
குற்றாலநாதர் கோவில்
குற்றாலம் குழல்வாய்மொழி அம்மன்
தென்காசி மாவட்டம்., தென்காசி நகரிலிருந்து மேற்கே சுமார் 5 கி. மீ தொலைவில். ஸ்ரீகுற்றாலநாதர் உடனுறை ஸ்ரீகுழல்வாய்மொழி ஆலயம் அமையப்பெற்றுள்ளது.
இங்குள்ள அம்பிகை குழல்வாய்மொழி. வடமொழியில் வேணுவாக்வாகினி என்றும் அழைக்கப்படுகிறாள். இதற்கு, மூங்கிலால் செய்யப்பட்ட புல்லாங்குழலில் இருந்து எழும் இசையை காட்டிலும் இவளுடைய குரல் இனிமை வாய்ந்தது என்று பொருள்.
உயரமான கருவறையில் அம்பிகை நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கிறாள். வலக்கரத்தில் மலர் ஏந்தியும், இடக்கரத்தை கீழே தொங்கவிட்டபடியும் புன்முறுவல் பூத்த முகத்தவளாய் காட்சிதருகிறாள்.
தரணி பீடம்
அம்பிகையின் சக்தி பீடங்களுள் இத்தலம் 'தரணி பீடம்' என்று சிறப்பிக்கப்படுகிறது. அகத்தியர் இங்கு திருமால் தலத்தை, சிவத்தலமாக மாற்றியபோது திருமாலுக்கு வலப்புறம் இருந்த ஸ்ரீதேவி, குழல்வாய்மொழிநாயகியாகவும், பூதேவி, பராசக்தியாகவும் மாற்றினாராம். பராசக்தி, இங்கு ஸ்ரீசக்ர அமைப்பிலுள்ள பீடத்தின் வடிவில் காட்சி தருகிறாள். பூமாதேவியாக இருந்து மாறிய அம்பிகை என்பதால் இந்த பீடத்திற்கு, 'தரணி பீடம்' (தரணி – பூமி) என்று பெயர். ஒன்பது அம்பிகையரின் அம்சமாக இந்த பீடம் இருப்பதாக ஐதீகம். எனவே, பவுர்ணமியன்று இரவில் 'நவசக்தி' பூஜை செய்கின்றனர். அப்போது, பால், வடை பிரதானமாக படைக்கப்படும். இவள் உக்கிரமாக இருப்பதால், இவளுக்கு எதிரே சிவலிங்கப் பிரதிஷ்டை செய்துள்ளனர். இவர், 'காமகோடீஸ்வரர்' என்றழைக்கப்படுகிறார். பவுர்ணமி, நவராத்திரி மற்றும் வெள்ளிக்கிழமைகளில் தரணி பீடத்திற்கு, பன்னீர் கலந்த குங்கும அர்ச்சனை செய்து, விசேஷ பூஜை செய்து வழிபட்டால் பிரார்த்தனைகள் நிறைவேறும்.
ஆடி மாதம் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையன்றும் அம்பாளுக்கு சந்தனக்காப்பு செய்யப்படுகிறது.இரவு எண்ணைய் தீப விளக்குகளின் ஒளியில் அம்பிகையின் தரிசனம் பார்ப்பவரை பரவசம் அடையச் செய்யும்.
ஆலயத்துளிகள் இணைய தளத்தில், சென்ற ஆண்டு நவராத்தரி நான்காம் நாளன்று வெளியான பதிவு
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன்
https://www.alayathuligal.com/blog/wl7ltlrte5zw89gr4xkt4kns3e974y

திருவெண்காடர் கோவில்
திருவெண்காடு பிரம்ம வித்யாம்பிகை
சீர்காழியில் இருந்து பூம்புகார் செல்லும் வழித்தடத்தில், சீர்காழியில் இருந்து சுமார் 13 கி.மீ. தொலைவில் திருவெண்காடு சிவத்தலம் இருக்கிறது.இங்கே சுவாமியின் திருநாமம் ஸ்வேதாரண்யேஸ்வரர். திருவெண்காடர், திருவெண்காட்டுத் தேவர், திருவெண்காடுடைய நாயனார், திருவெண்காட்டுப் பெருமான், அம்பாளின் திருநாமம் பிரம்ம வித்யாம்பிகை.
பிரம்மாவுக்கு வித்தைகளை கற்றுக் கொடுத்த அம்பிகை
பிரம்ம வித்யாம்பிகைக்கு, பெரியநாயகி, மாதங்கி, வேயனதோளி நாச்சியார் என பல திருநாமங்கள் உள்ளன. திருவெண்காடு திருத்தலத்துக்கு அருகில் திருநாங்கூர் எனும் வைணவ திருத்தலம் உள்ளது. அங்கே, மதங்காஸ்ரமத்தில், மதங்க முனிவருக்கு மாதங்கி எனும் பெயரில் மகளாக வளர்ந்து, திருவெண்காடரை நோக்கி கடும் தவம் புரிந்து, ஈசனை கணவராகப் பெற்றாள் என்று பத்மபுராணம் கூறுகிறது. பிரம்மாவுக்கு வித்தைகளை கற்றுக் கொடுத்ததால் அம்பாளுக்கு பிரம்ம வித்யாம்பிகை எனும் திருநாமம் அமைந்தது. 51 சக்தி பீடங்களில் இத்தலம் பிரணவபீடம் என போற்றப்படுகிறது.
கோயிலின் வெளிப்பிரகாரத்தில் வடமேற்கு மூலையில் தனி உள்பிரகாரத்துடன், அம்பிகை சன்னதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. அம்பிகையின் நான்கு திருக்கரங்களில், இடது மேற்கரத்தில் தாமரைப்பூ(செல்வச் செழிப்பு) வலது மேற்கரத்தில் அக்கமாலை (யோகம்) அணி செய்வதைக் காணலாம். வலது கீழ்க்கரம் அபய கரம், இடது கீழ்கரம் திருவடிகளின் பெருமையை பேசுவதாகும்.
திருஞானசம்பந்தரை இடுப்பில் சுமந்த அம்பிகை
திருஞானசம்பந்தர், திரு வெண்காட்டின் வட எல்லைக்கு வந்த பொழுது அவருக்கு ஊரெல்லாம் சிவ லோகமாகவும், மணலெல்லாம் சிவலிங்கமாகவும் காட்சியளிக்க, இத்தலத்தினை மிதிப்பதற்கு அஞ்சி அவர் 'அம்மா' என்றழைக்க, பிரம்மவித்யாம்பாள் அங்கு தோன்றி, தனது இடுப்பில் திருஞானசம்பந்தரை இடுக்கிக் கொண்டு கோயிலுக்குள் சென்றாள். திருஞானசம்பந்தரை இடுப்பில் சுமந்த வடிவில் அம்பாள் சிலை கோயிலின் மேற்கு உட்பிராகாரத்தில் உள்ளது. சம்பந்தர் அம்பாளை நின்று கூப்பிட்ட குளக்கரை குளம் 'கூப்பிட்டான் குளம்' என்று அழைக்கப்பட்டு, இன்று 'கோட்டான் குளம்' என்று மறுவிவிட்டது.
ஞானத்தையும் வித்தையையும் அருள்பவள்
தேவி கல்வி வரம் தருவதில் நிகரற்றவள். அருளும் பொருளும் அள்ளித்தரக்கூடியவள். அம்பிகை வரப்பிரசாதியாய் திகழ்ந்தருளும் திருத்தலம் இது. ஒருவரின் ஜாதகத்தில், புதன் நீச்சம் பெற்று இருந்தால் இங்கு வந்து வழிபட்டு, அம்பிகையை மனமுருகி வேண்டினால், அனைத்து குறைகளையும் நீக்குவாள் அம்பிகை. மனிதன் எத்தனை செல்வம் பெற்றிருந்தாலும் ஞானம், அறிவு, கலைகளில் மேன்மை இருந்தால்தான் வாழும் வாழ்க்கை இனிமையும் உற்சாகமும் நிறைந்ததாக இருக்கும். அத்தகைய ஞானத்தையும் வித்தையையும் அருள்பவள் அன்னை பிரம்ம லிதயாம்பிகை
ஆலயத்துளிகள் இணைய தளத்தில், சென்ற ஆண்டு நவராத்தரி மூன்றாம் நாளன்று வெளியான பதிவு
நாகை நீலாயதாக்ஷி அம்மன்
https://www.alayathuligal.com/blog/3d8ght8lka6dy92dbtp8rramxpfljr

கும்பேஸ்வரர் கோவில்
கும்பகோணம் மங்களாம்பிகை அம்மன்
அம்மனின் சக்தி பீட வரிசையில், குடந்தை கும்பேஸ்வரர் கோவிலில் மங்களாம்பிகை அம்மன், விஷ்ணு சக்தி பீடத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இத்தலம் மந்திரிணி சக்தி பீடம் என்று அழைக்கப்படுகிறது.
கும்பேஸ்வரர் கோவிலில் எழுந்தருளியிருக்கும் அம்பாளுக்கு மங்களநாயகி, மந்திரபீட நலத்தாள், மங்களாம்பிகை ஆகிய திருநாமங்கள் உண்டு. திருஞானசம்பந்தர் தனது பாடலில் மங்களாம்பிகையை 'வளர் மங்கை' என்று அழைக்கிறார். சிவபெருமான் பார்வதி தேவிக்கு தனது திருமேனியில் பாதியை வழங்கினார். அதே போல் தனது மந்திர சக்திகளில் 36 ஆயிரம் கோடியை மங்களாம்பிகைக்கு வழங்கியுள்ளார். அதனால் மங்களாம்பிகை 'மந்திரபீடேஸ்வரி' என்றும் அழைக்கப்படுகிறார். மஞ்சள் பட்டுடுத்தி, மஞ்சள் பூசி, குங்குமத் திலகமிட்டு, அம்பாள் அருள்பாலிப்பதைக் காண பக்தர்கள் எப்போதும் இந்த கோயிலில் குவிவது வழக்கம்.
கிழக்கு நோக்கிய தனி சந்நிதியில் நான்கு கரங்களுடன் மங்களாம்பிகை அருள்பாலிக்கிறார். வலது மேல்கரத்தில் அமுதக் கலசத்தையும், இடது மேல்கரத்தில் அட்சமாலையையும் தாங்கி அருள்பாலிக்கிறார். வலது கீழ் கரம் அபயகரமாகவும், இடது கீழ்க்கரம் ஊர்வ அஸ்தமாகவும் அமைந்துள்ளன.
கல்வியில் சிறந்து விளங்க, தொழிலில் மேம்பட, திருமணத் தடை நீங்க, குழந்தை வரம் கிடைக்க, செல்வம் பெருக இத்தலத்தில் பக்தர்கள் கூடி மங்களநாயகிக்கு வழிபாடு செய்வது வழக்கம். விநாயகப் பெருமான் அம்மையும் அப்பனுமே உலகம் என்று கூறுவதைப் போன்று, இக்கோயிலில் கும்பேஸ்வரர், மங்களாம்பிகை இருவரையும் சேர்த்தே வலம் வருவது போன்ற பிரகார அமைப்பு உள்ளது.
ஸ்ரீ மங்களாம்பிகை பிள்ளைத் தமிழ்
பொன்னூஞ்சல், நீராடல், அம்மானை, அம்புலி, வாரானை, முத்தம், சப்பாணி, தாலம், செங்கீரை, காப்பு ஆகிய பருவங்களை விளக்கி, மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை, திருக்குடந்தை மங்களாம்பிகை மீது பிள்ளைத் தமிழ் இலக்கியத்தை அருளியுள்ளார்.
தளர்நடை பயிலும் குழந்தையாக மங்களாம்பிகையை பாவித்துப் பாடும்போது, "கண்டோர் பவத் துன்பு காணார்களாய்ப் பருங்களி ஆர்கலிக் கண்மூழ்கி" என்கிறார். மங்களாம்பிகையைக் கண்டாலே, பிறவிக்கடலில் மூழ்கிப் படும் துயரம் அனைத்தும் பறந்தோடும் என்கிறார். பேரானந்தம் கொண்டு உள்ளம் கடல்போல் ஆராவரிக்கும் என்று கூறி மகிழ்கிறார்.
சிவராத்திரி, நவராத்திரி, பிரதோஷ தினங்களில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடைபெறும். நவராத்திரி தினங்களில் கோயில் முழுவதும், கொலுவைக்கப்படுவதும் அதைக் காண பல ஊர்களிலிருந்து பக்தர்கள் இங்கு வருவதும் வழக்கம்.
ஆலயத்துளிகள் இணைய தளத்தில், சென்ற ஆண்டு நவராத்தரி இரண்டாம் நாளன்று வெளியான பதிவு
மதுரை மீனாட்சி அம்மன்
https://www.alayathuligal.com/blog/l6eks5ceh4mjgbcx42w4tamp656mnn

