லால்குடி சப்தரிஷீஸ்வரர் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

லால்குடி சப்தரிஷீஸ்வரர் கோவில்

நித்தியகல்யாணியாக மடிசார் புடவையுடன் காட்சி தரும் அம்பாள்

திருச்சியில் இருந்து 23 கி.மீ. தொலைவில் உள்ள தலம் லால்குடி. இறைவனின் திருநாமம் சப்தரிஷீஸ்வரர். ஏழு முனிவர்கள் வழிபட்டு பூஜைகள் செய்த திருத்தலம் என்பதால், இங்கே உள்ள ஈசனுக்கு சப்தரிஷீஸ்வரர் எனும் திருநாமம் அமைந்தது. இறைவியின் திருநாமம் பெருதிருப்பிராட்டியார், ஸ்ரீப்ரவிருத்தஸ்ரீமதி.

அம்பாள் மேற்கு நோக்கியவாறு மாலை மாற்றும் வடிவில் அருள்பாலிக்கிறாள். காதுகளில் ஸ்ரீசக்கர தாடங்கம்(காதணி) அணிந்திருக்கிறாள். எப்போதும், மடிசார் புடவையுடன், நித்திய கல்யாணியாக காட்சி தருகிறாள். இவள் லட்சுமிக்கே லட்சுமி கடாட்சம் தந்த அம்பாள்.

மகாலட்சுமி தாயார், இங்கு இந்தத் தலத்தில் கடும் தவம் புரிந்து மகாவிஷ்ணுவைத் திருமணம் செய்துகொண்டாள் என்கிறது தல புராணம். எனவே இந்தத் தலத்துக்கு வந்து, சப்தரிஷீஸ்வரரை தரிசனம் செய்து பிரார்த்தனை செய்துகொண்டால், விரைவில் திருமண பாக்கியம் கைகூடும் என்பது ஐதீகம்.

இங்கு, அம்பாள், சரஸ்வதி, மகாலட்சுமி தாயார், துர்கை முதலானோருக்கு புடவை சார்த்தி வேண்டிக்கொண்டால், தடைப்பட்ட திருமணம் விரைவில் நடந்தேறும். தாலி பாக்கியம் நிலைக்கும். குழந்தைகள் கல்வியில் சிறந்துவிளங்குவார்கள். கடன் முதலான தொல்லையில் இருந்து விரைவில் நிவாரணம் பெறலாம். இல்லத்தில் சகல ஐஸ்வரியங்களும் குடிகொள்ளும் என்கிறார்கள்.

Read More
அம்மன்குடி கைலாசநாதர் சுவாமி கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

அம்மன்குடி கைலாசநாதர் சுவாமி கோவில்

நூறு கண்கள் கொண்ட துர்க்காதேவி

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்திற்கு 15 கி.மீ. தொலைவில் உள்ள அம்மன்குடி கிராமத்தில் அமைந்துள்ளது பார்வதிதேவி உடனுறை கைலாசநாதர் சுவாமி கோவில். இத்தலம், முதலாம் ராஜராஜ சோழனின் படைத்தலைவரான கிருஷ்ணன் ராமன் பிரம்மராயன் வாழ்ந்த ஊர். பிரம்மராயன் கி.பி. 944-ல் இக்கோவிலை கட்டி ராஜராஜேஸ்வரம் என்று பெயர் சூட்டியதாக வரலாறு கூறுகிறது.

இத்தலத்தின் மகிமையை ஸ்கந்த புராணத்தில் சொல்லப்பட்டு உள்ளது. மகிஷாசுரனை வதம் செய்தபோது அவனுடைய ரத்தத்தால் பூசப்பட்ட தன்னுடைய திரிசூலத்தை துர்க்கா பரமேஸ்வரி அம்மன் இங்குள்ள புஷ்கரணியில் சுத்தம் செய்ததால், இத்தலத்து புஷ்கரணி பாப விமோசன தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. தன் பாவம் தீர்ந்த பூமியில் குடியிருக்க துர்க்காதேவி விரும்பினாள். அங்கேயே குடியிருந்ததால் இவ்வூருக்கு அம்மன்குடி என்ற பெயர் ஏற்பட்டது. இத்தலத்தில் சிவலிங்கம், விநாயகர் ஆகியோரை பிரதிஷ்டை செய்து அம்பாள் வழிபட்டாள்.

அம்பாளுக்கு முக்கியத்துவம் தரும் இடமாக இருந்தாலும் இக்கோவிலில் கைலாசநாதரே மூலவராக இருக்கிறார். கைலாசநாதரின் வலதுபாகத்தில் துர்க்கை காட்சி தருகிறாள். அம்பாள் துர்க்கா பரமேஸ்வரி என்ற பெயரில் எட்டு கைகளுடன் எட்டுவித ஆயுதங்கள் தாங்க சிம்ம வாகனம், மகிஷன் தலை ஆகியவற்றுடன் சாந்த முகத்துடன் காட்சி தருகிறாள். மகிஷாசுரமர்த்தினி என்றும் இவளை கூறுகிறார்கள். ஒரு சிவன் கோவிலில் துர்க்காதேவிக்கு கிழக்கு நோக்கிய சன்னதி அமைந்துள்ளது இத்தலத்தின் தனி சிறப்பாகும். நவக்கிரகங்களுக்கு அதிபதியாக துர்க்கை விளங்குவதால் இங்கு நவக்கிரகங்களுக்கு தனி சன்னதி கிடையாது.

இங்குள்ள துர்க்கைக்கு நூறு கண்கள் இருப்பதாக ஐதீகம். மழை இல்லாத காலங்களில் இந்த அம்பிகைக்கு பூஜை செய்தால் மழை பெய்யும் என்பது நம்பிக்கை.

நினைத்த காரியம் நிறைவேற, சகல சௌபாக்கியங்களும் கிட்ட துர்க்கைக்கு திரிசதி அர்ச்சனை

அம்மன்குடி துர்க்கா பரமேஸ்வரியை செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் சிவப்பு புஷ்பத்தால் திரிசதி அர்ச்சனை செய்து வழிபட்டால் நினைத்த காரியமும், சகல சௌபாக்கியங்களும் கிட்டும் என்பது உறுதி.

பிரார்த்தனை

துர்க்கையை கீழ்க்கண்ட தினங்களில் பூஜித்தால் சிறப்பாகும். செவ்வாய், அமாவாசை, அஷ்டமி, பவுர்ணமி, நவராத்திரி தினங்களில் கோயிலை வலம் வந்து வழிபடுபவர்களுக்கு திருமணத்தடை, ராகுகேது தோஷங்கள் நிவர்த்தியாகும். செல்வஅபிவிருத்திக்கு வெள்ளிக்கிழமை சுக்கிர ஓரை, குழந்தை பாக்கியம் கிடைக்க திங்கள்கிழமை, பிணி அகல, வழக்குகளில் வெற்றி பெற, பகை நீங்க, வேலைவாய்ப்பு கிடைக்க செவ்வாய்க்கிழமை ராகுகாலம், ஆயுள் பலம் பெற சனிக்கிழமைகளில் துர்கா பரமேஸ்வரியை வணங்கி வரலாம். திருமணமாகாத பெண்கள் இத்தலத்தில் வீற்றிருக்கும் அம்பாளை வணங்கினால் விரைவில் திருமண பாக்கியம் கிட்டும். சகல தோஷங்களும் நீங்கி மக்கட்பேறு உண்டாகும். சுவாச(காச) நோய்கள் நீங்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.

Read More
கொழுமம் மாரியம்மன் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

கொழுமம் மாரியம்மன் கோவில்

சிவலிங்க வடிவில் காட்சி தரும் மாரியம்மன்

பழனியில் இருந்து 20 கி.மீ துாரத்திலுள்ள கொழுமம் என்ற ஊரில் உள்ளது மாரியம்மன் கோவில். வணிகர்கள் குழுமியிருந்து வியாபாரம் செய்ததால் குழுமூர் என்று அழைக்கப்பட்டு வந்த இந்த இந்த ஊர், காலப்போக்கில் மருவி கொழுமம் என்று பெயர் பெற்றது.

அமராவதி ஆற்றின் கரையில் அமைந்துள்ள இக்கோவிலில், மாரியம்மன் கிழக்கு நோக்கி, சுயம்புத் திருமேனியுடன் வீற்றிருக்கிறாள். இந்த ஆலயத்தில் உள்ள மாரியம்மன், தரைக்கு மேல் இரண்டரை அடி உயரத்தில் லிங்க வடிவில் இருப்பது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். லிங்கத்தின் கீழ் ஆவுடையாரும் உள்ளது. இந்த மூலவரைப் பார்க்கும்போது, அம்மனுக்குரிய எந்தவித அம்சமும் தெரியாது. இருப்பினும் கூட இந்த லிங்கத்தை, அம்மனாக பாவித்து, புடவை அணிவித்து பூஜை செய்து வழிபட்டு வருகின்றனர். இந்த மாரியம்மன் உயரமான இடத்தில் கோட்டை போல இருந்து, இந்த ஊரை காப்பாற்றுவதால் கோட்டை மாரி என்றும் அழைக்கப்படுகிறாள்.

இக்கோவிலில் தரப்படும் தீர்த்தம், அம்மை நோய், கண் நோய் முதலிய நோய்களை தீர்க்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

Read More
மதுரை மீனாட்சி அம்மன் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

மதுரை மீனாட்சி அம்மன் கோவில்

தினமும் எட்டு விதமான அலங்காரங்களில் காட்சி தரும் மீனாட்சி அம்மன்

மதுரையின் அரசியாய் மீனாட்சியே ஆட்சி செய்கிறாள். முதலில், மீனாட்சி அம்மனுக்கு அபிஷேகம், பூஜைகள் செய்தபின்னரே சுந்தரேஸ்வரருக்கு செய்வது வழக்கம். பக்தர்களும் அம்பிகையை வணங்கிய பின்னரே இறைவனை வணங்கி வருகின்றனர்.

மதுரையில் மீனாட்சி அம்மன் தினமும் எட்டு விதமான சக்திகளாகப் பாவிக்கப்பட்டு ஆராதிக்கப்படுகிறாள். அதனால், அம்பிகை தினமும் எட்டு விதமான அலங்காரங்களில் காட்சி அளிக்கின்றாள். இது மற்ற கோவில்களில் இல்லாத ஒரு சிறப்பு.

