
கல்விமடை திருநாகேசுவரமுடையார் கோவில்
இரண்டு மாதத்துக்கு ஒருமுறை நிறம் மாறும் அம்மன்
விருதுநகர் மாவட்டம், நரிக்குடி அருகே உள்ளது கல்விமடை . இந்தக் கிராமத்தில் கி.பி 10-ம் நூற்றாண்டை சேர்ந்த, மிகவும் பழமை வாய்ந்த, திருநாகேசுவரமுடையார் கோவில் உள்ளது. இறைவியின் திருநாமம் திருநாகேசுவரி.
இந்தக் கோவிலில் உள்ள அம்மன் விக்கிரகம் அற்புதமானது. அமாவாசை, பௌர்ணமி நாட்களில் அம்மன் விக்கிரகத்தின் கண்களில் பளிங்கு போன்று ஒளி வீசுகிறது. இரண்டு மாதத்துக்கு ஒருமுறை, அம்மன் விக்கிரகம் தானாக நிறம் மாறுகிறது. பச்சை, மஞ்சள், ஊதா ஆகிய நிறங்களில் அம்மன் நிறம் மாறுகிறது. அம்மனின் நிறம் மாறுவதைக் காண, ஏராளமான பக்தர்கள் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் இந்தக் கோவிலுக்கு வந்து செல்கின்றனர்.
இக்கோவிலில் புரட்டாசி மகாளய அமாவாசை திருவிழா விமரிசையாக நடைபெறுகிறது. அப்பொழுது மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திகளான சிவப்பெருமான் மற்றும் அம்பாளுக்கு மஞ்சள், திருமஞ்சனம், பால், தயிர், பன்னீர், பஞ்சாமிர்தம், தேன், இளநீர், சந்தனம், உள்ளிட்ட அபிசேக பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெறும். பின்னர் சுவாமி-அம்பாளுக்கு வில்வம், ரோஜா, செவ்வந்தி, சாமந்தி, தாமரை, மரிக் கொழுந்து, முல்லை, மல்லி கை பூ உள்ளிட்ட சுமார் 2 டன் எடையுள்ள 11 வகையான மலர்களால் அபிசேகம் செய்து அலங்கரிக்கப்பட்டு சிறப்பு ஆராதனை நடைபெறுகிறது.
பிரார்த்தனை
இத்தலம் ராகு, கேது பரிகாரத் தலமாக விளங்குகின்றது. நன்றாக பணி செய்தும், சரியான மரியாதை கிடைக்காமல் இருப்பவர்கள் இங்கு வேண்டிக்கொண்டால் மன அமைதி கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. பணி உயர்வு, இடமாற்றம் வேண்டுபவர்களும் சுவாமியை வழிபடலாம். புத்திர பாக்கியம் இல்லாத பெண்கள் அம்பாளுக்கு வஸ்திரம் சாத்தி வளையல்கள் அணிவித்து வழிபடுகிறார்கள்.

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில்
கன்னியாகுமரி பகவதி அம்மன்
இந்தியாவின் தென்கோடி முனையில், முக்கடல் சங்கமிக்கும் இடத்தில் அமைந்துள்ளது கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில். அம்மனின் 51 சக்தி பீடங்களில், இது சேது சக்தி (குமரி சக்தி) பீடம் ஆகும்.. இந்த அம்மனுக்கு துர்க்கை, பகவதி என்னும் பெயர்களும் உண்டு. பரசுராமர் பிரதிஷ்டை செய்த ஆலயங்களில், கன்னியாகுமரியும் ஒன்று என்பது ஐதிகம். பாணாசுரன் எனும் அசுரனை அழித்த தேவி இங்கே குமரியாக நிலை கொண்டாள். அம்பிகையின் தோழிகளான தியாகசுந்தரி, பாலசுந்தரி இருவரும் ஆலயத்தில் தனிச் சந்நதி கொண்டருள்கின்றனர். தேவியின் மூக்கில் ஜாஜ்வல்யமாக ஜொலிக்கும் மூக்குத்தி, நாகரத்தினத்தால் ஆனது.
தாணுமாலயனுக்கும் தேவிக்கும் நடக்க இருந்த திருமணம் நாரதரின் கலகத்தால் நின்றது. திருமணத்திற்குத் தயாரிக்கப்பட்ட உணவுகள் யாவும் வகை வகையான மணலாக மாறின. அதன் சான்றாகவே, இன்றும், குமரி கடற்கரையில் அரிசி போன்ற வெண் சிறுமணலையும், பலவண்ண மணல்களையும் காணலாம்.
இந்தத் தலத்துக்குத்தான் ராமர் முதலில் வந்து வணங்கி,சீதையை மீட்க இங்கிருந்து இலங்கைக்கு பாலம் அமைக்க முயன்றார். அதன்பின் தேவியின் உத்தரவின்பேரில் வானரசேனையோடு ராமேசுவரம் சென்று அங்கு பாலம் அமைத்தார் என்கிறது தலவரலாறு.
இத்தலத்தில் கன்னிகா பூஜை, சுயம்வர பூஜை ஆகியவை செய்தால் திருமணம் விரைவில் கைகூடும். இந்த ஆலயத்துக்கு வந்து கன்னிப்பெண்கள் வேண்டிக்கொண்டால் விரும்பியபடி கணவன் அமைவான் என்பது நம்பிக்கை. காசிக்குச் சென்று புண்ணிய தீர்த்தத்தில் நீராடுவதற்கு முன்பு கன்னியாகுமரியில் இருக்கும் முக்கூடல் சங்கமிக்கும் இந்த தீர்த்தத்தில் நீராடுவதால் பாவங்கள் தீரும் என்பது ஐதீகம்.

சிருங்கேரி சாரதாம்பிகை கோவில்
சிருங்கேரி சாரதாம்பிகை
கர்நாடகா மாநிலத்தில், சிக்மகளூர் மாவட்டத்தில், துங்கபத்திரை ஆற்றங்கரையில் அமைந்துள்ளது சிருங்கேரி சாரதாம்பிகை கோவில். ஆயகலைகள் அறுபத்து நான்கினிற்கும் தெய்வமாக திகழும் சரஸ்வதி தேவிக்கு, நாற்பதுக்கும் அதிகமான திருநாமங்கள் உள்ளன. அவற்றில் சில கலைமகள், சகலகலாவல்லி, நாமகள், சாவித்ரி, சாரதா ஆகியவை ஆகும். சாரதா என்றால் சரஸ்வதி அல்லது வாக்கிற்கு அதி தேவதை என்று பொருள். லலிதாம்பிகையின் ஆயிரம் திருநாமங்களில் 123 வது திருநாமமாக அமைவது சாரதாராத்யா என்னும் திருநாமம். சாரதாராத்யா என்றால் விஷ்ணு, பிரம்மா ஆகியோரால் ஆராதிக்கப்பட்டவள் என்று பொருள். 'சாரத' என்ற சொல்லுக்குப் பண்டிதர்களால் பூஜிக்கப்படுபவர் என்ற அர்த்தமும் உண்டு.
கருவறையில் சாரதா தேவியானவள் 'பிரம்ம வித்யா' சொரூபமாக அதாவது பிரம்ம, விஷ்ணு, சிவன் மற்றும் சக்தி சொரூபங்களாகிய சரஸ்வதி, லட்சுமி, பார்வதி அனைவரையும் உள்ளடக்கிய ஒரே சொரூபமாக ஸ்ரீசக்ர பீடத்தில், கையில் ஜெப மாலையுடன் சிம்மாசனத்தில் மேல் அமர்ந்திருக்கிறார். அவரது நான்கு கைகளில் மேல் வலது கையில் கிளி இருக்கிறது. கீழிருக்கும் வலது கை சின்முத்திரை காண்பிக்கிறது. மேல் இடது கை அமிர்த கலசத்தை ஏந்தியுள்ளது. கீழ் இடது கை புத்தகத்தை வைத்துள்ளது. அமிர்த கலசம் சாகாமையையும், புத்தகம் மேலான அறிவையும் குறிக்கின்றன. ஜெப மாலையோ, பிரபஞ்சம் தோன்றும் விதையாக உள்ளது. பிரம்மனுடன் அடையாளப்படுத்திக்கொள்ளும் உயிரின் விழிப்புணர்வை சின்முத்திரை பிரதிபலிக்கிறது.
சரத் காலத்தில் ஆராதிக்கப்பட்டவள் சாரதாம்பிகை. சரத்காலம் என்பது இலையுதிர் காலம். இது ஐப்பசி, கார்த்திகை மாதங்களைக் கொண்டது. இந்தக் காலத்தில் வரும் நவராத்திரி, சாரதா நவராத்திரி எனப்படும். வசந்த காலத்தில் வரும் நவராத்திரி, வசந்த நவராத்திரி எனப்படும். இந்த இரு நவராத்திரி காலங்களும் அம்பிக்கைக்கு மிகவும் உகந்த பூஜை காலமாகும். ஆகவே இந்தக் காலத்தில் சிறப்பு பூஜைகள் இங்கு நடத்தப்படுகின்றன. கோலாகலமாக நடைபெறும் நவராத்திரி விழாவில், ஆயிரக்கணக்கில் பக்தர்கள் இங்கு திரண்டு வந்து, சாரதாம்பிகையை வழிபடுகின்றனர்.
நுண்ணறிவை அதிகம் கொண்டு மேதையாக ஆக சாரதா வழிபாடு மிகவும் அவசியம். சிருங்கேரி சாரதாம்பிகையை தரிசிப்பதன் மூலம் பிரம்மா, விஷ்ணு, சிவன், சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகிய அனைத்து தெய்வங்களின் அருளையும் பெறலாம் என்பது ஐதீகம். சாரதாம்பிகையே சரஸ்வதி என்பதால் கல்வியை ஆரம்பிக்கும் இளம் சிறார்கள் இங்கு வந்து அதைத் தொடங்குகின்றனர்.

