அறகண்டநல்லூர் அதுல்யநாதேசுவரர் கோவில்

அறகண்டநல்லூர் அதுல்யநாதேசுவரர் கோவில்

சனி பகவான் தனது வாகனமான காகத்தின் மேல் காலை வைத்தபடி இருக்கும் வித்தியாசமான கோலம்

திருக்கோயிலூரில் இருந்து 2 கி.மீ. (விழுப்புரத்தில் இருந்து 37 கி.மீ.) தொலைவிலுள்ள தேவார தலம் திருஅறையணிநல்லூர் (அறகண்டநல்லூர்). இறைவன் திருநாமம் அதுல்யநாதேசுவரர். இறைவியின் திருநாமம் அழகிய பொன்னம்மை.இக்கோவில் ஒரு சிறிய குன்றின் மேல் அமைந்துள்ளது.

இக்கோவிலில், நவக்கிரகத்தில் உள்ள சனீஸ்வரர் வலது காலை தூக்கி, காகத்தின் மீது வைத்தபடி வித்தியாசமான கோலத்தில் காட்சி தருகிறார். இவருக்கு அருகிலேயே மற்றொரு சனீஸ்வரர் நின்ற கோலத்தில் தனியாகவும் இருக்கிறார். சனி தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் சனிக்கிழமைகளில் இவ்விரு சனீஸ்வரருக்கும் எள் படைத்து வழிபடுகின்றனர்.

இங்குள்ள காலபைரவர் நாய் வாகனம் இல்லாமல் காட்சி தருவதும், துர்க்கை அம்மன் தெற்கு பார்த்தபடி இருப்பதும் வித்தியாசமான தரிசனம் ஆகும்.

Read More
பாடி திருவலிதாயநாதர் கோவில்

பாடி திருவலிதாயநாதர் கோவில்

குரு பகவானுக்கு தனி சன்னதி அமைந்துள்ள தேவார தலம்

சிறப்பு வாய்ந்த குரு பரிகார தலம்

சென்னை மாநகரின் ஒரு பகுதியான பாடியில் அமைந்துள்ள தேவார தலம் திருவலிதாயநாதர் கோவில். இறைவன் திருநாமம் திருவலிதாயநாதர், திருவல்லீஸ்வரர். இறைவியின் திருநாமம் ஜெகதாம்பிகை, தாயம்மை. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானது இக்கோவில்.

குரு பகவான், தன்னுடைய சாப விமோசனத்திற்காக சிவபெருமானை வழிபட்ட தலம் இது. குரு பகவான், சிவ பூஜை செய்து வழிபட்ட திருத்தலம் என்பதால், இது குரு பரிகாரத் தலமாக விளங்குகிறது. இக்கோவிலில் குரு பகவானுக்கு தனி சன்னதி அமைந்துள்ளது தனிச்சிறப்பாகும். இங்குள்ள குரு பகவானுக்கு, மஞ்சள் வஸ்திரம் சாத்தி, முல்லைப் பூவைக் கொண்டு அர்ச்சனை செய்து, நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்து வந்தால் சகல விதமான தோஷங்களும் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இந்தத் தலத்தில் அருளும் குரு பகவானுக்கு, வியாழக்கிழமை அன்று காலை மற்றும் மாலை வேளைகளிலும், குருப்பெயர்ச்சி காலத்தின் போதும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்படுகின்றது. இதில் கலந்து கொண்டு குரு பகவானை வணங்கினால், தோஷங்கள் அனைத்தும் நீங்கி, நற்பலன்களை அடையலாம். திருமண தடை நீங்க, நல்ல வரன் அமைய வியாழக்கிழமைகளில் இங்குள்ள குரு பகவானுக்கு மஞ்சள் வஸ்திரம், கொண்டைக்கடலை மாலை அணிவித்து வழிபடுகிறார்கள்.

Read More
அறகண்டநல்லூர் அதுல்யநாதேசுவரர் கோவில்

அறகண்டநல்லூர் அதுல்யநாதேசுவரர் கோவில்

பிரதோஷ நந்தி மற்றும் அதிகார நந்தி இரு வேறு திசைகளில் சாய்ந்தபடி இருக்கும் தேவார தலம்

திருக்கோயிலூரில் இருந்து 2 கி.மீ. (விழுப்புரத்தில் இருந்து 37 கி.மீ.) தொலைவிலுள்ள தேவார தலம் திருஅறையணிநல்லூர் (அறகண்டநல்லூர்). இறைவன் திருநாமம் அதுல்யநாதேசுவரர். இறைவியின் திருநாமம் அழகிய பொன்னம்மை. இக்கோவில் ஒரு சிறிய குன்றின் மேல் அமைந்துள்ளது.

இக்கோவிலில் அதிகார நந்தியும், பிரதோஷ நந்தியும் தங்கள் தலையை சாய்த்தவாறு இருப்பது வித்தியாசமான தோற்றமாகும்.இதன் பின்னணியில் ஒரு வரலாற்று நிகழ்ச்சி உள்ளது. திருஞானசம்பந்தர் இத்தலத்திற்கு வந்தபோது, பிற சமயத்தினர் கோவிலை அடைத்து சுவாமி வழிபாட்டை நிறுத்தி வைத்திருந்தனர். திருஞானசம்பந்தர் பதிகம் பாடி கோவில் கதவை திறந்து மீண்டும் வழிபாட்டிற்கு கொண்டு வந்தார். அப்போது அவர் எளிதாக சுவாமியை தரிசனம் செய்ய, பிரதோஷ நந்தி வலதுபுறமாகவும், அதிகார நந்தி இடது புறமாகவும் சற்று சாய்ந்து கொடுத்தது. இதனை உணர்த்தும் விதமாக இங்குள்ள இரண்டு நந்திகளும் இரு வேறு திசைகளில் திரும்பியபடியே இருக்கின்றது.இப்படி இந்த இரு நந்திகளும் இருக்கும் கோலத்தை நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது.

Read More
திருநெடுங்களம் நித்திய சுந்தரேசுவரர் கோவில்

திருநெடுங்களம் நித்திய சுந்தரேசுவரர் கோவில்

இடக்காலைச் சுற்றியவாறு அமர்ந்து, இரண்டு முனிவர்களுடன் மட்டும் இருக்கும் தட்சிணாமூர்த்தியின் வித்தியாசமான தோற்றம்

திருச்சி – தஞ்சாவூர் சாலையில் அமைந்துள்ள துவாக்குடி என்ற ஊரிலிருந்து, நான்கு கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவார தலம் நெடுங்களம். இறைவன் திருநாமம் நித்திய சுந்தரேசுவரர், திருநெடுங்களநாதர், இறைவியின் திருநாமம் மங்களாம்பிகை, ஒப்பிலாநாயகி.

இக்கோவிலில் அமைந்துள்ள தட்சிணாமூர்த்தியின் அமைப்பு சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். கருவறையின் தெற்குப் பக்கத்திலுள்ள தேவ கோட்டத்தில் யோக தட்சிணாமூர்த்தி எழுந்தருளியுள்ளார். யோக தட்சிணாமூர்த்தி சித்தாசனத்தில் அமர்ந்து, மேற்கரங்களில் மான் மழுவும், கீழ்க் கரங்களில் சின் முத்திரையும், இடது கரத்தில் தீச்சுடரைத் தாங்கியவாறும், இடக்காலைச் சுற்றியவாறு யோகப் பட்டம் விளங்கவும் காட்சி தருகிறார். பொதுவாக நான்கு சனகாதி முனிவர்களுக்கு உபதேசம் செய்யும் கோலத்தில் இருக்கும் தட்சிணாமூர்த்தி இத்தலத்தில் இரண்டு முனிவர்களுக்கு உபதேசம் செய்யும் கோலத்தில் இருப்பது வித்தியாசமான தோற்றமாகும்.

Read More
திருவேட்டக்குடி சுந்தரேசுவரர் கோவில்

திருவேட்டக்குடி சுந்தரேசுவரர் கோவில்

சிவபெருமானும், முருகனும் வில்லேந்திய கோலத்தில் இருக்கும் அபூர்வ காட்சி

சிவபெருமான் வேடனாகவும், அம்பாள் தலையில் பானையை வைத்தபடி வேடன் மனைவி போலவும் காட்சி தரும் வித்தியாசமான உற்சவ மூர்த்திகள்

புதுச்சேரி மாநிலம் மாவட்டம் காரைக்காலில் இருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ள தேவார தலம் திருவேட்டக்குடி. இறைவன் திருநாமம் சுந்தரேசுவரர், திருமேனி அழகர். இறைவியின் திருநாமம் சௌந்தரநாயகி, சாந்தநாயகி.