அவை

1. திருவனந்தல் – பள்ளியறையில் – மஹா ஷோடசி

2. ப்ராத சந்தியில் – பாலா

3. 6 – 8 நாழிகை வரையில் – புவனேஸ்வரி

4. 12 – 15 நாழிகை வரையில் – கெளரி

5. மத்யானத்தில் – சியாமளா

6. சாயரக்ஷையில் – மாதங்கி

7. அர்த்த ஜாமத்தில் – பஞ்சதசி

8. பள்ளியறைக்குப் போகையில் – ஷோடசி

மீனாட்சி அம்மனுக்கு ஐந்து கால பூஜைகள் நடக்கும்போது, மேலே சொன்ன ரூபங்களுக்கு ஏற்றவாறுதான் அலங்காரங்கள் செய்விக்கப்படும். ஒரேநாளில் புவனேஸ்வரி, கௌரி, சியாமளா, மாதங்கி, பஞ்சதசி என அன்னையின் அத்தனை ரூபத்தினையும் தரிசிப்பவர்களுக்கு மறுபிறவி கிடையாது.

காலையில் சின்னஞ்சிறு சிறுமி போன்றும், உச்சிக்காலத்தில் மடிசார் புடவை கட்டியும், மாலை நேரத்தில் தங்க கவசமும், வைரக்கிரீடமும் அணிந்தும், இரவு அர்த்த ஜாமத்தில் வெண்பட்டு புடவை அணிந்தும் அன்னை காட்சி தருகிறாள். இது வேறு எந்த கோவிலிலும் இல்லாத சிறப்பாகும்.

குழந்தை வரம் வேண்டுவோர் அன்னை மீனாட்சியைக் காலை வேளையில் பாலசுந்தரியாகக் காட்சி கொடுக்கும் கோலத்தில் தரிசனம் செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் விரைவில் மழலைச் செல்வம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

கணவன் மனைவி ஒற்றுமைக்கு, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தினமும் நடைபெறும் பள்ளியறை பூஜையை தரிசித்தல் நல்ல பயனைக் கொடுக்கும்.

வியாபார நஷ்டம்,தொழில் மற்றும் வேலையில் பிரச்சனை உள்ளவர்கள் அன்னையின் வைர கிரீட அலங்காரத்தினை கண்டு தரிசித்தால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் பெறலாம்

Read More
விளமல் பதஞ்சலி மனோகரர் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

விளமல் பதஞ்சலி மனோகரர் கோவில்

குளிர்ச்சியான நெற்றிக்கண் உடைய அம்பிகை

திருவாரூர் - தஞ்சாவூர் சாலையில், திருவாரூரில் இருந்து 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவாரத்தலம் விளமல் இறைவனின் திருநாமம் பதஞ்சலி மனோகரர் . இறைவியின் திருநாமம் மதுரபாஷிணி. தமிழில் 'யாழினும் மென் மொழியம்மை' என்று புகழப்படுகிறார். தெற்குமுகம் பார்த்த சன்னதியில் நான்கு திருக்கரங்களுடன், மதுரபாஷிணி அம்மன் வீற்றிருக்கிறார். பங்கிம் சந்திர சாட்டர்ஜியால் எழுதப்பட்ட வந்தேமாதரம் தேசபக்திப்பாடலில் வரும் மதுரபாஷிநீம் என்ற வரிக்கு அடிப்படை, இந்த அம்பிகைதான்.

சிவபெருமானுக்கு வெப்பத்தை வெளிப்படுத்தும் நெற்றிக்கண் இருப்பதைப்போல், இத்தல அம்மன் மதுரபாஷிணிக்கு, சந்திரனைப் போல் குளிர்ச்சியான நெற்றிக்கண் இருக்கிறது.

இங்கு அம்பிகை ஸ்ரீசக்கரம் தாங்கி ஆதி அம்பிகையாகவும், மஞ்சுளாவாணியாகவும் இருந்து சகல சௌபாக்கியங்களையும் அருள்கிறாள்.இத்தல அம்பிகையை, மனிதனுக்கு தேவையான 34 சௌபாக்கியங்களையும் தரும் தேவியாக கண்டு, அகத்தியர் ஸ்ரீரதாரிணி, ராஜசிம்மாசனேஸ்வரி, ஸ்ரீலலிதாம்பிகையே என புகழ்ந்து போற்றியுள்ளார்.

பேச்சு குறைபாட்டை தீர்க்கும் அபிஷேகத் தேன்

மதுரபாஷிணி அம்மன், கல்விக்கு அரசியாக இருந்து அருளுவதால், சக்தி பீடங்களில் இத்தலம் வித்யா பீடமாகக் கருதப்படுகின்றது. அம்பிகைக்கு தேன் அபிஷேகம் செய்வது சிறப்புக்குரியதாகும். அபிஷேகத் தேனை குழந்தையின் நாவில் தடவி வேண்டிக்கொண்டு, பின்பு பள்ளிகளில் சேர்க்கும் நடைமுறை இங்கு உள்ளது. இதனால் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என்பது ஐதீகம்.

பேச்சுத்திறனில் குறைபாடு உள்ளவர்களும், நா குழறுபவர்களும், இங்குள்ள அக்னி தீர்த்தத்தில் நீராடி, அம்பிகையை உள்ளம் உருக வழிபட்டு, அபிஷேகத் தேனை தினமும் பக்தியுடன் சுவைத்தால் குறைகள் தீரும்.

திருமணத் தடை நீக்கும் ஸ்ரீவித்யா சக்தி பூஜை

இங்கு வெள்ளிக்கிழமைதோறும் ஸ்ரீவித்யா சக்தி பூஜை நடைபெறுகின்றது. வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் இந்த பூஜையை நடத்தினால், திருமணத் தடை நீங்கும். வியாபாரம் பெருகுவதுடன் கலை, கல்வி, ஞானம் சிறக்கும்

Read More
திருவாசி மாற்றுரைவரதீஸ்வரர் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

திருவாசி மாற்றுரைவரதீஸ்வரர் கோவில்

துவாரபாலகியர் மூலமாக பக்தர்களின் கோரிக்கையை ஏற்கும் அம்பிகை

திருச்சியிலிருந்து முசிறி செல்லும் சாலையில் 15 கி.மீ தூரத்தில் உள்ள தேவாரத்தலம் திருவாசி. இறைவன் திருநாமம் மாற்றுரைவரதீஸ்வரர். இறைவியின் திருநாமம் பாலாம்பிகை. கருவறையில் அம்பிகை பாலாம்பிகை தாமரை மலர் மீது நின்ற கோலத்தில் மேற்கு நோக்கி எழுந்தருளி இருக்கிறாள். அர்த்தஜாம பூஜையில் மட்டும் முதலில் அம்பாளுக்கு பூஜைகள் செய்யப்பட்டு அதன்பிறகு சுவாமிக்கு பூஜைகள் நடக்கிறது.

அம்பாள் சன்னதி முகப்பில் இரண்டு துவாரபாலகியர் உள்ளனர். பெண்கள், வித்தியாசமாக துவாரபாலகிகளுக்கு மஞ்சள் கயிறு, தொட்டில் கட்டி வழிபடுகின்றனர். திருமணமாகாத பெண்கள் நல்ல வரன் அமையவும், திருமணத்தடை உள்ளவர்கள் தடை நீங்கவும் இந்த துவாரபாலகியர்க்கு மஞ்சள் கயிறு கட்டி பிரார்த்திக்கின்றனர். குழந்தையில்லாத பெண்களும் இவர்கள் முன் தொட்டில் கட்டுகின்றனர். துவாரபாலகியர் மூலமாக பக்தர்களின் கோரிக்கைகளை அம்பாள் ஏற்றுக் கொள்வதாக ஐதீகம்.

பார்வதி தேவி அன்னம் வடிவெடுத்து சிவ பூஜை செய்த தலம் இது. அதனால் அம்மன் சன்னதிக்கு எதிரே உள்ள தீர்த்தம் அன்னமாம் பொய்கை என்று அழைக்கப்படுகிறது. திருமணமாகாதவர்கள் நல்ல வரன் வேண்டி தொடர்ந்து 5 வெள்ளிக்கிழமை அன்னமாம் பொய்கையில் நீராடி பாலாம்பிகைக்கு அர்ச்சனை, அபிஷேகம் செய்தால் திருமணம் விரைவில் நடக்கும் என்பதும் நம்பிக்கை.

குழந்தைகளின் பாலாரிஷ்டத்தை நீக்கும் பாலாம்பிகை

பால் குடிக்காமல் சதா அழுது கொண்டிருக்கும் பிள்ளைகளுக்கு 'பாலாரிஷ்டம்' என்ற தோஷம் உள்ளதாகச் சொல்வார்கள். காலை 7 மணியிலிருந்து 12 மணிக்குள், இங்குள்ள அம்பாளுக்குப் பால் அபிஷேகம் செய்து, அழும் குழந்தைகள் பெயரில் அர்ச்சனை செய்து, அந்த அபிஷேக தீர்த்தத்தை குழந்தைகள் மேல் தெளித்தால் பாலாரிஷ்டம் தீரும் என்பது நம்பிக்கை.

Read More
சுப்புலாபுரம் கால தேவி நேர கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

சுப்புலாபுரம் கால தேவி நேர கோவில்

இரவில் மட்டுமே திறந்திருக்கும் அதிசய அம்மன் கோவில்

மதுரையிலிருந்து ராஜபாளையம் செல்லும் சாலையில் அமைந்துள்ள எம்.சுப்புலாபுரம் என்ற ஊருக்கு அருகில் உள்ளது சிலார்பட்டி கிராமம். இக் கிராமத்தில் அமைந்துள்ளது கால தேவி நேர கோவில்.

பொதுவாக கோவில்கள் காலையிலிருந்து நண்பகல் வரையிலும் பின்னர் மாலையில் இருந்து முன்னிரவு வரைக்கும் திறந்திருக்கும். ஆனால் கால தேவி நேர கோவில், சூரிய அஸ்தமனத்தின் போது திறக்கப்பட்டு, சூரிய உதயம் ஆவதற்கு முன்னர் நடை சாத்தப்படுகின்ற வித்தியாசமான கோயிலாக உள்ளது. அதேபோல், கிரகண நேரத்தில்கூட, இக்கோவில் மூடப்படுவதில்லை என்பது ஒரு ஆச்சரியமான நடைமுறையாகும்.