அமிர்தகடேசுவரர் கோவில்
திருக்கடையூர் அபிராமி அம்மன்
திருக்கடையூர் ஸ்ரீஅமிர்தகடேசுவரர் உடனுறை ஸ்ரீஅபிராமி ஆலயம் மயிலாடுதுறை-தரங்கம்பாடி சாலையில், மயிலாடுதுறையிலிருந்து 22 கி.மீ. தொலைவில் உள்ளது,
ஆலயதத்தின் வெளிப்பிரகாரத்தில் இத்தலத்து நாயகி அபிராமி அம்மனின் சன்னதி கிழக்கு நோக்கியுள்ளது. அபயவரதத்துடன் கூடிய நான்கு திருக்கரங்களுடன் நின்ற கோலத்தில் காட்சி தருகின்றாள்.
அபிராமி என்ற சொல்லுக்கு 'மேலான அழகுடையவள்' என்பது பொருள். அபிராமி அம்மன் காலசம்ஹாரரையும், ஸ்ரீஅமிர்தகடேசுவரரையும் விட பிரசத்தி பெற்றவள். சரஸ்வதிதேவியே அபிராமி அம்மனை பூஜை செய்து பலன் பெற்றாள் என்றால் அன்னையின் அருளளாற்றல் எத்தகையது என்று நமக்கு விளங்கும்.
அபிராமிப்பட்டருக்காக நிகழ்த்திய அற்புதம்
அபிராமிப்பட்டர் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன் திருக்கடையூரில் வாழ்ந்தவர். இவரது இயற்பெயர் சுப்பிரமணியன். அபிராமி அன்னையின் மேல் மிகுந்த பக்தி கொண்டவர். எப்பொழுதும் அபிராமி சன்னதியில் அமர்ந்து அவளை துதித்து கொண்டிருப்பார். பிற சமயங்களில் நல்ல நாள்,நட்சத்திரங்களை குறித்து கொடுக்கும் பணியை செய்து வந்தார்.
ஒரு நாள் தஞ்சை மன்னன் சரபோஜி (கி.பி.1712 –1728)அபிராமி ஆலயத்திற்குவந்தான். மற்றவர் எல்லாம் மன்னனை வணங்கி நிற்க, அபிராமி பட்டரோ கண்ணை மூடி தியான நிலையில் அபிராமியின் பிரகாசமான முகத்தை மனக்கண்ணில் பாரத்து முகத்தில் மகழ்ச்சி பொங்க அமர்ந்திருந்தார். மன்னன், தனக்கு மரியாதை செய்யாது இருக்கும் அபிராமிபட்டரைப் பற்றி மற்றவர்களிடம் விசாரித்தான், அவர்கள் அபிராமிபட்டர் பஞ்சாங்கம் கணிப்பவர் என்றும் ஆனால் எப்பொழுதும் மதுப்போதையில் இருப்பார் என்றும் பொய் கூறினர்.
மன்னன் அபிராமிப்பட்டர் நாள் கணிப்பவர் என்பதால் அவரை எழுப்பி 'இன்று என்ன திதி' என்று கேட்டான். அபிராமியின் பௌர்ணமி போன்ற பிரகாச முகத்தை அதுவரை மனக் கண்ணில் தரிசித்துக் கொண்டிருந்ததால் சடடென்று 'இன்று பௌர்ணமி' எனறு கூறிவிட்டார். ஆனால் அன்று அமாவாசை திதி. அமாவாசை தினத்தை பௌர்ணமி என்று கூறியதால் கோபம் கொண்ட மன்னன் 'இன்று இரவு முழு நிலவு ஆகாயத்தில் தோன்றாவிட்டால் மரண தண்டணை' எனறு அபிராமிபட்டரிடம் கூறி விட்டான்.
மன்னன் கொடுக்கப் போகும் தண்டணையைக் கேட்டு அபிராமிப்பட்டர் மனம் உடைந்தார். உடனே அபிராமியை துதித்து அபிராமி அந்தாதி பாடத் தொடங்கினார். அவர் 78 பாடல்கள் பாடி முடித்தார். ஆனால் அபிராமியின் அருள் எதுவும் அவருக்கு அதுவரைக் கிடைக்கவில்லை. 'கயவர் தம்மோடு கூட்டினியே' என்று முடியும் 79 பாடலைப் பாடினார். இப்பாடலின் பொருள் 'உன்னையே எப்பொழுதும் வணங்கும் நான் துன்பப்படும்போது நீ ஏன் கயவர்களுக்கு துணையாய் இருக்கின்றாய்' என்பதாகும். இந்தப் பாடல் முடிந்ததும் அபிராமிப்பட்டர் முன் தோன்றிய அபிராமி 'உன் பக்தியை உலகுக்கு உணர்த்தவே இந்த நாடகம்' என்று கூறி தன் காதில் அணிந்திருந்த தாடங்கத்தை கழற்றி ஆகாயத்தில் வீசி எறிந்தாள். அது முழுநிலவை விட பன்மடங்கு பிராகசத்துடன் ஜொலித்தது.
தன் கவறை உணர்நத மன்னன் அவருக்கு 'அபிராமிபட்டர்' என்று பட்டம் அளித்தான். இந்த அற்புத நிகழ்ச்சியை ஒவவொரு வருடமும் தை அமாவாசையன்று அபிராமிபட்டர் திருவிழாவாகக் கொண்டாடுகிறார்கள்.
அபிராமியிடம் நாம் பெறக்கூடிய நற்பலன்கள்
நீண்ட ஆயுளை வேண்டுவோர் இத்தலத்து ஈசனை நாடி வருகின்றார்கள் என்றால் வாழ்கையில் துன்பப்பட்டு அதில் உழண்டு கொண்டிருப்பவர்கள் தம் துன்பங்கள் நீங்கி நற்பலன்கள் பெற நாடுவது, சகலவித செல்வங்களையும் வாரிவழங்கும் அன்னை அபிராமியைத்தான்.
அபிராமிப்பட்டர் இயற்றிய அபிராமி அந்தாதி என்னும் நூலில் நூறுபாடல்கள் உள்ளன. அதிலுள்ள ஒவ்வொரு பாடலும் அபிராமியிடம் நாம் பெறக்கூடிய நற்பலன்களை விவரிக்கின்றது. திருமணம், குழந்தைப்பேறு, வீடு, வாகனம், உத்தியோக உயர்வு, தெய்வ அருள் என்று ஒவ்வொரு பாடலுக்கும் சிறப்புப் பலன்கள் உண்டு.
அன்னை அபிராமி மிகவும் சக்தி வாய்ந்தவள். இவள் தன்னை வந்து வழிபடுபவர்களுக்கு செல்வ செழிப்பு, கல்யாண வரம், குழந்தை பாக்கியம், கல்வி கேள்விகளில் ஞானம் ஆகியவற்றை வாரி வழங்குகிறாள்.
ஆலயத்துளிகள் இணைய தளத்தில், சென்ற ஆண்டு நவராத்தரி முதல் நாளன்று வெளியான பதிவு
மயிலாப்பூர் கற்பகாம்பாள்
https://www.alayathuligal.com/blog/m8l7sr9dl79d9zh4zr7m6lpapkg6ln

ஐயாறப்பர் கோவில்
திருவையாறு தர்மசம்வர்த்தினி
அம்மனின் சக்தி பீட வரிசையில் தஞ்சை மாவட்டம், திருவையாறு தர்மசம்வர்த்தனி அம்பாள் உடனுறை ஐயாறப்பர் கோயில், தர்ம சக்தி பீடமாகப் போற்றப்படுகிறது.
இவளுக்கு இங்கு தர்மாம்பிகை, அறம்வளர்த்தநாயகி, காமக்கோட்டத்து ஆளுடைநாயகி, உலகுடைய நாச்சியார், திரிபுரசுந்தரி என்றெல்லாம் பெயர்கள் உண்டு. இறைவனுக்கும், இறைவிக்கும் கிழக்கு நோக்கியவாறு உள்ள சன்னதிகளைக் கொண்டு தனித்தனி கோவில்கள் உள்ளன. சுவாமி, அம்மன் சன்னிதிகளுக்குத் தனித்தனி ராஜகோபுரம் உண்டு.
காவிரியானது திருவையாறு அருகே காவிரி, குடமுருட்டி, வெண்ணாறு, வெட்டாறு, வடவாறு என்று ஐந்து கிளை ஆறுகளாகப் பிரிந்து செல்வதால் இவ்வூர் திருவையாறு (திரு+ஐந்து+ஆறு) என்று பெயர் பெற்றது.
அறம் வளர்த்த நாயகி
ஆண்கள் தர்மம் செய்வதைவிட ,குடும்பத்தில் உள்ள பெண்கள் தர்மம் செய்தால், இரட்டிப்பு பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். அந்த அடிப்படையில் உலக உயிர்களுக்கெல்லாம் படியளக்கும் நாயகியாக, பெண்களுக்கு தர்மத்தின் அவசியத்தை எடுத்துக்காட்டும் விதத்தில் தர்மசம்வர்த்தினி என்ற பெயரில் பார்வதி தேவி இங்கே எழுந்தருளி உள்ளாள்.
காஞ்சி காமாட்சியைப் போன்று இறைவனிடம் இரு நாழி நெல் பெற்று, 32 அறங்களையும் செய்ததால், அம்பாள் 'அறம் வளர்த்த நாயகி' என்று அழைக்கப்படுகிறார்.
அனைத்து நாட்களும் நல்ல நாட்களே என்பதை வலியுறுத்தும் விதமாக இங்கே அஷ்டமி திதியில் அம்பாளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடத்தப்படுகிறது.
அம்பாள், மேல் கரங்களில் சங்கு சக்கரத்துடனும் இடக்கரத்தை இடுப்பில் ஊன்றியும் திருமால் அம்சமாக அருள்பாலிக்கிறார். அதனால், திருவையாறு எல்லைக்கு உட்பட்ட இடங்களில் திருமாலுக்குக் கோயில்கள் இல்லை.
திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இத்தலத்தில் பிரார்த்திக்கலாம்.
தஞ்சாவூரில் இருந்து 15 கி.மீ. தொலைவில் திருவையாறு இருக்கிறது.
ஆலயத்துளிகள் இணைய தளத்தில், சென்ற ஆண்டு மஹாளய அமாவாசையன்று வெளியான பதிவு
சீர்காழி திரிபுரசுந்தரி அம்மன்
https://www.alayathuligal.com/blog/2a9b25aa7he6e3exfy4756yx3zdc9t