கருவறையில் மூலவர் திருமேனி அழகர் என்கிற சுந்தரேசுவரர் லிங்க வடிவில் சதுர பீடத்துடன் ருத்ராட்ச பந்தலின் கீழ் கிழக்கு நோக்கி அருட்காட்சி தருகிறார். உயரமான பாணத்துடன் தீபாராதனை ஒளி திருமேனியில் தெளிவாகத் தெரிகின்றபடி காட்சி அளிக்கிறார். அம்பாள் சாந்தமான கோலத்தில் இருப்பதால் இவளை சாந்தநாயகி என அழைக்கின்றனர்.

சிவபெருமான் மீனவர், வேடன் என இரண்டு வடிவங்களில் வந்து அருள் செய்த தலம் இது. இங்கு சிவபெருமானின் உற்சவர் வேட மூர்த்தியாக கையில் வில் மற்றும் சூலம் ஏந்தியும், அம்பாள் தலையில் பானையை வைத்தபடி வேடன் மனைவி போலவும் காட்சி தருவது வித்தியாசமான தரிசனம் ஆகும். சிவபெருமான் வேடராக வந்தபோது, அவருடன் முருகனையும் அழைத்து வந்தார். இதன் அடிப்படையில் இங்கு முருகனும் கையில் வில்லுடன் காட்சியளிக்கிறார். ஒரே தலத்தில் சிவபெருமான், முருகன் இருவரையும் வில்லுடன் தரிசனம் செய்வது அபூர்வம்.

இங்கு வேடன் வடிவில் சிவபெருமான் காட்சி தருவதின் பின்னணியில் மகாபாரதம் கதை ஒன்று உள்ளது. பாண்டவர்கள் வனவாசம் செய்த போது அர்ச்சுனன் தீர்த்த யாத்திரை மேற்கொண்டான். அவ்வாறு தீர்த்த யாத்திரை செய்த போது பல தலங்களில் சிவபெருமானை ஆராதித்தான். அப்படி வழிபட்ட தலங்களில் இத்தலமும் ஒன்று. வேதவியாசர் அர்ச்சுனனிடம், சிவனை வணங்கி பாசுபத அஸ்திரம் பெற்றால் எளிதில் துரியோதனரை வெற்றி கொள்ளலாம் என ஆலோசனை கூறினார். அதன்படி அர்ச்சுனன் இத்தலத்திற்கு வந்து சிவனை வேண்டி தவமிருந்தார். அவனது தவத்தை கலைப்பதற்காக, துரியோதனன் முகாசுரனை அனுப்பினார் .

பன்றி வடிவில் வந்த அசுரன் அர்ச்சுனனது தவத்தை கலைக்க முயன்றான். அர்ச்சுனன் அசுரனை அம்பால் வீழ்த்தினான். அப்போது ஒரு வேடன் தன் மனைவி, மகனுடன் அங்கு வந்து பன்றியை தான் வீழ்த்தியாக கூறி எடுத்துச் செல்ல முயன்றார். அர்ச்சுனன் அவரிடம் பன்றியை தர மறுத்தான். இதனால், இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது சிவபெருமான், தானே வேடன் வடிவில் வந்ததை உணர்த்தி, பாசுபத அஸ்திரம் கொடுக்கச் சென்றார். அருகிலிருந்த அம்பாள் சிவனிடம், 'ஆயுதங்களில் உயர்ந்ததான பாசுபதாஸ்திரம் பெறுவதற்கு அர்ச்சுனன் தகுதிபெற்றவன்தானா?' என்று சந்தேகம் எழுப்பினாள். சிவன் அவளிடம், 'அர்ஜுனன் மஸ்யரேகை (அதிர்ஷ்ட ரேகை) பெற்றவன். எனவே, அவனுக்கு அஸ்திரம் கொடுக்கலாம்' என்றார். அர்ச்சுனனும் அம்பாளிடம் பணிந்து நின்று தன் ரேகைகளை காட்டினான். அதன்பின் அம்பாள் சம்மதிக்கவே சிவன் பாசுபத அஸ்திரத்தை அர்ச்சுனனிடம் கொடுத்தார். அர்ச்சுனன் தனக்கு அருள் செய்ததைப் போல இங்கிருந்து அனைவருக்கும் அருளும்படி வேண்டவே சிவபெருமான் இத்தலத்தில் எழுந்தருளினார்.

இறைவனின் திருமேனி நாதர் என்ற பெயருக்கு ஏற்ப, இத்தலத்து இறைவனை வழிபட்டால், நல்ல ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் அருளுவார்.

Read More
இலுப்பைபட்டு நீலகண்டேஸ்வரர் கோவில்

இலுப்பைபட்டு நீலகண்டேஸ்வரர் கோவில்

ஐந்து மூலவர்கள் இருக்கும் தேவார தலம்

பஞ்சபாண்டவர்கள் ஐந்து பேருக்கும் சிவபெருமான் தனித்தனியே காட்சி கொடுத்த தலம்

வைத்தீசுவரன்கோவில் – திருப்பனந்தாள் சாலையில் உள்ள மணல்மேடு என்ற ஊருக்கு வடக்கே ஒரு கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள தேவாரத்தலம் இலுப்பைபட்டு. இத்தலத்தின் புராண பெயர் திருமண்ணிப் படிக்கரை. சிவபெருமான் ஆலகால விஷத்தை பருகியபோது பார்வதி தேவி, சிவபெருமானின் கழுத்தை தன் கரங்களால் அழுத்தி விஷத்தை தொண்டையிலேயே நிற்கச் செய்த கோவில் இது.

பொதுவாக சிவன் கோவில்களில் ஒரு மூலவர் மட்டும்தான் இருப்பார். அரிதாக சில சிவன் கோயில்களில் இரண்டு மூலவர்கள் இருப்பார்கள். ஆனால் இக்கோவிலில் ஐந்து மூலவர்கள் அருள் பாலிப்பது ஒரு தனி சிறப்பாகும். இதன் பின்னணியில் ஒரு புராண வரலாறு உள்ளது.

பஞ்சபாண்டவர்கள் வனவாசம் செய்தபோது, இத்தலத்தில் சில காலம் தங்கியிருந்தனர். சிவபூஜை செய்ய விரும்பிய அவர்கள், இங்கு தேடிப் பார்த்தும் சிவலிங்கம் எதுவும் கிடைக்க வில்லை. எனவே, அவர்கள் ஐந்து பேரும் ஒரு இலுப்பை மரத்தின் அடியில், இலுப்பைக்காயில் விளக்கேற்றி சிவனை மானசீகமாக வணங்கினர். சிவபெருமான் அவர்கள் ஐந்து பேருக்கும், தனித்தனி மூர்த்தியாக காட்சி தந்தார். அவர்கள் சிவபெருமானிடம், தங்களுக்கு அருளியதைப் போலவே இங்கிருந்து அனைவருக்கும் அருள் செய்ய வேண்டுமென வேண்டிக் கொண்டனர். சிவபெருமானும் ஐந்து மூர்த்திகளாக எழுந்தருளினார். தற்போதும் இக்கோவிலில் ஐந்து லிங்கங்கள் தனித்தனி சன்னதியில் இருக்கின்றது.

தர்மர் வழிபட்ட சிவன் நீலகண்டேஸ்வரர், அர்ஜுனன் வழிபட்ட சிவன் படிகரைநாதர், பீமனால் வழிபடப்பட்டவர் மகதீஸ்வரர், நகுலன் வழிபட்டவர் பரமேஸ்வரர், சகாதேவன் வழிபட்டவர் முத்துகிரீஸ்வரர் என்ற பெயர்களில் அருளுகின்றனர். இவர்களில் நீலகண்டேஸ்வரர், படிகரைநாதருக்கு அம்பிகை சன்னதி உண்டு. இவர்களில் நீலகண்டேஸ்வரர், படிகரைநாதருக்கு அம்பிகை சன்னதி உண்டு. படிகரைநாதர் சன்னதியிலேயே மங்களாம்பிகை தெற்கு நோக்கியபடி இருக்கிறாள். மற்றொரு அம்பிகையான அமிர்தகரவல்லி தனி சன்னதியில் எழுந்தருளி இருக்கிறாள். பீமன் வழிபட்ட சிவன், சோடச லிங்கமாக, 16 பட்டைகளுடன் இருக்கிறார். பதினாறு செல்வமும் பெற இவரிடம் வேண்டிக்கொள்கிறார்கள்.