மைசூர் சாமுண்டீஸ்வரி கோவில்
மைசூர் சாமுண்டீஸ்வரி அம்மன்
மைசூரில் இருந்து சுமார் 13 கி.மீ தொலைவில் உள்ளது சாமுண்டி மலை . ஏறத்தாழ 3500 அடி உயரத்தில் உள்ள இந்த மலை மேல் தான் சாமுண்டீஸ்வரி கோவில் உள்ளது . துர்கை அம்மனின் ரௌத்திர கோலம்தான் சாமுண்டீஸ்வரி அம்மன். 51 சக்தி பீடங்களில், இத்தலம் சம்பப்பிரத பீடம் ஆகும். சாமுண்டீஸ்வரி அம்மன் இங்கே ஆதி சக்தியாக வணங்கப்படுகிறார். மேலும் இவள் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூன்று தெய்வங்களும் ஒன்றான மகா பிரம்மம் என்றும், மகா சக்தி என்றும் பக்தர்களால் வழிபடப்படுகிறார்.
முன்னொரு காலத்தில் மைசூர் நகரமானது, மகிஷாசூரன் என்ற அரக்க மன்னனால் ஆளப்பட்டது. இவனது பெயரிலுள்ள மகிஷா என்ற வார்த்தை காலப்போக்கில் மருவி மைசூர் என்று தற்போது அழைக்கப்பட்டு வருகிறது. பெண் தெய்வமான சாமுண்டீஸ்வரி, மகிஷாசுரனை வதம் செய்து அந்த ஊர் மக்களை அரக்கனிடம் இருந்து காப்பாற்றியதால், காவல் தெய்வமாக மைசூர் நகரத்திலேயே தங்கிவிட்டாள் என்கிறது வரலாறு. சாமுண்டி மலைப்பாதையில் மகிஷாசுரன் சிலை அமைக்கப்பட்டுள்ளது. ஒரு கையில் கத்தியும், மற்றொரு கையில் நாகபாசமும் கொண்டு உயர்ந்த வடிவில் மகிஷாசுரன் நிற்கிறான்.
கருவறையில் எட்டு கரங்களுடன் சாமுண்டீஸ்வரி அம்மன் அமர்ந்த திருக்கோலத்தில் காட்சி தருகிறார். பழமையான இந்த விக்கிரகம் மார்க்கண்டேய மகரிஷியால் நிறுவப்பட்டது. சாமுண்டீஸ்வரி அம்மன் மூல விக்கிரகம் தங்க மூலாம் பூசப்பட்டது . மூலத்தான கதவுகள் வெள்ளியிலானது . அம்மனின் காலடியின் கீழ் மகிஷாசுரன் எருமை உடலுடனும், அசுரத் தலையுடனும் விழிகள் பிதுங்கிய வண்ணம் இருக்கிறான். திரிசூலத்தால் அம்மன் இவனைக் குத்தியபடி காட்சியளிக்கிறாள். மூன்றாவது ஆடிவெள்ளியில் தேவி அவதரித்தார் என்பதால், ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் இங்குச் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன.
மைசூர் ராஜ வம்சத்தின் குல தெய்வம் சாமுண்டீஸ்வரி அம்மன். 1573ம் ஆண்டு மைசூரை நான்காம் சாமராஜ உடையார் ஆட்சி செய்து கொண்டிருந்தார். ஒருநாள் இவர் தனது குல தெய்வமான சாமுண்டி தேவியை தரிசிக்கச் சென்றார். தரிசித்து முடிந்ததும் பல்லக்கில் ஏறி மைசூருக்குப் புறப்பட்டார். சிறிது தொலைவு சென்ற பின் திடீரென இடி, மின்னல், மழை என்று இயற்கை சீற ஆரம்பித்தது. பாதுகாப்புக்காக ஒரு பெரிய மரத்தின் அடியில் பல்லக்கை வீரர்கள் நிறுத்தினார்கள். 'நாங்கள் பத்திரமாக ஊர் திரும்ப அருள்புரிவாய் அம்மா' என்று அந்த மரத்தடியிலிருந்தே சாமுண்டிதேவியை வேண்டியபடி அன்னை கோயில் கொண்டிருந்த மலையுச்சியைப் பார்த்தார். மழை ஒரு திரையாகி ஆலயம் தெரியாதபடி மறைத்தது. சரி, சற்றுத் தொலைவு சென்று பார்க்கலாம் என தன் வீரர்களுடன் சில அடி தூரம் மன்னர் நகர்ந்தபின், அவர் அதற்கு முன் பாதுகாப்புக்காக தங்கியிருந்த மரத்தில் இடி விழுந்து மரம் தீப்பற்றி எரிந்தது. தன்னைக் காப்பாற்றவே அந்த இடத்திலிருந்து தேவி, கோவிலைத் தெரியாமல் செய்திருக்கிறாள் என உணர்ந்த சாமராஜ உடையார், அதற்கு நன்றிக் கடனாக மைசூரின் எந்தப் பக்கத்திலிருந்து பார்த்தாலும் கோவில் தெரியும் வண்ணம் சாமுண்டீஸ்வரிக்கு ஆலயம் எழுப்பினார்.
உலகப் புகழ்பெற்ற மைசூர் தசரா திருவிழா
சாமுண்டீஸ்வரி அம்மன் விஜயதசமி அன்று மகிஷாசுரனை வதம் செய்தாள். அதனால் தான் மைசூரில் தசரா பண்டிகை விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. கிபி 1610-ம் ஆண்டில் இருந்து மைசூரை ஆண்ட உடையார் மன்னர்கள், போரில் வென்றதை நினைவுக்கூறும் வகையில் ஆண்டுதோறும் விஜயதசமி பண்டிகையின்போது 10 நாட்கள் தசரா விழாவை கொண்டாட தொடங்கினர். தசரா பண்டிகையின் முதல் நாள் மைசூர் உடையார் வம்ச மன்னர் சாமுண்டீஸ்வரி அம்மனை வணங்கி சிறப்பு பூஜைகள் செய்து விழாவினை தொடங்கி வைப்பார். பின்னர் புகழ்பெற்ற அரச தர்பார் வைபோகம் நடைபெறும் அதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு அரச வம்சத்தினரின் தர்பார் கோலத்தினை காண்பார்கள். நவராத்திரி ஒன்பது நாட்களும் சிறப்பான பூஜைகளும், கொண்டாட்டங்களும் மைசூரில் நடக்கும். விஜயதசமி தினத்தன்று ஜம்பூ சவாரி எனும் யானைகள் அணிவகுப்பு சிறப்பானது. அலங்கரிக்கப்பட்ட தலைமை யானையின் மீது சாமுண்டீஸ்வரி அம்மன் 750 கிலோ எடை கொண்ட தங்க மண்டபத்தில் பவனி வருவது தசரா திருவிழாவின் சிறப்பு நிகழ்ச்சியாகும்.
ஞாயிறு, செவ்வாய், வெள்ளியன்று இத்தலத்தில் கூட்டம் அதிகம் இருக்கும். இந்த அன்னையை வணங்கினால், எதிரிகளை எளிதில் வெற்றிகொண்டு, வாழ்வில் நல்லருள் பெறலாம் என்பது ஐதீகம்.

ஹொரநாடு அன்னபூர்ணேசுவரி கோவில்
ஹொரநாடு அன்னபூர்ணேசுவரி அம்மன்
கர்நாடகா மாநிலம் சிக்மகளூரில் இருந்து சுமார் 100 கி.மீ. தொலைவில், அடர்ந்த காட்டுப் பகுதியில், பத்ரா நதிக்கரையில் அமைந்திருக்கிறது ஹொரநாடு அன்னபூர்ணேசுவரி கோவில். அன்னபூரணி என்றாலே அன்னத்தை பூரண திருப்தியோடு பக்தர்களுக்கு அளிப்பவள் என்று பொருள். அன்னபூர்ணேஸ்வரி கோவிலில் உச்சிகால பூஜை நடந்து முடிந்த பிறகு அனைவருக்கும் சாப்பாடு வழங்கப்படுகிறது. அன்னபூரணியை தரிசித்துவிட்டு ஒருவர் கூட பசியுடன் கோவிலை விட்டு திரும்பி செல்ல முடியாது. கோவிலில் அம்மனை தரிசிக்கும் சிறு குழந்தைகளுக்கு கூட பசும்பால் தரப்படுகிறது.
கருவறையில் அன்னபூர்ணேசுவரி தங்கத்தாலான திருமேனி உடையவளாய், நான்கு கரங்களுடன் பீடத்தின் மேல் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார், அன்னையின் மேல் இரு கரங்கள் சங்கும் சக்கரமும் தாங்கி இருக்கின்றன. அபய முத்திரையுடன் விளங்கும் அன்னையின் வலது கீழ் கையில் காயத்ரி தேவியின் உருவம் செதுக்கப்பட்டுள்ளது. வரத முத்திரை தாங்கி நிற்கும் இடது கீழ் கையில் ஸ்ரீ யந்திரம் பொறிக்கப்பட்டுள்ளது.
பார்வதிதேவி அன்னபூரணியாக அவதரித்த வரலாறு
ஒரு முறை, சிவபெருமானுக்கும்,பார்வதி தேவிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது சிவபெருமான் உணவுப்பண்டங்களை மாயை என்று கூறினார். பார்வதியோ உணவு மாயை அல்ல என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். சிவபெருமான் உணவு மாயை என்பதை நிரூபிக்க தட்பவெப்ப நிலை மாறாமல் நிறுத்திவிட்டார். இதனால் தாவரங்கள் வளரவில்லை. உணவு பொருட்கள் ஏதும் மக்களுக்கு கிடைக்கவில்லை. இதனால் நம் பூமியில் பஞ்சம் ஏற்பட்டது. இதனை நீக்க பார்வதி தேவியானவள், அன்னபூரணியாக அவதாரம் எடுத்து அனைவருக்கும் உணவினை வழங்கி பஞ்சத்தை போக்கி அருள்பாலித்தாள். இதன் பிறகு அன்னபூரணி நமக்கெல்லாம் உணவு அளிக்க நம் பூமியிலேயே தங்கிவிட்டாள் என்பது வரலாற்று கதை.
இந்த அன்னபூர்ணேசுவரி கோவிலில் அர்ச்சனை செய்தால் இங்கு தரப்படுகின்ற முக்கிய பிரசாதம் அரிசி தான். அந்த அரிசியை கொண்டு வந்து நம் வீட்டின் அரிசி ஜாடியில் போட்டு வைத்தால், என்றும் உணவுக்கு நம் வீட்டில் பஞ்சமே இருக்காது. நம் வீட்டில் உள்ள பாத்திரம் அட்சய பாத்திரமாக தான் என்றும் திகழும் என்பது நம்பிக்கை. அன்னபூர்ணேசுவரியை வணங்குபவர்களுக்கு, 'அன்னதோஷம்' என்னும் வறுமை அணுகவே அணுகாது.