இந்த கோவிலில் கால தேவிக்கு மட்டுமே சந்நிதி உள்ளது. மற்ற எந்த தெய்வத்திற்கும் சன்னதி கிடையாது. காலதேவி அம்மன் எண்கோண வடிவ கருவறையில், 12 ராசிகள், 27 நட்சத்திரங்கள், நவகிரகங்கள் என அனைத்தும் சூழ, காலசக்கரத்தைக் குறிக்கும் விதத்தில், வட்டவளையங்களின் நடுவில் நட்சத்திர நாயகியாக அபய, வரதஹஸ்த முத்திரைகளுடன் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறாள்.

கெட்ட நேரத்தை மாற்றும் கால தேவி அம்மன்

இந்த கால தேவி அம்மன், இங்கு வரும் பக்தர்களின் காலத்தில் உள்ள கெட்ட நேரங்களை நீக்கி அருள்புரிகிறார்.இக்கோவிலில் ஒரு அபூர்வமான கால சக்கரம் உள்ளது. இந்த கால சக்கரத்தில் அனைவரும் 11 நொடிகள் நிற்க வேண்டும் என்று கூறப்படுகிறது. அப்படி நிற்கும் நேரத்தில் நமது கால சக்கரமானது சுழன்று நமக்கு நல்ல நேரத்தை தரும் என்ற நம்பிக்கை இங்கு உள்ளது. அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் இந்த கோவிலில் மாலை ஆறு மணி முதல் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. எவர் ஒருவர் தன்னுடைய வாழ்வில் உள்ள கெட்ட நேரத்தை போக்க வேண்டும் என்று நினைத்தாலும், இந்த வழிபாட்டில் கலந்து கொண்டு, கால சக்கரத்தில் நின்று பிரார்த்தனை செய்தால், தங்களது வாழ்வில் உள்ள கெட்ட நேரத்தை நல்ல நேரமாக மாற்றிக்கொள்ளலாம் என்று பக்தர்கள் கூறுகின்றனர்.

Read More
கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர்  கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவில்

சிறுமி வடிவில் இருபது கைகளுடனும், சிரித்த முகத்துடனும் காட்சியளிக்கும் அபூர்வ துர்க்கை அம்மன்

இராஜராஜ சோழன் மகனான இராஜேந்திர சோழனால் உருவாக்கப்பட்டு 250 ஆண்டுகள் பிற்கால சோழ பேரரசின் தலைநகரமாக விளங்கிய தலம்தான் கங்கைகொண்ட சோழபுரம். இத்தலத்தில் அமைந்திருக்கிறது அவன் நிறுவிய பிரம்மாண்டமான பிரகதீஸ்வரர் கோவில். அரியலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள இக்கோவில், கும்பகோணத்திலிருந்து சுமார் 35 கி.மீ. தொலைவில் இருக்கின்றது.

இராஜேந்திர சோழன், தான் வெற்றி பெற்ற தேசங்களில் இருந்து கொண்டு வந்த பல அற்புத சிற்பங்களை இக்கோவிலில் நிறுவியுள்ளான். சாளுக்கிய தேசத்தை வென்றதின் நினைவுச் சின்னமாக கொண்டு வரப்பட்ட இருபது கைகள் கொண்ட துர்க்கை அம்மன், ஒரே கல்லிலான நவகிரக சிற்பங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை ஆகும்.

இந்த துர்க்கை அம்மன், சிரித்த முத்துடன் இருபது கரங்களில், பதினெட்டில் ஆயுதங்களை ஏந்தியபடி, மகிஷாசுரனை வதம் செய்யும் கோலத்தில், ஒன்பது வயது சிறுமியின் வடிவத்தில் காட்சி தந்து அருள்பாலிக்கின்றாள். துர்க்கை அம்மன் என்றாலே நம் எல்லோருக்கும் உக்கிரமான தோற்றம்தான் நினைவுக்கு வரும். ஆனால், இத்தலத்தில் துர்க்கை அம்மன், சிறுமி வடிவில் சிரித்த முகத்துடன் அருள்பாலிப்பதால் இவளை பக்தர்கள், 'மங்கள சண்டி' என்று அழைக்கின்றனர். சண்டி என்பதற்கு துர்க்கை எனப் பொருள். துர்க்கை அம்மனின் இந்த தோற்றத்தை நாம் வேறு எந்த கோவிலிலும் தரிசிக்க முடியாது.

துர்க்கை அம்மனுக்கு கோயிலின் இடது பக்கம் தனி சன்னதி உள்ளது. ராஜேந்திர சோழன் கோயிலுக்கு வந்தவுடன் முதலில் துர்க்கையை வழிபாடு செய்த பின் தான் சிவனை வணங்குவான். இதன் அடையாளமாக இன்றும் கூட ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில், முதலில் துர்க்கையை வழிபாடு செய்த பின்னர்தான் சிவனை தரிசிக்க செல்கின்றனர். பங்குனி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை நாளில் இத்தேவிக்கு, காவடி எடுத்து விழாக் கொண்டாடப்படுகிறது. திருமணபாக்கியம், குழந்தை பாக்கியம், பதவி உயர்வு, பணியிட மாற்றம் ஆகியவற்றுக்காக இவளை வணங்குகின்றனர்.அதேபோல, ஒற்றைக் கல்லாலான நவக்கிரக வடிவமைப்பும் சிறப்பானது. சூரியனை தாமரை வடிவில் சித்திரித்து, சுற்றிலும் மற்ற கிரகங்கள் எழுந்தருளியிருக்கும் வடிவ அமைப்பானது இந்தியாவில் வேறெங்கும் இல்லை. பீடம் தாமரை வடிவம். நடுவில் சூரியன். சூரியனுக்குரிய யந்திர வடிவில் 8 கிரகங்கள் சுற்றிலும் அமைக்கப்பட்டு, 7 குதிரைகள் பூட்டிய தேரில் மேற்கு நோக்கி சூரியன் அமர்ந்துள்ளார். தேரை அருணன் சாரதியாக இருந்து ஓட்டுகிறான். தேரிலுள்ள 10 கடையாணிகளும் கந்தர்வர்கள் எனக் கூறப்படுகிறது. நவக்கிரகங்கள் இந்த உலகை சுற்றி வருகின்றன. எனவே அதை யாரும் சுற்றக்கூடாது என்பதன் அடிப்படையில் இங்கு நவக்கிரகங்களை சுற்றமுடியாதபடி மண்டப அமைப்பு உள்ளது.

Read More
மயிலாப்பூர் கோலவிழி அம்மன் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

மயிலாப்பூர் கோலவிழி அம்மன் கோவில்

மயிலாப்பூர் தலத்தின் எல்லை காளி

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு வடகிழக்கே வெகு அருகாமையில் அமைந்துள்ளது, மயிலாப்பூரின் எல்லை காவல் தெய்வமாக விளங்கும் கோலவிழி அம்மன் கோவில். இக்கோவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானது.மயிலாப்பூர் தலத்தில், பார்வதிதேவி மயில் உருவம் எடுத்து தவம் இருந்தபோது அவளை அசுரர்களிடம் இருந்து பாதுகாப்பதற்காக சிவபெருமானால் அனுப்பி வைக்கப்பட்ட பத்ரகாளி இவள் என்பது குறிப்பிடத்தக்கது. 'பத்ர' என்பதற்கு மங்களம் என்றொரு பொருள் உண்டு. தன்னை நாடி வருவோருக்கு மங்களங்களை அள்ளித் தருபவளாகத் திகழ்வதால், இத்தல அம்மன் பத்ரகாளியாகவும் விளங்குகின்றாள்.

கருவறையில் வடக்கு திசை நோக்கி, கோலவிழி அம்மன் அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறாள்.இந்த அம்மனின் தனிச்சிறப்பே அவளின் கோலவிழிகள்தான். அவளின் கண்களைப் பார்த்தாலே நம்முள் பரவசம் ஏற்படும். இடது காலடியில் அசுரனின் தலையை அழுத்தி, வலது காலை மடக்கிய கோலத்தில் காட்சி தருகிறாள். வலது கரங்களில், சூலம், வாள், உடுக்கை, வேதாளம் ஏந்தியும், இடது கரங்களில் கேடயம், அங்குசம், மணி, கபாலம் ஏந்தியும் கோலவிழி அம்மன் காட்சி தருகின்றாள். சிரசில் உள்ள தீ ஜூவாலைகளில் பதினைந்து இதழ்கள், அதன் நடுவே சீறும் நாகம், திருமுடியின் இடதுபுறம் சந்திரன், கங்கை, வலது புறம் நாகம், காதணி அணிந்து, சிவசக்தி சொரூபமாக அம்மன் காட்சி தருகின்றாள். இவளது இயற்பெயர் பத்ரகாளி என்பதாகும். எனவே இந்த கோவிலை, பத்ரகாளி அம்மன் கோவில் என்றும் சொல்வார்கள்.

மயிலையின் காவல் தெய்வம்

கோல விழியம்மன் மயிலாப்பூர் தலத்தின் எல்லை காளியாக இருப்பவள். எனவே மயிலாப்பூரில் உள்ள எந்த ஆலயத்தில் விழா நடந்தாலும் கோல விழியம்மனுக்குத்தான் முதல் மரியாதை கொடுக்கப்படும். கபாலீஸ்வரர் ஆலயத்தில் எந்த ஒரு விழாவானாலும் இங்கு வந்து அன்னையிடம் உத்தரவு பெற்றே நடத்துகின்றனர். மயிலை கபாலீஸ்வரர் ஆலயத்தில் அறுபத்தி மூவர் நாயன்மார் விழா நடக்கும்போது அனைவருக்கும் முன்னதாக முதலில் செல்வது கிராம தேவதையான கோல விழியம்மன்தான்.

முக்கிய திருவிழாக்கள்

மாசியில் மூன்றாம் ஞாயிறன்று பால் குடப்பெருவிழா, சித்திராப் பவுர்ணமியில் பூச்சொரிதல் விழா, ஆடிப்பூர விழா, தீச்சட்டி ஏந்தும் விழா, புரட்டாசியில் நவராத்திரி விழா மற்றும் பத்தாம் நாள் சூரனை வதம் செய்யும் விழா, ஆகியவை இந்த ஆலயத்தில் நடைபெறும் குறிப்பிடத்தக்க விழாக்கள் ஆகும்.