Read More
ஆக்கூர் தான்தோன்றீசுவரர் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

ஆக்கூர் தான்தோன்றீசுவரர் கோவில்

அம்பிகை சுயம்வர பார்வதி மந்திரம் ஜபம் செய்த இடம்

திருமணத் தடை நீக்கும் பரிகார தலம்

மயிலாடுதுறை – தரங்கம்பாடி சாலையில், மயிலாடுதுறையில் இருந்து கிழக்கே 17 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவார தலம் ஆக்கூர். இறைவன் திருநாமம் ஏகாம்பரேசுவரர். இறைவியின் திருநாமம் காமாட்சி அம்மன்.

கைலாயத்தில் சிவன் பார்வதி திருமணம் நடந்த போது, அதைக்கான தேவர்களும் முனிவர்களும் அங்கு கூடி இருந்தனர்.அதனால் பூமியின் வடதிசை தாழ்ந்து தென்திசை உயர்ந்தது. இதனை சமன்படுத்த, அகத்தியனைத் தென்திசைக்குச் செல்லுமாறு சிவபெருமான் கட்டளையிட்டார். அகத்தியர் தான் தென்திசை நோக்கிச் செல்வதால், சிவ பார்வதி திருமணத்தைக் காண இயலாத வருத்தத்தை கொண்டிருந்தார். ஆனால், சிவபெருமான் தானே அவரைத் தேடி வந்து அகத்திய முனிவருக்கு, பல தலங்களில் திருமணக் கோலத்தில் காட்சி தருவதாக வாக்களித்தார். அப்படி சிவபெருமான், அகத்தியருக்கு திருமணக்கோலம் காட்டிய தலங்களுள் இதுவும் ஒன்று.

இக்கோவிலில் சுவாமி சன்னதியின் வலது பக்கத்தில் அம்பாள் சன்னதி அமைந்து இருக்கிறது. அம்பாள் மணக்கோலத்தில் இங்கு அருள்பாலிக்கிறார். இக்கோவில் திருமண தடை நீங்க ஒரு சிறந்த பரிகாரத்தலமாக விளங்குகின்றது. திருமணம் வேண்டி சுயம்வர பார்வதி ஹோமம் செய்தால் திருமணம் நிச்சயம். இது அன்னை பார்வதி ஈசனை அடைய செய்த வழிபாடு ஆகும். அம்பிகை நாள்தோறும் சுயம்வரபார்வதி மந்திரம் ஜபம் செய்த இடம் ஆக்கூர் ஆகும். சிவபெருமான் அம்பிகையை ஆட்கொண்ட மாதம் பங்குனியில் வரும் வசந்த நவராத்திரி காலம் ஆதலால், இன்றும் இக்கோவிலில் வசந்த நவராத்திரியில் திருக்கல்யாண வைபவம் நடைபெற்று வருகிறது.

இக்கோவிலில் நடைபெறும் சுயம்வர பார்வதி ஹோமத்தில் கலந்து கொண்டால் ஜாதக, பித்ரு, சர்ப்ப, ருது, நவகிரஹ, களஸ்திர, மாங்கல்ய தோஷங்கள் நீங்கி விரைவில் திருமணம் கைகூடும் என்பது ஐதீகம்.

இத்தலத்தில் குழந்தை வரம் வேண்டி சந்தான கோபாலகிருஷ்ண யாகம் செய்தல் சிறப்பு. மழலைச் செல்வத்திற்காக பௌர்ணமி தினத்தில் வெண்தாமரை பூவால் சகஸ்ர நாம அர்ச்சனை செய்தால் குழந்தை பாக்கியம் கிட்டும்.

Read More
நாகப்பட்டினம் காயாரோகணேசுவரர் கோவில்

நாகப்பட்டினம் காயாரோகணேசுவரர் கோவில்

சனி பகவானின் வீரியத்தை குறைக்கும் மகாலட்சுமி பார்வை

சனி பகவானுக்கு எள்ளு பாயாசம் நைவேத்தியமாக படைக்கப்படும் வித்தியாசமான நடைமுறை

நாகப்பட்டினம் மாவட்டம், நாகப்பட்டினத்தில் அமைந்துள்ள தேவார தலம் காயாரோகணேசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் நீலாயதாக்ஷி அம்மன்.

பொதுவாக சிவன் கோவில்களில் சனி பகவான் கிழக்கு அல்லது மேற்கு முகமாகத்தான் எழுந்தருளி இருப்பார். ஆனால் இக்கோவிலில், இறைவன் காயாரோகணேசுவரர் சன்னதியின் ஈசானிய மூலையில், சனி பகவான் தெற்கு நோக்கி எழுந்தருளி இருப்பது ஒரு தனி சிறப்பாகும். இதன் பின்னணியில் ஒரு புராண வரலாறு இருக்கின்றது.

அயோத்தி மகாராஜா தசரத சக்கரவர்த்தி சூரிய குல வம்சத்தை சேர்ந்தவர். பொதுவாக சனி பகவான் ரோகிணி நட்சத்திரத்தில் மற்ற சமயங்களை விட அதிவேகமாக சஞ்சரிப்பார். இதற்கு ரோகிணி சகட பேதம் என்று பெயர். அப்படி அவர் ரோகினி நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் போது, நாட்டில் பல சேதங்கள் விளையும். இதனை ஜோதிட வல்லுநர்கள் மூலம் அறிந்த தசரத சக்கரவர்த்தி, சனிபகவானை தடுக்க போருக்கு ஆயத்தம் ஆனார். போருக்கு கிளம்பும் முன் குலதெய்வமான சூரிய பகவானை வழிபட சென்றார். சூரிய பகவான், தசரத சக்கரவர்த்தியிடம் சனி பகவான் தன் கடமையை செய்கிறார். கடமையைச் செய்பவரை தடுக்கக் கூடாது. அதனால் நீ நாகப்பட்டினம் காயாரோகணேசுவரர் கோவில் சென்று இதற்கான பரிகார பூஜையை செய் என்றார்.

தசரத சக்கரவர்த்தி, நாகப்பட்டினம் காயாரோகணேசுவரர் கோவிலுக்கு வந்து வழிபட்டார். இறைவன் அவரிடம் தனது சன்னதியின் ஈசானிய மூலையில் சனி பகவானை தெற்கு நோக்கி பிரதிஷ்டை செய்து பரிகார பூஜையை நடத்து என்றார். இத்தலத்தில் நவகிரக மண்டபத்தில், நவக்கிரகங்கள் அனைத்தும் மேற்கு நோக்கி, ( தசரத சக்கரவர்த்தி பிரதிஷ்டை செய்த சனி பகவானை நோக்கி), எழுந்தருளி உள்ளனர். சனி பகவானை நீ வணங்கும் போது, இக்கோவிலில் வாயு மூலையில் உள்ள மகாலட்சுமி பார்வை உன் மேல் பட்டு சனி தோஷம் உன்னை அண்டாத வாறு பாதுகாக்கும் என்றும் கூறினார். மேலும் இறைவனே பரிகார பூஜையை எப்படி செய்ய வேண்டும் என்று தசரத சக்கரவர்த்திக்கு உபதேசித்தார். முதல் சனிக்கிழமையிலிருந்து அடுத்த சனிக்கிழமை வரை உபவாசம் இருந்து, சனி பகவானுக்கு அபிஷேகம் செய்து எள்ளு பாயாசம் நைவேத்தியமாக படைத்து வழிபட்டால், சனியினால் ஏற்படும் பாதிப்புகள் விலகும் என்றார். தசரத சக்கரவர்த்தியும் அவ்வாறு பரிகார பூஜை செய்து சனி பகவானை வழிபட்டார்.