அங்காள பரமேஸ்வரி கோவில்
ஆங்கிலேய அதிகாரியை அடிபணிய வைத்த அங்காள பரமேஸ்வரி
தேனி-போடி சாலையில் கோடாங்கிப்பட்டி கிராமத்திலிருந்து 1.5 கிமீ தொலைவில் உள்ளது அங்காள பரமேஸ்வரி கோவில்.
பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் தேனிக்கு அருகிலுள்ள குச்சனூரில் புற்றுக் கோயில் இருந்தது. இந்த கோவிலுக்கு ஊர் மக்கள் ஓர் அங்காள பரமேஸ்வரியின் சிலையைச் செய்ய விரும்பினார்கள். அதன்படி சுப்புத் தேவர் என்பவர், போடிக்கு அருகே உள்ள ஊருக்குச் சென்று அங்காள பரமேஸ்வரியின் சிலையை உருவாக்கினார்.
அந்த சிலையை தங்கள் வசித்த வந்த குச்சனூருக்குக் கொண்டு செல்ல ஊர் மக்கள் சுமந்து வந்தனர். அப்போது போடிக்கு அருகே கோடாங்கிப்பட்டி எனும் ஊரை வந்து அடைந்தபோது களைப்பு உண்டானதால் அங்கு சிலையை இறக்கி வைத்துவிட்டு சற்று ஓய்வு எடுத்தனர். அன்னையின் திருவுளம் அங்கேயே தங்கிவிட எண்ணியது போலும். அதனால் கீழே இறக்கி வைக்கப்பட்ட திருவுருவச்சிலை மீண்டும் எடுக்கவே முடியாதபடி நிலைத்து நின்றுவிட்டது. இதனால் வியப்பும் அதிர்ச்சியும் அடைந்த ஊர் மக்கள் கண்ணீர்விட்டுப் புலம்பி, 'எங்கள் தாய் இருக்கும் இடமே எங்களுக்கான இடம்' என்று உறுதி கொண்டு அங்கேயே தங்கிவிட்டனர்.
அன்னை குடிகொண்ட இடத்தில் ஒரு கோயிலை எழுப்ப விரும்பி போடி ஜமீன்தாரைச் சந்தித்து விண்ணப்பம் செய்தனர், அவரோ இப்போது சிலை இருக்கும் இடம் கிழக்கிந்திய கம்பெனியின் கட்டுப்பாட்டில் இருப்பதையும், ஆங்கிலேயர் ஒருவரே அந்த இடத்துக்கு உரிமையாளர் என்றும் கூறினார். நீங்கள் அவரிடம் அனுமதி பெற்று ஆலயம் கட்டிக்கொள்ளுங்கள் என்று வழி காட்டினார். அவர்களும் அவ்விதமே அந்த ஆங்கிலேயரை அணுகி அங்காள அம்மனுக்குக் கோயில் கட்ட அனுமதி கேட்டனர். அந்த ஆங்கில அதிகாரியோ கோபமடைந்து, அவர்களை விரட்டியடிக்க தனது காவலர்களுக்கு உத்தரவிட்டார். இதனால் பயந்துபோன ஊர்மக்கள் உயிரைக் காப்பாற்றிக் கொண்டு வெளியே வந்தார்கள்.
அன்றிரவு ஆங்கில அதிகாரியின் மாளிகை எங்கும் தீ பரவியது. அது ஊரெங்கும் பற்றியது. ஆங்கிலேயரும் அவரது காவலர்களும் மாளிகையை விட்டு ஓடினர். தெய்வ அருள் வந்த மூதாட்டி ஒருத்தி, 'அங்காளம்மனுக்கு சொந்தமான இடத்தைக் கொடுத்துவிடுங்கள்! உங்களைப் பாவத்தில் இருந்து மீண்டு கொள்ளுங்கள்' என்று அறிவித்தாள். ஆங்கிலேய அதிகாரிகள் மிரண்டனர்.காவலர்கள் இப்போது ஆங்கிலேய அதிகாரியை சந்திக்க வரும்பும்படி ஊர்மக்களைக் கெஞ்சுகிறார்கள். அதிகாரிகள் ஊர்மக்களை வணங்கித் தங்கள் பிழை பொறுக்குமாறு வேண்டினர். அம்மன் நிலை கொண்ட கோடாங்கிப்பட்டி ஏரிக்கு அருகில் உள்ள நிலத்தின் உரிமையை உடனடியாக மாற்ற உத்தரவிட்டனர், மேலும், 'ஸ்ரீஅங்காள ஈஸ்வரி கோயிலுக்குச் சொந்தமான இடம் அது' என்று செப்பு சாசனத்தையும் வழங்கினர்.
மதுரை சுற்றுவட்டாரத்தில் உள்ளவர்களுக்கு எல்லாம் கண்கண்ட தெய்வமாக கோடாங்கிப்பட்டி அங்காள பரமேஸ்வரி விளங்கி வருகிறாள். இங்கு இவளுக்கு வெள்ளி மற்றும் பௌர்ணமி பூஜைகள், மாசி அமாவாசை மற்றும் ஆடி மாத விழாக்கள் விசேஷமானவை. ஒருமுறை இவளை தரிசித்தால் போதும், அச்சங்கள் இல்லாத சிறப்பான வாழ்வை அடையலாம் என்கிறார்கள் பக்தர்கள்.

எமதண்டீஸ்வர சுவாமி கோவில்
தினம் தினம் தன் முக பாவனையை மாற்றிக் கொள்ளும் திரிபுரசுந்தரி அம்மன்
விழுப்புரம் மாவட்டம், மைலம் வட்டம், ஆலகிராமம் கிராமத்தில் அமைந்துள்ளது எமதண்டீஸ்வர சுவாமி கோவில். இறைவன் திருநாமம் எமதண்டீஸ்வரர். இறைவியின் திருநாமம் திரிபுரசுந்தரி. தேசிய நெடுஞ்சாலையில் திண்டிவனம்- விழுப்புரம் இடையில் உள்ளது கூட்டேரிப்பட்டு. இங்கிருந்து மேற்கே சுமார் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் ஆலகிராமம் எமதண்டீஸ்வரர் கோவில் உள்ளது.
இக்கோவிலில், தெற்கு நோக்கிய கருவறையில் திரிபுரசுந்தரி அம்மன் காட்சி தருகிறார். இந்த அம்மன் வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு விதமாகக் காட்சி தருவது வியப்புக்குரிய அம்சமாகும். திரிபுரசுந்தரி அம்மன் வாரத்தில் ஏழு தினங்களிலும் ஏழு விதமான முகபாவங்களோடு காட்சி கொடுப்பார். இவ்வாலய அம்பாள் ஞாயிற்றுக்கிழமை குழந்தை முகம் கொண்டும், திங்கள், வெள்ளிக்கிழமைகளில் புன்சிரிப்புடனும், செவ்வாய், புதன்கிழமைகளில் கோப முகத்துடனும், வியாழன், சனிக்கிழமைகளில் யோக, தியான நிலையிலும் காட்சிதருவது சிறப்பு. ஏழு வாரங்கள் அவரவர் ராசிக்கேற்ற வண்ணத்துணிகளில் நெய்தீபமேற்றி, அம்பாளை வணங்கினால் வேண்டும் வரம் கிட்டும் என்பது ஐதீகம்.