பிரார்த்தனைகள்

27 நட்சத்திரக்காரர்களும் இங்கு பிரதட்சணம் செய்து வழிபட்டால் உரிய பலன் கிடைக்கும். . 9 வாரம் பிரதட்சணம் செய்தால் எடுத்த காரியத்தில் வெற்றி உண்டாகும். இதனால் இத்தலத்துக்கு இந்துக்கள் மட்டுமின்றி முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களும் வந்து வழிபட்டு செல்கிறார்கள். சந்திராஷ்டமம் நேரத்தில் ஏதாவது சொன்னாலோ, பேசினாலோ இடையூறு, பிரச்சினை ஏற்படும் என்று சொல்வார்கள். எனவே சந்திராஷ்டமம் உள்ள நாட்களில் உரியவர்கள் இந்த தலத்துக்கு வந்து வழிபட்டு சென்றால் சந்திராஷ்டமம் தாக்குதலால் எந்த பிரச்சினையும் வராது என்கிறார்கள்.

இந்த அன்னை குழந்தைகளுக்கு ஏற்படும் பாலாரிஷ்ட தோஷம் நீக்கும் அற்புத அன்னையாக விளங்குகிறாள். நாக தோசத்தால் பாதிக்கப் பட்டவர்கள், ராகு தசை நடப்பவர்களுக்கு இது பரிகாரத்தலமாக உள்ளது. இந்த அம்மனுக்கு பச்சரிசி மாவில் விதவிதமான நிறங்களைக் கலந்து மாவுக்காப்பு சாற்றினால் தீராக்கடன்கள் தீர்ந்து விடுவதாக ஐதீகம். இதைத்தவிர மஞ்சள் காப்பு, சந்தனக்காப்பு, குங்குமக் காப்பு, முத்தங்கி என விதம்விதமான அலங்காரங்களும் செய்கிறார்கள்.

Read More
திருக்கலிகாமூர் சுந்தரேஸ்வரர் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

திருக்கலிகாமூர் சுந்தரேஸ்வரர் கோவில்

மாசி பௌர்ணமியன்று தீர்த்த நீராடும் அம்பிகை

சீர்காழியிலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத்தலம் திருக்கலிகாமூர். இத்தலத்தின் தற்போதைய பெயர் அன்னப்பன்பேட்டை.. இறைவனின் திருநாமம் சுந்தரேஸ்வரர். இறைவியின் திருநாமம் சுந்தராம்பாள்.

கடற்கரை, நதிக்கரைகளில் உள்ள சிவன் கோயில்களில் மாசி பௌர்ணமியின்போது சிவன், தீர்த்தக்கரைக்கு எழுந்தருளி தீர்த்த நீராடுவார். ஆனால், இத்தலத்தில் மாசி பௌர்ணமியன்று நடக்கும் தீர்த்தவாரியின் போது அம்பாள் மட்டும் கடற்கரைக்கு எழுந்தருளி தீர்த்த நீராடுகிறாள். இதற்கு பின்னணியில் ஒரு காரணம் இருக்கின்றது. முற்காலத்தில் இக்கோவிலில் சிவன் சன்னதி மட்டுமே இருந்தது. ஒருசமயம் கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த மீனவர் ஒருவரின் வலையில் இந்த அம்பிகையின் சிலை கிடைத்தது. சிலையை அவர் எடுத்தவுடனேயே, அவருக்கு வயிற்று வலி வந்துவிட்டது. சிலையை தூக்கி வந்த அவர், இத்தலம் அருகில் வந்தபோது வயிற்றுவலி நின்றுவிட்டது. அதன்பின்பு இவ்விடத்தில் சிவலிங்கம் இருந்ததைக் கண்ட அவர், அம்பிகையையும் இங்கேயே பிரதிஷ்டை செய்தார். இந்த அம்பிகை கடலில் கிடைக்கப்பெற்றவள் என்பதால், வருடத்தில் ஒருமுறை மாசி பௌர்ணமியன்று ,அவளது பிறப்பிடமான கடலுக்கு கொண்டு சென்று தீர்த்த நீராட்டி வருகிறார்கள்.

Read More
சித்தாத்தூர் மாரியம்மன் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

சித்தாத்தூர் மாரியம்மன் கோவில்

சிரசு வடிவில் மூன்று அம்மன்கள் எழுந்தருளியிருக்கும் தலம்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் இருந்து 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது சித்தாத்தூர் மாரியம்மன் கோவில். ஊருக்கு வெளியே வயல்வெளிகளின் நடுவில் இந்தக் கோவில் அமைந்திருக்கிறது. கருவறையில், மாரியம்மன் சுதை வடிவில் அமர்ந்து இருக்கின்றாள். அவளுக்கு கீழே சிரசு வடிவில் மூன்று அம்மன்கள் வீற்றிருக்கின்றார்கள். இவற்றில் வலப்புறம் இருப்பவள் வயல்வெளியில் கிடைத்த அம்மனாகும். பார்வதிதேவியின் சொரூபமாக அருள்பாலிக்கும் இந்த மாரியம்மன் கோவிலில், சித்தர்கள் பலர் இன்றும் இரவில் வந்து அம்மனை வழிபடுவதாக பக்தர்கள் நம்புகின்றனர். இந்த அம்மனுக்கு எட்டியம்மன் என்ற பெயரும் உண்டு.

தல வரலாறு

திருவண்ணாமலை மாவட்டம் அம்மன் கோவில்களில், படவேடு ரேணுகாம்பாள் மிகவும் பிரசித்தி பெற்றவள். அந்த அம்மனின் அம்சமாக சித்தாத்தூர் மாரியம்மன் கருதப்படுகின்றாள். சித்தர்களின் பூமியாக கருதப்படும் இந்த சித்தாத்தூரில், ஒரு சமயம் அன்னை ரேணுகா தேவி கோயில் கொள்ள வேண்டும் என்கிற ஆவலில் இங்கே நாகமாக உலவித் திரிந்தாள். ஒரு நாள் நாகமாக சுற்றி வந்த அம்பிகையின் நாவில் முள் தைத்துவிட்டது. அப்போது வாழைப்பந்தல் என்னும் ஊரைச் சேர்ந்த ஒரு பெரியவர் பனை மரத்தடியில் தன் மாட்டை கட்டி விட்டு ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். அவர் அருகில் வந்த நாகம்,'நானே அன்னை ரேணுகாதேவி. நாக வடிவில் வந்து இருக்கின்றேன். என் நாவில் முள் தைத்துவிட்டது. அதை எடுத்து விடுவாயா?'என்று கேட்க, உடனே அந்தப் பெரியவர் எந்தத் தயக்கமோ, பயமோ இல்லாமல் அந்த நாகத்தின் நாவில் இருந்த முள்ளை எடுத்துவிட்டார். படமெடுத்து ஆடிய அந்த நாகம், அவருடைய வம்சத்தையே தான் காத்தருள்வதாக வாக்களித்துவிட்டு மறைந்தது. பின்னர் அந்தப் பெரியவர் குடும்பத்தோடு இங்கே வந்து வாழ ஆரம்பித்தார். நாக உருவில் முதலில் இங்கே வாழ்ந்த அன்னை ரேணுகா தேவி, பல காலத்துக்கு முன்பே கற்சிலையாக மண்ணுள் புதையுண்டு கிடந்தாள். வயலில் ஏர் உழும்போது ஏர் கலப்பையில் தட்டுப்பட்டு, வெளியே கொண்டுவரப்பட்டாள். பெங்களூரில் வசிக்கும் அந்தப் பெரியவரின் வம்சாவளியினர் இன்றும் இங்கு வரும்போது அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபட்டு, குறைவின்றி வாழ்கின்றனர்.

பக்தர்கள் கனவில் பாம்பாகத் தோன்றும் மாரியம்மன்

இந்த அன்னை பக்தர்கள் கனவில் தோன்றி பொங்கல் வழிபாடு செய்யும்படி அறிவுறுத்துவாளாம். அதை மறந்து விட்டால் பாம்பாகத் தோன்றி நினைவு படுத்துவாளாம். உடனே அவர்கள் சித்தாத்தூர் வந்து, அன்னையை வணங்கி, பொங்கல் வைத்து வழிபடுவார்களாம். இது இன்றும் நடைமுறையில் நடக்கின்றது. தமிழகமெங்கும் பலருக்கும் குலதெய்வமாக இந்த அன்னை திகழ்கின்றாள். இந்த அம்மனின் அருள் செயலால் தங்கள் வாழ்வில் அற்புதங்களையும், திருப்பங்களையும் சந்தித்த பக்தர்கள் ஏராளம்.

பௌர்ணமிதோறும் இங்கு அம்மனுக்கு சிறப்பு யாகங்கள் நடத்தி அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்படுகின்றன. இந்த அம்மனுக்கு ஆடி வெள்ளிக்கிழமைகளில் மிகவும் விமரிசையாக திருவிழா எடுக்கின்றனர்.

Read More
சோட்டானிக்கரை பகவதி அம்மன்  கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

சோட்டானிக்கரை பகவதி அம்மன் கோவில்

முப்பெரும் தேவியராக காட்சி தரும் பகவதி அம்மன்

கேரள ‎மாநிலம், எர்ணாகுளம் என்ற இடத்திலிருந்து ‎ 16 கி.மீ.தொலைவில் இருக்கிறது புகழ்பெற்ற சோட்டானிக்கரை பகவதி அம்மன் கோவில். பகவதி அம்மனின் வலது புறம் உள்ள மகாவிஷ்ணுவை, 'அம்பே நாராயணா..தேவி நாராயணா..லஷ்மி நாராயாணா..பத்ரி நாராயணா' என அழைத்து வழிபடுவது இந்த கோவிலின் சிறப்பாகும்.

சோட்டானிக்கரை பகவதி அம்மன் ஒரு நாளுக்கு மூன்று விதமான ஆடைகள் அணிந்து மூன்று வடிவங்களில் காட்சி தருகிறாள். காலையில் வெண்ணிற ஆடையுடன் சரஸ்வதி தேவியாகவும்; உச்சி வேளையில் செந்நிற ஆடையுடன் துர்க்கா தேவியாகவும், மாலையில் நீல நிற ஆடையில் லட்சுமி தேவியாகவும் காட்சி தருகிறாள். இந்த மூவகை தரிசனத்தைக் காண்பவர்கள் நினைத்தது நிறைவேறும்.