தசரதரின் பூஜையால் மகிழ்ச்சி அடைந்த சனி பகவான், அவரது ராஜ்யத்திற்கு எந்த பாதிப்பும் வராமல் தனது பாதையை மாற்றி செல்வதாக கூறினார். தசரத சக்கரவர்த்தி சனி பகவானிடம், இங்கு வந்து வழிபடுபவர்கள் எல்லாருக்கும் எந்த பாதிப்பும் தரக்கூடாது என்று வேண்டினார். அதற்கு சனி பகவானும், இங்கு வந்து தனக்கு பரிகார பூஜை செய்பவர்களுக்கு ஏழரை சனி, கண்டக சனி, பாத சனி, அஷ்டம சனி, ஜென்ம சனி முதலியவைகளால் ஏற்படும் பாதிப்பு குறையும் என்று உத்தரவாதம் அளித்தார்.

இத்தலத்தில் சனி பகவானை வழிபடும் போது மகாலட்சுமி பார்வை நம் மீது விழுவது ஒரு தனிச்சிறப்பு ஆகும். மேலும் வழக்கமாக எள்ளு சாதம் படைத்து வழிபடும் சனி பகவானுக்கு எள்ளு பாயாசம் நைவேத்தியமாக படைப்பது வேறு எந்த கோவிலிலும் இல்லாத நடைமுறை ஆகும்.

Read More
திருமணஞ்சேரி உத்வாகநாதர் கோவில்

திருமணஞ்சேரி உத்வாகநாதர் கோவில்

சிவபெருமான் பார்வதி திருமணம் நடந்த தலம்

மயிலாடுதுறையிலிருந்து 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவார தலம் திருமணஞ்சேரி. இறைவன் திருநாமம் உத்வாக நாதர். இறைவியின் திருநாமம் கோகிலாம்பாள். இத்தலத்து இறைவி கோகிலாம்பாள், கருவறையில் மணக்கோலத்தில், மணப்பெண்ணுக்குரிய நாணத்துடன் அமர்ந்து உள்ளார். திருமணஞ்சேரி என்றால் திருமணம் நடந்த இடம் என்று அர்த்தம். பூலோகத்தில் சிவபெருமானுக்கும் பார்வதி தேவிக்கும் திருமணம் நிகழ்ந்த இடம்தான் இந்த திருமணஞ்சேரி. சிவபெருமானுக்கு பார்வதி தேவியை கன்னிகாதானம் செய்து திருமணத்தை நடத்தி வைத்தவர் மகாவிஷ்ணு. திருமணத்திற்கு புரோகிதராக இருந்தவர் பிரம்மா.

சிவ பார்வதி திருமண நிகழ்ச்சிகள் நடந்த தலங்கள்

ஒரு சமயம் பார்வதி தேவி சிவபெருமானிடம், நாதா! தங்களை பூலோக முறைப்படி திருமணம் செய்ய என் மனம் விரும்புகிறது . அவ்விருப்பத்தை நிறைவேற்றி வைக்குமாறு வேண்ட சிவனும் சிறிது காலம் பொறுத்திருக்கும்படி கூறினார் .

தம் எண்ணம் நிறைவேற வெகுகாலம் ஆகுமென்ற எண்ணத்தில் பார்வதி சிவனிடம் அலட்சியமாக நடந்து கொள்ள, அதை கவனித்த சிவபெருமான்,நான் உன் விருப்பத்திற்கு சம்மதித்த போதும் காலம் கடக்கிறதென அலட்சியமாக நடப்பதால் எம்மைப் பிரிந்து நீ பூலோகத்தில் பசுவாக பிறப்பாய் என கட்டளையிட்டார் .

அம்பிகைக்கு பசு சாபம் கொடுக்கப்பட்ட தலம் தேரழந்தூர். திருமால் பசு மேய்ப்போனாக உருவெடுத்து, பசுக்களை பராமரித்து வந்த தலம் கோமல். ஈசனின் சாபத்தால் அம்பிகை பசுவாகி சிவனின் மீது பக்தி கொண்டு உலவி வந்தார் .அப்படி உலவி வந்தபோது, ஒரு இடத்தில் இருந்த லிங்கத்தின் மீது தினம் பாலைப் பொழிந்து அபிஷேகித்து வந்தார் . பசு உருவில் இருந்த அம்பிகையின் பாதக்குளம்புகள் பட்டு ஈசனின் உடல் மீது தழும்புகள் உண்டான ஊர் 'திருக்குளம்பம்'. பின் திருவாடுதுறையில் சிவனால் பசுவுக்கு முக்தி அளிக்கப்பட்டது.

திருந்துருத்தி எனப்படும் குத்தாலத்தில் பரத மகரிஷி பிரமாண்ட யாகவேள்வி நடத்த அந்த யாக வேள்வியில் சிவபெருமானின் அருளால் அம்பிகை தோன்றினார். தெய்வீகப் பெண் ஒருவர் வேள்வியில் வர ஆச்சர்யப்பட்டு பரத மகரிஷி நிற்க, சிவபெருமான் தோன்றி,மகரிஷியே வேள்வியில் வந்தவர் உமாதேவியே! அவரை உமது பெண்ணாக ஏற்று எமக்கு திருமணம் நடத்த ஏற்பாடு செய்யுங்கள். நான் எதிர் கொண்டு வருவேன் எனக்கூறி மறைந்தார் . இறை உத்திரவுப்படி திருமண யாகங்கள் புரிந்து மங்கள ஸ்நானமும் கங்கணதாரமும் செய்த இடம், திருவேள்விக்குடி.பின் பாலிகை ஸ்தாபனம் குருமுலைப்பாலையில் செய்யப்பட்டது.

அதன் பின்னர் மணமகளான உமாதேவியை அழைத்துக்கொண்டு சிவனை தேடி பரத மகரிஷி வர, இறைவன் மாப்பிள்ளை கோலத்தில் எதிர் கொண்டு காட்சி கொடுத்த இடமே 'திரு எதிர்கொள்பாடி' என அழைக்கபடுகிறது.

பின் மணமகனான சிவனையும் உமாதேவியையும் அழைத்துக்கொண்டு, பூலோக முறைப்படி கல்யாண வைபவம் நடந்த இடம் திருமணஞ்சேரி. திருமணத்தைகாண விண்ணவர்கள், தேவர்கள், நவகிரகங்கள் வந்தனர் . சிவபெருமானும், பார்வதி தேவியும் கைகோர்த்தபடி திருமணக் கோலத்தில் காட்சி தருவது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும்.

திருமண தடை நீக்கும் பரிகாரத் தலம்

திருமணஞ்சேரி நித்திய கல்யாண ஷேத்திரம் ஆகும். இங்கு சிவன் ஸ்ரீகல்யாண சுந்தரராக, ஸ்ரீ உத்வாக நாதராக எழுந்தருளி தன்னை நாடி வந்தோர் திருமணத்தை நடத்தி வைக்கிறார். அம்பிகை எப்படி தாம் விரும்பியவாறு சிவனை மணம் புரிந்து கொண்டாரோ, அதுபோல இங்கே வணங்குவோர்க்கு அவரவர் விருப்பம் போல திருமணம் நடைபெறுகிறது. திருமணஞ்சேரி கோவிலை தரிசித்தால், தடைப்பட்ட திருமணம் விரைவில் நடந்தேறும். நல்ல வரன் கிடைத்து, சிறப்பான இல்வாழ்க்கை அமையும் என்பது ஐதீகம்.

Read More
நாகப்பட்டினம் காயாரோகணேசுவரர் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

நாகப்பட்டினம் காயாரோகணேசுவரர் கோவில்

ஏழு அடி உயர திருமேனி உடைய அபூர்வ மகாலட்சுமி

மகாலட்சுமியின் அருகில் இரண்டு ஐராவதங்களும்,சங்க நிதியும், பதும நிதியும் இருக்கும் அரிய காட்சி

நாகப்பட்டினம் மாவட்டம், நாகப்பட்டினத்தில் அமைந்துள்ள தேவார தலம் காயாரோகணேசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் நீலாயதாக்ஷி அம்மன். நீலாயதாக்ஷி அம்மன், இத்தலத்தின் அரசியாக இருந்து பரிபாலனம் செய்வதால், அவருக்கே இங்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. அதனால் இங்கு வீதிகளின் பெயர்கள் கூட நீலா வடக்கு வீதி, நீலா தெற்கு மடவிளாகம் என்று இருக்கின்றது. இதுபோல அம்மனின் பெயர் தாங்கிய வீதிகள் வேறு எந்த தலத்திலும் இல்லை.

