தோளில் ஏந்தி இருக்கும் அம்பிகை
மயிலாடுதுறையிலிருந்து பூம்புகார் செல்லும் வழியில், 8 கி.மீ தொலைவில் உள்ள கஞ்சாநகரம் என்ற ஊரில் அமைந்துள்ளது காத்ர சுந்தரேசுவரர் கோவில். இறைவன் திருநாமம் காத்ர சுந்தரேசுவரர். இறைவியின் திருநாமம் துங்கபாலஸ்தானம்பிகை. கார்த்திகை நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய தலமாக, இக்கோவில் விளங்குகின்றது.
மதுரை மீனாட்சியைப் போலவே இங்குள்ள அம்மன் துங்கபாலஸ்தானம்பிகையின் கையில் கிளி இருக்கிறது. இந்தக் கிளிக்கு வேதாமிர்த கீரம் என்று பெயர். அம்பிகை மற்ற கரங்களில் நீலோத்பவ மலர், சங்கு, சக்கரம் வைத்திருக்கிறாள். சிவனே வேதசக்தியாகக் கிளி வடிவில் அம்மனின் இடதுதோளில் அமர்ந்திருப்பது சிறப்பு. இது வேதமோதும் கிளியாகும். இத்தல அம்மனை வியாசரும், சுகப்பிரம்ம மகரிஷியும் வழிபாடு செய்துள்ளனர். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் வெள்ளிக்கிழமை அல்லது கார்த்திகை நட்சத்திர நாட்களில் இந்தக் கிளியை தரிசனம் செய்தால் சிறந்த மணவாழ்க்கை அமையும்.

திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில்
பெருமாளின் தசாவதாரக் கோலத்தில் காட்சி தரும் மாரியம்மன்
திண்டுக்கல் மலைப்பகுதி திண்டு போல் இருப்பதால்தான் இவ்வூர், திண்டுக்கல் என்று பெயர் பெற்றது என்பது ஒரு வரலாறு. திண்டுக்கல் மலைக்கோட்டை உருவான போதே அம்மனும் அவதரித்ததால் இங்கிருக்கும் அம்மன் 'திண்டுக்கல் கோட்டை மாரியம்மன்' என்று அழைக்கப்படுகின்றாள்.தமிழகத்தின் 300 ஆண்டுகள் பழமையான கோவில்களில் ஒன்றாக இக்கோவில் இருக்கின்றது. 1700ம் ஆண்டுகளில் திப்பு சுல்தான், தன் படை வீரர்களின் காவல் தெய்வமாக விளங்கிய இம்மாரியம்மனின் வழிபாட்டிற்கு என்று ஒரு பீடம் அமைத்து கொடுத்தார். திண்டுக்கல் பகுதிவாழ் மக்களின் இஷ்ட தெய்வமாக இக்கோவில் விளங்குகின்றது. எனவே இந்து, முஸ்லீம், கிருஸ்துவர் என மும்மதத்தவர்களும் இக்கோவிலில் வழிபாடு செய்கின்றனர்.
இக்கோவில் கருவறையில் மாரியம்மன் அமர்ந்த நிலையில் பக்தர்களுக்கு காட்சி தருகின்றார். எட்டு கைகளுடன் காட்சி தரும் அம்மனின் வலது கைகளில் பாம்பு, சூலாயுதம், மணி, கபாலம், ஆகியவையும், இடது கைகளில் வில், கிண்ணம், பாம்பு, ஆகியவைகள் காணப்படுகின்றது.
இந்த அம்மன் சிலையின் அடிப்பகுதி மற்ற தெய்வங்களை காட்டிலும் பூமிக்கு அடியில் அதிக ஆழத்தில் புதைந்திருப்பது தனிச்சிறப்பாகும்.
கோட்டை மாரியம்மன் கோயில் மாசித்திருவிழா இருபது நாட்கள் நடைபெறும். இக்கோவில் மாசி திருவிழாவின் போது, வேறு எந்த அம்மன் கோவிலிலும் இல்லாத சிறப்பான நிகழ்வாக மாரியம்மன், பெருமாளின் தசாவதாரக் கோலத்தில் பக்தர்களுக்குக் காட்சி தருவார். அம்மனின் காளி, மச்ச,கூர்ம,கிருஷ்ணர், ராமர், காளிங்கநர்த்தனம், மோகினி உள்ளிட்ட கோலங்கள் பார்ப்பவரை பரவசமடையச் செய்யும்.