இந்த ஆலயத்தில் அம்பாள் ‘பந்தீரடி’ எனப்படும் காலை பூஜையின் போது மிகுந்த சக்தியுடன் திகழ்கிறாள். இந்தப் பூஜை முடிந்தே, பகவதி அம்மன் மூகாம்பிகையாகக் கொல்லூர் செல்வதாக ஐதீகம். அதனாலேயே மூகாம்பிகை கோவில் நடை திறக்கும் முன்னரே, பகவதி அம்மன் கோவிலின் நடை திறக்கப்பட்டுவிடும். முதலில் பகவதி அம்மன் கோவிலுக்கு வந்திருக்கும் பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் அம்மன், பின்னர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வதாக ஐதீகம். இந்த காலை பூஜையின் போதே கெட்ட ஆவிகள் பிடித்தவர்கள், மனநோய் பிடித்தவர்கள் அன்னையின் அருளால் குணமடைகிறார்கள். இந்த ஆலயத்தில் நெய் பாயாசம் நைவேத்தியம் பெருமை பெற்றது.

திருமண வாழ்க்கை சிறப்பாக அமைய, நல்ல கணவர் கிடைக்க, குழந்தை வரம் கிடைக்க பகவதி அம்மனை தேடி பல பக்தர்கள் குறிப்பாக பெண்கள் அதிகம் இந்த கோவிலுக்கு வருகின்றனர்.

மாசி மாதத்தில் நடைபெறும் ஆராட்டுவிழாவும், நவராத்திரி விழாவும் இங்கு விசேஷமாகக் கொண்டாடப்படுகின்றன.

Read More
மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி கோவில்

மாசி அமாவாசை மயானக் கொள்ளை

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் இருந்து வடக்கு திசையில் 20 கி.மீ.தூரத்தில் அமைந்துள்ளது மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி கோவில். அங்காள பரமேஸ்வரிக்கு பல ஆலயங்கள் உள்ளன என்றாலும், அவளுக்கு மேல்மலையனூர் ஆலயமே முக்கியமான ஆலயம். இக்கோவிலில் மாசி மாத அமாவாசையன்று நடைபெறும் மயானக் கொள்ளை பிரசித்தி பெற்றது. மயானக் கொள்ளை விழா நடக்கும்போது, பக்தர்கள் அங்கு பலதரப்பட்ட தானியங்களைக் கொண்டு வந்து உணவு சமைத்து அதை அங்காள பரமேஸ்வரிக்கு அர்பணிக்கின்றார்கள். அங்கு மயானத்தில் அவளை ஆராதிக்கின்றார்கள்.

மயானக் கொள்ளை விழா உருவான பின்னணி வரலாறு

பிரம்மன் தனக்கு ஐந்து தலை உள்ளது என்ற காரணத்தால் அகந்தை கொண்டான். எனவே பிரம்மனின் ஒரு தலையை காலபைரவர் மூலம் கொய்து வரச் சொன்னார் சிவபெருமான். ஆனால் ஒரு தலையைக் கிள்ளியவுடன் மற்றொரு தலை அங்கே தோன்றியது. சிவபெருமானே தலையைக் கொய்யச் சென்றார். ஆனால், ஒவ்வொன்றாகக் கிள்ள, அது முளைத்துக்கொண்டே இருந்தது. விஷ்ணுவின் ஆலோசனைப்படி 1000வது தலையைக் கிள்ளியவுடன் கீழே போடாமல் வைத்துக்கொண்டார். ஆனால் நெடுநேரமாகியும் கீழே போடாததால் அந்த பிரம்மனின் கபாலம் கையிலேயே ஒட்டிக்கொண்டது. சரஸ்வதி தேவியின் சாபத்தால் சிவன் பிச்சாடண வடிவம் கொண்டு அலைந்தார். ஊர் ஊராகப் பித்தனைப் போல் பிச்சை எடுத்துத் திரியலானார். ஆனால் அவ்வாறு எடுக்கும் பிச்சையையும் பிரம்ம கபாலம் விழுங்கிவிடும்.

பிரம்மாவின் ஒரு தலையைக் கொய்வதற்குக் காரணமாக இருந்த பரமேஸ்வரியை "நீ கந்தலாடையுடன் ராட்சஸ உருவுடன் அலைவாய்' என சாபமிட்டாள் சரஸ்வதி. அதன்படி பரமேஸ்வரி,பல இடங்களில் அலைந்து திரிந்து, இறுதியில் மேல்மலையனூரில், மயான பூமியிலே ஒரு புற்றினுள்ளே பாம்புருவில் வாழ்ந்து வந்தாள்.வந்து அமர்ந்தாள் . மகாவிஷ்ணுவின் ஆலோசனைப்படி, உமையவள் புற்றிலிருந்து வெளியேறி பெண்ணுறு கொண்டு சிவபெருமானுக்கு உணவு சமைத்தாள். பிச்சை எடுக்க ஈசன் வந்ததும் அன்னபூரணியான அன்னை அவள் சமைத்த உணவை மூன்று கவளங்கலாக்கி கபாலத்தில் இடத் துவங்கினாள். முதல் கவளம் இட்டதும் கபாலம் உண்டது. இரண்டாவது கவளம் இட்டதும் கபாலமே உண்டது. உணவின் ருசியில் மயங்கியது. மூன்றாவது கவளத்தை அன்னை கபாலத்தில் இடாமல் சூறையாக வீசினாள். அதை உண்ண கபாலம் கீழே இறங்கியது. ஆவேச வடிவம் கொண்டு அன்னை கீழே இறங்கிய கபாலத்தை காலில் மிதுத்து சுக்கு நூறாக்கினாள். அப்போதே சிவனைப் பிடித்திருந்த பிரும்மஹத்தி தோஷம் நீங்கியது.

ஈஸ்வரி மூன்றாம் கவளத்தை இறைத்து பிரும்ம கபாலத்தை பூமிக்குள் அழுத்திய நாள் மாசி அமாவாசை. அந்நாளே மயானக் கொள்ளையாகக் கொண்டாடப்படுகிறது. மாசி மாத சிவ ராத்திரிக்கு மறுநாள் அமாவாசை தினத்தன்று அங்காளி தனது முழு பூரண பலத்தோடும் வலுவோடும் இருப்பாள். அனைத்துக்கும் மூலாதார சக்தியாக விளங்கும் அங்காளி அன்று சுடுகாட்டில் ஆவிகள், ஆன்மாக்கள் அனைத்துக்கும் உணவை சூரை இடும் நாளே 'மயானக் கொள்ளை'. அவ்வாறு சூரையிட்ட அங்காளியை, விஷ்ணு பூமிக்குள் தள்ளிவிட்டதாகவும், பின்னர் பூமிக்கு மேல் சுயம்புவாக புற்று உருவாக அங்காளி தோன்றினாள் எனவும், மீண்டும் சிவனின் அங்கத்தில் ஆட்கொண்ட பரமேஸ்வரியை அங்காளம்மன் என அழைத்ததாகவும் வரலாறு. அம்பிகையும் ஆவேசம் தனிந்து நான்கு திருக்கரத்துடன் சூலம், கத்தி, உடுக்கை, கபாலத்துடன் எழுந்து அமர்ந்தாள்.அங்கேயே அங்காள பரமேஸ்வரி என்ற திருநாமம் கொண்டு காட்சி கொடுத்தாள். அதுவே மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி திருக்கோயில் ஆகும்.

ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் அமாவாசையன்று அனைத்து அங்காளம்மன் கோயிலிலும் மயான கொள்ளையானது நடைபெறுகிறது. அம்பிகை பிரம்ம கபாலத்திற்காக சூரையிட்ட மாசி அமாவாசையன்று மயானத்தில் இன்றும் சூரையிடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.அன்னை அனைத்து பேய், பிசாசுகளுக்கும் அன்று உணவை சூரையிடுகிறாள் என்பது ஐதீகம். அதை உண்டு அவற்றால் தன் மக்களுக்கு எவ்வித தீங்கும் வரக்கூடாது என்பதற்காக சூரை இடப்படுகிறது.

பிரார்த்தனை

கணவனை பிரிந்திருப்பவர்கள் மற்றும் கணவனின் தொந்தரவுக்கு ஆளாகி இருப்பவர்கள் இங்கு வந்து அங்காளபரமேஸ்வரியை வழிபட்டால் பிரச்னை தீரும் என்பது நம்பிக்கை.

Read More
வளையாத்தூர் வளவநாதீஸ்வரர் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

வளையாத்தூர் வளவநாதீஸ்வரர் கோவில்

சிவபெருமானை போல் நெற்றிக்கண் உடைய அம்பாள்

வேலூர்- சென்னை நெடுஞ்சாலையில் , 24 கி.மீ., தூரத்திலுள்ள ஆற்காடு சென்று, அங்கிருந்து பிரியும் சாலையில் 17 கி.மீ., தொலைவில் உள்ளது வளையாத்தூர். இறைவன் திருநாமம் வளவநாதீஸ்வரர். இறைவியின் திருநாமம் பெரியநாயகி. இறைவன், மக்களின் பிரார்த்தனைகளுக்கேற்ப வளைந்து கொடுத்து அருள் செய்பவர் என்பதால்,, அவருக்கு இப்பெயர் ஏற்பட்டது. முற்காலத்தில் இப்பகுதியில்,விவசாயம் செழித்து மக்கள் வளத்துடன் வாழ்ந்ததால் அவருக்கு 'வளவநாதீஸ்வரர்' என்ற பெயர் ஏற்பட்டதாகவும் கூறுவர்.

கோவிலில் நுழைந்ததும் நாம், நின்ற நிலையில், நான்கு கைகளுடன் எழுந்தருளியிருக்கும் பெரியநாயகி அம்பாளை, தரிசிக்கலாம். இந்த அம்பாளின் நெற்றியில் சிவனுக்கு உள்ளதுபோல் நெற்றிக்கண் உள்ளது.சிவபெருமான் சூரியன், சந்திரன், அக்னி என மூவரையும் கண்களாகக் கொண்டவர். சிவனின் சக்தி வடிவமே அம்பிகை என்பதால், அவளும் முக்கண் உடையவள் ஆகிறாள். இதை உணர்த்தும் விதமாக அம்பிகை, இக்கோயிலில் நெற்றிக்கண்ணுடன் காட்சியளிக்கிறாள். சிவராத்திரியன்று இரவில் இவளுக்கு பூஜையும் உண்டு. இவளது நான்கு கைகளிலுள்ள சுண்டு விரல்களிலும் மோதிரம் அணிந்திருப்பது மேலும் ஒரு தனிச்சிறப்பாகும். இந்த அம்பாள் மாங்கல்ய வரபிரசாதியாகத் திகழ்கின்றாள். இந்த அம்பாளை வேண்டிக்கொண்டால் திருமணம் கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

அம்பாளுக்கு சிவராத்திரியன்று சிறப்பு பூஜை

பெரியநாயகி அம்பாள் நெற்றிக்கண்ணுடன் இருப்பதால், இவளை சிவபெருமானாகவே கருதி, சிவராத்திரியன்று இரவில் பூஜை செய்கிறார்கள். இது வேறு எந்த தலத்திலும் பின்பற்றாத நடைமுறையாகும்.