இக்கோவிலில் இறைவன் சன்னதியின் வாயு மூலையில் எழுந்தருளி இருக்கும் மகாலட்சுமி பல தனிச்சிறப்புகளை கொண்டவர். இத்தலத்து மகாலட்சுமியானவள் கருங்கல்லால் ஆன ஏழு அடி உயர திருமேனி உடையவள். இவ்வளவு பெரிய திருமேனி உடைய மகாலட்சுமியை வேறு எந்த தலத்திலும் நாம் தரிசிக்க முடியாது. பொதுவாக சிவாலயங்களில் மகாலட்சுமி இரு கால்களையும் மடக்கி அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். ஆனால் இக்கோவிலில், தனது இரு கால்களையும் தொங்கவிட்ட நிலையில், அர்தத ஆசன கோலத்தில் அமர்ந்து காட்சி தருவது ஒரு தனிச்சிறப்பு ஆகும். மேலும் மகாலட்சுமி தனித்தோ அல்லது இரு யானைகள் உடனிருக்க கஜலட்சுமி கோலத்தில் காட்சி தருவாள். ஆனால் இத்தலத்தில் மகாலட்சுமியின் அருகில் இரண்டு ஐராவதங்களும் (நான்கு தந்தங்கள் உடைய தேவலோகத்து வெள்ளை யானை), சங்க நிதியும் பதும நிதியும் (இந்த இரு தெய்வ மகளிரிடமும் தான் குபேரன் தன் செல்வங்களைக் கொடுத்து வைத்துள்ளான்) உடன் இருப்பது வேறு எந்த தலத்திலும் நாம் காண முடியாத அரிய காட்சியாகும்.

Read More
திருமுல்லைவாசல் முல்லைவனநாதர் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

திருமுல்லைவாசல் முல்லைவனநாதர் கோவில்

பள்ளியறை இல்லாத, பள்ளியறை பூஜை நடைபெறாத தேவார தலம்

சீர்காழியில் இருந்து 14 கி.மீ. தொலைவில் வங்கக் கடலோரம் அமைந்துள்ள தேவாரத் தலம், திருமுல்லைவாசல். இறைவன் திருநாமம் முல்லைவனநாதர், மாசிலாமணீசர். இறைவியின் திருநாமம் அணிகொண்ட கோதையம்மை. சத்தியானந்த சவுந்தரி.

எல்லா பெரிய சிவத்தலங்களிலும் பள்ளியறை உண்டு. தினமும் அதிகாலை வேளையிலும், இரவு வேளையிலும் பள்ளியறை பூஜை நடப்பது வழக்கம். ஆனால் இக்கோவிலில் பள்ளியறை இல்லை. பஞ்சாட்சர மந்திரம் பற்றி அறிந்து கொள்ள இங்குள்ள முல்லைவன நாதரை அம்பாள் வழிபட்டதால், சிவபெருமான் குருவாக இருந்து அம்பாளுக்கு உபதேசித்தார். எனவே இத்தலத்தில் சிவபெருமான் குருவாக வீற்றிருக்கிறார். உமாதேவி வழிபட்டுத் தட்சிணாமூர்த்தியிடம் ஐந்தெழுத்து உபதேசம் பெற்ற தலமாதலால், இங்கு பள்ளியறை பூஜையும் நடத்துவது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. இது மற்ற சிவன் கோவிலில் இருந்து மாறுபட்ட நடைமுறையாகும். சூரிய, சந்திர கிரகணம், அமாவாசை காலங்களில் இங்கு வந்து பஞ்சாட்சர மந்திரத்தை ஜெபிப்பவர்களுக்கு மறு பிறப்பில்லை என்பது ஐதீகம்.

Read More
திருவாரூர் தியாகராஜர் கோவில் - திருவாரூர் அரநெறி

திருவாரூர் தியாகராஜர் கோவில் - திருவாரூர் அரநெறி

தஞ்சாவூர் பெரிய கோவில் விமானத்துக்கு மாதிரியாக திகழ்ந்த சன்னதி விமானம்

நமிநந்தி அடிகள் நாயனாருக்காக, சிவபெருமான் தண்ணீரில் விளக்கெரிய செய்த அற்புதம்

தேவாரப் பாடல் பெற்ற 276 தலங்களில், மூன்று தலங்களில் மட்டும் தான் இரண்டு சன்னதிகள் தனித்தனியே தேவார பாடல்கள் பெற்றுள்ளன. அவை திருவாரூர், திருப்புகலூர், திருமீயச்சூர் ஆகியவை ஆகும். திருவாரூர் தியாகராஜர் கோவிலில் புற்றிடம் கொண்ட நாதர் சன்னதியும், அசலேசுவரர் சன்னதியும் தனித்தனியே தேவாரப் பாடல்களில் போற்றப்பட்டுள்ளன. ஒரு மன்னருடைய வேண்டுகோளின்படி இறைவன் சலியாது எழுந்தருளி இருப்பதால், அசலேசுவரர் எனப் பெயர் பெற்றார்.

இந்த அசலேசுவரர் சன்னதி தியாகராஜர் கோவில் வளாகத்தின் அக்னி மூலை (தென்கிழக்கு) பகுதியில் அமைந்துள்ளது. அசலேசுவரர் கருவறை, அர்த்த மண்டபம், வெளியிலுள்ள கொடிமரம், பலிபீடம், நந்தி மண்டபம் ஆகிய பகுதிகளே திருவாரூர் அரநெறி என்ற தேவாரத் தலமாக கருதப்படுகிறது. இந்த சன்னதியின் விமானம் தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவில் கோபுரத்தை போன்ற கட்டட அமைப்பில் கட்டப்பட்டுள்ளது. இந்த விமானத்தின் கட்டிட வடிவமைப்பை மாதிரியாக கொண்டுதான், பிரகதீஸ்வரர் கோவில் விமானம் அமைக்கப்பட்டது. அசலேசுவரர் கோயில் மூலஸ்தானத்தின் நிழல் கிழக்கு திசையில் மட்டும் விழும். மற்ற திசைகளில் விழாது.

நமிநந்தியடிகள் நாயனார் என்பவர், அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் ஆவார். சிவபெருமானின் தீவிர பக்தர். அனுதினமும் திருவாரூர் கோவிலுக்கு சென்று இறைவனை வழிபடுவார்.

ஒரு நாள் அவர் இக்கோவிலுக்குச் சென்றபோது, அதில் எண்ணெய்/நெய் இல்லாததால் விளக்குகள் அணையப் போவதைக் கண்டார். தொலைவில் வசிப்பதால், விளக்கு எரிய வைக்க எண்ணெய்க்காக பக்கத்து வீடுகளை அணுகினார். அக்கம்பக்கத்தினர், வித்தியாசமான சமய நம்பிக்கை கொண்டவர்கள். உங்களுடைய சிவபெருமான் பெரிய கடவுளாக இருந்தால் இந்த விளக்குகளை தண்ணீர் கொண்டு எரிய வைக்க முடியும் என்று கேலி செய்தார்கள். ஏமாற்றமடைந்த நமிநந்தியடிகள் மீண்டும் கோவிலுக்குச் சென்று, இறைவன் முன் கதறி அழுதார். சிவபெருமான், நமிநந்தியடிகள் முன் தோன்றி, கோவில் குளத்திலிருந்து தண்ணீரை எடுத்து விளக்கேற்றச் சொன்னார். அடிகளார் அவ்வாறு தண்ணீரை நெய்க்குப் பதிலாகப் பயன்படுத்தியபோது, முன்னெப்போதையும் விட கோவில் விளக்குகள் பிரகாசித்தன. இச்சம்பவத்தையும், அடிகளாரின் பக்தியையும் கேள்விப்பட்ட சோழ மன்னன், அடிகளாரை ஆலய நிர்வாகத் தலைவராக்கியதுடன், இக்கோவிலுக்கு ஆதரவாக பல மானியங்களையும் வழங்கினார்.

