
பகவத் விநாயகர் கோயில்
நவக்கிரக விநாயகர்
கும்பகோணம் மடத்துத் தெருவில் உள்ள ஸ்ரீபகவத் விநாயகர் கோயிலில் நவக்கிரக விநாயகர் அருள்கிறார்.இவர் சூரியனை நெற்றியிலும்,சந்திரனை நாபிக் கமலத்திலும்,செவ்வாயை வலது தொடையிலும்,புதனை வலது கீழ்க் கையிலும்,வியாழனை சிரசிலும்,வெள்ளியை இடது கீழ்க் கையிலும்,சனியை வலது மேல் கையிலும்,ராகுவை இடது மேல் கையிலும்,கேதுவை இடது தொடையிலும் கொண்டு காட்சி தருகிறார்.இவரை வழிபட்டால் நவக்கிரக தோஷம் தீரும் என்பர்.
முந்தி விநாயகர் கோயில்
தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகப் பெரிய விநாயகர்
கோயம்புத்தூர் டவுனில் புலிக்குளம் பகுதியில் எழுந்தருளியுள்ள முந்தி விநாயகர்தான் தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய விநாயகர் ஆவார்.இவர் 10 அடி 10 அங்குலம் உயரத்துடனும்,11அடி10 அங்குலம் அகலத்துடனும்,8 அடி சுற்றளவுடனும்,190 டன் எடை உள்ளவராகவும் இருக்கிறார்.இவர் வலம் சுழித்த தனது தும்பிக்கையில் அமுத கலசம் ஏந்தி இருக்கிறார்
மாணிக்க விநாயகர் கோயில்
முப்பத்திரண்டு விநாயகர்கள் காட்சி தரும் கோவில்
திருச்சி மலைக்கோட்டை நுறைவாயிலுள்ள ஸ்ரீமாணிக்க விநாயகர் சந்நிதியை வலம் வரும்போது, விமான மண்டபத்தைச் சுற்றி ஒரு பக்கத்திற்கு எட்டு விநாயகர்கள் வீதம் நான்கு பக்கங்களில் முப்பத்திரண்டு விநாயகர்கள் சுதை வடிவில் காட்சி தருகிறார்கள்.
மணக்குள விநாயகர் கோயில்
விநாயகருக்கு என்று தனி பள்ளியறை உள்ள கோவில்
புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலில் வேறு எந்த விநாயகர் கோவிலிலும் இல்லாத வகையில்,விநாயகருக்கு என்று தனி பள்ளியறை உள்ளது. தினமும் நைவேத்தியம் முடித்தவுடன் விநாயகர் இந்த பள்ளியறைக்குச் செல்வார்.
செல்வ விநாயகர் கோயில்
ஓங்கார வடிவில் விநாயகர்
வேலூர் மாவட்டம் சேண்பாக்கம் என்ற தலத்தில் அமைந்துள்ளது செல்வ விநாயகர் திருக்கோவில் . இங்கு பதினோரு சுயம்பு பிள்ளையார்கள், ஓங்கார வடிவில் காட்சி தருகிறார்கள். அதனால் இத்திருக்கோயிலை ‘பிள்ளையார் சபை’ என்று போற்றுகிறார்கள். பதினாறு செல்வங்களில் மனிதனுக்கு மிகவும் தேவையான பதினோரு செல்வங்களை இந்த விநாயகர்கள் அள்ளித் தருகிறார்கள்
ஹேரம்ப விநாயகர் கோயில்
ஹேரம்ப விநாயகர்
திருத்தணி அருகில் உள்ள மின்னல் கிராமத்தில் இருக்கும் ஆலயத்தில் ஐந்து முகங்களோடு கருவறையில் சிம்ம வாகனத்தின் மீது அமர்ந்த நிலையில் பிரதான மூர்த்தியாக ‘ஹேரம்ப விநாயகர்’ அருளாட்சி புரிகிறார். இந்த சிம்ம வாகனத்தின் பார்வை பட்டால் விபத்துக்களிலிருந்து தப்பிக்கலாம் என்பது இங்குள்ளோரின் நம்பிக்கையாகும்.