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில்
ராமேசுவரம் பர்வதவர்த்தினி அம்மன்
பாண்டிய நாட்டு 14 தேவாரத் தலங்களில் ஒன்று ராமேசுவரம். இறைவன் திருநாமம் ராமநாதசுவாமி. இறைவியின் திருநாமம் பர்வதவர்த்தினி, மலைவளர்காதலி. பர்வதத்தின் (பர்வதம்=மலை) மகள், பர்வத வர்தினி ஆனாள். 'வர்தன' என்னும் சொல்லுக்கு 'வளர்ச்சி, விரிவு' என்னும் பொருள்கள் உண்டு. பர்வத அரசர் (ஹிமவான்) வளர்த்த மகளாக, பர்வத வம்சத்தின் விரிவாக ஓங்கி நிற்பவளுக்குப் பர்வதவர்தினி என்பது திருநாமம். மலையத்துவச மன்னர் (ஹிமவான்) வளர்த்த மகள் என்பதைக் குறிப்பதாக இந்த அம்பிகையை மலைவளர் காதலி (மலை வளர்த்த பாசத்திற்குரியவள்) என்றே திருஞானசம்பந்தரும், தாயுமானவரும் அழைக்கின்றனர்.
இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் இத்தலமும் ஒன்று. அம்மனின் 51 சக்தி பீடங்களில், இது சேது சக்தி பீடம்.
சுவாமியின் வலது பக்கத்தில் அம்பாள் சந்நிதி உள்ளது. நின்ற திருக்கோல நாயகியாக, நான்குத் திருக்கரங்களுடன் அம்பிகை காட்சி தருகிறாள். கீழ்க்கரங்கள் அபயமும், வரமும் காட்ட, மேல் திருக்கரங்களில் தாமரை மலர்களை ஏந்தியிருக்கிறாள். திருப்பாதங்களைச் சேர்த்து வைத்துக்கொண்டு இவள் நிற்பதைப் பார்த்தால், 'நானிருக்கிறேன், கவலைப்படாதே' என்று கூறுவது போன்றே தோன்றுகிறது. தாமரை மலர்களைத் தாங்கியவள் என்பதாலோ என்னவோ, நவராத்திரி காலத்தில் தாமரைச் செல்வியான மகாலட்சுமிக் கோலத்திலும் அம்பிகை காட்சி தருவது வழக்கம். பர்வதவர்த்தினி அம்பிகை பீடத்திற்கு கீழே ஆதிசங்கரர் நிறுவிய ஸ்ரீசக்கரம் உள்ளது.
அம்பிகைக்கு சித்திரைப் பிறப்பன்று மட்டும் சந்தனக் காப்பு அலங்காரம் செய்வது வழக்கம். இங்கு உள்ள பள்ளியறையில் சுவாமி அம்பாளுக்கு நடைபெறும் இரவு கால சயன பூஜையும் , அதிகாலையில் நடைபெறும் எழுந்தருளல் பூஜையும் நாம் அவசியம் பார்க்க வேண்டிய ஒன்றாகும்.
அம்பிகை பர்வதவர்தினியிடம் வேண்டிக்கொண்டால், எதுவாக இருந்தாலும் நிறைவேற்றிக் கொடுப்பாள் என்பது பக்தர்களின் நெடுங்கால அனுபவம்.
பர்வதவர்த்தினி அம்பாள் சன்னதி பிரகாரத்தில் சந்தான விநாயகர், சவுபாக்கிய விநாயகர் என இரண்டு விநாயகர்கள் அடுத்தடுத்து இருக்கின்றனர். இவர்களுக்கு காவிஉடை அணிவிக்கப்படுகிறது. விநாயகர், பிரம்மச்சாரி என்பதால் இவ்வாறு அணிவித்திருப்பதாகச் சொல்கிறார்கள். அம்பாள் சன்னதி பிரகாரத்தில் பள்ளி கொண்ட கோலத்தில் அரங்கநாதர் காட்சி தருகிறார். இராமர் பூஜித்த அரங்கநாதரைப் பெற்ற விபீஷணன், சந்தர்ப்பவசத்தால் அச்சிலையை காவிரிக்கரையில் வைத்துவிட்டு, இலங்கை திரும்பினான். அப்போது தன் திருப்திக்காக, இங்கு வேறொரு அரங்கநாதரை பிரதிஷ்டை செய்து வழிபட்டான். ஏழு தலையுடைய ஆதிசேஷன் மீது சயனம் கொண்டுள்ள இந்த அரங்கநாதர், கையில் தண்டத்துடன் காட்சியளிப்பது சிறப்பான அமைப்பு.

திருஈங்கோய்மலை மரகதாசலேசுவரர் கோயில்
திருஈங்கோய்மலை மரகதாம்பிகை அம்மன்
திருச்சி - கரூர் சாலை வழியிலுள்ள குளித்தலை என்ற ஊரிலிருந்து காவிரி ஆற்றைக் கடந்து சென்றால் காவிரியின் வடகரையில், மலையின் மேல் அமைந்துள்ள தேவாரத் தலம், திருஈங்கோய்மலை மரகதாசலேசுவரர் கோவில். மலைமேல் அமைந்த வெகு சில தேவாரத் தலங்களில் இத்தலமும் ஒன்று. சுமார் 500 படிகள் ஏறினால் கோவிலை வந்தடையலாம். அகத்தியர் ஈ உருவத்தில் இங்குள்ள இறைவனை வழிபட்டதால் ஈங்கோய்மலை என்று பெயர் வந்தது. இத்தலத்து இறைவன் திருநாமம் மரகதாசலேசுவரர், ஈங்கோய்நாதர். இறைவியின் திருநாமம் மரகதாம்பிகை, லலிதா, மரகதவல்லி.அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது சாயா சக்தி பீடம் ஆகும். கருவறையில், அம்பாள் நான்கு கரங்களுடன், நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார், அம்பாளின் கருவறை விமானம், கோபுரம் போன்ற அமைப்பில் மூன்று கலசங்களுடன் இருக்கின்றது.
மூலவர் மரகதாலேஸ்வரர் பெயருக்கு ஏற்றாற் போல மரகதம் போன்று பச்சை நிறத்தில் அமைந்துள்ளார். சிவராத்திரி நாளின், முனபின் நாடகளில் சூரிய ஒளி இத்தல இறைவன் மீது படுகிறது. அச்சமயம் லிங்கம் பல வண்ணத்தில் காட்சி அளிப்பதைக் காணலாம். சிவனுக்கு தீபாராதனை காட்டும்போது லிங்கத்தில் ஜோதி ஜொலிப்பதைக் காணலாம்.
பிருகு முனிவர் சிவனை வணங்கும் வழக்கம் உடையவர். ஆனால், அம்பாளைக் வணங்க மாட்டார். பக்தர்களின் வழிபாட்டில் அம்பாளுக்கும் முக்கியத்துவம் வேண்டும் எனக் கருதிய சிவன், அவளைக் கோபப்படும்படி செய்தார். அம்பாள், பூலோகம் வந்து இத்தலத்தில் தவம் செய்தாள். அவளுக்கு காட்சி தந்த சிவன், தன் உடலின் இடப்பாகத்தை தருவதாக இத்தலத்தில் உறுதியளித்தார். அம்பாளுக்கு, சிவன் தன் இடப்பாகம் தர உறுதி தந்த மலை என்பதால் இம்மலையை 'சக்திமலை' என்கின்றனர்.
திருமணத்தடை நீங்க, குழந்தை பாக்கியம் கிடைக்க, கல்வியில் சிறந்து விளங்க இத்தலத்திற்கு வந்து வழிபடுகிறார்கள்.