நமிநந்தி அடிகள் நாயனார் இத்தலத்தில் தண்ணீரால் விளக்கேற்றிய செய்தியை தனது தேவாரத்தில் திருநாவுக்கரசர் குறிப்பிட்டுள்ளார்.

Read More
திருவையாறு ஐயாரப்பர் கோவில்

திருவையாறு ஐயாரப்பர் கோவில்

எமபயத்தை நீக்கும் ஆட்கொண்டார்

நாட்பட்ட வியாதிகளை தீர்க்கும் ஆட்கொண்டார் வழிபாடு

தஞ்சாவூருக்கு வடக்கே 15 கி மீ தொலைவில் அமைந்துள்ள தேவார தலம் திருவையாறு. இறைவன் திருநாமம் ஐயாரப்பர். இறைவியின் திருநாமம் தர்ம சம்வர்த்தினி, அறம் வளர்த்த நாயகி.

தெற்கு கோபுர வாசலில் இடது புறமாக ஆட்கொண்டார் சன்னதியும், வலது புறமாக உய்யக்கொண்டார் சன்னதியும் இருக்கின்றன. திருக்கடவூர் கால சம்ஹாரமூர்த்தியைப் போல, திருவையாறு ஆட்கொண்டாரை வழிபாடு செய்தாலும் நீண்ட ஆயுள் கிட்டும். கூடவே நாட்பட்ட வியாதிகளைக்கூட இத்தல ஆட்கொண்டார் வழிபாடு தீர்த்துவிடுவதாக ஐதீகம். இந்த ஆட்கொண்டேசரே, திருவையாறு மக்களின் காவல் தெய்வமாக விளங்குகிறார்.

ஆட்கொண்டார் எமபயத்தை போக்கி அருள் புரிபவர். முன்னொரு காலத்தில் சுசரிதன் என்ற அந்தணச் சிறுவன் தந்தையும், தாயும் இறந்தபின் மிக்க வருத்தம் கொண்டு, தல யாத்திரை மேற்கொண்டான். அப்போது வழியில் திருப்பழனம் என்ற ஊரில் தங்கியிருந்தான். ஒருநாள் இரவு அவனது கனவில் யமன் தோன்றி 'இன்றைக்கு ஐந்தாம் நாள் உன் உயிரை நான் பறித்து விடுவேன்' என்று உணர்த்தினார். அதைக் கேட்டு அச்சிறுவன் அஞ்சி வசிஷ்ட முனிவரை அணுக, அவரது அறிவுரையின்படி திருவையாறு சென்று சிவதரிசனம், பஞ்சாக்கர ஜபம் முதலியன செய்து வரலானான். வசிஷ்ட முனிவரும் சிறுவனுக்காக ஜபம் செய்யலானார். யமன் ஐந்தாம் நாள் சிறுவன் முன் தோன்றினான். ஐயாற்று எம்பெருமான் துவாரபாலகரை ஏவி அந்தணச் சிறுவனைக் காக்குமாறு பணித்தார். அஞ்சாது எதிர்த்த யமனை துவாரபாலகர்கள் அடக்கினர். பின் சிவபெருமானும் தெற்கு வாயிலின் மேற்புறத்தே தோன்றி சுசரிதனுக்கு ஆயுள் அருளி, எமனையும் சிறுவனின் உயிரை பறிக்க கூடாது என்று உத்தரவிட்டார்.

இவ்விதம் சிறுவனுக்கு எம பயம் தீர்த்த இந்த மூர்த்தியே ஆட்கொண்டேசப் பெருமான் ஆவார். தனது காலின் கீழ் எமனை மிதித்தவாறு அருளும் அவரது திருவுருவம் அற்புதமானது.

இந்தச் சம்பவம் நடந்தது ஒரு கார்த்திகை மாத அஷ்டமி அன்று ஆகும். இந்தப் புராண வரலாற்றின் அடிப்படையில் ஒவ்வோராண்டும் கார்த்திகை மாத காலாஷ்டமி தினத்தன்று காலை காவிரியில் தீர்த்தவாரியும், ஆட்கொண்டார் சந்நிதியில் விசேஷ அபிஷேகங்கள், எண்ணற்ற அளவில் வடை மாலை சாத்துதல் போன்ற வைபவங்களும், இரவு எம் வாகனத்தில் ஆட்கொண்டார் உற்சவர் திருவீதி உலாவும் நடைபெறும்.

ஆட்கொண்டார் எமபயத்தை நீக்குபவர் என்பதால், சஷ்டியப்த பூர்த்தி, பீமரதசாந்தி, சதாபிஷேகம் போன்ற சாந்தி நிகழ்ச்சிகளை இவ்வாலயத்தில் நடத்திக் கொள்வது மிகவும் சிறப்பானது.

Read More
திருப்பாச்சூர் வாசீஸ்வரர் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

திருப்பாச்சூர் வாசீஸ்வரர் கோவில்

கால்கள் சங்கிலியால் கட்டப்பட்ட நிலையில் காட்சி தரும் காளி அம்மன்

திருவள்ளூரில் இருந்து அரக்கோணம் செல்லும் வழியில் 3 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள தேவார தலம் திருப்பாச்சூர். இறைவன் திருநாமம் வாசீஸ்வரர். இறைவியின் திருநாமம் தங்காதலி. இத்தலம் அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகிய மூவராலும் பாடல் பெற்ற தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும்.

இக்கோவிலில் காளி அம்மன் தனி சன்னதியில் தன் கால்கள் சங்கிலியால் பிணைக்கப்பட்ட நிலையில் காட்சி தருகிறாள். இதன் பின்னணியில் ஒரு வரலாற்று நிகழ்ச்சி உள்ளது.

ஒருமுறை குரும்பன் என்ற உள்ளூர் தலைவன், சோழ மன்னன் கரிகாலனுக்கு செலுத்த வேண்டிய வரியை செலுத்தத் தவறினான். குரும்பன், காளி தேவியின் தீவிர பக்தன். நிலுவைத் தொகையை மீட்பதற்காக மன்னன் தன் பகுதிக்கு படையெடுத்த போது, அரசனையும் அவனது படையையும் தோற்கடிக்க உதவும்படி காளியிடம், குரும்பன் வேண்டிக் கொண்டான். சோழ மன்னன் கரிகாலன், சிவபக்தனாக இருந்ததால் சிவபெருமானிடம் உதவிக்காக வேண்டினான். சிவபெருமான் காளியை கட்டுப்படுத்தவும், கட்டவும் நந்தியை அனுப்பினார். நந்தி காளியை தோற்கடித்து அவளை தங்கச் சங்கிலியால் கட்டினார். இந்த சம்பவத்தை எடுத்துரைக்கும் வகையில், இந்தக் கோவில் காளி தேவியின் கால்கள் சங்கிலியால் கட்டப்பட்ட நிலையில் உள்ளன. இவள் சொர்ண காளி என்று அழைக்கப்படுகிறாள்.

Read More
திருப்பாலைத்துறை பாலைவனநாதர் கோவில்

திருப்பாலைத்துறை பாலைவனநாதர் கோவில்

தமிழர்களின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் பிரம்மாண்டமான நெற்களஞ்சியம்

தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் பாபநாசத்தை அடுத்து 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவார தலம் திருப்பாலைத்துறை. இறைவன் திருநாமம் பாலைவனநாதர்.இறைவியின் திருநாமம் தவளவெண்ணகையாள்.