அம்மனிடம் கேட்ட வரங்களுக்கு நன்றியாக பக்தர்கள், திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலில், திருவிழாவின் போது உருண்டு கொடுத்தல் , பூக்குழி இறங்குதல் , தீச்சட்டி எடுப்பது , பால் குடம் எடுத்தல் , முளைப்பாரி எடுத்தல் , மாவிளக்கு போடுவது போன்ற நேர்த்திக்கடன்களை அம்மனுக்கு செலுத்தி வருகின்றனர்.

திருப்புறம்பியம் சாட்சிநாதேசுவரர் கோவில்
குழந்தை முருகனை இடையில் தாங்கியவாறு காட்சி அளிக்கும் அம்பிகையின் அபூர்வ கோலம்
கும்பகோணத்தில் இருந்து 11 கி.மீ . தொலலைவிலுள்ள தேவாரத்தலம் திருப்புறம்பியம். இறைவன் திருநாமம் சாட்சிநாதேசுவரர். இறைவியின் திருநாமம் கரும்பன்ன சொல்லம்மை.
இத்தலத்தில் எழுந்தருளி இருக்கும் பிரளயம் காத்த விநாயகருக்கு, விநாயகர் சதுர்த்தி அன்று மட்டும்தான், வெறும் தேனால் மட்டுமே அபிஷேகம் செய்யப்படுகிறது. அபிஷேகம் செய்யப்படும் தேனானது அவரது திருமேனியை விட்டு வெளியே வருவதில்லை. இது ஒரு ஆச்சரியமான நிகழ்வாகும்.
இத்தலத்தில் அமைந்திருக்கும் 'ஸ்ரீகுகாம்பிகை' சன்னதி மிகச் சிறப்பானது. அருல்மிகு குகாம்பிகை, ஆறுமுகனாம் (குழந்தை வடிவ) குகப்பெருமானை, ஒரு அன்னை தன் குழந்தையை இடையில் ஏந்தியிருப்பது போல், ஏந்தி அரவனைத்தவாறு காட்சித் தருகிறாள். அம்பிகையும் குழந்தை முருகனும், இப்படி தாயும் சேயும் ஆக சேயுளாக இருக்கும் கோலத்தை நாம் வேறு எந்த தலத்திலும் காண முடியாது. இந்த அம்பிகைக்கு பெளர்னமி தினத்தன்று சாம்பிராணி தைலம் மட்டுமே சார்த்தப்படுகிறது.
பிரார்த்தனை
தடை பட்டு கொண்டிருக்கும் திருமணங்கள் இனிதே நடைபெறவும், கருவுற்ற பெண்களது பிரசவம், சுகமாக அமைந்திடவும், திருமணம் கைகூடவும் வேண்டுவோர்க்கு சிறந்த வரப்பிரசாதியாக குகாம்பிகை திகழ்கிறாள்.

விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோவில்
பங்குனி பொங்கல் திருவிழா - கோவில் கொடியில் கட்டிய சாதங்கள் ஒரு வாரம் ஆனாலும் கெடாமல் இருக்கும் அதிசயம்
விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோயில், தென் மாவட்டங்களில் பிரபலமான அம்மன் கோவில்களில் ஒன்று. நானூறு ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இக்கோவிலின் முகப்பு கோபுரமானது, வேறு எங்கும் இல்லாத வகையில் வித்தியாசமான முறையில் அமைக்கப்பட்டுள்ளது. கருவறையில் பராசக்தி மாரியம்மன் இடது கால் மடித்து, வலது கால் தொங்கும் கோலத்தில் அமர்ந்து காட்சி தருகிறாள்.