சிவசைலநாதர் கோவில்
வீதி உலாவிற்கு தங்க கைக்கடிகாரம் அணிந்து வரும் அம்பிகை
திருநெல்வேலி மாநகரிலிருந்து மேற்கே சுமார் 57 கி.மீ தொலைவில் அமையப்பெற்றுள்ள தேவார வைப்புத் தலம் சிவசைலம். இத்தலம் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் கடனை ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இறைவன் திருநாமம் சிவசைலநாதர். இறைவியின் திருநாமம் பரமகல்யாணி.
இத்தலத்தில் அம்பிகைக்கு தனி சன்னதி கட்ட ஏற்பாடாகி கொண்டிருந்த வேளையில், சிவசைலத்திற்கு அருகே உள்ள சிநேகபுரி (தற்போதைய ஆம்பூர்) என்னும் ஊரில் வாழ்ந்த அந்தணர் ஒருவரின் கனவில் தோன்றி அந்த ஊரில் உள்ள கிணறு ஒன்றில் அம்மையின் திருமேனி ஒன்று நான்கு கரங்களுடன் ஜலவாசமாக இருந்து வருவதாகவும், அந்த அம்பாள் திருமேனியை எடுத்து சிவசைலத்தில் கட்டப்படும் கோவிலுக்குள் பரமகல்யாணி என்ற பெயர் சூட்டி பிரதிஷ்டிக்கும் படி கூறியருள்கிறார் சிவபெருமான். அந்த அந்தணரும் தான் கண்ட கனவை ஊர் மக்களுக்கும், மன்னனுக்கும் தெரியப்படுத்தி, அந்த குறிப்பிட்ட கிணற்றில் தேடிட சிவபெருமான் கூறியது போலவே ஒரு நான்கு கரங்கள் கொண்ட அழகிய அம்மையின் திருவுருவ சிலை கிடைக்க பெற்றது. அந்த அம்மையின் திருவுருவை மங்கள வாத்தியங்கள் முழங்க அங்கிருந்து எடுத்து வந்து சிவசைலம் கோவிலில் பிரதிஷ்டை செய்ததாகவும் வரலாறு கூறுகிறது.
இங்குள்ள அம்பிகை நான்கு கரங்கள் கொண்டு அழகே உருவாக புன்முறுவல் பூத்த முகத்தவளாய் அளவில் சற்றே பெரிய உருவில் காட்சித் தருகிறாள். பாண்டிய நாட்டில் பிரசித்தி பெற்ற அநேக கோவிலின் அம்பிகைகள் இருகரம் கொண்டவர்களாக காட்சியளிக்க, இங்கு அம்பிகை பரமகல்யாணி, நான்கு கரங்கள் கொண்டு காட்சியளிப்பது சிறப்பம்சம் ஆகும். இங்குள்ள உற்சவர் பரமகல்யாணி அம்பிகையும் நான்கு கரங்கள் கொண்டு காட்சியளிக்கிறாள்.
உற்சவர் பரமகல்யாணி அம்பிகைக்கு தங்கக் கை கடிகாரம் ஆபரணமாக அணிவிக்கப்படுவது சிறப்பம்சம். விழாக் காலங்களில் இடது கரத்தில் தங்க கைக்கடிகாரத்தை ஆபரணமாக சார்த்துவார்கள்.இந்த அலங்கார நடைமுறை வேறு எந்த தவத்து அம்பிகைக்கும் செய்யப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நிசும்பசூதனி (என்ற) வட பத்ரகாளியம்மன் கோவில்
சோழ மன்னர்களின் குல தெய்வம்
சோழர்கள் தங்கள் குல தெய்வமாக வணங்கிய அம்மன் நிசும்ப சூதனி என்கின்ற அம்பாயிரம்மன். கி.பி. 850 இல் உறையூரில் சிற்றரசனாக பதவி ஏற்ற விஜயாலய சோழன். பின்பு தஞ்சையை ஆண்ட முத்தரையர்களை வீழ்த்தி தலைநகரை பழையாறையில் இருந்து தஞ்சைக்கு மாற்றினார். அங்கே தனது வெற்றிக்கு காரணமான நிசும்பசூதனி தேவிக்கு கோவில் எழுப்பினார். பின்பு வந்த இராஜ இராஜ சோழன், இராஜேந்திர சோழன் என அனைத்து சோழ மன்னர்களும் போருக்கு செல்வதற்கு முன், இந்த அம்மனை வணங்கி விட்டு சென்று வெற்றியுடன் திரும்பினர். தங்கள் வெற்றிக்கு காரணமான நிசும்பசூதனியை குல தெய்வமாக வழிப்பட்டனர். இவளே தஞ்சையை காக்கும் காவல் தெய்வம் ஆனாள்.
நிசும்பசூதனி என்ற பெயர் வரக் காரணம்
முன்னொரு காலத்தில் சும்பன், நிசுபன் என்ற இரு அரக்கர்கள் மக்களையும், தேவர்களையும், ரிஷி முனிகளையும் துன்புறுத்தி வந்தனர். இவர்களின் கொடுஞ்செயல் தாளாது அனைவரும் கொற்றவையை (துர்கை) நாடினர். கௌசீகி என்ற அழகிய பெண் உருவம் கொண்டிருந்த அம்பிகையை கண்டு சும்ப, நிசும்பர்களின் படைவீரர்களான சண்ட, முண்டர்கள் தங்கள் அரசனிடம் கூற அவளை அடைய வேண்டும் என்று மோகம் கொண்டு அவளை பிடித்து வர உத்தரவிட்டனர். தன்னை எவர் வெற்றி கொள்கிறாரோ அவர்களையே மணப்பேன் என்று கூறிய அன்னையிடம் சண்ட முண்டர்கள் போர்ப் புரிய துவங்கினர். அம்பிகை உக்ர ரூபம் கொண்டு சண்ட முண்டர்களை அழித்தாள். அதன் பின் அசுர குல அரசர்களான சும்ப, நிசும்பர்களை அழித்து வெற்றி கொண்டு 'நிசும்பசூதனி' என்ற நாமம் கொண்டாள்..
நிசும்பசூதனியின் வித்தியாசமான தோற்றம்
சோழர்கள் நிற்மானித்த தஞ்சை நிசும்பசூதனி ஆலயம் 1100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான ஆலயம் ஆகும். இன்றளவும் பொலிவு மாறாமல் காணப்படுகிறது. கருவறையில் அன்னை வேறெங்கும் காண முடியாத தோற்றத்தில் காட்சி தருகிறாள்.
ஏழு அடி உயரத்தில், மெலிந்த தேகம், உடல் சதையற்று எலும்புகள் வெளியே தோன்றும், எட்டு திருக்கரங்கள், தீச்சுவாலையாக திருமுடி. நிசும்பனின் தலை கொய்து, தலைமீது அழுத்திய மெலிந்த திருவடி, தெற்று பற்கள், முப்புரி நூலாக மண்டை ஓடுகள், நிசும்பனை அழிக்கும் திரிசூலம் என அசுரன் மீது அமர்ந்த நிலையில் காட்சியளிக்கிறாள் அன்னை. எட்டு கரங்களில் சூலம், கேடயம், வாள், தனுசு, அம்பு, கபாலம், பாசம், மணியை தாங்கி தலையை சற்று சாய்த்தவாறு அருமையாக வடிவமைத்துள்ளனர். இங்கே வீழ்ந்து இருக்கும் நான்கு அசுரர்களும் சண்டன், முண்டன் மற்றும் சும்ப, நிசும்பர்கள் ஆவர்.
இந்த அம்பிகையே தற்பொழுது 'வட பத்ரகாளியம்மன்' என்ற பெயருடன் தஞ்சையை காவல் புரிகிறாள். கோர ரூபம் என்றாலும் பக்தர்களுக்கு அருள்புரியும் கருணைக்கடலாய் திகழ்கிறாள் அன்னை நிசும்பசூதனி. மகிடனை அழித்த கொற்றவையின் அம்சமாக தோன்றிய நிசும்பசூதனியை இராகு காலம் மற்றும் அட்டமி நாளில் வணங்குவது மிகவும் சிறப்பாக கருதப்படுகிறது.
இக்கோவிலுக்கு தொடர்ந்து 9 வாரங்கள் செவ்வாய் அல்லது வெள்ளி அல்லது ஞாயிறு கிழமைகளில் ராகு நேரத்தில் சென்று வழிபட்டால் ராகு, கேது தோஷங்களான தார தோஷம், களத்திர தோஷம், செவ்வாய் தோஷம், திருமணத் தடை, தொழில் தடை போன்றவற்றிற்கு நிவர்த்தி கிடைக்கும்.

துர்கா பரமேசுவரி கோவில்
வித்தியாசமான கோலத்தில் காட்சி தரும் துர்கை அம்மன்
கர்நாடக மாநிலம் மங்களூர் நகரத்திலிருந்து 29 கி.மீ. தூரத்தில் உள்ள கட்டீல் தலத்தில் அமைந்துள்ளது துர்கா பரமேசுவரி கோவில். கனககிரி மலைக்கும், பர்வஞ்சே என்ற இடத்திற்கும் நடுவே கட்டீல் அமைந்துள்ளது. இத்தலத்தில் பாயும் நந்தினி நதியின் நடுவே துர்கா பரமேசுவரி கோவில் அமைந்துள்ளது. முனிவர் ஒருவர் சாபத்தால் தேவலோக பசுவான காமதேனுவின் மகளான நந்தினி இங்கே நதியாக பாய்கிறாள்.
அருணாசுரன் என்ற அரக்கன் பிரம்ம தேவரை வழிபட்டு அரிய பெரிய வரங்களைப் பெற்றான். பின்னர், அவற்றைக் கொண்டு தேவர்களையும், முனிவர்களையும், உலக உயிர்களையும் துன்புறுத்தினான். அவனை அம்பாள் தேனீ வடிவில் வந்து அழித்தாள். பின்னர் தன் அடியவர்களின் வேண்டுகோளுக்கிணங்க இத்தலத்தில் எழுந்தருளினாள்.
கடிலா என்பது தேவியின் இடுப்புப் பகுதியைக் குறித்ததினாலும் , அவள் நதிக்கு இடையில் தோன்றியதால் நடு என்ற அர்த்தம் தரும் வகையில் கடி எனவும் , இடம் என்ற அர்த்தத்தை தரும் லா என்ற சொல்லும் இணைந்த சொல்லான கடி லா என்ற பெயரில் அங்கு ஆலயம் எழும்ப, பின்னர் கடிலா என்பது மருவி கட்டீல் என ஆயிற்று.
இக்கோவிலில், துர்கை அம்மன் உட்கார்ந்த நிலையிலும் இல்லாமல், நின்ற நிலையிலும் இல்லாமல் வித்தியாசமான கோலத்தில் காட்சி தருவது ஒரு தனிச் சிறப்பாகும். நதிக்கு நடுவில் அம்மன் எழுநந்நருளியிருப்பதால் கர்ப்பகிரகம் ஈரமாக இருப்பதுடன், இங்கு பிரசாதமாக வழங்கப்படும் குங்குமமும் ஈரமாக இருக்கினறது.இந்த துர்கை அம்மனுக்கு இளநீர் அபிஷேகம் மிகவும் பிரசித்தம். வாரத்திற்கு கிட்டத்தட்ட 3000 இளநீரால் அபிஷேகம் நடை பெறுமாம். அதே போல பாக்குப் பூ அர்ப்பணிப்பதும் விசேஷம். சுற்று வட்டார தென்னை விவசாயிகள் தங்கள் தென்னந் தோப்புகளில் தேங்காய் நிறைய காய்க்க வேண்டும் என்று இங்கே வழிபாடு செய்கிறார்கள். வேண்டுதல் பலித்ததும் தென்னங்கன்றுகளை கோவிலுக்கு காணிக்கையாக்குகின்றனர்.