ஸ்ரீகாளஹஸ்தி காளத்தியப்பர் கோயில்
ஸ்ரீகாளஹஸ்தி ஞானப் பூங்கோதை அம்மன்
சென்னையில் இருந்து 110 கி.மீ. தொலைவில், ஆந்திர மாநிலத்தில் அமைந்துள்ள தேவாரத் தலம் ஸ்ரீகாளஹஸ்தி காளத்தியப்பர் கோயில். இறைவன் திருநாமம் ஸ்ரீ காளஹஸ்தீஸ்வர சுவாமி, காளத்திநாதர். இறைவியின் திருநாமம் ஞானப் பூங்கோதை. இந்த அம்பிகைக்கு ஞானப்பிரசனாம்பிகை, ஞானக்கொழுந்து, ஞானசுந்தரி, ஞானப் பேரொளி, வண்டார்குழலி என்ற பெயர்களும் உண்டு. 51 சக்தி பீடங்களில் இத்தலம் ஞான பீடம் ஆகும். பஞ்ச பூதத்தலங்களுள் இது வாயுத்தலம். தட்சிண(தென்) கயிலாயம் என்னும் சிறப்புடையது.
கயிலாச கிரி மலையடிவாரத்தில், சுவர்ணமுகி எனப்படும் பொன்முகலி ஆற்றின் கரையில் இக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் அம்பாள் ஞானப் பூங்கோதை நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறாள். அம்பாள் திருவடியில் ஸ்ரீ ஆதிசங்கர பகவத் பாதரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட 'அர்த்த மேரு ' உள்ளது. அம்பாள் இடுப்பு ஒட்டியாணத்தில் 'கேது ' உருவமுள்ளது. அம்பாள் கருவறையை வலம் வரும்போது வட்டமாகத் தரையில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள மூலை இடத்தில் மூன்று தலைகள் சேர்ந்திருப்பது போன்ற சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. இவ்விடத்தினடியில் சக்தி வாய்ந்த யந்த்ரம் இருப்பதால் இங்கு அமர்ந்து ஜபம் செய்வது மிகவும் விசேஷமாகச் சொல்லப்படுகிறது. அம்பாளுக்கு வெள்ளிக்கிழமை தோறும் தங்கப்பாவாடை சாற்றப்படுகிறது. சந்நிதிக்கு நேர் எதிரில் உள்ள மண்டபத்தில் வெள்ளிக்கிழமை தோறும் ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெறுகிறது.
இத்தலம் சிறந்த 'ராகு, கேது க்ஷேத்ரம்' என்றழைக்கப்படுகிறது. சர்ப்ப தோஷம் முதலியவை நீங்கும் தலமாதலின் இங்கு இராகு கால தரிசனம், இராகுகால சாந்தி முதலியன விசேஷமாகச் சொல்லப்படுகிறது.
நவராத்திரி நாட்களில் ஞானப் பூங்கோதையை நேரிலோ, நினைத்தோ வழிபட்டால் அம்பிகையின் திருவருள் கைகூடி சகல அஞ்ஞானங்களும் நீங்கும். மேலும் ஞானகாரகனாம் கேதுவின் திருவருள் கிட்டும்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில்
மதுரை மீனாட்சி அம்மன்
அம்மனின் சக்தி பீடங்களில் முதன்மையானது என போற்றப்படுவது மதுரை மீனாட்சி அம்மன் கோவில். இந்த பீடத்திற்கு 'ராஜமாதங்கி சியாமள பீடம்' என்று பெயர். மீனாட்சிஅம்மன் சிலை மரகதக்கல்லால் ஆனது.
இத்தலத்தை பொறுத்தவரை பெண்மைக்கு முக்கியத்துவம் தரும் வகையில், அம்மனின் இடப்பக்கம் சுவாமி வீற்றிருக்கிறார். மதுரையில் மீனாட்சிக்கே முதல் மரியாதை. இங்கு மீனாட்சி அம்மனை முதலில் வணக்க வேண்டும். பின்னர்தான் சுவாமியை தரிசிக்க வேண்டும். பொதுவாக சிவாலயங்களில் முதலில் இறைவனுக்கு நைவேத்யம் செய்தபிறகு, அதையே தான் சுவாமியின் பிரசாதமாக அம்பாள் முதலான மற்ற எல்லா தெய்வங்களுக்கும் நைவேத்யம் செய்வார்கள். மதுரையிலே மட்டும் மீனாட்சிக்கு முதலில் நைவேத்யம் செய்துவிட்டு, பின்னர் சுந்தரேஸ்வர் உட்பட பிற மூர்த்திகளுக்கு நைவேத்யம் செய்வார்கள்.
மீனாட்சி அம்மனின் ஆபரணங்கள்
மீனாட்சி அம்மனின் மாணிக்க மூக்குத்தி மிகவும் பிரசித்தம். அது போன்றே மீனாட்சி அம்மன் திருவிழாக்காலங்களில் அணியும் பல நகைகள் பக்தர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொள்ளும். பாண்டியர், நாயக்கர் கால மன்னர்கள், ஆங்கிலேயர்கள் என அம்மன், சுவாமிக்கு பலரும் தங்கம், வைரம், வைடூரியம், முத்து, மாணிக்கம், புஷ்பராகத்தில் ஆபரணங்கள் செய்து காணிக்கையாக கொடுத்துள்ளனர். இவை திருவிழா காலங்களில் அம்மன், சுவாமிக்கு அணிவிக்கப்படுகின்றன. அவைகளில் சில - பாண்டிமுத்து, முத்து சொருக்கு, முத்து உச்சிக் கொண்டை, முத்து மாம்பழக் கொண்டை, முத்துமாலைகள், முத்து கடிவாளம், பெரியமுத்து மேற்கட்டி, முத்து உச்சிக் கொண்டை, முத்து மாம்பழக் கொண்டை, முத்தங்கிகள், முத்து மாலைகள், முத்துக் கடிவாளம் ஆகிய முத்தாரங்கள். தலைப்பாகை கிரீடம், திருமுடி சாந்து, பொட்டுக்கறை, பவளக் கொடி பதக்கம், ரோமானிய காசு மாலை, நாகர் ஒட்டியாணம், நீலநாயகப் பதக்கம், திருமஞ்சன கொப்பரை (வெள்ளி), தங்க காசுமாலை, தங்க மிதியடிகள், பட்டாபிஷேக கிரீடம், ரத்தின செங்கோல்.
அம்மனின் தங்க கவசம் - 7 ஆயிரம் கிராம் எடையுள்ளது. தங்க கவசத்தை அம்மனுக்கு சாத்தினால், அழகிய புடவை அணிந்திருப்பது போல் தோன்றும்.
ரத்தின செங்கோல் - இதன் எடை 67 தோலா. இதில் 761 சிவப்பு கற்கள், 21 பலச்ச வைரங்கள், 269 மரகதம், 44 முத்துக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
பெரிய அளவில் 2 வாகன பதக்கங்கள். ரோமானிய காசுமாலை. இதில் தங்க ரோமன் 48 காசுகள் 50 தங்க மணிகளுடன் கோர்க்கப்பட்டுள்ளன. இதேபோல் வெளிநாட்டினர் கொடுத்த காசுமாலை, கிழக்கத்திய கம்பெனி வழங்கிய 73 தங்ககாசுகளுடன் கூடிய காசுமாலை உள்ளது.
வைர கிரீடம்
1972ல் திருப்பணி நடத்தியபோது வைர கிரீடம் உருவாக்கப்பட்டது. வைர கிரீடம் 3 ஆயிரத்து 500 கிராம் எடையுள்ளது. இதில் வெளிநாட்டில் பட்டை தீட்டப்பட்ட 399 காரட் எடையுள்ள முதல் தரமான 3 ஆயிரத்து 345 வைர கற்களும், 600 காரட் எடையுள்ள 4 ஆயிரத்து 100 சிவப்பு கற்களும் பதிக்கப்பட்டுள்ளன இது தவிர எட்டரை காரட் எடையுள்ள ஒரு மரகத கல்லும், அதே எடையில் ஒரு மாணிக்க கல்லும் பொருத்தப்பட்டுள்ளன. கிரீடத்தின் உயரம் பதிநான்கரை அங்குலம்.
விக்டோரியா மகாராணி பார்வைக்காக இங்கிலாந்து சென்று திரும்பிய நீலநாயகப் பதக்கம்
நீலநாயகப் பதக்கம் மன்னர் திருமலை நாயக்க மன்னர் அளித்தது. ஆபரணங்களில் இதுவே மிக அற்புதமானது. எந்த பக்கம் பார்த்தாலும் பளபளப்பும், ஒளியும் ஊடுறுவி பளிச்சிடும். இதன் எடை 21 தோலா. இதில் 10 பெரிய நீல கற்கள், 2 கெம்பு, 1 கோமேதம் பதிந்துள்ளது. நீலநாயகப் பதக்கத்தை ஒரு தடவை ஏழாம் எட்வர்டு சக்கரவர்த்தி மதுரைக்கு வந்திருந்தபோது பார்த்துவிட்டு ஆச்சரியப்பட்டுப் போனாராம். உடனே அந்தப் பதக்கத்தை அவர் தமது தாயார் விக்டோரியா மகாராணிக்குக் காட்ட வேண்டுமென்று சொல்லிக் கையோடு எடுத்துக் கொண்டு இங்கிலாந்து போனார் . எடுத்துக் கொண்டு போனவர் அதை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு பத்திரமாகத் திருப்பியும் அனுப்பி விட்டார்.
பீட்டர் பாடுகம்
அம்மனின் திருவடிகள் தாங்கும் தங்க மிதியடிகள்-ஒன்றின் எடை 27 தோலா. 211 சிவப்பு கற்கள், 36 மரகத கற்கள், 40 பலச்ச வைரம், 2 முத்து, 2 நீலம், 2 வைடூரியம் பதிக்கப்பட்டுள்ளது. மற்றொன்றின் எடை 28 தோலா. 211 சிவப்பு கற்கள், 40 பலச்ச வைரம், 36 மரகத கற்கள், 2 நீலம், 2 முத்து, 2 வைடூரியம் பதிக்கப்பெற்றது. இந்த மிதியடிகளை, சிறுமி வடிவில் வந்து தன் உயிரை காப்பாற்றிய மீனாட்சி அம்மனுக்கு ரவுஸ் பீட்டர் (1812-1828) என்ற ஆங்கிலேய கலெக்டர் காணிக்கையாக அளித்தார். பின்னர் கோவில் நிர்வாகம் அவரது பெயரை, காலணிகளின் அடியில் 'பீட்டர் பாடுகம்' என்று செதுக்கி அவருக்கு மரியாதை செலுத்தினார்கள். மேலும் மாணிக்கக் கற்கள் பதித்த தங்க அங்கவடிகளை (குதிரைச் சேணத்திலிருந்து தொங்கும் பாதந்தாங்கிகள்) அம்மனுக்கு அளித்தார்.

மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில்
தன் பக்தையிடம் தங்கக் காசு மாலை கேட்ட மயிலை கற்பகாம்பாள்
தமிழ்நாட்டில் பிரசித்தி பெற்ற சிவத்தலங்களுள், தேவாரத் தலமான மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் மிகவும் முக்கியமானது. மயிலாப்பூர் பல ஆயிரம் ஆண்டுகள் பழைமையானது. 'கயிலையே மயிலை; மயிலையே கயிலை' என்னும் சிறப்புடையது. மயிலாப்பூர் என்ற பெயரே மயிலை என்று மருவியது. மயில் + ஆர்ப்பு + ஊர்= மயிலாப்பூர். இதற்கு, மயில்கள் நிறைந்த இடம் அல்லது மயில்கள் ஆரவாரம் செய்யும் ஊர் என்று பொருள். பிரம்மாண்ட புராணம் இந்தத் தலத்தை மயூரபுரி, மயூரநகரி ஆகிய பெயர்களால் குறிப்பிடுகிறது. வேண்டுவோருக்கு வேண்டியதைத் தரும் தேவலோக மரமான கற்பகத் தருவைப் போன்று, தன் பக்தர்கள் தன்னிடம் வேண்டும் வரங்களை எல்லாம் தருவதால், இந்த அம்பிகைக்கு ஸ்ரீகற்பகாம்பாள் என்று திருநாமம்.
இத்தலத்து இறைவி கற்பகாம்பாள், நான்கு திருக்கரங்களுடன் அபய-வரத ஹஸ்தத்துடன் நின்ற கோலத்தில் அழகே உருவாகக் காட்சி தருகிறாள். வெள்ளிக் கிழமைகள் மற்றும் சில விசேஷ தினங்களில் மலர்களால் ஆன பூப்பாவாடைகளை அணிந்து காட்சித் தருகிறாள் ஸ்ரீகற்பகாம்பாள். மேலும் வெள்ளிக்கிழமைதோறும் மாலை வேளையில் அன்னை கற்பகாம்பாளுக்கு தங்கக் காசு மாலையும், வைரக் கிளி தாடங்கமும் அணிவிக்கப்படுவது இந்தக் கோயிலின் தனிச் சிறப்பு. இந்தத் தங்கக் காசு மாலையின் பின்னணியில் அம்பிகையின் திருவிளையாடல் உள்ளது.
இக்கோவிலில் 1950-ம் வருடத்திலிருந்து, 'கற்பகாம்பாள் சஹஸ்ரநாம கோஷ்டி' என்னும் பெண்கள் குழு அனுதினமும் லலிதா சஹஸ்ரநாம பாராயணம் செய்வது வழக்கம். இந்தக் குழுவிற்கு 'குரு பாட்டி' என்பவர் தலைவியாகவும், ஆனந்தவல்லி என்பவர் செயலாளராகவும் இருந்தனர். அனுதின பாராயணத்தைத் தவிர கோவிலின் பல்வேறு உற்சவங்கள் மற்றும் விசேஷ நாட்களில் அர்ச்சனை, அபிஷேகம் ஆராதனை ஆகியவையும் செய்து வந்தனர்.
1970-ல் ஒரு நாள் குரு பாட்டியின் கனவில் வந்த கற்பகாம்பாள், 'நீயும் உனது குழுவினரும் தினமும் எனக்கு சஹஸ்ரநாம பாராயணம் செய்கிறீர்கள். காசி விசாலாட்சிக்கும், காஞ்சி காமாட்சிக்கும் இருப்பதைப் போல் எனக்கும் தங்கத்துல சஹஸ்ரநாம காசுமாலை வேணும்' என்று கேட்டாள். குரு பாட்டியும் தான் கனவில் கண்டதை தன் குழுவினரிடம் சொன்னாள். அனைவரும் நன்கொடை பெற்று காசுமாலை செய்து கற்பகாம்பாளுக்கு அணிவிக்க முடிவு செய்தனர்.
வருடங்கள் பல சென்றும், குழுவினரால் காசு மாலைக்கு தேவையான பொருளை சேர்க்க முடியவில்லை. 1978-ல் குருபாட்டியும், ஆனந்தவல்லி மற்றும் உறுப்பினர்கள், இது பொருட்டு காஞ்சி மகா பெரியவரிடம் முறையிட காஞ்சி மடத்திற்கு சென்றனர். 'என்ன? காசுமாலைக்கு பணம் சேரலியா' என்று அவர்கள் முறையிடும் முன்னரே, மகா பெரியவர் கேட்டதால் அவர்கள் ஆச்சரியமடைந்தனர். ' கேட்டவள் அம்பிகை தானே. அதற்கு அவளே அருள் கொடுப்பாள். கவலைப்பட வேண்டாம்' என்று சொன்னார். மேலும் 'விசாலாட்சிக்கும், காமாட்சிக்கும் இருக்கறது பணக்கார காசுமாலை; ஆனால் கற்பகாம்பாளுக்கு கிடைக்கப் போறது பக்தியால காசுமாலை' என்று அங்கிருந்தவர்களிடம் கூறினார். பிறகு ஆனந்தவல்லியிடமும் குரு பாட்டியிடமும் 'கற்பகம் சுவாசினி சங்கம் அப்பிடின்னு பேர்வச்சு, நிறைய சுவாசினி மற்றும் பாலா திருபுரசுந்தரி பூஜைகள் செஞ்சிண்டு வாங்கோ' என்று சொல்லி ஆசீர்வாதம் செய்து பிரசாதமளித்தார்.
மகா பெரியவர் சொன்னதை சிரமேற்கொண்டு நடைமுறைப்படுத்தியதால், பொன்னும் பொருளும் வந்து குவிந்தன. 1982-ல் காசு மாலை செய்யும் வேலை துவங்கியது. ஒவ்வொரு தங்கக் காசிலும், காசின் ஒரு புறத்தில் சஹஸ்ரநாமாவளியின் ஒரு நாமாவும், மறு புறத்தில் கோவிலின் முத்திரையான சிவலிங்கத்தை மயில் பூஜை செய்வது -பின்னணியில் அம்பாள் உருவமும் பதிக்கப்பட்டது. தங்க காசு மாலையும் உருவானது.
கற்பகாம்பாளுக்கு லலிதா சஹஸ்ரநாம தங்க காசு மாலையை சமர்ப்பிக்கும் விழா 26. 2. 1986 அன்று கொண்டாடுவது என்று முடிவானது.
ஆனால், 20-1-1986 அன்று ஆனந்த வல்லியின் கணவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. கை கால்கள் செயலிழந்து, பேச்சும் இல்லாமல் போனது. மருத்துவர்கள் , அதிக பட்சம் 48 மணி கெடு கொடுத்து விட்டனர். ஆனந்தவல்லி இதைத் தாங்க முடியாது மனமுடைந்து வீட்டின் பூஜை அறையிலேயே அடைந்து கிடந்தார். குரு பாட்டி சங்கத்தின் உறுப்பினர்களோடு காசு மாலையை எடுத்துக்கொண்டு பெரியவாளை தரிசிக்க மடத்திற்குச்சென்றார். இவர்கள் எல்லோரையும் பார்த்த மகா பெரியவர் , 'ஏன்? உங்க செயலாளர் வரலியா?' என்று கேட்க, இவர்களும் அனந்தவல்லி கணவரின் நிலைமை பற்றி கண்ணீருடன் விவரித்தனர். காசுமாலையை பார்வையிட்ட மகா பெரியவர், 'மாலை சிறப்பாக அமைந்திருக்கிறது. இந்த மாலையை கற்பகாம்பாளுக்கு போட, உங்க செயலாளர் உடன் இருப்பார். கவலைப்படாதீர்கள்' என்று சொல்லி ஆசீர்வதித்து பிரசாதங்கள் கொடுத்தார்.
அனைவரும் நேராக ஆனந்தவல்லி வீட்டிற்கு வந்து ஸ்வாமிகளின் ஆசிகளை சொல்லி பிரசாதங்களை கொடுத்தனர். என்ன ஒரு அதிசயம்! அதேநேரத்தில் மருத்துவ மனையிலிருந்து, ஆனந்தவல்லியின் கணவர் நினைவு திரும்பி பேசுவதாகவும், நல்ல நிலையில் இருப்பதாகவும் செய்தி வருகிறது. மருத்துவர்கள் மிகுந்த ஆச்சர்யத்துடன், ஏதோ அற்புதம் நடந்துள்ளது என்று சொல்லி மறு நாளே டிஸ்சார்ஜ் செய்து விட்டார்கள்.
26-2-1986 அன்று நடந்த காசுமாலை சமர்ப்பண விழாவில், ஆனந்தவல்லி கணவரும் கலந்து கொண்டார். ஆனந்தவல்லி விழாவை முன்னின்று நடத்தி, அன்று காலையில் கற்பகம்பாளுக்கு காசுமாலையினை சாற்றி, மாலையில் நடை பெற்ற கூட்டத்தில் தனது அறிக்கையையும் சமர்ப்பித்தார்.
மேலும், காசுமாலையைப் பாதுகாப்பாக வைக்க ஒரு கோத்ரேஜ் அலமாரியினையும் அளித்தார். தற்போதும், அம்பாளுக்கு அனைத்து வெள்ளிக் கிழமைகள், பெளர்ணமி நாட்கள் மற்றும் வருடா வருடம் பிப்ரவரி 26 நாளிலும் இந்தக் காசுமாலை சாற்றப்படுகிறது.

திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில்
திருவான்மியூர் திரிபுரசுந்தரி அம்மன்
நாயன்மார்களால் பாடப்பட்ட தொண்டை நாட்டுப் பாடல் பெற்ற தலங்களுள் ஒன்று சென்னையில் உள்ள திருவான்மியூர். இறைவன் திருநாமம் மருந்தீஸ்வரர். இறைவியின் திருநாமம் திரிபுரசுந்தரி அம்மன். இந்த அம்மனுக்கு சொக்கநாயகி என்ற என்ற பெயரும் உண்டு. இத்தலத்தில் அன்னை திரிபுரசுந்தரியாக மூன்று உலகங்களிலும் அழகும், அருளும் நிறைந்தவளாகக் காட்சி தருகிறாள்.
பத்தாம் நூற்றாண்டின் சோழர் கால கல்வெட்டுக்கள் அம்மன் கோவில் சுவற்றில் உள்ளன. இறைவன் திருவான்மியூருடைய மகாதேவனென்றும், இவ்வூரை ஜயங்கொண்ட சோழ மண்டலத்துப் புலியூர் என்றும் குறித்துள்ளனர்.
கோவில் கிழக்கு வெளிப் பிரகாரத்தில் வலது புறம், திரிபுரசுந்தரி அம்மன் தனி சந்நிதியில் தெற்கு நோக்கி தாமரைப் பீடத்தின் மேலே, நான்கு திருக்கரங்களோடு பூரண சந்திர பிரகாசத்தோடு காட்சி தருகிறாள்.அவரது இரு கரங்கள் அங்குச, பாசங்களை ஏந்தியுள்ளன. மற்ற இரு கரங்கள் அபய முத்திரைகளைப் பெற்றுள்ளன. ஒன்பது கஜ பச்சை பட்டு உடுத்தி ரோஜா, செவ்வந்தி, மல்லிகை மாலைகள் அணிந்து, அன்னை நிற்கும் கம்பீரத்தில் நம்மையே மறந்து போய் விடுவோம். விசேட நாட்களில் சந்தனக்காப்பு, மஞ்சள் காப்பு, புஷ்ப அலங்காரம் ஆகியவற்றுடன் அம்மன் தோன்றும் போது, அக்காட்சியைக் காணும் கண்களே பாக்கியம் செய்தவை. இந்த அன்னையைப் பலரும் வழிபட்டு, கலைகளில் சிறந்த ஞானமும், கல்வி கேள்விகளில் தேர்ச்சியும் அடைந்தார்கள்.
இந்தத் தலத்தில், இறைவன் அகத்தியருக்கு திருமணக் காட்சி வழங்கி அருளினார். அவரைப் போன்றே யோகத்தில் ஆழ்ந்து சிவ மந்திரங்களை ஜபித்து, இறைவனிடத்தில் ஈடுபடும் அடியார்கள், பெருமானின் திருமணக் கோலத்தைக் காண வேண்டும் என்று அகத்தியர் வேண்டிக் கொண்டார். அவருடைய வேண்டுதலுக்கு இணங்க, இறைவனும் சிவயோகத்தின் இரகசியங்களை அன்னைக்கு இந்தத் தலத்தில் உபதேசம் செய்து வைத்தார். அதோடு, தானே எல்லா சுகங்களையும் துறந்து, தியாகம் செய்து தியாகராஜராக எழுந்தருளி, யோகமும் செய்து, இந்த யோகத்தின் மூலம் அடியார்கள் பெறக்கூடிய பரமானந்த நிலையைத் தான் அடைந்து, அன்னைக்குக் காண்பித்தார்.