கிரக தோஷ நிவர்த்தி தலம்

வளவநாதீஸ்வரர் சதுர வடிவ பீடத்தில், இடப்புறமாக சற்றே வளைந்த நிலையில், நவாம்ச மூர்த்தியாகக் காட்சி தருவதாக ஐதீகம். இந்த ஒன்பது நிலைகளும் நவக்கிரகங்களைக் குறிப்பதாகவும் சொல்வர். இதனால், எந்த கிரகத்தால் ஏற்பட்ட தோஷத்தாலும் பாதிக்கப்பட்டவர்கள், தோஷ நிவர்த்திக்காக இங்கு வேண்டிக் கொள்கிறார்கள்.

இத்தலத்தில் முருகன் கையில் சிவனுக்குரிய சின்முத்திரை காட்டியபடி இருப்பது விசேஷமான அமைப்பு. மேலும், இங்குள்ள சப்தகன்னியரின் பீடத்தில் அவர்களுக்குரிய வாகனங்கள் வடிக்கப்பட்டுள்ளதுமேலும் ஒரு தனிச் சிறப்பாகும்.

Read More
பெரியபாளையம்  பவானி அம்மன் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

பெரியபாளையம் பவானி அம்மன் கோவில்

மாங்கல்ய பலம் அருளும் பவானி அம்மன்

சென்னையில் இருந்து செங்குன்றம், ஊத்துக்கோட்டை வழியாக திருப்பதி செல்லும் நெடுஞ்சாலையில், சென்னையிலிருந்து இருந்து சுமார் 45 கி. மீ. தொலைவில் பெரியபாளையம் உள்ளது. பெரியபாளையம் என்றால் பெரிய படை வீடு என்று பொருள். பழமை வாய்ந்த இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் அம்மன் சக்தி வாய்ந்தவராக திகழ்கிறார்.மூலஸ்தானத்தில், பவானி அம்மன், மேலிரண்டு கைகளில் சங்கு, சக்கரங்கள் தரித்தும், கீழிரண்டு கைகளில் வாள் மற்றும் அமிர்த கலசத்துடனும் காட்சியளிக்கிறார். இக்கோவிலில் குங்குமம் மற்றும் தீர்த்தம் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இது மனித உடலில் பல நோய்களை குணப்படுத்தக்கூடியது.

பவானி அம்மனை கிருஷ்ண பரமாத்மாவின் தங்கையாக பாவிக்கிறார்கள். துவாபர யுகத்தில், குழந்தை வடிவிலிருந்த அம்மன், தன்னை கொல்ல முயன்ற கம்சனின் (அசுரக்குல அரசன்) கோரப்பிடியிலிருந்து தப்பிக்கும் போது, அவனுக்கு தனது தமையனான கிருஷ்ண பரமாத்மாவால் ஏற்படப் போகும் துர்மரணம் பற்றி முன் கூட்டியே எச்சரித்தப் பிறகு, ஸ்ரீபவானி என்ற பெயரில், இத்தலத்தில் குடியேற முடிவு செய்தார்.

ஆலய வரலாறு

முற்காலத்தில் ஆந்திரப்பகுதியில் இருந்த வளையல் வியாபாரிகள் பலரும் இங்கு வந்து வியாபாரம் செய்து வந்தனர். ஒரு முறை வளையல் வியாபாரி ஒருவர் தன்னுடைய வியாபாரத்தை முடித்துக் கொண்டு ஆந்திராவுக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.

இரவு வெகு நேரம் ஆகிவிட்டதால், பெரியபாளையத்தில் ஒரு வேப்பமரத்தடியில் அவர் ஓய்வெடுத்தார். அதிகாலையில் எழுந்து பார்த்தபோது, அவருடைய வளையல் மூட்டையைக் காணவில்லை. சுற்றும் முற்றும் தேடியபோது ஒரு புற்றுக்குள் வளையல் மூட்டை கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் பயத்துடன் ஊருக்குத் திரும்பினார். அன்று இரவு வளையல் வியாபாரியின் கனவில் தோன்றிய அம்மன், 'நான் ரேணுகாதேவி. பெரியபாளையத்தில் பவானி அம்மனாக அமர்ந்திருக்கிறேன். அங்குள்ள புற்றில் நான் சுயம்புவாக இருக்கிறேன். எனக்கு கோவில் அமைத்து வழிபட்டு வா' என்று கூறி மறைந்தார்.

மறுநாள் பெரியபாளையம் வந்த வளையல் வியாபாரி, கடப்பாரையால் புற்றை உடைத்தார். அப்போது சுயம்பு அம்மனின் மீது கடப்பாரை பட்டு ரத்தம் பீறிட்டது. இதனைக் கண்டு பயந்த வளையல் வியாபாரி, தன்னிடம் இருந்த மஞ்சளை எடுத்து ரத்தம் வந்த இடத்தில் வைத்து தேய்த்தார். உடனே ரத்தம் நின்று போனது. இதையடுத்து புற்றை முழுமையாக நீக்கி விட்டு, அம்மனுக்கு அலங்காரம் செய்து தினமும் வழிபட்டு வந்தார். பிற்காலத்தில் அம்மனுக்கு கோவில் அமைக்கப்பட்டது. சுயம்புவாக உள்ள அம்மனுக்கு வெள்ளிக் கவசம் அணிவிக்கப்பட்டிருக்கும். கவசத்தை நீக்கும் போது, சுயம்பு அம்மனின் மீது கடப்பாரை பட்ட தழும்பு இருப்பதைக் காண முடியும்.

பிரார்த்தனை

வார இறுதி நாட்கள், ஆடி மற்றும் ஆவணி மாதங்களில், பக்தர்கள் ஆயிரக்கணக்கில் அம்மனை தரிசிக்க வருகிறார்கள். உடல் நலம் பெறவும், நீண்ட ஆயுளை ஆரோக்கியத்துடன் அடையவும், பெரிய பாளையத்து அம்மனை நினைத்தப்படி வருபவர்கள் அதிகம். இத்தல அன்னையிடம் மாங்கல்ய பலம் வேண்டி வரும் பெண்களின் எண்ணிக்கை அதிகமானது. பெண்கள், கணவன் நோய்வாய்பட்டிருந்தால், தங்கள் மாங்கல்யம் நிலைத்து நிற்க அம்மனை வேண்டி கொள்கிறார்கள். பக்தர்கள் மொட்டை அடித்தும், அங்கப்பிரதட்சணம் செய்தும், வேப்பிலையை ஆடையாக அணிந்தும், பொங்கல் படைத்தும் மற்றும் கரகம் எடுத்தும் என பல வழிகளில் அம்மனுக்கு தங்கள் நேர்த்திக் கடனைச் செலுத்துகிறார்கள்.

Read More
மயிலாப்பூர் முண்டகக்கண்ணி அம்மன் கோயில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

மயிலாப்பூர் முண்டகக்கண்ணி அம்மன் கோயில்

குடிசையில் வீற்றிருந்து சகல வளங்களையும் அள்ளித்தரும் அம்மன்

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு வடக்கே, அரை கிலோ மீட்டர் தொலைவில், மிகவும் தொன்மை வாய்ந்த முண்டகக்கண்ணி அம்மன் கோவில் உள்ளது. ஒவ்வொரு நாளும் ஏராளமான பக்தர்கள் வழிபடும் மகிமை வாய்ந்த புண்ணிய திருத்தலம் இதுவாகும். அனைத்து செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் கோயில், திருவிழாக் கோலம் பூண்டு விடும்.

சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பு இப்போது முண்டகக்கண்ணி அம்மன் ஆலயம் இருக்கும் இடத்தில் ஒரு குளம் இருந்துள்ளது. அந்த குளக்கரையில் பல நூறு ஆண்டு வயதுடைய மிகப் பெரிய ஆலமரம் இருந்தது. ஒரு நாள் அந்த ஆலமரத்தடியில் அப்பகுதி மக்கள் அமர்ந்து இருந்தபோது, அம்மன் தன்னை சுயம்புவாக வெளிப்படுத்தி காட்சி தந்தாள் என்கிறது இத்தலத்தின் வரலாறு. மேலும் தாமரை மொட்டு வடிவத்திலேயே, தன்னை அம்மன் சுயம்புவாக வெளிப்படுத்திக் கொண்டதாக இக்கோவில் புராணம் கூறுகிறது. முண்டகம் என்றால் தாமரை என்றும் பொருள் உண்டு. அம்மன் விரிந்த பெரிய விழிகளைக் கொண்டவள் என்ற பொருளில் 'முண்டகக் கண்ணியம்மன்' என்கின்றனர். அம்பிகை, தாமரை போன்ற கண்ணுடையாள் என்றும் கொண்டாடுகின்றனர்.

முண்டகக்கண்ணி அம்மன். வேறு எந்த தலத்திலும் இல்லாதபடி,எளிமைக்கு இலக்கணமாக ஓலைக் குடிசையில் எழுந்தருளியிருக்கிறாள். இக்கோவிலுக்கு ராஜகோபுரம் இருந்தாலும், அன்னை வீற்றிருக்கும் கருவறையை அலங்கரிப்பதோ எளிமையான தென்னங்கீற்றால் வேயப்பட்ட கொட்டகைதான். தங்களுக்கு கேட்ட வரம் கொடுத்து அருள் பாலிக்கும் அன்னைக்கு, கருவறை கட்டிடம் கட்ட அவளின் பக்தர்கள் முயன்றபோது, அதில் பல்வேறு தடைகள் ஏற்பட்டதாகவும், தனக்கு தென்னங்கீற்றால் அமைந்த கூரை மட்டுமே விருப்பம் என பக்தர்களின் கனவில் அம்பாள் சொன்னதாகவும் கூறப்படுகிறது. மேலும் தல வரலாறும் தனது மக்களை வெம்மையில் இருந்து காக்கவே, அன்னை இவ்வாறு குடிகொண்டிருப்பதாக தெரிவிக்கிறது. சுயம்புவாக அம்மன் தலையில் நாக கிரீடம் அணிந்து கொண்டு நடுவில் சூல வடிவம் கொண்டு இரண்டு கரங்களுடன் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகின்றாள். இடதுபுறமாக உற்சவர் சிம்ம வாகனத்தில் கம்பீரமாக காட்சி தருகின்றாள். முண்டகக்கண்ணி அம்மனை கருவறை என்பதும் குளிர்ச்சியாகவே வைத்திருக்க வேண்டும் என்ற நோக்கில் அடிக்கடி நீர் ஊற்றி ஈரமாகவே வைத்துள்ளனர். வெள்ளி கவசம் சாத்திய பெரிய சந்திரபிரபை கீழ் சுயம்பு அம்மன் ஆனந்தமாய் விற்றிருக்கிறாள்.