சந்திரமவுலீஸ்வரர் கோவில்
திருவக்கரை வக்ரகாளியம்மன்
தேவாரப் பாடல் பெற்ற தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றான திருவக்கரை சந்திரமவுலீஸ்வரர் ஆலயத்தில் உள்ளது வக்ரகாளியம்மன் சந்நிதி.
பொதுவாக காளி கோவில், ஊரின் எல்லையில்தான் இருக்கும். ஆனால் இங்கு ஊரின் நடுவில் ராஜ கோபுரத்தின் நுழைவு வாயிலின் அருகிலேயே அமைந்து, வித்தியாசமானதாக உள்ளது.
வக்கிரகாளியின் திருவுருவம் பிரமிப்பாக இருக்கிறது. சுடர் விட்டு பரவும் தீக்கங்குகளைப் பின்னணியாகக் கொண்ட தலை, மண்டை ஓட்டுக் கிரீடம், வலது காதில் சிசுவின் பிரேத குண்டலம் அணிந்திருக்கிறாள்.
காளியம்மனின் வலப்புறம் உள்ள நான்கு திருக்கரங்களிலும் மேலிருந்து முறையே பாசம், சக்கரம், வாள் மற்றும் கட்டாரி ஆகியவற்றை ஏந்தி காட்சித் தருகின்றாள். அதேபோல இடப்புறத்தில் மேலிருந்து முறையே உடுக்கை வைத்திருக்கும் பாவனையுடன் ஒரு திருக்கரம், அடுத்து கேடயம் மற்றும் கபாலம் ஏந்தியிருக்கும் இரு திருக்கரங்கள் மற்றும் இறுதியாக இடதுகாலை ஒட்டிக் கை விரல்களை லாவகமாக மடக்கி ஆள்காட்டி விரலால் அம்மன் தனது இடது பாதத்தைச் சுட்டிக்காட்டும் பாவனையில் அமைந்த திருக்கரம் என நான்கு திருக்கரங்களுடன் அருள்புரிகின்றாள். அன்னையின் மார்பிற்கு குறுக்கே மண்டை ஓட்டு மாலை காணப்படுகிறது. தர்மத்திற்கு எதிராக அக்கிரமம் செய்பவர்களை அழித்து அவர்களது மண்டை ஓடுகளை சேர்த்து மாலையாக அணிந்துள்ளாள்.
வக்கிரகாளி தலையை சற்று இடதுபுறமாக சாய்த்தபடி அமர்ந்த திருக்கோலத்தில் அருள்புரிகின்றாள். கோரைப் பற்களுடன் சினம் கக்கும் பெரிய உருண்டை விழிகளால் பூமியை நோக்குகின்றாள். அம்மன் வலது காலைச் சற்றே தூக்கி மடித்து அமர்ந்துள்ள பீடத்தில் ஊன்றியபடியும், இடது காலை தரையில் ஊன்றியபடியும் உடலை சற்று வலப்புறம் திருப்பிய நிலையில் அமர்ந் துள்ள காட்சி வேறு எங்கும் காணக்கிடைக்காத கண் கொள்ளாக் காட்சி ஆகும்.
வக்ராசூரன் என்ற அசுரனை வரதராஜப் பெருமாள் சம்காரம் செய்கிறார். அந்த வக்ராசூரனின் தங்கை துன்முகியை, வக்ர காளி சம்காரம் செய்யும் போது அந்த ராட்சசி துன்முகி கர்ப்பமாக இருந்தாளாம். குழந்தையை வதம் கூடாது என்பது தர்ம சாஸ்திரம். எனவே துன்முகியின் வயிற்றில் கருவிலுள்ள குழந்தையை காளி தனது வலது காதில் குண்டலமாக அணிந்து கொண்டு ராட்சசியை சம்காரம் செய்தாளாம். வக்கிராசூரனின் தங்கையை அழித்ததால் வக்ரகாளியாக அங்கேயே அமர்ந்து விட்டாள்.
சம்காரம் பண்ணியதால் வக்ரகாளி ஓங்காரமாக இருந்திருக்கிறாள். ஆதி சங்கரர் வந்து காளியை சாந்தம் செய்து இடது பாதத்தில் ஸ்ரீ சக்ர ராஜ எந்திரத்தை பிரதிஷ்டை செய்துள்ளார்.
ராகு கேது கிரகங்களுக்கு அதிதேவதை காளி என்பதால் இக்கோவிலை வலம் வர நினைப்பவர்கள் வலப்பக்கமாக ஐந்து முறையும், இடப்பக்கமாக நான்கு முறையும் வலம் வந்து தொழ வேண்டும் என்பது ஐதீகம்.
பவுர்ணமி இரவு, அமாவாசை நண்பகல் ஜோதி தரிசனம்
பவுர்ணமி இரவு 12 மணிக்கும் அமாவாசை பகல் 12 மணிக்கும் வக்ரகாளியம்மனுக்கு ஜோதி தரிசனம் காட்டும் போது லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலில் கூடுகிறார்கள். வக்ரகாளியம்மன் சன்னதியின் கோபுர மண்டபத்திற்கு மேல் சூடம் ஏற்றுவார்கள். அந்த தீபத்தை தரிசனம் காணுவது இத்தலத்தின் முக்கிய விசேஷம் ஆகும்.

சூரியகோடீசுவரர் கோவில்
பக்தர்களை எழுந்து வந்து வரவேற்கும் அபூர்வத் தோற்றத்தில் துர்க்கை அம்மன்
கும்பகோணத்தில் இருந்து, கஞ்சனூர், திருலோகி கிராமங்களை அடுத்து 15.கி.மீ தொலைவில், சூரியனார் கோவிலுக்கு அருகே மைந்துள்ளது கீழசூரியமூலை என்ற தலம். இறைவன் திருநாமம் சூரியகோடீசுவரர். இறைவி பவளக்கொடி.
இக்கோவிலில் எழுந்தருளியிருக்கும் துர்க்கையின் ஒரு பாதத்தில் மட்டும் மெட்டி உள்ளது. மேலும் துர்க்கையின் இரு பாதங்களும் ஒன்றுக்கொன்று நேரான நிலையில் இல்லை. அதாவது துர்க்கை அம்மன் தன் வலது காலை சற்று முன்பக்கமாக நீட்டி வைத்துக்கொண்டு காட்சி தருகிறாள். இந்த தோற்றமானது, தன்னைத் தரிசிக்க வரும் பக்தர்களை துர்க்கை அம்மன் வலது காலை முன் வைத்து எழுந்து, அவளே முன்னால் வந்து வரவேற்பது போல தோன்றும். துர்க்கை அம்மனின் இந்த தோற்றத்தை நாம் வேற எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது.
வலது காலில் ஆறு விரல்கள் உள்ள மகாலட்சுமி
இக்கோவிலின் குபேர மூலையில், பத்மாசனத்தில் வீற்றிருக்கும் மகாலட்சுமியின் வலது காலில் ஆறு விரல்கள் அமைந்துள்ளன. 'ஆறு' என்பது சுக்கிரனுக்குரிய எண் ஆகும். எனவே சுக்கிரனின் சக்தி அவளிடம் பூரணமாக உள்ளது. எப்போதும் சுக்கிரனுடைய அனுக்கிரகத்திலேயே இருப்பதால், அவளை வழிபடும் பக்தர்களுக்கு செல்வத்தை வாரி வழங்குபவளாக விளங்குகின்றாள்.

இருக்கன்குடி மாரியம்மன் கோவில்
இருக்கன்குடி மாரியம்மனின் சிறப்பம்சம்
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் எனும் ஊரிலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது இருக்கன்குடி மாரியம்மன் கோயில்.
வழக்கமாக, கோவில்களில், மாரியம்மன், இடது காலை மடித்து, வலது காலைத் தொங்கவிட்டபடிதான் இருப்பார். ஆனால் இந்தக் கோயிலில் இருக்கும் மாரியம்மனோ, வலது காலை மடித்து, இடது காலைத் தொங்கவிட்டிருக்கிறார். இந்த அமைப்பே, 'இருக்கன்குடி மாரியம்மனின் மிகப் பெரிய சிறப்பம்சமாகும்.
இருக்கன்குடி என்று பெயர் வரக் காரணம்
கோயிலின் தெற்குப் பக்கம் வைப்பாறு, வடக்குப் பக்கம் அர்ச்சுனன் ஆறு என்று இரு ஆறுகள் சேர்ந்து வருவதால் இரு கங்கை கூடுமிடம் என்று சொல்லப்பட்டு, இந்த இடத்தில் அம்மன் குடி கொண்டு விட்டதால், 'இரு கங்கை' குடி என்று இருந்து, பின்னாளில் அது, 'இருக்கன்குடி' என்றாகி விட்டது.
மாரியம்மன் கோவில் உருவான வரலாறு
சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு சாணம் பெருக்க வந்த இருக்கன்குடி கிராமத்தை சார்ந்த பெண் ஒருத்தி, கூடையை வைத்துச் சாணம் பொறுக்கி சேர்த்திருக்கிறாள். ஓரளவு சாணம் சேர்ந்த பின்பு, அந்த இடத்தில் இருந்து கூடையை எடுக்க முயன்று இருக்கிறாள். அந்தக் கூடையை எடுக்க முடியவில்லை. அப்பொழுது அவள் சாமி வந்து ஆடியிருக்கிறாள். சாமியாடிய அந்தப் பெண், அந்தக் கூடை இருக்கும் இடத்தில், சிலையாகப் புதைந்து கிடக்கும் தன்னை வெளியில் எடுத்து, கோயில் அமைத்து வணங்கினால், அனைத்து வேண்டுதல்களையும், நிறைவேற்றித் தருவதாகத் தெரிவித்திருக்கிறார். அதன் பிறகு, மக்கள் அந்த இடத்தில் புதைந்து கிடந்த சிலையை எடுத்துக் கோயில் அமைத்து வழிபடத் துவங்கினர்.
குழந்தை வரம் அருளும் மாரியம்மன்
ஆடி, தை, பங்குனி மாதங்களில் கடைசி வெள்ளிக்கிழமைகளில் பக்தர்கள் இத்தலத்திற்கு அதிக அளவில் வருகின்றனர். இங்கு, குழந்தையில்லாதவர்கள், குழந்தை வேண்டி தொட்டில் கட்டி வேண்டுகின்றனர். உடல் குறைபாடுள்ளவர்கள், உருவம் செய்து வைத்து வழிபடுகின்றனர். கண் நோய், வயிற்று வலி, அம்மை, கை, கால் வலி உள்ளவர்கள் இந்த மாரியம்மனை வணங்கினால் நோய் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

அகத்தீஸ்வரர் கோவில்
திருமேனியைத் தட்டினால் ஓசை தரும் அம்மன்
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம்-பந்தநல்லூர் சாலையில் திருப்பனந்தாளில் இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது மேலக்காட்டூர். இத்தலத்து இறைவன் அகத்தீஸ்வரர். இறைவி அகிலாண்டேஸ்வரி.
அம்பிகை அகிலாண்டேஸ்வரி நான்கு கரங்களுடன், முகத்தில் புன்னகை தவழ நின்ற கோலத்தில் காட்சி தருகிறாள். அம்பிகை தன் மேல் இரண்டு கரங்களில் தாமரை மலரையும் கீழ் இரண்டு கரங்களில் அபய வரத ஹஸ்த முத்திரைகளுடன் அருள்பாலிக்கிறாள். இந்த அம்பிகையின் திருமேனியில் அர்ச்சகரின் மோதிரமோ அல்லது அர்ச்சனை தட்டோ அல்லது வேறு ஏதாவது உலோகமோ பட்டால், சப்த ஸ்வரங்களுடன் ஓசை வெளியிட்டு, கேட்பவரை மெய் சிலிர்க்க வைக்கிறது.
இதனால் இங்கு அருள்பாலிக்கும் அம்பிகையை 'ஓசை அம்மன்' என்று பக்தர்கள் கூறுகின்றனர்.
இந்த ஆலயத்தில் இறைவன் அகத்தீஸ்வரர் சன்னிதியில் குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு, குழந்தையை தத்துக் கொடுக்கும் வைபவமும் சிறப்பாக நடைபெறுகிறது. அந்தக் குழந்தை மட்டுமல்ல, குழந்தையை தருபவர்களும், பெறுபவர்களும் இறைவன் அருளால் நிறைவாக வாழ்கிறார்கள் என்று பக்தர்கள் கூறுகின்றனர்.
இறைவன் அகத்தீஸ்வரரின் தேவ கோட்டத்தில், தென்புறம் தட்சிணாமூர்த்தியின் திருமேனி உள்ளது. இவரது அமைப்பு வித்தியாசமாக உள்ளது. அமர்ந்த நிலையில் உள்ள தட்சிணாமூர்த்தியின் காலை, அவரது பின்புறம் இருந்து நந்தி தேவர் தனது நாவால் வருடிக் கொண்டிருக்கும் காட்சி புதுமையாக உள்ளது. நந்தி தேவர் தனது நாவால் குருபகவானை வருடுவதால், குருபகவான் கண் துயிலாது பக்தர்களின் கோரிக்கைகளை எந்த நேரத்திலும் கேட்டு அருள்பாலிக்கிறார் என்று இதற்கு விளக்கம் சொல்லப்படுகிறது.