இந்தக் கோவிலின் ராஜகோபுரத்தை ஒட்டி 1640ம் ஆண்டு கட்டப்பட்ட நெற்களஞ்சியம் ஒன்று உள்ளது. இந்த அபூர்வ நெற்களஞ்சியம் (நெற்குதிர்) தஞ்சையை ஆட்சி செய்த அச்சுதப்ப நாயக்கர், ரகுநாத நாயக்கர் போன்ற நாயக்க மன்னர்களின் ஆட்சியின் போது அமைச்சராக திகழ்ந்த கோவிந்த தீட்சிதர் என்பவரால் உருவாக்கப்பட்டது. இதன் கீழ்ப்பகுதி கருங்கல்லிலும், மேற்பகுதி செங்கற்களாலும் காணப்படுகிறது. மேல் பகுதி ஒரே கூம்பு வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நெற்களஞ்சியம் வட்ட வடிவம் கொண்டது. இதன் உயரம் 35 அடி, சுற்றளவு 80 அடி. பலத்த மழை பெய்தாலும் உள்ளே வெள்ள நீர் புகாத வண்ணம் அமைக்கப்பட்டுள்ள இந்த நெற்களஞ்சியம், நம் முன்னோர்களின் கட்டிடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

நெற்களஞ்சியத்தின் அடிப்பகுதி, மேற்பகுதி, நடுப்பகுதி என மொத்தம் 3 பகுதிகள் உள்ளன. ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு வாயில் என மூன்று வாயில்கள், நெல்லை உள்ளே கொட்டுவதற்கும், வெளியே எடுத்து வருவதற்கும் வசதியாக களஞ்சியத்தின் சுவரில் அமைக்கப்பட்டுள்ளன. முதலில் அடிப்பகுதியில் உள்ள வாயில் வழியாக நெல்லை கொட்டுவார்கள். அந்த வாயில் பகுதி வரை நெல் நிரம்பியவுடன், அதை அடைத்துவிட்டு, 2-வது வாயில் வழியாக நெல்லை கொட்டுவார்கள். அந்த வாயில் பகுதியும் நிரம்பியவுடன், 3-வது வாயில் வழியாக நெல்லை கொட்டுவார்கள். 3 வாயில்களும் நிரம்பினால் நெற்குதிர் நிரம்பி விடும். சுமார் 3 ஆயிரம் டன் வரையிலான நெல்லை இந்த குதிரில் சேமிக்கலாம்.

தானியங்கள் விஷ பூச்சிகளுக்கு, இரையாகாமல் பாதுகாப்பதற்கு ஏற்ற தொழில்நுட்பத்துடன் கட்டப்பட்ட இந்த நெற்களஞ்சியம் வரலாற்று சின்னமாகவே கோயிலுக்கு வரும் பக்தர்கள் பார்க்கிறார்கள்.

Read More
திருப்பாச்சூர் வாசீஸ்வரர் கோவில்

திருப்பாச்சூர் வாசீஸ்வரர் கோவில்

சிவராத்திரி அன்று மட்டும் தாழம்பூ பூஜைக்குப் பயன்படுத்தப்படும் தேவார தலம்

திருவள்ளூரில் இருந்து அரக்கோணம் செல்லும் வழியில் 3 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள தேவார தலம் திருப்பாச்சூர். இறைவன் திருநாமம் வாசீஸ்வரர். இறைவியின் திருநாமம் தங்காதலி.

கருவறையில் சிவன் சுயம்பு லிங்கமாக சதுர வடிவ பீடத்தில் காட்சி தருகிறார். சிவலிங்கத்தின் மேல், கோடாரியால் வெட்டப்பட்ட தழும்புகள் காணப்படுகிறது. மேலும் சிவலிங்கம் வெட்டுப்பட்டதால் அதன் மேல் பகுதி மட்டும் இடப்புறத்தில் சற்று நகர்ந்தபடியான கோலத்தில் இருப்பது சிறப்பு. காயம்பட்ட லிங்கம் என்பதால், இந்த சிவலிங்கம் மனித கைகளால் தொடப்படாமல், பூஜை செய்யப்படுகிறது.

மகா விஷ்ணுவும், பிரம்மாவும் சிவபெருமானின் அடி, முடி தேடியபோது, தான் ஈசனின் அடி முடியை கண்டதாக, தாழம்பூவை பொய் சாட்சி சொல்லும்படி பிரம்மா கெஞ்சினார். தாழம்பூவும் ஒத்துக்கொண்டது. அக்னி பேரொளியான சிவபெருமானிடம் சென்ற பிரம்மா, தங்களின் அடி முடியை தான் கண்டதாக கூற, தாழம்பூவும் ஆமாம் என்று பொய் சாட்சி கூறியது.பிரம்மனுக்காக பொய் சொன்ன தாழம்பூவை பூஜைகளில் இருந்து ஒதுக்கி வைத்தார் சிவபெருமான். தாழம்பூ சிவனிடம் தன்னை மன்னித்து பரிகாரம் வேண்டவே, சிவராத்திரி நாளில் மட்டும் தனது பூஜைக்கு பயன்படும்படி சிவபெருமான் வரம் கொடுத்தாராம். இதன் அடிப்படையில் இக்கோவிலில், சிவராத்திரி தினத்தன்று இரவு ஒரு கால பூஜையில் மட்டும் தாழம்பூவை சிவபெருமானின் உச்சியில் வைத்து பூஜை செய்கின்றனர்.

Read More
திருவலஞ்சுழி வெள்ளை விநாயகர் கோவில்
விநாயகர், Vinayagar Alaya Thuligal விநாயகர், Vinayagar Alaya Thuligal

திருவலஞ்சுழி வெள்ளை விநாயகர் கோவில்

சிற்ப நுட்ப, கலைத் திறன் கொண்ட கருங்கல் பலகணி

கருங்கல்லால் ஆன வேலைப்பாடுடன் கூடிய உயரமான குத்துவிளக்குகள்

கும்பகோணம் - தஞ்சாவூர் சாலையில் அமைந்துள்ள திருவலஞ்சுழி என்னும் சிற்றூரில் அமைந்துள்ள வலஞ்சுழிநாதர் கோவில் என்று அழைக்கப்படுகின்ற, தேவாரப்பாடல் பெற்ற, சிவன் கோவில் வளாகத்தில் வெள்ளை விநாயகர் கோவில் உள்ளது.

இக்கோவிலில் கடல் நுரையாலான வெள்ளை நிற பிள்ளையார் எழுந்தருளி உள்ளார். வெள்ளை நிற பிள்ளையார் சன்னதி தேர் வடிவில் அமைந்துள்ளது. தேர்ச்சக்கரம் சற்றே புதைந்த நிலையில் காணப்படுகிறது. அந்த வாயிலின் மேலே விதானத்தில் கருங்கல்லால் ஆன வேலைப்பாடு அழகாக உள்ளது. சுற்றிவரும்போது வேலைப்பாடுடன் கூடிய கொடுங்கையைக் காணமுடியும்.

வெள்ளை விநாயகர் கோவிலின் தூண் மண்டபமும், கருவறையும் அழகான வேலைப்பாடுகளுடன் காண்போரைக் கவரும் வகையில் அமைந்துள்ளன. சித்திரத் தூண்களும், கல்குத்துவிளக்கும் கொண்ட அழகான மண்டபமாக இது விளங்குகிறது.இந்த சன்னதியில் உள்ள சிற்பத் தூண்களும், சிற்ப நுணுக்கம் மிகுந்த அடைவுகளும் உலகச் சிறப்பு வாய்ந்தன. தூண்களின் அமைப்பு வித்தியாசமாகக் காணப்படுகிறது. தூண்களைக் கடந்து உள்ளே போகும்போது கருங்கல்லால் ஆன வேலைப்பாடுடன் கூடிய உயரமான குத்துவிளக்குகள் காணப்படுகின்றன. இந்த குத்துவிளக்குகள் இச்சன்னதியின் தனித்துவங்களில் ஒன்றாகும்.

புகழ்பெற்ற கருங்கல் பலகணி

வெள்ளை விநாயகர் சன்னதியின் எதிரில், புகழ்பெற்ற திருவலஞ்சுழி கருங்கல் பலகணி (கருங்கல் ஜன்னல்) இங்கே உள்ளது. கோஷ்டங்களில் காணப்படும் கருங்கல்லால் ஆன ஜன்னல்களும் பார்ப்பவர் மனதை ஈர்க்கும் வகையில் உள்ளன. அக்காலத்தில் கோவில் கட்டுவதற்கு சிற்பிகள் எழுதித்தரும் ஒப்பந்தப் பத்திரத்திற்கு முச்சிளிக்கா என்று பெயர். அதில் அவர்கள் முக்கிய நிபந்தனையாக விதிப்பது என்னவென்றால், திருவலஞ்சுழி கோவில் பலகணி, ஆவுடையார் கோயில் கொடுங்கை, கடாரம் கொண்டான் கோவில் மதில், தஞ்சைப் பெரிய கோபுரம், திருவீழிமிழலை கோவிலுள் உள்ள வௌவால்நத்தி மண்டபம் போன்ற வேலைப்பாடுகள் தவிர, வேறு எந்த வேலைப்பாடும் செய்து தர முடியும் என்று குறிப்பிடுவார்களாம். இவ்வாறாக நிபந்தனை விதிக்கும் அளவு மிகவும் நுட்பமான வேலைப்பாடுகளைக் கொண்டதாக அந்த வேலைப்பாடுகள் அமைந்திருக்கின்றன.