இக்கோவிலில் வருடம் தோறும் நடைபெறும் பங்குனி பொங்கல் திருவிழா, தென்மாவட்டங்களில் நடைபெறும் திருவிழாக்களில் மிகவும் பிரசித்தி பெற்றது. விருதுநகர், விருதுபட்டியாக இருந்தபோது 1780ல் கோவில் உள்ள இடத்தில், சிறிய பீடம் அமைத்து வழிபட்டு வந்தனர். 1859ல் பீடம் மீது, அம்மன் சிலை வைத்து வழிபடத் துவங்கினர். அன்று முதல், இக்கோவிலின் முக்கிய பண்டிகையாக, பங்குனி பொங்கல் திருவிழாவை கொண்டாடி வருகின்றனர். இதில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உடம்பில் கரும் புள்ளி செம்புலி குற்றி, வேம்பால் அலங்கரிக்க பட்ட ஆடை உடுத்தி, அக்னிச்சட்டி எடுத்து, வாயில் சூலம் குத்தி, கரகம், ரதம் இழுத்து நகரம் முழுவதும் ஊர்வலம் வந்து அம்மனுக்கு நேர்த்திக் கடன் செலுத்துவர்.
ஒவ்வொரு ஆண்டும் பங்குனி திருவிழாவானது பங்குனி முதல் நாளில் தொடங்கும். பொங்கல் பண்டிகைக்கு முன், ஏழு தினங்களுக்கு முன்னால் ஞாயிற்றுக் கிழமை நல்ல நேரத்தில் விருதுநகர் ஸ்ரீபராசக்தி மாரியம்மனுக்கு அபிஷேகம் அலங்காரம் ஆராதனை தூப, தீபம் செய்வித்து ஆலய அர்ச்சகர், அம்மன் பணியாளர், சாட்டு முரசு கொட்டும் சாம்பன் அனைவரும் அம்மன் முன் காப்பு கட்டுவார்கள். பொங்கல் சாற்றிய தினத்தில் இருந்து 21 நாட்கள் விரதம் இருந்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துவர். சாற்றிய தினத்திலிருந்து பதினைந்தாம் நாள் இரவு மாரியம்மன் கோவிலில் கொடியேற்று வைபவம் நடைபெறுகின்றது.கொடியேற்றிய பின் ஏழாம் நாள் ஞாயிற்றுக் கிழமையன்று பொங்கல் விழாவும், பொங்கல் அன்று பொங்கல் வைத்தல், மொட்டை எடுத்தல், உருண்டு கொடுத்தல், மாவிளக்கு எடுத்தல், ஆயிரம் கண்பானை வைத்தல், நீர் ஊற்றுதல், ஆக்கிவைத்தல் போன்ற நேர்த்தி கடன்களை செலுத்துகின்றனர்.
விழா துவங்கி கடைசி ஏழு நாட்கள் இருக்கும் போது கோவிலில் உட்கொடி மரத்தில் கொடி ஏற்றப்படுகிறது. அப்பொழுது கொடி துணியுடன் ஐந்து வகையான சாதங்கள் வைத்து துணியில் கட்டி ஏற்றுகின்றனர் திருவிழா முடிந்து கொடியை இறக்கும் போது அந்த சாத மூட்டையை திறக்கின்றனர். ஏழுநாட்களுக்கு பின்னும் அந்த ஐந்து வகை சாதமானது கெடாமல் இருக்கின்றது என்பது தற்பொழுதும் நிகழ்ந்து வரும் அதிசயமாகும்.

கேதார கௌரி விரதம்
கேதார கௌரி விரதம்
கேதார கௌரி விரதம் என்பது சிவபெருமானுக்குரிய எட்டு விரதங்களுள் ஒன்றாகும். இவ்விரதத்தினைப் பொதுவாக பெண்களே அனுஷ்டிப்பார்கள். கேதார கௌரி விரதம் ஐப்பசி மாதத்தில் அமாவாசை நாளில் அனுஷ்டிக்கப்படுகிறது. ஆண்டு தோறும் புரட்டாசி மாத சுக்கில பட்ச தசமி முதல் ஐப்பசி மாதத்துத் தீபாவளி அமாவாசைவரை, இருபத்தொரு நாட்கள் கைக்கொள்ளும் விரதமாகும். இந்த விரதத்தை முதலில் கடைப்பிடித்தவள் உமையவளே.