சங்கரநாராயணர் கோவில்
கோமதி அம்மனின் ஆடித்தபசு
மதுரையிலிருந்து சுமார் 120 கி.மீ. தூரத்திலுள்ள சங்கரன்கோவில் என்னும் ஊரில் அமைந்துள்ளது சங்கரநாராயணர் கோவில். இறைவன் சங்கரலிங்கசுவாமி. இறைவி கோமதி அம்மன். கோ என்றால் பசுக்கள். மதி என்றால் நிலவு போன்ற முகம் கொண்டவர் என்று பொருள்.
கருவறையில் கோமதி அம்மன் அழகே உருவானவளாக ஸ்ரீசக்ர பீட பஞ்ச பிரம்மாசனத்தின் மேல் வலது இடை நெளிந்து, வலது கையில் மலர்பாணம் மற்றும் பூச்செண்டு எந்தியவளாக, இடது கையை பூமியை நோக்கி தளரவிட்டவளாக இளமங்கை கோலத்தில் புன்னகை பூத்த முகத்துடன் சர்வாலங்கார பூஷிதையாக கருணை பொங்க காட்சி தருகிறாள்.
கோமதி அம்மன் ஆடித்தபசு மேற்கொண்டதின் பின்னணி
சங்கரன் கோவிலில் அன்னை கோமதியை பிரதானப்படுத்தி நடக்கும் திருவிழா ஆடித்தபசு விழா ஆகும். மக்களுக்காக கோமதி அம்மன் ஊசி முனையில் தவம் இருந்தார். அரியும் ஹரனும் இணைந்து சங்கர நாராயணராக ஆடி மாதத்தின் உத்திராட நாளில் கோமதி அம்மனுக்கும், சங்கன், பதுமன் ஆகியோருக்கும் காட்சியளித்ததை நினைவுகூரும் வகையில் ஆடி மாதத்தில் தபசு விழா கொண்டாடப்படுகிறது.
சங்கன், பதுமன் என்ற இரு நாக வம்சத்து அரசர்களுக்கு இடையே ஒரு போட்டி இருந்தது. சங்கன் சிவனை வணங்குபவர். பதுமன் நாராயணரை வணங்குபவர். சங்கன் தன் கடவுளான சிவனே அதிக ஆற்றல் உள்ளவர் என்றும் பதுமன் தன் விருப்பக் கடவுளான திருமாலே அதிக ஆற்றல் உடையவர் என்றும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இருவரும் அம்மனிடன் சென்று முறையிட்டனர். சங்கன், பதுமன் மட்டுமின்றி, இறைவனின் முழு வடிவத்தை உலக மக்கள் உணர வேண்டும் என அம்மன் சிவனிடம் வேண்டி, தன் தோழியர்கள் பசுக்கூட்டங்களாக உடனிருக்க ஆவுடை நாயகியாக ஒற்றைக்காலில் ஊசி முனையில் இறைவனை நோக்கி தவம் இருந்தாள். அம்மனின் வேண்டுகோளுக்கு இணங்க சிவன், சங்கரநாராயணராகக் (சங்கரன்-சிவன்; நாராயணன்-திருமால்) காட்சியளித்தார். ஒரு புறம் சிவப்பு, மறு புறம் சியாமளம் ஒரு புறம் கங்கை சந்திரன் சடைமுடி, மறு புறம் வஜ்ர மாணிக்க மகுடம் ஒரு புறம் மழு, மறு புறம் சங்கு ஒரு புறம் புலித்தோல், மறு புறம் பீதாம்பரம், ஒரு புறம் ருத்திராட்சம், மறு புறம் துளசி மாலை , ஒரு புறம் வைணவன் பத்மன், ஈசனுக்குக் குடை பிடிக்கிறான்; மறு புறம் சைவச் சங்கன் பெருமாளுக்குக் குடை பிடித்து நிற்க அரிஹரனாய் காட்சி தந்தார் இறைவன்.
கடவுளர் இருவருமே சமம் என்றும், அன்பினாலும் தியாகத்தாலும் மட்டுமே இவர்களை அடைய முடியும் என்றும், சிவனும் திருமாலும் இணைந்த சங்கரநாராயணர் தோற்றத்தால் உணர்த்தப்பட்டது. பசுக்களுடன் அன்னை தவம் இருந்ததால் கோமதி என்று அழைக்கப்பட்டார்.நாகர் இருவரும் இறைவனை வழிபட்டு, கோமதி அம்மனுடன் தங்கினர்.
பிரதான பிரசாதமாக புற்று மண்
சங்கரன்கோவில் பாம்புகள் சங்கன்,பதுமன் வழிபட்ட கோவில் என்பதால் இங்கு புற்று இருக்கிறது. புற்று மண்தான் பிரதான பிரசாதம். நோயுள்ளவர்கள் இந்த மண்ணை நீரில் கரைத்து சாப்பிடுகின்றனர். இதனால் சரும நோய்கள் நீங்குகின்றன. மேலும் வீடுகளில் பூச்சி, பல்லி, வயல்களில் பாம்புத் தொல்லை இருந்தால், மூலவர் சங்கரலிங்கனாருக்கு வேண்டிக் கொண்டு, அந்தந்த பூச்சிகளின் உருவங்களை வாங்கி உண்டியலில் காணிக்கையாக அளித்தால் தொல்லை நீங்கும். ஆடித்தபசு நாளில் அம்பிகையையும், சங்கரலிங்கரையும், சங்கரநாராயணரையும் வழிபட நன்மைகள் நடக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும் என்பது நம்பிக்கையாகும்.

நம்புநாயகி அம்மன் கோவில்
நம்பி வந்தவர்களைக் காக்கும் அம்மன்
ராமேஸ்வரத்தில் இருந்து தனுஷ்கோடி செல்லும் சாலையில் 5 கீ.மீ. தொலைவில் நம்புநாயகி அம்மன் கோவில் உள்ளது. இத்தலத்தில் அம்மன் நம்புநாயகி என்ற திருநாமத்துடன் வீற்றிருந்து அருள்புரிகிறாள். அம்மனை நம்பி வந்து வேண்டுவது நடப்பதால், நம்பு நாயகி அம்மன் என்று அழைக்கப்படுகிறாள். இப்பகுதி மக்களின் கண் கண்ட தெய்வமாக விளங்குகின்றாள். நம்பு என்பது ராமேஸ்வரம் தீவை சுற்றி மிகவும் பொதுவான மற்றும் பிரபலமான வார்த்தை.அதனால் இப்பகுதி மக்களின் பெயர் நம்பு குமார், நம்பு லட்சுமி, நம்பு ராஜன் என்று இந்த அம்மனின் பெயரை இணைத்துதான் இருக்கும்.
நம்புநாயகி அம்மன் கோவில் தல வரலாறு
ஒரு சமயம் இத்தலத்தில் தட்சிணத்துருவன், பச்சிமத்துருவன் என்ற இரண்டு முனிவர்கள் ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மனை நோக்கி கடுமையான தவம் மேற்கொண்டிருந்தனர். அவர்களது தவத்தை கண்டு மெச்சிய அம்மன் அவர்களுக்கு காளி தேவியாக காட்சி கொடுத்தாள். அன்றிலிருந்து இரண்டு முனிவர்களும் அந்த காட்டிலேயே காளியை வழிபட்டு வந்ததாகவும், அவளின் அருளால் பிணியுற்றவர்களுக்கு நோய் போக்கும் பணியை செய்து வந்ததார்கள். இரண்டு முனிவர்களும் குறிப்பிட்ட காலத்திற்கு பின்பு கற்பகோடி காலம் கண்டவர்களாய் இப்பகுதியிலேயே ஆழ்ந்த நிஷ்டையில் சமாதியிலிருந்து வருவதாகவும் நம்பப்படுகிறது. இப்பகுதியை ஆண்டு வந்த சூலோதரன் என்ற மன்னன் இந்த காளியை நம்பி வேண்டி தன் நோய் நீங்கி நலமடைந்தான். அம்மனை நம்பி குணமடைந்ததால் அம்மன் நம்பு நாயகி என அழைக்கப் பெற்றாள்.
சர்வரோக நிவாரண தீர்த்தங்கள்
இக்கோயிலை சுற்றிலும் அமைந்துள்ள நண்ணீர் தடாகங்கள் பல்வேறு நோய்களை போக்கும் தன்மையுடையதாக விளங்குவதால் இவைகள் சர்வரோக நிவாரண தீர்த்தங்கள் என்று அழைக்கப்படுகிறது. அம்பிகையே தீர்த்தங்கள் வடிவில் அருள்கிறாள். தீராத நோய்களை உடையவர்களும், மனநலம் பாதிக்கப்பட்டவர்களும் இக்கோயிலிலேயே மாதக்கணக்கில் தங்கி சர்வரோக நிவாரண தீர்த்தத்தில் தினமும் நீராடி குணமடைகிறார்கள். மஞ்சள் தூள் இந்த கோவிலில் பிரசாதமாக வழங்கப்படுகிறது.
திருமண வரம், மழலைச் செல்வம் அளிக்கும் அம்மன்
திருமணத்தடை உள்ள பெண்களும், கணவனால் கைவிடப்பட்டவர்களும், குழந்தை வரம் வேண்டுவோரும் விரதமிருந்து செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் நம்பு நாயகியை வழிபட்டால் பிரார்த்தனை விரைவில் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