திருத்தியமலை ஏகபுஷ்ப பிரியநாதர் கோவில்
தாயை விட அதிக கருணை காட்டும் அம்பிகை
திருச்சி-துறையூர் பேருந்துப் பாதையில் திருப்பைஞ்சீலியிலிருந்து 12 கி.மீ. அமைந்துள்ள தலம் திருத்தியமலை. இறைவன் திருநாமம் ஏகபுஷ்ப பிரியநாதர். இறைவியின் திருநாமம் தாயினும் நல்லாள். 5000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான இத்தலம், தரை மட்டத்திலிருந்து சுமார் 200 மீட்டர் உயரத்தில் உள்ளது. இறைவனுக்கு ஏகபுஷ்பப் பிரியநாதர் என்ற பெயர் வந்ததற்குச் சுவையான வரலாறு ஒன்று உண்டு. இறைவனால் படைக்கப்பட்ட எத்தனையோ மலர்கள் இறைவனுக்குச் சாத்தப்படுகின்றன. ' தேவ அர்க்கவல்லிப்பூ' என்னும் ஒரு மலரை மட்டுமே இறைவனே காத்திருந்து ஏற்றுக் கொள்வதாக நம்பிக்கை உண்டு. வற்றாத நீர் உள்ள ஒரு சுனையில், பல யுகங்களுக்கு ஒரே முறை தேவ அர்க்கவல்லிப்பூ பூக்கும் சிறப்பு மிக்க சுனை, அமைந்திருக்கும் இடம்தான் திருத்தேசமலை என்னும் திருத்தியமலை. தேவ அர்க்கவல்லிப்பூவை அணிந்து மகிழ்வதற்காக யுக யுகாந்திரமாய் இறைவன் காத்திருப்பதால், இந்த சிவபெருமானின் திருப்பெயர், ஏகபுஷ்பப் பிரியநாதர் என்று வழங்கப்படுகிறது. இறைவனின் இந்த திருநாமம் அபூர்வமான ஒன்று.
இத்தலத்து இறைவன் சற்றே சாய்ந்த நிலையில் காட்சி அளிக்கிறார். பக்தர்கள் அளிக்கும் மலரை விரும்பி ஏற்றுக் கொள்வதற்கு ஏற்றவாறு சற்றே சாய்ந்த நிலையில் காட்சியளிக்கிறார்.திங்கட்கிழமை தோறும் லிங்கத்திற்கு வில்வ இலை கொண்டும், ஆவுடையாருக்கு துளசியால் அர்ச்சனை செய்து வழிபட்டால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும். 11 வாரங்கள் தொடர்ந்து இவ்வாறு செய்தால் எண்ணிய செயல்கள் எல்லாம் நிறைவேறும்.
இக்கோவிலில் தனிசன்னதி கொண்டு எழுந்தருளியுள்ள இறைவிக்குத் தாயின் நல்லாள் எனப் பெயர். இந்த அம்பிகை ஒரு தாயை விட அதிக கருணை காட்டுவதால் தாயின் நல்லால் என்ற பெயர் பெற்றாள். இந்த அம்மனுக்கு மாத்ரு அதீத கருணாம்பிகா, சுருள் குழல் நாயகி என்ற பெயர்களும் உண்டு. பெண்களால் ஏற்பட்ட சாபங்கள் நீங்க இந்த அம்பிகையை வழிபட வேண்டும். அதனால் பெண்களால் விடப்பட்ட சாபங்கள் நீங்கி, விமோசனம் கிடைக்கும் என்பது ஐதீகம். ஆறு வெள்ளிக்கிழமை அம்பாளுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால் போதும். சூரியனைக் கண்ட பனிபோல தடைகள் தானே விலகும். திருமணத்தடை, கல்வித்தடை, மணமக்களிடையே ஏற்படும் பிரச்னைகள் முதலான எல்லாப் பிரச்னைகளையும் தீர்த்து அருளும் அன்னையாகத் திகழ்கிறாள், தாயினும் நல்லாள்.

காஞ்சிபுரம் அரசு காத்த அம்மன் கோவில்
காஞ்சி காமாட்சி அம்மனுக்கு காவல் தெய்வமாக விளங்கிய அரசு காத்த அம்மன்
காஞ்சிபுரம் ஏகாம்பரேசுவரர் கோவிலின் தெற்கு கோபுரத்திற்கு அருகில், சன்னதி தெருவில் அமைந்துள்ளது அரசு காத்த அம்மன் கோவில். காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலிலிருந்து வடமேற்கு திசையில் சுமார் அரை கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. கருவறையில் அரசு காத்த அம்மன், வலது காலை மடித்து இடது காலை தொங்கவிட்ட நிலையில் வடக்கு நோக்கி வீற்றிருகிறாள். அம்மன் வலது காதில் குண்டலம், இடது காதில் தோடு அணிந்து காட்சி தருகிறாள். இரு கோரைப் பற்களும், நான்கு கரங்களில் வலது மேற்கரத்தில் உடுக்கையும், கீழ் கரத்தில் சூலமும், இடது மேல்கரத்தில் பாசம், கீழ் கரத்தில் கபாலமும் உள்ளன. ஜ்வாலா கிரீடம் அணிந்திருக்கிறாள். ஆறடி உயரத்தில் இருக்கும் இந்த அம்பிகை இடது காலால் அசுரனை வதம் செய்த கோலத்தில் காட்சி தருகிறாள்.
தல வரலாறு
பார்வதி தேவி, சிவபெருமான் கொடுத்த சாபத்திலிருந்து விமோசனம் பெறுவதற்காக காஞ்சியில் தவம் செய்தார் . பார்வதி தேவியின் அந்த தவத்திற்கு எந்த இடையூறும் இல்லாமல் இருப்பதற்காக, அரசு காத்த அம்மன், பச்சை அம்மன், சந்தை வெளி அம்மன், கருக்கினில் அமர்ந்த அம்மன் ஆகிய எட்டு பெண் தெய்வங்கள் பார்வதி தேவிக்கு காவல் புரிந்தனர். இவர்களுக்கு தலைமை பொறுப்பேற்றவள் அரசு காத்த அம்மன். சோழ மன்னர்களின் அரசாங்கத்திற்கு பாதுகாப்பாக இருந்ததால் 'அரசு காத்த அம்மன்' என்று பெயர் வந்தது .
செல்வம் பெருக்கும் அம்மன்
அரசு காத்த அம்மனுக்கு சம்பத்கரீஸ்வரி என்ற பெயரும் உண்டு. 'சம்பத்' என்றால் செல்வம். 'கரி' என்றால் யானை. யானை மீது பவனி வந்து செல்வங்களை வாரி வழங்குவதால் இப்பெயர் வந்தது. இதற்கு அடையாளமாக அம்மனின் எதிரில் சிம்ம வாகனத்திற்கு பதிலாக யானை வாகனம் இடம் பெற்றுள்ளது. இந்த அமைப்பு இக்கோவிலின் தனிச்சிறப்பாகும்.
பிரார்த்தனை
வாதம், தோல் நோய், வாய் பேச இயலாதவர்கள் தங்கள் பிரச்சனை தீர இந்த அம்மனிடம் வேண்டிக் கொள்கிறார்கள்.

சென்னை சௌகார்பேட்டை ஏகாம்பரேசுவரர் கோவில்
ஆவுடையார் மீது நின்ற கோலத்தில் காட்சி தரும் காமாட்சி அம்மன்
சென்னையில் உள்ள புகழ்பெற்ற ஆலயங்களில் ஒன்று, தங்கசாலையில் அமைந்துள்ள அருள்மிகு ஏகாம்பரேசுவரர் கோவில். இக்கோவில், சென்ட்ரல் ரயில் நிலையம் மற்றும் பாரிமுனையில் இருந்து நடந்து செல்லும் தொலைவில் அமைந்துள்ளது. இறைவியின் திருநாமம் காமாட்சி.
இத்தலத்து அம்பாள் காமாட்சி, ஆவுடையார் மீது நின்ற கோலத்தில் காட்சி தருகிறாள். ஆணும் பெண்ணும் சமம் என்பதை சிவபெருமான் அர்த்தநாரீஸ்வரர் கோலத்தின் மூலம் உணர்த்தியது போல, இத்தலத்து காமாட்சி அம்பாள் ஆவுடையார் மேல் நின்றபடி சிவனில் சக்தி அடக்கம் என உணர்த்துகிறாள். அதனால் இங்கு அம்மனே பிரதானமாகவும் கருதப்படுகிறார். அம்பாளின் பாதத்திற்கு முன் ஸ்ரீசக்கரம் உள்ளது. ஆலயத்தில் அம்பாளுக்கு எதிராக சனீஸ்வரர் வீற்றிருப்பதால், இத்தல அம்மனை வழிபட்டால் சனியின் கெடு பார்வையில் இருந்து நிவாரணம் பெறலாம்.
பிரார்த்தனை
திருமண வரம், வீடு வாங்கும் யோகம் ஆகியவற்றை தருவதால் இக்கோவில் பக்தர்களிடையே மிகவும் பிரபலமாக விளங்குகிறது.

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில்
பிரம்மாண்டமான புற்று வடிவில் காட்சி தரும் பகவதி அம்மன்
கன்னி்யாகுமரி மாவட்டம், நாகர்கோவிலிலிருந்து 15 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில். முற்காலத்தில் நெருக்கமான பனைக்காடாக இருந்த இந்தப் பகுதியில் சுயம்புவாக எழுந்தவள் மண்டைக்காடு பகவதியம்மன். ஆரம்பத்தில் காளிதேவியாக வழிபடப்பட்டவள், பின்னர் கேரள மக்களின் வழக்கப்படி 'பகவதி அம்மன்' என்று அழைக்கப்பட்டாள். கால்நடைகளை இங்கே மேய்ச்சலுக்குக் கொண்டு வந்ததால், இதை மந்தைகாடு என அழைத்துள்ளனர். அதுவே காலப்போக்கில் மருவி'மண்டைக்காடு' என்று மாறியதாக தல வரலாறு கூறுகின்றது.
பகவதி அம்மன் பிரம்மாண்டமான புற்று வடிவில் காட்சி தருகிறார். 15 அடிக்கு உயர்ந்து நிற்கும் புற்றின் மேல் பகவதி அம்மனின் முகம் சந்தனத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வளவு பிரம்மாண்டமான புற்று வேறு எங்கும் இல்லை என்றும், இப்புற்றில் இதுவரை எந்த பாம்பும் வசித்ததில்லை என்றும் கூறுகின்றனர். பொதுவாக புற்றுக்கோவிலில் பக்தர்கள் பால் ஊற்றுவதும், முட்டைகளை வைத்து வேண்டுவதும் உண்டு. ஆனால் இங்கு பால் ஊற்றுவதோ, முட்டைகளை உடைப்பதோ கிடையாது. ஆனால் இந்த புற்றுக்கு தினமும அபிஷேகம் நடைபெறுகிறது. பூசாரி ஓர் ஏணி மரத்தை வைத்து அதில் ஏறி அம்மனுக்கு பூமாலைகளைச் சாற்றுகிறார்.புற்றுவடிவ மூலவர் தேவிக்கு முன்பாக வெண்கலச்சிலையாக நின்ற கோலத்திலும், வெள்ளிச்சிலையாக அமர்ந்த கோலத்திலும் பகவதியம்மன் அருள் பாலிக்கிறார்.
பெண்களின் சபரிமலை
கேரள கோவிலை போன்று அமைப்பு கொண்ட மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலுக்கு ஆண்களை விட பெண்கள் அதிகளவில் வருகின்றனர்.. சபரிமலைக்கு ஆண்கள் 41 நாள்கள் விரதம் இருந்து,பயபக்தியுடன் சென்று வழிபட்டு வருவதைப் போல, பெண்கள் 41 நாள்கள் விரதமிருந்து, இருமுடி கட்டி இந்தக் கோயிலுக்கு வருவதால், பெண்களின் சபரிமலை என்று சிறப்பித்து அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மாசி கொடை விழாவை ஒட்டி கேரளத்து பெண்கள் 41 நாள்கள் பயபக்தியுடன் விரதம் இருந்து, இருமுடி கட்டி மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் தரிசனம் செய்கிறார்கள். மாசி மாத கொடை விழா இந்த ஆலயத்துக்குப் புகழ் சேர்க்கும் ஒரு திருவிழா. பெண்கள் 41 நாள்கள் விரதமிருந்து, இருமுடி சுமந்து, கால்நடையாக இங்கு ஆயிரக்கணக்கில் வந்து தரிசனம் செய்வார்கள். மாசி கொடை விழாவின் போது வேண்டுதல் நிறைவேற ஆலய வளாகத்தை சுற்றிலும் பொங்கல் வைத்தும் வழிபாடு செய்கின்றனர்.
பிரார்த்தனை
செவ்வாய்,வெள்ளிக் கிழமை, பௌர்ணமி நாட்களில் மண்டைக்காடு அம்மன் கோவிலில் கூட்டம் அலைமோதுகிறது. கல்யாண வரம், குழந்தை வரம், உடல் உறுப்புகளில் குறைபாடு, கண் திருஷ்டி தோஷம், தலைவலி நிவாரணம் போன்றவற்றிற்காக இங்கு பிரார்த்தனை செய்யப்படுகின்றது. இக்கோயிலில் கொடுக்கப்படும் மண்டையப்பம் மிகவும் பிரசித்தி பெற்றது. அரிசி மாவில் வெல்லம்,பாசிப் பருப்பு,ஏலம்,சுக்கு ஆகியவை சேர்ந்து நீராவியால் அவித்துத் தயார் செய்யப்படுகிறது இந்த மண்டையப்பம். அம்மனுக்கு நைவேத்தியம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்படுகின்றது. அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் நோயிலிருந்து மீண்ட பிறகு இங்கே வந்து, முத்தப்பம் என்னும் அப்பத்தை நைவேத்தியம் செய்கின்றனர்.