கேதார கௌரி விரதத்துக்கும், அர்த்தநாரீஸ்வரருக்கும் நெருங்கிய தொடர்புண்டு. கேதாரம் என்பது இமயமலைச்சாரலைக் குறிப்பதாகும். அதாவது மலையைச் சார்ந்த வயல் பகுதியை கேதாரம் என்பர். இந்த இமயமலைக் கேதாரப்பகுதியில் சுயம்பு லிங்கமாக கேதாரேஸ்சுவரர் தோன்றினார். சக்திரூபமான பார்வதி தேவி சிவனை நினைந்து வழிபட்டு, அதன் பலனாக சிவபெருமானும் பார்வதி தேவியும், அர்த்தநாரியாகவும், அர்த்தநாரீசுவராகவும் ஒன்றுபட்ட தினமே கேதார கௌரி விரதமாகும்.
ஐப்பசி மாத கிருஷ்ணபட்சம் தேய்பிறை சதுர்த்தசியில், பார்வதி தேவியை எண்ணி நோன்பிருந்தால் நல்ல கணவனையும். திருமணமாகி இருந்தால் கணவனின் அன்பையும், குறையற்ற இல்லறத்தையும், செல்வங்களையும் பெறலாம் என்பதற்காக தொடங்கியதே கேதாரகௌரி விரதமாகும். தீபாவளி திருநாளில், கேதார கெளரி நோன்பு கொண்ட நாளில், வயது முதிர்ந்த தம்பதிக்கு புத்தாடை வழங்கி, மங்கலப் பொருட்கள் கொடுத்து நமஸ்கரித்தால், பிரிந்த தம்பதியும் ஒன்று சேருவார்கள் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். தீபாவளியையொட்டி கேதார கௌரி நோன்பிருக்கும் பெண்மணிகள், திருச்செங்கோடு சென்று அர்த்தநாரீஸ்வரரை வழிபட்டால் விரத பலன் பன்மடங்காகக் கிடைக்கும். தீபாவளித் திருநாளில், கேதார நோன்பு இருந்தாலும், இல்லையென்றாலும் அன்றைய நாளில், சிவபார்வதியை வணங்குவதும், பசுவுக்கு அன்னமிடுவதும் விசேஷ பலன்களைத் தந்தருளும் என்பது ஐதீகம்.

தஞ்சாவூர் கோடியம்மன் கோவில்
சிவபெருமானை தன் தலையில் சூடியிருக்கும் கோடியம்மன்
தஞ்சையிலிருந்து கும்பகோணம் செல்லும் சாலையில், தஞ்சையிலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது கோடியம்மன் கோவில். தஞ்சையின் எல்லையில் குடிகொண்டிருக்கும் இந்த அம்மன் தஞ்சையின் எல்லை தெய்வமாக வீற்றிருந்து அருள்புரிகிறாள்.
முன்னொரு காலத்தில், தற்போது கோடியம்மன் கோவில் இருக்கும் பகுதியானது தேவர்கள் தவம் செய்த சோலைவனமாக இருந்தது. சிவபெருமானை வழிபட்ட தஞ்சன் என்ற அரக்கன் அவரிடம் பல வரங்களைப் பெற்றான். பின்னர் தன்னுடைய சக்தியின் காரணமாக தேவர்களை துன்பம் செய்துவந்தான். தேவர்கள் ஒன்றுகூடி சிவனிடம் முறையிட்டனர். அவர் தனது அம்பிகையான ஆனந்தவல்லியிடம் தஞ்சனை அழிக்கும் பொறுப்பை ஒப்படைத்தார். ஆனந்தவல்லி பச்சைக்காளியாக வடிவெடுத்து அசுரனை அழிக்க வந்தாள். அசுரனோ, அழிய அழிய மீண்டும் தோன்றினான். இவ்வாறு கோடி அவதாரங்கள் எடுத்தான்.இதனால் கோபமடைந்த ஆனந்தவல்லியின் முகம் சிவந்தது. அவள் சாந்தத்தை கைவிட்டு பவளக்காளியாக ( (பவளம் – சிவப்பு நிறம்) மாறினாள். தஞ்சனை வதம் செய்தாள். தஞ்சனின் உடலிலிருந்து பெருகிய ரத்தம் ஆறாக ஓடியது. அந்த எதிரொளிப்பில் காளியின் உருவமே சிவப்பானது. கோடி அவதாரம் எடுத்த அசுரனை அழித்ததால் அம்பாள் கோடி அம்மன் என்றும் வழங்கப்பட்டாள். தஞ்சன் தான் இறக்கும் தருவாயில் தன் பெயரால் இந்த ஊர் அழைக்கப்பட வேண்டும் என்று வரம் பெற்றான். அதன்படியே தஞ்சபுரி என்று அழைக்கப்பட்டு பின்னர் மருவி தஞ்சாவூர் என்றானது.