கருவறையின் பின்புறம் தல மரமான, ஆலம் விழுதுகள் இல்லாத, அபூர்வ மரமான கல்லால மரமும், புற்றுடன் மூன்றடி உயர கல் நாகமும் அமைந்துள்ளன. பின்புறம் உள்ள புற்றில் வாழும் நாகம், நாள்தோறும் இரவில் அன்னையை வணங்கி வழிபட்டு செல்கிறாள் என்பது ஐதீகம். இதனால் இத்தலத்தை ராகு கேது பரிகார தலம் என்று சொல்வார்கள் .

பிரார்த்தனைகள்

இக்கோவிலில் அம்பாளுக்கு பூஜித்த வேப்பிலை, மஞ்சள், எலுமிச்சை மற்றும் தீர்த்தமே பிரதான பிரசாதமாகக் கொடுக்கப்படுகிறது. அம்மை நோய், தீராப்பிணி, திருமணத்தடை, கல்வி, மகப்பேறு, வீடு வாகன வசதிகள் என வேண்டுவோர் வேண்டியதை வேண்டியவாறுக் கொடுக்கும் கற்பகத்தரு முண்டகக்கண்ணி அம்மன். ராகு – கேது தோஷம் உள்ளவர்கள் இந்த அம்மனை வழிபட, அவற்றிலிருந்து முழுமையாக விடுபடலாம். நாகதோஷம் இருப்பவர்கள், முண்டகக்கண்ணி அம்மனை வழிபட்டு, நாககன்னி சிலையை பிரதிஷ்டை செய்வதாக வேண்டிக்கொள்கிறார்கள். அதன்பிறகு, 48 நாள்களுக்கு நீரிலேயே நாககன்னியை வைத்திருந்து, பின் அதனை ஆலயத்தின் முகப்பில் இருக்கும் மரத்தடியில் பிரதிஷ்டை செய்து, அதற்கு அபிஷேகமும் செய்து வழிபடுகிறார்கள். கண் தொடர்பான நோய்கள் தீர முண்டகக்கண்ணியை வழிபட விரைவில் தீரும்.

Read More
தாயமங்கலம் முத்துமாரியம்மன கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

தாயமங்கலம் முத்துமாரியம்மன கோவில்

தாலி பாக்கியம் தந்தருளும் தாயமங்கலம் முத்துமாரியம்மன்

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே இருக்கிறது தாயமங்கலம் முத்துமாரியம்மன கோயில். இந்தப் பகுதியிலிருக்கும் 22 கிராம மக்களுக்கும், தாயாகவும், மாங்கல்ய பாக்கியம் தந்து மங்கல வரம் அருளும் நாயகியாகவும் திகழ்கின்றாள் முத்துமாரியம்மன. இந்த ஊர் 'தாய்மங்கலம்' என்றே அழைக்கப்பட்டு, காலப்போக்கில் தாயமங்கலம் என மருவியது. இங்குள்ள தெய்வம் கன்னித்தெய்வமாக இருப்பதால், திருமண வரம் வேண்டுபவர்கள், தாலிப்பொட்டினை அம்மன் காலடியில் சமர்ப்பித்து, வழிபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்தக் கோயிலில் அம்பாள் நின்ற கோலத்தில், நான்கு கரங்களுடன் கேட்கும் வரங்களை வழங்கும் கற்பக விருட்சமாகத் திகழ்கின்றார்.

தல வரலாறு

சுமார் 300 ஆண்டுகளுக்கு முன், முத்து செட்டியார் என்ற ஒரு வியாபாரி சிவகங்கையில் வசித்து இருந்தார். அவர் மதுரை மீனாட்சியம்மன் மீது மாறாத பக்திகொண்டவர். அவருக்கு நெடுநாள்களாகவே குழந்தை இல்லை. ஒவ்வொரு முறையும் மதுரைக்கு வியாபார நிமித்தமாக செல்லும் அவர், தவறாமல் மீனாட்சியம்மையையும், சொக்கநாதரையும் வழிபட்டு, குழந்தை வரம் வேண்டுவார்.

அப்படி ஒருமுறை, அவர் மதுரையிலிருந்து தனது ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அவர் வந்த வழியில், சிறுமியான ஒரு பெண்குழந்தை பாதை தெரியாமல் அழுதுகொண்டிருந்தது. இதைப் பார்த்த அவருக்கோ மனம் மிகவும் வேதனைப்பட்டது. சிறுமியிடம் ''உன்னுடைய பெயர் என்னம்மா? ஏன் எவரும் இல்லாத இந்தக் காட்டு வழியில் அழுது கொண்டிருக்கிறாய்'' என விசாரித்தார். தனது பெயர் முத்துமாரி என்றும், தனது தாய் தந்தையிடமிருந்து பிரிந்துவிட்டேன் என்றும் எங்கு போவதென வழிதெரியவில்லை என்றும் கூறி தேம்பினாள். ''கவலைப்படாதே அம்மா! உன்னை நான் பத்திரமாகப் பார்த்துக்கொள்கின்றேன்,' எனக்கூறி அந்தச் சிறுமியை தன்னுடன் அழைத்துப்போனார். மதுரை மீனாட்சியே இந்தக் குழந்தையை தனக்குத் தந்ததாக எண்ணினார்.

அவர்கள் சென்ற வழியில் ஆறு ஒன்று குறுக்கிட்டது. பயணக்களைப்பாக இருந்ததால், சிறுமியை கரையில் உட்கார வைத்துவிட்டு ஆற்றில் இறங்கி குளிக்கப் போனார். ஆனால், குளித்து முடித்துவிட்டு கரைக்கு வந்து பார்த்தால், குழந்தையைக் காணவில்லை. இதனால் ரொம்பவே மனம் வெறுத்துப்போன அந்த வணிகர் தன் மனைவியிடம் நடந்ததையெல்லாம் கூறி வருந்தினார். இரவு உணவைகூட சாப்பிடாமல், படுக்கப்போனவர் அப்படியே கண்ணயர்ந்து விட்டார். அவரது கனவில், 'சிறுமியாக வந்தது நான்தான் என்றும் ஊருக்கு அருகாமையிலிருக்கும் கள்ளிக்காட்டில், நான் உறைய இருக்கிறேன் என்றும் கோயில் கட்டி வழிபடுபவர்களுக்கு, வேண்டும் வரங்களை அருளுவேன் என்றும் கூறி மறைந்தாள் முத்துமாரி. படுக்கையில் இருந்து எழுந்த வியாபாரி, தன் மனைவியிடம் எல்லாவற்றையும் கூறினார். மறுநாள் பொழுது விடிந்ததும் முதல் வேலையாக ஆற்று மணலில் அம்மன் சிலையை அமைத்து வழிபடத்தொடங்கினார். இவரைத் தொடர்ந்து ஊர் மக்களும் வழிபட்டனர். நாளடைவில் அந்தப்பகுதி மக்களின் கண்கண்ட தெய்வமானாள் முத்து மாரியம்மன்.

அம்மை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், செவ்வாய் வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோயிலுக்கு வந்து வணங்கி இங்கிருந்து தீர்த்தம் பெற்றுச்சென்றால் நோய் குணமாகும் என்பது இங்குள்ள மக்களின் நம்பிக்கையாக இருக்கிறது. இதுதவிர திருமண வரம், குழந்தைபாக்கியம் வேண்டியும் ஏராளமான பக்தர்கள் வருவதையும், பிரார்த்தனை நிறைவேறி நேர்த்திக்கடன் செலுத்துபவர்களையும் இங்கு காணலாம்.

Read More
கஞ்சாம் நிமிஷாம்பாள் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

கஞ்சாம் நிமிஷாம்பாள் கோவில்

எதிரி பயம் போக்கும் நிமிஷாம்பாள்

கர்நாடக மாநிலம் மைசூரு அருகிலுள்ள கஞ்சாம் நிமிஷாம்பாள் கோயிலில் ஒவ்வொரு மாதமும் வரும் பவுர்ணமி அன்று விரதமிருந்து வழிபட்டால் பயம் நீங்கும். நிமிஷாம்பாள் 'என்பதற்கு கண நேரத்தில் வரம் அளிப்பவள்' என்பது பொருள். 'கிருஷ்ண சிலா' என்னும் கருப்பு சிலையாக இருக்கும் அம்பாளின் கைகளில் சூலம், உடுக்கை உள்ளது. தர்மத்தை நிலைநாட்டும் விதத்தில் அம்மனின் தலைமீது தர்ம சக்கரம் குடையாக நிற்கிறது.

பயம் போக்கும் நிமிஷாம்பாள் பௌர்ணமி விரதம்

முன்னொரு காலத்தில், முக்தராஜன் என்னும் அம்மன் பக்தன் இப்பகுதியை ஆட்சி செய்தான். ஜானு சுமண்டலன் என்னும் அசுரன் முக்தராஜனைத் துன்புறுத்தினான். அவனை அரசனால் அடக்க முடியவில்லை. தன் இஷ்ட தெய்வமான பராசக்தியை நோக்கி தவத்தில் ஆழ்ந்தான்.

பராசக்தி மன்னனின் கோரிக்கையை ஏற்று, அசுரனை அழிக்கப் புறப்பட்டாள். அசுரனின் முன் நின்று கண்களை இமைத்தாள். நிமிஷ நேரத்தில் அவன் சாம்பல் ஆனான். தனக்கு அருள் செய்த அம்பிகைக்கு கோயில் கட்டி 'நிமிஷாம்பாள்' என பெயரிட்டான்.