பூவனூர் சதுரங்க வல்லபநாதர் கோவில்
தமிழக சாமுண்டீஸ்வரி அம்மன்
நீடாமங்கலம்- மன்னார்குடி சாலையில் 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவாரத்தலம் பூவனூர் சதுரங்க வல்லபநாதர் கோவில். இக்கோவிலில் ராஜராஜேஸ்வரி, கற்பகவல்லி என்று இரண்டு அம்பிகைகள் அருள்பாலிக்கிறார்கள். இத்தலத்தில் சிவபெருமான், ராஜராஜேஸ்வரி அம்பிகையை சதுரங்க ஆட்டத்தில் வென்று மணம் புரிந்தார். அதனால் இத்தல இறைவனுக்கு சதுரங்க வல்லபர் என பெயர். சதுரங்கத்தில் 64 சதுர கட்டங்களானது இறைவனின் 64 வடிவங்களையும், 64 நாட்டிய நிலைகளையும் குறிக்கின்றது என்பதனை அம்பிகை மூலம் இறைவன் உணர்த்தி உள்ளார்.
மைசூர் நந்திமலையில் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு தனிக் கோவில் உள்ளது. இத்தலத்திலும் சாமுண்டீஸ்வரி அம்மன் தனிச் சன்னிதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். மைசூர் சாமுண்டீஸ்வரி அம்மன் போல் இந்த அம்மனும் வடக்கு நோக்கி எழுந்தருளி இருக்கின்றாள். இவள் தமிழக சாமுண்டீஸ்வரி அம்மன் என்று போற்றப்படுகின்றாள்.இந்த அம்மன் விசேஷமான சக்தி உடையவள். சாமுண்டேஸ்வரி அம்மனிடம் பெண்கள் பிரார்த்தனை சீட்டு கட்டி வேண்டிக் கொள்கிறார்கள். அந்த பிரார்த்தனையானது 90 நாட்களில் நிறைவேறும் என்பது நம்பிக்கை. கடன் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை, திருமண தடை, குழந்தை பாக்கியம் ஆகியவற்றுக்கும் இந்த அம்மனை வழிபடுகிறார்கள்.
எலிக் கடியினாலும், பிற விஷக் கடியினால் ஏற்படும் நோய்களால் பாதிக்கப்படுபவர்கள் இங்கு வந்து வழிபட்டுச் செல்கிறார்கள். இத்தலத்தில்தான் அகஸ்தியர் போகருக்கு விஷக்கடி நிவர்த்திக்கான மூலிகை வைத்திய முறைகளை போதித்துள்ளார். அனைத்து சித்த வைத்தியர்களும் அகஸ்தியருக்கு பூஜை செய்து வழிபட வேண்டிய தலம் இது. ஞாயிற்றுக்கிழமை தோறும் விஷக்கடி நிவர்த்தி செய்ய, அகத்தியர் பிரானின் ஆசியோடு, சாமுண்டீஸ்வரி அம்மன் சன்னதி முன் மூலிகை வேர் ரட்சை கட்டப் பெறுகின்றது. இங்குள்ள தீர்த்தங்களில் கோயிலின் பின்புறம் உள்ள 'கிருஷ்ண குஷ்டஹரம்' தீர்த்தம், கருங்குஷ்டம் போக்கும் தன்மையுடையது.
சர்க்கரை பாவாடை விழா
ஆடி மாதத்தில் அம்மனுக்கு சர்க்கரை பாவாடை போடப்பட்டு நிவேதனம் செய்ப்படுகிறது அப்போது அம்மனின் முகம் அந்த சர்க்கரை பாவாடையில் தெரியும்போது தீபாராதனை நடக்கிறது. அவ்விழாவின் போது சாமுண்டீஸ்வரி அம்மனை தரிசிக்க பல ஊர்களில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

பண்ணாரி மாரியம்மன் கோவில்
பக்தர்களுடன் கால்நடைகளும் தீ மிதிக்கும் அம்மன் தலம்
ஈரோடு மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் பண்ணாரி மாரியம்மன் கோவில் முக்கியமான ஒன்றாகும் . இக்கோவில், சத்தியமங்கலத்திலிருந்து 15 கி.மீ. தொலைவிலும், ஈரோட்டில் இருந்து சுமார் 75 கி.மீ. தொலைவிலும், மேற்குத்தொடர்ச்சி மலைச்சாரலில், தமிழ்நாடு கர்நாடகா எல்லைப் பகுதியில் ஒரு அழகான வனப்பகுதியில் அமைந்துள்ளது. மிகவும் சக்தி வாய்ந்த பண்ணாரி அம்மன் கோவிலுக்கு தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திர மற்றும் கேரளாவில் இருந்து பல பக்தர்கள் வந்து அம்மனை தரிசித்து அருள் பெற்று செல்கின்றனர்.
புற்று மண் பிரசாதம்
கருவறையில் பண்ணாரி அம்மன் தாமரை பீடத்தில் அமர்ந்த நிலையில், தெற்கு நோக்கி சுயம்புவாக எழுந்தருளி இருக்கின்றாள். சாந்தம் தவழும் முகத்துடன், கைகளில் கத்தி, கபாலம், டமாரம் , கலசம் ஆகியவற்றை ஏந்தி காட்சி தருகின்றாள். எல்லாக் கோவில்களிலும் திருநீற்றைத்தான் பிரசாதமாக தருவார்கள் . ஆனால், இங்கே புற்று மணலையே விபூதி பிரசாதமாக தருகிறார்கள். இதை வீட்டுக்கு எடுத்துச் சென்று பூஜை அறையில் வைத்தால், திருட்டு மற்றும் தீங்கு போன்ற அபாய செயல்கள் நடக்காது என்பதும், தீராத நோயும் தீரும், கால் நடைகளுக்கு நோய் வராது என்பதும் நம்பிக்கை. மங்களகரமான செயல்கள் வீடுகளில் நடப்பதுடன், அம்மன் தங்களுக்கு பாதுகாப்பாகவும் இருப்பாள் என்கின்றனர் பக்தர்கள். அம்மன் கால்நடை வளர்ப்போரின் காவல் தெய்வமாக விளங்குகிறாள். கால் நடைகள் கொண்டு தொழில் செய்பவர்கள், தங்கள் தொழில் விருத்தியடைய அம்மனை வணங்குகின்றனர்.
பங்குனி மாத குண்டம் திருவிழா
இந்த கோவிலில் பங்குனி மாதம் நடைபெறும் குண்டம் இறங்கும் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. குண்டம் இறங்கும் திருவிழா என்பது தீமிதி திருவிழா என்பது ஆகும். பூக்குழி என்றழைக்கப்படும் அக்னி குண்டத்திற்கு தேவையான விறகுகளை வெட்ட காட்டுக்குள் சென்று பக்தர்கள் வெட்டி வருவார்கள் இதை 'கரும்பு வெட்டுதல்' என இப்பகுதில் அழைப்பார்கள் .தமிழகத்தில் எங்கும் இல்லாத விசேஷமாக இங்கு தொடர்ச்சியாக 12 மணி நேரம் நடைபெறும் தீமிதி திருவிழா இதுவாகும். இதில் சுமார் 2 லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து குண்டம் இறங்குவார்கள். குழந்தைகள் பெரியவர்கள் என பலதரப்பு மக்கள் இந்த தீமிதி திருவிழாவில் கலந்து கொள்வார்கள். பக்தர்களை வியக்க வைக்கும் விதமாக கால்நடைகளும் இந்த தீமிதி திருவிழாவில் பங்கு பெறுவதுண்டு.
முதலில் தலைமை பூசாரி அக்னி குண்டத்தில் இறங்கி நடந்து செல்லுவார். பின்பு லட்சக்கணக்கான பக்தர்கள் அக்னி குண்டம் இறங்குவார்கள். காலை 4 மணி முதல் மாலை வரை பக்தர்கள் தொடர்ந்து அக்னி குண்டம் இறங்குவது மிகப் பெரிய பிரம்மாண்டமான மெய்சிலிர்க்கும் காட்சி ஆகும். கடைசியாக ஆடு, மாடு, குதிரை போன்ற கால்நடைகளையும் பக்தர்கள் குண்டம் இறக்கி நடக்க வைப்பார்கள்.
கண் வியாதியை குணப்படுத்தும் கோவில் தீர்த்தம்
பல ஆண்டுகளுக்கு முன், காட்டு இலாகா அதிகாரியாக பணியாற்றிய ஒரு ஆங்கிலேயர் , துப்பாக்கியால் பன்னாரி அம்மன் கோவில் சுவற்றில் சுட்டதால் பிறகு அவரது கண்கள் ஒளி இழந்தன. தவறை உணர்ந்து அம்மனிடம் வேண்டி, கோயிலில் வழங்கப்பட்ட தீர்த்தத்தால் கண் ஒளி பெற்றார். இதனால் தற்போதும், கண்வியாதி உள்ளவர்களுக்கு கோவில் தீர்த்தம் வழங்கப்படுகிறது. இது கண் வியாதியை குணப்படுத்துவதாக மக்களால் நம்பப்படுகிறது.
பிரார்த்தனை
திருமண பாக்கியம், குழந்தைப்பேறு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுடன் வருவோர் நம்பிக்கையுடன் திரும்பிச் செல்கின்றனர். மேலும் கேட்டதெல்லாம் தரும் வல்லமை வாய்ந்த அம்மனாக நம்பிக்கை வைத்து, பக்தர்கள் வணங்கி வருகின்றனர்.