ஆலந்துறைநாதர் கோயில்
அழகும், கம்பீரமும் மிகுந்த துர்க்கையம்மன்
கும்பகோணத்திலிருந்து தஞ்சாவூருக்குச் செல்லும் நெடுஞ்சாலையில் ஐயம்பேட்டையைத் தாண்டி, கண்டியூர் செல்லும் பேருந்துச் சாலையில் சென்றால் தேவாரத் தலமான பசுபதி கோயிலை அடையலாம். இத்தலத்தின் புராணப்பெயர் புள்ளமங்கை. இறைவன் திருநாமம் ஆலந்துறைநாதர். இறைவி அல்லியங்கோதை. இத்தலம் சப்தமாதர்களும், சப்த ரிஷிகளும் வழிபட்ட சப்தஸ்தான தலங்களுள் ஒன்றாகும்.
இக்கோவிலின் வடக்குப் பிரகாரத்திலுள்ள துர்க்கையம்மனின் மகிஷாசுரமர்த்தினி உருவம் தனிச் சிறப்புடையதாகத் திகழ்கின்றது. இந்த துர்க்கையம்மனின் அழகும், கம்பீரமும் பார்ப்பவரை பிரமிக்க வைக்கும். கருங்கல் குடை நிழலில், எட்டுக் கைகளுடன்,எருமைத் தலைமீது நின்ற கோலத்தில் காட்சி தருகிறாள். தன் கைகளில் சங்கு சக்கரம், வாள், வில், கதை, சூலம், கேடயம், அங்குசம் முதலிய ஆயுதங்களை ஏந்தியிருக்கிறாள். துர்க்கையம்மனின் வாகனங்களான சிம்மம் வலதுபுறமும், கலைமான் இடதுபுறமும் இருக்கின்றன. துர்க்கையம்மனின் வாகனங்ககளின் கீழே இரு வீரர்கள் கத்தியால் தலையை அரிந்து தருவதுபோலவும், தொடையைக் கிழித்து இரத்த பலி தருவது போலவும் காட்சித் தருகிறார்கள். துர்க்கையம்மன் திரிபங்கியாய் ஒரு கையில் வில்லேந்தி, மற்றது அபயகரமாக மோதிர விரல் மடக்கிய முத்திரையுடன் இருக்க, பின்புறம் அம்பறாத்தூணி, அம்புகளும் விளங்க துர்கையம்மன் நின்றிருக்கும் கோலம், நேரிலேயே அவளைப் பார்க்கும் சிலிர்ப்பைத் தரும்.
திருநாகேஸ்வரம், பட்டீச்சுரம், திருப்புள்ளமங்கை ஆகிய இம்மூன்று தலங்களிலும் உள்ள துர்க்கையம்மன்கள் ஒரே சிற்பியால் செய்யப்பட்டவை என்றும், இம்மூன்றுமே மிகவும் சக்தி வாய்ந்தவை என்றும் சொல்லப்படுகிறது.

காரைக்கால் அம்மையார் கோவில்
சிவபெருமானால் 'அம்மையே' என்று அழைக்கப்பட்ட பெண் நாயன்மார்
புதுச்சேரி மாநிலத்திலுள்ள காரைக்காலில் அமைந்துள்ளது காரைக்கால் அம்மையார் கோவில். சேக்கிழார் இயற்றிய பெரியபுராணத்தில் கூறப்பட்டுள்ள 63 நாயன்மார்களில் காரைக்கால் அம்மையார் ஒருவர்தான் பெண் இனத்தைச் சேர்ந்தவர். சிவபெருமானால் 'அம்மையே' என்று அழைக்கப்பட்டச் சிறப்புக்குரியவர். இசைத் தமிழால் இறைவனைப் பாடியவர். சிவபெருமானால் மாங்கனி தந்து அவர் ஆட்கொள்ளப்பட்ட வரலாறு, அவர்தம் பக்தியின் சிறப்பை நமக்கு உணர்த்துகின்றது. அதைப் பிரதிபலிக்கும் வகையில் ஆண்டுதோறும் ஆனி மாதத்தில் மாங்கனி திருவிழா காரைக்காலம்மையார் கோவிலில் நடைபெறுவது வழக்கம்.
சிவபெருமான் மாங்கனி தந்து காரைக்கால் அம்மையாரை ஆட்கொண்ட வரலாறு
காரைக்காலிலுள்ள குலத்தைச் சேர்ந்த தனதத்தன் என்பவருக்கு மகளாக பிறந்தவர்காரைக்கால் அம்மையார். இவர் இயற் பெயர் புனிதவதி. சிறுவயது முதல் சிவ பக்தியிலும், சிவனடியார்களுக்கு தொண்டு புரிவதிலும் சிறந்தவர். புனிதவதி வளர்ந்து திருமண வயதை அடைந்ததும், பரமதத்தன் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.திருமணத்துக்கு பிறகும் புனிதவதி சிவனடியார்களுக்கு தொண்டு செய்து வந்தார். ஒரு நாள் பரமதத்தனுக்கு தனக்கு கிடைத்த மாங்கனிகளை தனது வேலையாட்கள் மூலம் வீட்டிற்கு கொடுத்து அனுப்பினான். அப்போது சிவபெருமான், ஒரு சிவனடியார் வேடத்தில் அங்கு வந்தார் சிவன். தாம் பசியுடன் இருப்பதாகவும், உண்ண ஏதாவது உணவு தருமாறும் புனிதவதியை வேண்டினார். அப்போது உணவு தயாரகவில்லை என்பதால் தனது கணவன் கொடுத்து அனுப்பிய மாங்கனிகளில் இருந்து ஒன்றை எடுத்து சிவனடியாருக்கு உண்ணக்கொடுத்தார். அதனை உண்ட சிவனடியார் வேடத்தில் வந்த சிவபெருமானும் புனிதவதியை வாழ்த்தி மறைந்தார். மதிய உணவு உண்பதற்காக வீட்டிற்கு பரமதத்தன், தனது மனைவி புனிதவதியிடம் மாங்கனிகளை எடுத்து வா என்று கேட்டார். புனிதவதியோ, சிவனடியாருக்கு கொடுத்த ஒரு மாங்கனி போக மீதம் இருந்த மற்றொரு மாங்கனியை தன் கணவனிடம் கொண்டு வந்து கொடுத்தார். அக்கனியை உண்ட பரமதத்தன், இரண்டாவது மாங்கனியையும் எடுத்து வருமாறு கூறினார்.
வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்த புனிதவதியோ,சமைக்க சற்று தாமதமாகும் காத்திருங்கள் என்று கூறினார்.அப்போது புனிதவதியாருக்கு தனது கணவன் கொடுத்து அனுப்பிய மாங்கனிகளில் இருந்து ஒன்றை எடுத்து சிவனடியாருக்கு உண்ணக்கொடுத்தார். அதனை உண்ட சிவனடியார் வேடத்தில் வந்த சிவபெருமானும் புனிதவதியை வாழ்த்தி மறைந்தார். மதிய உணவு உண்பதற்காக வீட்டிற்கு பரமதத்தன், தனது மனைவி புனிதவதியிடம் மாங்கனிகளை எடுத்து வா என்று கேட்டார். புனிதவதியோ, சிவனடியாருக்கு கொடுத்த ஒரு மாங்கனி போக மீதம் இருந்த மற்றொரு மாங்கனியை தன் கணவனிடம் கொண்டு வந்து கொடுத்தார். அக்கனியை உண்ட பரமதத்தன், இரண்டாவது மாங்கனியையும் எடுத்து வருமாறு கூறினார்.
சிவபெருமான் கொடுத்த மாங்கனி
இதைக் கேட்ட புனிதவதி, பூஜை அறைக்கு சென்று சிவபெருமானிடம் மாம்பழம் கொடுத்து அருளுமாறு வேண்டினார். சிவனும் உடனே புனிதவதிக்கு மாங்கனியை அருளினார். அதனை பெற்றுக் கொண்ட புனிதவதி, தன் கணவன் பரமதத்தனிடம் மாங்கனியை கொடுத்தாள். அக் கனியை உண்ட பரமதத்தனுக்கு தான் முன்பு சாப்பிட்ட மாங்கனியை விட இரண்டாவது கனி மிகவும் சிறப்பான சுவையுடன் இருந்ததால், புனிதவதியிடம் மாங்கனி சுவையின் வேறுபாடு பற்றி கேட்டான். கணவனின் கேள்விக்கு பொய் சொல்ல விரும்பாத புனிதவதி நடந்தவற்றை மறைக்காமல் தனது கணவனிடம் தெரிவித்தாள். இதனைக் கேட்ட பரமதத்தன், அப்படியானால் சிவபெரு மானிடம் இருந்து இன்னொரு மாங்கனி பெற்றுத் தருமாறு வேண்டினான். புனிதவதியும் சிவபெருமானை வேண்ட இன்னொரு மாங்கனியும் கிடைத்தது. இதனைக் கண்ட பரமதத்தன் தன் மனைவி ஒரு தெய்வம் என்று எண்ணி அவளது காலில் விழுந்து வணங்கினார். தன் மனைவியை விட்டு விலகி பாண்டிய நாடு வந்த பரமதத்தன், குலசேகரன் பட்டிணத்தில் தங்கி வணிகம் செய்ய ஆரம்பித்தான். பிறகு அங்கேயே ஒரு பெண்ணை மணந்து வாழ்ந்து வந்தான். அந்த பெண்ணுக்கு பிறந்த பெண் குழந்தைக்கு தனது முதல் மனைவியின் பெயரான புனிதவதி என்று பெயரிட்டு அழைத்து வந்தான். இந்த தகவலை அறிந்த புனிதவதியார் குலசேகரன்பட்டிணம் வந்து, ஊர் எல்லையில் உள்ள ஒரு மண்டபத்தில் அமர்ந்து கொண்டு கணவனுக்கு அழைப்பு விடுத்தார். தனது இரண்டாவது மனைவி, மகளுடன் வந்து முதல் மனைவியான காரைக்கால் அம்மையார் காலில் விழுந்து வணங்கி, அங்கு கூடியிருந்த மக்களையும் வணங்க வைத்தான்.
சிவபெருமானிடம் பெற்ற வரம்
காரைக்கால் அம்மையார் குலசேகரபட்டினத்தில் கணவருடன் சேர நினைத்து அது இயலாமல் போகவே, கணவனுக்கு தேவையற்ற இந்த இளமையும், அழகும், தனக்கு வேண்டாம் என இறைவனிடம் கூறி துறவறத்திலேயே யாரும் துணியாத நிலையான பேய் வடிவினை வரமாகக் கேட்டுப் பெற்றார். காரைக்கால் சென்று அம்மை அப்பரை வணங்கிய பின்னர் அங்கிருந்து கயிலாயம் புறப்பட்டுச் சென்றார். காலால் நடப்பது குற்றம் என்று எண்ணிய புனிதவதியார், தனது தலையாலேயே கயிலாயத்தில் நடந்து சென்றார். அப்போது இறைவன், 'அம்மையே! நலமாக வந்தனையோ? நம்மிடம் வேண்டுவது யாது?'' என்று புனிதவதியை நோக்கி கேட்டார். அதற்கு அம்மையார்,'இறைவா! உன்மீது என்றும் நீங்காத அன்போடு நான் இருக்க வேண்டும். பிறவாமை வேண்டும், மீண்டும் பிறந்தால் உம்மை என்றும் மறவாமை வேண்டும். அனுதினமும் உன் திருவடியின் கீழ் இருந்து என்றும் உன் திருநாமத்தை பாடிக் கொண்டிருக்கும் வரம் வேண்டும்' என்று கேட்டார். உடனே சிவபெருமான், 'அம்மையே! நீவீர் பூலோகத்தில் உள்ள திருவாலங்காட்டில் எனது திருவடியின்கீழ் இருந்து பாடும் வரம் தந்தோம்' என்று அருளினார். அதன்படி இன்றும் திருவாலங்காட்டில் உள்ள நடராஜப் பெருமானின் ரத்தின சபையில் காரைக்கால் அம்மையார் அமர்ந்து சிவபெருமானின் நடனத்தை கண்டு மகிழ்கிறார் என்பது ஐதீகம். 63 நாயன்மார்களில் காரைக்கால் அம்மையார்தான் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார் என்பது குறிப்பிடதக்கது.
சிவபெருமானைத் துதித்து, காரைக்கால் அம்மையார் அற்புதத் திருவந்தாதி, திருஇரட்டை மணிமாலை, திருவாலங்காட்டு மூத்தத்திருப்பதிகம் போன்ற நூல்களைப் பாடியுள்ளார்.
பிள்ளை வரம் தரும் மாங்கனித் திருவிழா
இந்த ஆண்டு மாங்கனி திருவிழா ஜூலை மாதம்10 முதல் 14ம் தேதி வரை நடைபெற உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஜூலை 10-ந் தேதி மாப்பிள்ளை அழைப்பும், 11-ந் தேதி திருக்கல்யாணமும், 13-ந் தேதி சிவபெருமான் பிச்சாண்டவர் கோலத்தில் பவளக்கால் சப்பரத்தில் வீதியுலாவும் நடக்கிறது. வீதியுலாவின்போது பக்தர்கள், தங்கள் நேர்த்திக்கடனை தீர்க்கும் வகையில், மாங்கனிகளை வாரி இறைப்பார்கள். அப்போது மக்கள் உயரமான இடத்திலிருந்து வீதியில் மாங்கனிகளை வீசுவர். மாடிகளிலிருந்து இறைக்கப்படும் மாம்பழங்கள் வானத்திலிருந்து மாம்பழ மழை பொழிவதைப் போல் தெரியும். இந்த மாங்கனிகளை பிடித்து சாப்பிட்டால் திருமணம் கை கூடும் என்பதும், குழந்தைப்பேறு கிடைக்கும் என்பதும் ஐதீகம் . குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் மாங்கனிகளை தங்களது சேலையில் தாங்கி பிடித்துக் கொள்வர்.ஜூலை 14-ந் தேதி, அம்மையாருக்கு, சிவபெருமான் காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
பிள்ளை வரம் வேண்டி காரைக்கால் அம்மையார் கோயிலுக்கு வந்து மாங்கனி திருவிழாவின்போது மாங்கனிகளை படைத்து வழிபட்டால் கண்டிப்பாக குழந்தை பிறக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.