கஞ்சாம் நிமிஷாம்பாள் கோயிலில் பவுர்ணமி விரதமிருந்து வழிபட்டால் எதிரி பயம் நீங்கும். திருமணத் தடைகளால் பாதிப்புற்ற பிள்ளையையோ, பெண்ணையோ இந்தக் கோயிலுக்கு அழைத்து வந்து, வேண்டிச் சென்றால் தடைகள் நீங்கி விரைவில் திருமணம் நடந்தேறும். குழந்தை பாக்கியம் உண்டாகவும் விரதம் மேற்கொள்கின்றனர். துர்க்கையின் அம்சமாக நிமிஷாம்பாள் இருப்பதால் ராகுகாலம், அஷ்டமியன்று பாலபிஷேகம் செய்கின்றனர்.

Read More
சமயபுரம் மாரியம்மன்  கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

சமயபுரம் மாரியம்மன் கோவில்

ஆங்கிலேய படைத்தளபதி சுட்ட தோட்டாக்களைப் பூக்களாக ஏற்றுக் கொண்ட சமயபுரம் மாரியம்மன்

பதினெட்டாம் நூற்றாண்டில், திருச்சி நகரை கைப்பற்றுவதில் பிரஞ்ச் படைகளுக்கும், ஆங்கிலேய படைகளுக்கும் இடையே போர் மூண்டது. ஆங்கிலப் படைகளுக்கு ராபர்ட் கிளைவ் தலைமை ஏற்று நடத்தினார். ராபர்ட் கிளைவ் தலைமையின்கீழ் டால்டன், லாரன்ஸ், ஜின் ஜின் என்ற தளபதிகள் பணியாற்றினர். ஆங்கிலப் படை தாங்கள் கொண்டு வந்திருந்த ஆயுதங்கள், வெடிமருந்துகள், போர் தளவாடங்கள் ஆகியவற்றை சமயபுரத்தில் ஒரு கொட்டகை அமைத்து பாதுகாத்தனர். அதனால் இரவு நேரத்தில், ஊர் மக்கள் யாரும் வெளியில் வரக்கூடாது என்று தடை உத்தரவு போட்டனர். அப்போது ராபர்ட் கிளைவ் அம்மை நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததால், தளபதி ஜின் ஜின், நள்ளிரவில் ஆயுதக் கிடங்கை பாதுகாக்க சுற்றி வந்து கொண்டு இருந்தான்.

அப்போது மஞ்சள் ஆடை உடுத்தி, ஒரு பெண் இரண்டு கைகளிலும் தீச்சட்டி ஏந்தி நடந்து சென்று கொண்டிருந்தாள். அவளைப் பார்த்த ஜின் ஜின் நிற்குமாறு கட்டளையிட்டான். ஆனால், அந்தப் பெண்ணோ நிற்காமல் தொடர்ந்து நடந்து சென்று கொண்டிருந்தாள். உடனே அந்தப் பெண்ணை நோக்கி தன் கைத் துப்பாக்கியால் சுட்டான். ஆனால் என்ன ஆச்சரியம் ! அவன் கை துப்பாக்கியில் இருந்து வெளிப்பட்ட தோட்டாக்கள் எல்லாம் பூக்களாக மாறி அந்தப் பெண்ணின் தலை மீது விழுந்தது. துப்பாக்கி சத்தம் கேட்டு ஓடி வந்த ஊர் மக்கள்,'நீங்கள் சுட்டது எங்கள் தெய்வம் சமயபுரம் மாரியம்மனைத்தான். நீங்கள் பெரிய தெய்வ குற்றத்தை இழைத்து விட்டீர்கள்' என்றார்கள்.அதற்கு ஜின் ஜின், ' வந்தது உங்கள் தெய்வம் மாரியம்மன் என்றால் கோவிலுக்குள் இப்போது அந்த தெய்வம் இருக்க முடியாது. வாருங்கள் கோவிலுக்குள் சென்று பார்ப்போம்' என்று ஊர் மக்களை அழைத்துக் கொண்டு கோவிலுக்கு வந்தான். அப்போது கருவறையில் அம்மனின் உருவத்தைக் காண முடியவில்லை. திடீரென ஒரு பேரொளி கருவறையை நிரப்பியது. அதன்பின்னர் மக்களால் அம்மன் உருவத்தைப் பார்க்க முடிந்தது. மக்கள் அனைவரும் சமயபுரம் மாரியம்மனை விழுந்து வணங்கினார்கள். தளபதி ஜின் ஜினுக்கு உடனே கண் பார்வை பறி போனது. பின்னர் ஊர் மக்களின் அறிவுரையை கேட்டு, ராபர்ட் கிளைவும், ஜின் ஜினும் சமயபுரம் மாரியம்மனிடம் மன்னிப்புக் கேட்டு வணங்கினர். மூன்று நாள் கழித்து தளபதி ஜின் ஜினுக்கு கண்பார்வை மீண்டும் கிடைத்தது. ராபர்ட் கிளைவிற்கு அம்மை நோயும் நீங்கியது.

இந்த நிகழ்விலிருந்து சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா மிகவும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

Read More
கோலாப்பூர் மகாலக்ஷ்மி கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

கோலாப்பூர் மகாலக்ஷ்மி கோவில்

சகல செல்வங்களையும் தந்தருளும் மகாலட்சுமி

கோலாப்பூர் மகாலட்சுமி கோவில், மகாராட்டிர மாநிலத்தில் கோலாப்பூர் என்ற இடத்தில் அமைந்துள்ளது. கரவீரபுரம் என்பது இந்த தலத்தின் முந்தைய பெயர். இந்த இடத்தில் மக்களுக்கு தொல்லை கொடுத்து வந்த கோலாசுரனை, தேவி மகாலட்சுமியாக வந்து அழித்தாள். அவன் இறக்கும் தருவாயில், இந்த இடம் தன் பெயரால் அழைக்கப்பட வேண்டும் என்று விண்ணப்பிக்க அதன்படி கோலாப்பூர் ஆயிற்றாம். லக்ஷ்மி அஷ்டோத்திரத்தில் ‘நமஸ்தே கருடாரூடே கோலாஸுர பயங்கரி..’ என்று குறிப்பிடப்படுவது, இத்தருணத்தில் நினைவு கூறத்தக்கது. பாரதத்தில் பற்பல இடங்களில் நிறுவியுள்ள சக்தி பீடங்களில் இதுவும் ஒன்றாகும். இந்த சக்தி பீடம் இந்துக்களுக்கு மிகவும் சிறப்பு பெற்ற ஆறு சக்தி பீடங்களில் ஒன்றாகும்.

இந்த இடத்தின் சிறப்பு, இங்கே ஒருவன் வந்து மகாலட்சுமியை வழிபடுவதால் அவன், அவனுடைய விருப்பங்கள் அனைத்தையும் துறந்து, இறைவனடி அடைந்து முக்தி பெறுவான் அல்லது அவனது அனைத்து விருப்பங்களையும் அன்னை மகாலட்சுமி நிறைவேற்றி வைப்பாள் என்று இந்துக்கள் நம்புவதே ஆகும்.

இக்கோவில் கன்னடத்து சாளுக்கிய மன்னர்களால் சுமார் 1300 வருடங்களுக்கு முன் கட்டப்பட்டது.

கருவறையில் மகாலட்சுமி, நான்கு கரங்களுடன், மகுடம் தரித்து, மூன்று அடி உயரத்தில் நின்ற கோலத்தில் காட்சி தருகிறாள்.மகாலட்சுமியின் பின்புறம்,அவள் வாகனமான சிங்கத்தின் உருவச்சிலை இருக்கிறது. மகாலட்சுமியின் மகுடத்தில் சேஷ நாகத்தின்(இறைவன் விஷ்ணுவின் நாகப் பாம்பு) உருவமும் செதுக்கப் பெற்றுள்ளது. மகாலட்சுமியின் நான்கு கரங்களில், கீழ் வலது கரத்தில் ஒரு கிச்சிலி பழத்தையும், வலது மேல் கரத்தில் கௌமோதகி என்ற தண்டாயுதம் ஒன்றையும், இடது மேல் கரத்தில் கேடகம் என்ற கவசத்தையும் மற்றும் கீழ் இடதுகரத்தில் பானபாத்திரம் என்ற கிண்ணத்தையும் வைத்துக் காணப்படுகிறாள்.

மகாலட்சுமியை சூரிய பகவான் வழிபடும் கிரண் உற்சவம்

பொதுவாக கோவில்களில் மூலவர் வடக்கு அல்லது கிழக்கு முகமாக அமைந்திருக்கும். இந்தக் கோவிலில், தேவியின் உருவச்சிலை மேற்கு திசை நோக்கி அமைந்துள்ளது. மேற்கு சுவர்ப்பகுதியில் ஒரு திறந்த ஜன்னல் அமைந்துள்ளது, அதன் வழியாக கதிரவனின் ஒளிக்கீற்று வருடத்தில் இரு முறை தேவியின் பாதங்களை தொட்டு திருமுகத்தை பளிச்சிடும். சூரியனின் ஒளிக் கீற்றுக்கள் இந்த ஜன்னல் வழியாக தேவியின் பாதங்களை தொட்டு வணங்கி, பின்னர் மறைவது ஒரு கண்கொள்ளாக் காட்சியாகும். அம்பாளின், பாதம், மார்பு, திருமுகம் ஆகிய மூன்று பகுதிகளிலும் சூரியனின் ஒளிக் கீற்றுக்கள் விழுவது, இங்கு கிரனோத்ஸவ்('கிரண் உற்சவம்') என்று சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் 31 ஜனவரி, 1 பிப்ரவரி, 2 பிப்ரவரி, 9 நவம்பர், 10 நவம்பர், 11 நவம்பர் ஆகிய நாட்களில், இந்த விழா கொண்டாடுகிறார்கள். ஜனவரி 31 மற்றும் நவம்பர் 9 ஆம் தேதிகளில் சூரியனின் ஒளி, மகாலட்சுமி தாயாரின் பாதங்களில் படுகிறது. பிப்ரவரி 1 மற்றும் நவம்பர் 10 தேதிகளில் சூரியனின் கதிர்கள் மகாலட்சுமி தாயாரின் மார்பின் மீது படுகின்றன. பிப்ரவரி 2 மற்றும் நவம்பர் 11 தேதிகளில் தாயாரின் முழு உருவத்தின் மீதும் சூரியனின் ஒளி கதிர்கள் விழுகின்றன. மகாலட்சுமி விக்ரகத்தின் மீது சூரியனின் ஒளி படும் போது அவரை வணங்குவது மிகுந்த நன்மை தரும்.

சகல செல்வங்களையும் தரும் இக்கோவிலுக்கு சென்று வந்தால், வாழ்வில் சுபிட்சம் ஏற்படும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

Read More