சிவனின் பிரதிநிதியாக வந்து அசுரனை அழித்ததால், கோடியம்மன் சிவபெருமானையே தனது தலையில் சுமந்து கொண்டாள். சிவபெருமான் தன் தலையில் கங்கையை சூடியிருப்பது போல, இந்த அம்மன் தன் தலையில் சிவபெருமானையே சூடியிருப்பது சிறப்பாகும். எனவே இக்கோவிலில் அம்மனுக்குரிய சிங்க வாகனத்திற்கு பதிலாக நந்தி வாகனம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோயிலில் பூஜை நடக்கும்போது சற்று தொலைவில் உள்ள ஆனந்தவல்லி சமேத தஞ்சபுரீஸ்வரர் கோயிலிலும் பூஜை நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரார்த்தனை
குழந்தைச் செல்வம் கிட்டவும், செய்வினை நீங்கவும் இங்கு வந்து வேண்டிக்கொள்கின்றனர்.
காளியாட்டத் திருவிழா
மாசி கடைசி வாரம் அல்லது பங்குனி முதல்வாரத்தில் பச்சைக்காளி, பவளக்காளி சிலைகளை வர்ணம்பூசி எடுத்து வீடு வீடாக சென்று காளியாட்டம் நடக்கும். இதை காளியாட்டத் திருவிழா என்கிறார்கள். இந்த திருவிழா காலத்தில் பால்குடம் எடுப்பது மிகவும் விசேஷம். தஞ்சாவூர் மேல வீதியில் பச்சைக்காளி பவளக்காளி ஆகியோருக்கு தனி சன்னதி உள்ளன.

வேதாரண்யம் திருமறைக்காடர் கோவில்
தென்திசை நோக்கி காட்சி தரும் ஞான துர்க்கை
நாகப்பட்டினத்தில் இருந்து தெற்கே சுமார் 50 கி.மீ. தொலைவில் தேவாரத் தலமான வேதாரண்யம் உள்ளது. இறைவன் திருநாமம் திருமறைக்காடர். இறைவியின் திருநாமம் வேதநாயகி, யாழைப் பழித்த மொழியாள். 64 சக்தி பீடங்களில் ஒன்றான சுந்தரி பீடம் அமையப் பெற்ற கோவிலாகவும் இது திகழ்கிறது.
பொதுவாக சிவாலயங்களில், மூலவர் கருவறையின் சுற்றுச்சுவரில் வடக்கு நோக்கி பரிவார தேவதையான துர்க்கை எழுந்து அருளி இருப்பாள். ஆனால் இத்தலத்தில் பரிவார தேவதையான துர்க்கையானவள் தென்திசை (மூலவர் சந்நிதியை) நோக்கி காட்சி தருகிறாள். இது ஒரு அரிதான காட்சியாகும். தட்சிணாமூர்த்தி போல் தென்திசை நோக்கி எழுந்தருளி இருப்பதால் இவளை ஞான துர்க்கை என்பார்கள். திரிபங்கி வடிவில் நின்ற கோலத்தில் புன்முறுவல் காட்டி எழுந்தருளி உள்ளாள். இவள் வேதாரண்யத்தின் காவல் நாயகி என்பர் ஆன்றோர்.
பிரார்த்தனை
இவள் மிகுந்த வரப்பிரசாதி என்பதால் இத்தலத்தின் பிரார்த்தனை தெய்வமாக விளங்குகின்றாள். துர்க்கை அம்மன் சந்நிதியில் செவ்வாய் கிழமைகளில் ராகுகால பூஜைகள் மிகவும் விசேஷம். இவளை வழிபட்டால் குழந்தை இல்லாமை, திருமணத் தடை, பில்லி- சூனியம், கிரக கோளாறுகள் போன்ற குறைபாடுகள் விலகும்.