செட்டிகுளம் ஏகாம்பரேசுவரர் கோவில்
கந்தனுக்கு தன் கையிலிருந்த கரும்பை பரிசாக அளித்த காமாட்சி அம்மன்
பெரம்பலூர் - திருச்சி ரோட்டில் 15 கி.மீ. தூரத்தில் உள்ள ஆலத்தூரிலிருந்து, 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது, செட்டிகுளம் ஏகாம்பரேசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் காமாட்சி அம்மன். இத்தலத்தில் காமாட்சி அம்மன் சன்னதி, தனிக் கோவிலாக உள்ளது. கருவறையில் காமாட்சி அம்மன் நான்கு திருக்கரங்களுடன் அபய, வரத முத்திரையோடு நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். காஞ்சிபுரம் காமாட்சி அம்மனை வழிபட்டால் எத்தகைய நற்பலன்கள் கிடைக்குமோ, அத்தகைய நற்பலன்களை இந்த அம்மன் இடத்தில் நாம் வரம் பெறலாம். அன்னை காமாட்சியம்மன், தன் ஆணைக்கு இணங்க அசுரர்களை அழித்த முருகப்பெருமானுக்கு தன் கையில் இருந்த கரும்பை பரிசாக வழங்கி ஆசி வழங்கினார். காமாட்சி அம்மன் அளித்த 11 கணுக்களை உடைய செங்கரும்பினை ஏந்தி, முருகப்பெருமான் கோவிலுக்கு சற்று தொலைவில் உள்ள குன்றின் மேல் தண்டாயுதபாணி சுவாமியாக அருள்பாலிக்கிறார். அன்னை காமாட்சியம்மன் கையில் கரும்பின்றி, நின்ற கோலத்தில் அருள்பாலிப்பது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும்.

பிட்டாபுரம் அம்மன் கோவில்
பிட்டு நைவேத்தியமாக ஏற்கும் பிட்டாபுரத்தி அம்மன்
திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலுக்கு வடமேற்கு முனையில் அமைந்துள்ளது பிட்டாபுரத்தி அம்மன் கோவில். இந்த அம்மனுக்கு 'புட்டாத்தி அம்மன்' என்ற பெயரும் உண்டு. இந்த அம்மன் திருநெல்வேலி மாநகரின் எல்லைக் காவல் தெய்வமாக விளங்குகின்றாள்.
கருவறையில் பிட்டாபுரத்தி அம்மன் சுமார் 6 அடி உயரத்தில், 5 அடி அகலத்தில் அழகிய பீடத்தில், வலது காலை பீடத்தின் மேலே ஊன்றி, இடது காலை தொங்க விட்டு வலது கைகளில் அரவு, வேதாளம், வாள், சூலம் ஆகியவற்றையும், இடது கைகளில் தீ, மணி, கேடயம், கபாலம் ஆகியவைகளை தாங்கியும், இருக்கையின் கீழ் வீழ்ந்து கிடக்கும் அரக்கனை வலக்கை சூலத்தால் அழுத்தியபடி காட்சியளிக்கிறாள்.
இந்த அம்மனுக்கு நடைபெறும் இரு நேர பூஜையிலும் பிட்டு படைக்கப்படுவது சிறப்பான ஒன்றாகும். பிட்டு படைப்பதால்தான் இந்த அம்மனுக்கு பிட்டாபுரத்தி அம்மன் என்ற பெயர் வந்துள்ளது. அம்மனுக்கு தீபாராதனை ஆன பின்னர் அலங்காரத்தில் ஏற்படும் குறைகளை சரி செய்ய மாட்டார்கள். அதேபோல் தீபாராதனை முடிந்த பின்னர் மாலைகளோ, பூக்களோ அம்மனுக்கு அணிவிக்கப்படாது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
குழந்தைகளுக்கு ஏற்படும் 64 விதமான நோய்களை குணப்படுத்தும் அம்மன்
குழந்தைகளுக்கு ஏற்படும் நோயை குணப்படுத்துவது இந்த அம்மனின் சிறப்பு அம்சமாகும். இங்கு குழந்தைகளுக்கு ஏற்படும் அறுபத்து நான்கு விதமான நோய்கள், சீர் தட்டுதல் போன்றவற்றிற்கு கைகளில் வேர் கட்டி, நெற்றியில் மையிடப்படுகிறது. இதனால் குழந்தைகளுக்கு ஏற்படும் சகல நோய்களும் குணமடையும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
பிற மதத்தை சேர்ந்தவர்களும் தங்கள் குழந்தைகளின் நோய் தீர்க்க வழிபடும் அம்மன்
இந்துக்கள் மட்டுமல்லாது பிற மதத்தை சேர்ந்தவர்களும் இக்கோவிலுக்கு தங்கள் குழந்தைகளை கொண்டு வந்து அம்மனை வழிபட்டு வேர் கட்டி, மையிட்டு செல்வது இக் கோவிலின் சிறப்பம்சமாகும். பொதுவாக குழந்தைகள் பிறந்தால் தீட்டு என்றும் பதினாறு நாட்களுக்கு அந்த குடும்பத்தினர் கோவிலுக்கு செல்லக் கூடாது என்பது விதிமுறை. ஆனால் இங்கு பிறந்த குழந்தையை கூட அழைத்து வந்து வேர் கட்டி வழிபடலாம்.
பிரார்த்தனை
இவள் சன்னதியில் தினமும் காலை மற்றும் இரவு பூஜைகளின் போது மந்திரம் ஓதப்பட்ட புனித நீரானது சங்கில் வைத்து பக்தர்களின் மீது தெளிக்கப்படும். இதனால் சகல திருஷ்டிகளும், பீடைகளும், தீய சக்திகளும் நீங்குவதாக நம்பிக்கை. மேலும் மகப்பேறு விரும்பியும், பீடைகள் நீங்கவும், நோய்கள் தீரவும், செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் திரளான பெண்கள் இக்கோவிலுக்கு வந்து அம்மனை வேண்டி செல்கிறார்கள். ராகுகால நேரத்தில் இந்த அம்மனை வழிபடுவது சிறப்பாகும்.

மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவில்
அக்கினியை கிரீடமாக அணிந்திருக்கும் பத்ரகாளி அம்மன்
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ளது மடப்புரம் காளியம்மன் கோவில். ஆயிரம் ஆண்டுகள் பழமையுள்ள சக்திவாய்ந்த இக்கோவில், மதுரையில் இருந்து 18 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
இங்குள்ள பத்ரகாளியம்மன் அக்கினியை கிரீடமாக கொண்டு காட்சியளிக்கிறாள். அதனால் அம்மனை குளிர்விக்க எலுமிச்சபழ மாலை அம்மனக்கு இந்த கோவிலில் சார்த்துவது வழக்கம்.வலக்கையில் பற்றிய திரிசூலம் கீழ்நோக்கியவாறு அநீதியை அழிப்பதாகவும், தலையில் சூடிய அக்கினி அழித்தவற்றை மீண்டும் எழவிடாமல் சாம்பலாக்குவதாகவும் உள்ளது. காளிக்கு பின்றம் 13 அடி உயர பெரிய குதிரை சிலை ஒன்று உள்ளது. குதிரை காளிக்கு நிழல் கொடுக்கும் விதமாக தன் பின்னங்கால்களை கீழே ஊன்றி முன்னங்கால்களை தூக்கி காளியின் இரு புறங்களில் உள்ள பூதகணங்களின் தோள்கள் மீது வைத்துள்ளன. அம்மனும் குதிரையும் திறந்தவெளியில் இருக்கிறார்கள்.
பிரளய காலத்தில் மதுரை முற்றிலும் அழிந்த போது மீனாட்சி அம்மன், சிவ பெருமானிடம் மதுரையின் எல்லையை வகுக்க கோரியபோது சிவபெருமான் தன் கழுத்திலுள்ள ஆதிசேடனை எடுத்து மதுரையை வளைத்தார். அப்பொழுது வடக்கே திருமாலிருஞ்சோலையும், தெற்கே திருபரங்குன்றமும் மேற்கே திருவேடகமும் மதுரையின் எல்லையாக வகுத்தார். கிழக்கில், மடப்புரத்தில் ஆதிசேடனின் தலையும் வாலையும் இணைத்து எல்லையை காட்டினார். ஆதிசேடனின் விஷ்த்தை உண்டு அம்மன் காளியாக இங்கு எழுந்தருளினாள்.
காசு வெட்டிப் போட்டு முறையிடும் வினோதமான பிரார்த்தனை
கொடுக்கல் வாங்கல் சிக்கல், சொத்து தகராறு, குடும்ப சண்டை போன்றவற்றில் நீதி கிடைக்காது ஏமாந்தவர்கள் குளித்துவிட்டு ஈரத்துணியுடன் வந்து நீதியின் தேவதையாக காளியை கருதி, அவள் முன்னால் காசு வெட்டிப்போட்டு காளியிடம் முறையிடும் பழக்கம் உள்ளது. மதுரை மண்டலத்தில் மடப்புரம் காளி என்ற வார்த்தை கேட்டாலே கொடூரம் செய்பவர்கள், அடுத்தவரை ஏமாற்றுபவர்கள் பயந்து நடுங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது. வழக்கு விசாரணைகள், கோர்ட் விவகாரங்கள் இவைகளுக்கு மடப்புரம் காளியம்மனை வணங்கினால் உடனே கைமேல் பலன் கிடைக்கும் என பக்தர்கள் நம்புகிறார்கள்.
பில்லி,சூனிய,ஏவலால் பாதிக்கப்பட்டவர்கள், குழந்தை வரம், திருமணம் நடைபெறாமல் தவிப்பவர்கள், மன நிம்மதி இல்லாதவர்கள், ராகு தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்து வேண்டி கொள்கின்றனர்.
ஆடி மாத வெள்ளி, செவ்வாய், ஞாயிறு கிழமைகளில், இத்தலத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்,