காளிகாம்பாள் கோவில்
வாழ்வில் உயர்வு தரும் காளிகாம்பாள் குங்குமப்பிரசாதம்
சென்னை பாரிமுனை பகுதியில் தம்புச் செட்டித் தெருவில் அமைந்துள்ளது காளிகாம்பாள் கோவில். 3000 ஆண்டு பழமையான இக்கோவில் முதலில் கடற்கரைக்கருகில் இருந்ததாகவும் பின்னர் 1639-ம் ஆண்டு தற்போதுள்ள இடத்தில் கட்டப்பட்டதாகவும் கோவில் வரலாறு சொல்கின்றது. இந்த கோவில் கடற்கரையில் இருந்த போது காளிகாம்பாள் மிகவும் உக்கிரமானவளாக இருந்ததாகவும், தம்பு செட்டி தெருவுக்கு மாறிய பிறகு சாந்தம் ஆகி விட்டதாகவும் கூறப்படுகிறது. மச்ச புராணம், வாமன புராணம், கூர்ம புராணம், லிங்க புராணம், பவிஷ்ய புராணம் ஆகிய புராணங்களில் இந்த கோவில் பற்றி குறிப்புகள் உள்ளது. புராணங்களில் இத்தலம் சொர்ணபுரி, பரதபுரி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
காளி அம்மன் எப்போதும் உக்கிரமாகக் காட்சியளிப்பவள். ஆனால் இக்கோயிலில் குடிகொண்டுள்ள அன்னை காளிகாம்பாள வடிவம் எழில் கொஞ்சும் திருமேனியுடன், ஆணவத்தை அடக்கும் அங்குசம். ஜென்ம பாப வலைதனில் இருந்து மீட்கும் பாசம், சுகபோகத்தினை நல்கும் நீலோத்பல மலர் மற்றும் வரத முத்திரை, சோமன், சூரியன், அக்னி என்ற மூன்று கண்கள், நவரத்ன மணிமகுடம், வலது காலைத் தொங்க விட்டுக் கொண்டு அமர்ந்த கோலத்துடன் காணப்படுகிறாள். காளிகாம்பாள் மகாலட்சுமியையும், சரஸ்வதியையும் தன் இரு கரங்களாக பெற்றிருப்பதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அன்னை காளிகாம்பாளை வழிபட்டால் காஞ்சீபுரம் காமாட்சி அம்மனையும், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரரையும் வழிபட்ட பலன் கிடைக்கும்.
சிதம்பரத்தில் வழிபட்டால், திருவண்ணாமலையை நினைத்தால், காளையார் கோவிலில் காலடி எடுத்து வைத்தால், திருவாரூரில் பிறந்தால் மோட்சம் கிடைக்கும் என்பார்கள். அது போல காளிகாம்பாள் கோவிலில் குங்குமப்பிரசாதம் பெற்றாலே வாழ்வில் உயர்வும், மோட்சமும் கிடைக்கும்
குழந்தை பாக்கியம் தரும் மஞ்சள் அபிஷேகம்
திருமணமாகி குழந்தை இல்லாதவர்கள் காளிகாம்பாளுக்கு மஞ்சளால் அபிஷேகம் செய்து, அந்த மஞ்சளை பயன்படுத்தி வந்தால் விரைவில் பலன் கிடைக்கும். செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் ராகு காலத்தில் எலுமிச்சை பழம் தீபம் ஏற்றி வழிபடுவது கூடுதல் நன்மை தரும். காளிகாம்பாளை முறைப்படி தியானித்து வழிபடுபவர்கள் நிச்சயம் செல்வந்தர்கள் ஆகி விடுவார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
வீர சிவாஜி தரிசித்த காளிகாம்பாள்
3 அக்டோபர் 1677 அன்று மராத்தியப் பேரரசர் சிவாஜி காளிகாம்பாள் கோயிலுக்கு வ்ந்து அம்மனை தரிசனம் செய்ததாக, இக்கோவில் கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது.
மகாகவி பாரதி சுதேசமித்ரன் பத்திரிக்கையில் பணியாற்றிய போது இந்த காளியை வந்து மனமுருகி வழிபட்டு நிறைய காளியை போற்றும் கவிகளை இயற்றினார். அவர் பாடிய 'யாதுமாகி நின்றாய் காளி, எங்கும் நீ நிறைந்தாய் காளி!' என்ற பாடலில் வருவது அம்மன் காளிகாம்பாள்தான்.
400 ஆண்டு சரித்திரச் சிறப்பு வாய்ந்த வெண்கலக் கிண்ணித் தேர்
இத்தலத்தில் பூந்தேர், வெண்கலக் கிண்ணித் தேர், வெள்ளித் தேர் என்று மூன்று வகையான தேர்கள் உள்ளன. இந்தியாவிலேயே இக்கோவில் வெண்கலக் கிண்ணித் தேர்தான் மிகப் பெரியது. இந்த வெண்கலக் கிண்ணித் தேரோட்டம் 400 ஆண்டுகளுக்கு மேலாக இக்கோவிலில் நடைப் பெற்று வருகிறது. பல ஆங்கிலேய கலெக்டர்கள் இத்தேரின் வடம் பிடித்திருக்கின்றனர்.இத்தேர் ஓடும்போது வெண்கலத் தட்டுக்கள் எழுப்பும் ஒலி ஆங்கிலேயர்களை மயக்கியது. நமமூர் மக்கள் பரவசமடைந்தனர்.

திருவாரூர் தியாகராஜர் கோவில்
ரௌத்திர துர்க்கை
ரௌத்திர துர்க்கை திருவாரூர் ஆலயத்தின் தெற்கு பிரகாரத்தில் தனி சன்னதியில் எட்டுக் கரங்களுடன் எருமைத் தலையின் மேல் நின்ற கோலத்தில் வடக்கு முகமாக அருள்பாலிக்கின்றாள். இத்துர்க்கையின் வலது புறத்தில் கிளி அமைந்திருப்பது தனிச் சிறப்பு. இத்துர்க்கைக்கு எரிசின கொற்றவை என்ற பெயரும் உண்டு.
ரௌத்திர துர்க்கை அம்மன், ராகு கால நேரத்தில் தன்னை அர்ச்சனை செய்யும் திருமண வயதை எட்டிய குமரிப்பெண்களுக்கும், ஆண்களுக்கும் அவர்களுடைய திருமணத்தடையை நிவர்த்தி செய்து திருமண பாக்கியத்தை அருளுகின்றாள். ரௌத்திர துர்க்கை சன்னதியில் ராகு காலத்தில் அர்ச்சனை செய்பவர்களுக்கு நினைத்த காரியங்கள் முடித்து அம்பிகை அருள்பாலிக்கின்றாள். பிரதி வெள்ளி, ஞாயிற்றுக் கிழமைகளில் இராகுகால பூஜை செய்வது விசேஷம். பதவி உயர்வு வேண்டுவோரும், பணி மாற்றம் வேண்டுவோரும் இத்துர்க்கையை வழிபடுகின்றனர்.
முதன் முதலில் துர்க்கைக்கென்று தனித் துதிப்பாடல் இயற்றப்பட்டது இந்த துர்க்கைக்குத்தான். தேவாரம் பாடிய மூவருக்கும் முன் வாழ்ந்த ஸ்ரீலஸ்ரீஞானசம்பந்த முனிவர் இயற்றிய
மாயவன் தனக்கு முன்னம் மணிமுடியளித்து ஆருர் தூயனை வணங்கி
ஆங்கு துர்க்கையை விதியினால் தாபித்து ஆய்மலர் தூவி அன்பால்
அர்ச்சனை புரியின் மன்ன! நீ உளந்தனில் இன்று நினைந்தது முடியும்
என்றான்.
கோமகன் அசன் ஆருரில் கொற்றவை தனை ஸ்தாபித்து நமநீர்
உலகமெல்லாம் நன்னலார் வணங்கி ஓம்பி, ஏமுறுங்காதை இதை
இசைப்பவர் இனிது கேட்போர் தாம் மற்றவர் போல் வையந்தனில்
அரசாள்வர் மாதோ.
என்ற பாடல்களிலிருந்து, இந்த துர்க்கையை செவ்வரளி மலர் கொண்டு வழிபடுபவர்களுக்கு அவர்கள் வேண்டிய கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும் என்று அறியலாம்.