சிற்ப நுட்ப, கலைத் திறன் கொண்ட திருவலஞ்சுழி கருங்கல் பலகணி 9 அடி உயரமும், 7 அடி அகலமும் கொண்டுள்ளது. இந்த கருங்கல் பலகணி மிகச் சிறந்த தத்துவங்களை உள்ளடக்கியது. இந்தப் பலகணியில் 4 தூண்களும், 111 கண்களும், 49 மலர்களும், 24 கர்ண துவாரங்களும், 10 யாளிகளும் உள்ளன. மூன்று பாகங்களாக குறுக்குவாட்டில் ஒரே கல்லினாலும், நெடுக்குவாட்டில் ஒன்றன் மீது ஒன்றாக மூன்று கற்களினாலும் அமைக்கப்பட்டுள்ளது.

நெடுக்குவாட்டு கற்கள் மும்மூர்த்திகளையும், மூன்று தத்துவங்களையும், 4 தூண்கள் 4 யுகங்களையும், 111 கண்கள் மந்திரங்களையும், 49 மலர்கள் ஆகமங்கள், புராணங்கள், இதிகாசங்கள் ஆகியவற்றையும், 24 கர்ண துவாரங்கள் அஷ்ட மூர்த்திகள், அஷ்ட ஐஷ்வர்ய சித்திகள் மற்றும் எட்டு வசுக்களையும், 10 யாளிகள் எட்டு திசைகளுடன் பாதாளம் மற்றும் ஆகாசம் என 10 திக்கு நாயகர்களையும் குறிப்பதாக உள்ளன.

Read More
திருக்காரவாசல் கண்ணாயிரநாதர் கோவில்

திருக்காரவாசல் கண்ணாயிரநாதர் கோவில்

தலையில் குண்டலினி சக்தியுடன் காட்சியளிக்கும் அபூர்வ தட்சிணாமூர்த்தி

நாடிஜோதிடம் துவங்கிய கோவில்

திருவாரூர் - திருத்துறைப்பூண்டி சாலை வழியில் திருவாரூரில் இருந்து 13 கி.மி. தெற்கே, அமைந்த தேவார தலம் திருக்காரவாசல். இறைவன் திருநாமம் கண்ணாயிரநாதர். இறைவியின் திருநாமம் கைலாச நாயகி. இக்கோவில் சப்தவிடங்க தலங்களுள் ஆதி விடங்கத் தலம். திருவாரூர், திருக்கோளிலி, திருமறைக்காடு, திருவாய்மூர், திருநள்ளாறு, திருநாகைக்காரோணம் ஆகியவை மற்ற சப்தவிடங்கத் தலங்களாகும். இங்குள்ள தியாகராஜர் சன்னதி விசேஷம். இவரது நடனம் 'குக்குட நடனம்' என்று வழங்கப்படுகிறது. அதாவது சேவல் அசைந்து செல்வது போல் இருக்கும்.

இங்குள்ள தட்சிணாமூர்த்தி 'ஞான தட்சிணாமூர்த்தியாக' அருள்பாலிக்கிறார். அவர், தலையில் குண்டலினி சக்தியுடன் காட்சியளிப்பது அபூர்வமான ஒன்று. ஞானமகாகுருவின் எதிரில் அகத்தியர் சுவடி படிக்கும் காட்சி அமைந்திருக்கிறது. அதனால் நாடிஜோதிடம் துவங்கிய கோவில் இது என்று கருதப்படுகிறது.

Read More
திருசோபுரம் சோபுரநாதர் கோவில்

திருசோபுரம் சோபுரநாதர் கோவில்

தட்சிணாமூர்த்தியின் திருமேனியைத் தட்டினால் மரத்தை தட்டின ஒலி எழும் அதிசயம்

மஞ்சள் வஸ்திரத்திற்கு பதிலாக வித்தியாசமாக வெள்ளை வஸ்திரம் அணியும் தட்சிணாமூர்த்தி

கடலூர் – சிதம்பரம் சாலையில், 18 வது கி.மீ. தொலைவில் உள்ள ஆலப்பாக்கம் என்ற ஊரில் இருந்து இரண்டு கி.மீ.தூரத்தில் உள்ள தேவார தலம் திருச்சோபுரம். இறைவன் திருநாமம் சோபுரநாதர், மங்களபுரீஸ்வரர். இறைவியின் திருநாமம் சோபுர நாயகி, தியாகவல்லியம்மை.கோயில் உள்ள பகுதி திருச்சோபுரம் என்றும், பக்கத்தில் உள்ள பகுதி தியாகவல்லி என்றும்

அழைக்கப்படுகிறது. திரிபுவனச் சக்கரவர்த்தி முதல் குலோத்துங்கனின் பட்டத்து மனைவியான தியாகவல்லியால் திருப்பணி செய்யப்பட்ட காரணத்தால், இத்தலம் தியாகவல்லி என்று பெயர் பெற்றது.

இத்தலத்து தட்சிணாமூர்த்தி சற்று வித்தியாசமான தோற்றத்தில் காட்சியளிக்கிறார். வழக்கமாக வலது கையில் நாகமும், இடது கையில் அக்னியும் ஏந்தியிருக்கும் தட்சிணாமூர்த்தி, இத்தலத்தில் இடது கையில் நாகம், வலது கையில் அக்னி என மாற்றி வைத்துள்ளார். மேலும் அவர், இத்தலத்தில் இசையின் வடிவமாக அருளுகிறார். கருங்கல்லாலான இவரது திருமேனியை தட்டிப் பார்த்தால், மரத்தை தட்டினால் எந்த ஓசை எழுமோ, அந்த ஓசை கேட்கிறது. இத்தகைய தட்சிணாமூர்த்தியை நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது. இவர் தன்னை வழிபடும் பக்தர்களுக்கு ஞானத்தை அருள்வதால், இவருக்கு மஞ்சள் வஸ்திரம் அணிவிக்காமல், வெள்ளை வஸ்திரம் சாத்தி வழிபடுவது மற்றுமொரு சிறப்பம்சம்.

இசையில் வல்லமை பெற விரும்புபவர்கள், இசையின் வடிவமாக விளங்கும் இவருக்கு விசேஷ பூஜை செய்து வேண்டிக் கொள்கின்றனர்.

Read More
திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவில்

திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவில்

திருவண்ணாமலை மகாதீபத்தின் சிறப்புகள்

பஞ்சபூதங்களுக்குரிய தலங்களில் நெருப்புக்குரியது திருவண்ணாமலை. இத்தலத்தை நினைத்தாலே முக்தி தரும். இங்கு சிவபெருமானே மலையாக அமர்ந்திருப்பதாக ஐதீகம். அதனால் தான் மலையை கிரிவலமாக வந்து வழிபடுவது, சிவபெருமானை வலம் வந்து வணங்குவதற்கு இணையாகக் கருதப்படுகிறது.

திருவண்ணாமலையின் சிறப்புகளுக்கு முதன்மையானதாக இருப்பது திருக்கார்த்திகை அன்று மலை உச்சியில் ஏற்றப்படும் மகாதீபம் தான். இது போல் மலை உச்சியில் தீபம் ஏற்றி வழிபடும் வழக்கம் வேறு எந்த கோவிலிலும் கிடையாது. திருவண்ணாமலை மலை உச்சியில் தீபம் ஏற்ற பயன்படுத்தும் கொப்பரை சுமார் 2 ஆயிரம் லிட்டர் நெய் பிடிக்கும் அளவு கொண்டது. மலை உச்சியில் ஏற்றப்படும் தீபத்தின் ஒளி சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவுக்கு தெரியும். இந்த தீபம் சுமார் 11 நாட்கள் தொடர்ந்து எரியும் என்பது குறிப்பிடத்தக்கது..

திருவண்ணாமலையில் ஏற்றப்படும் கார்த்திகை தீபத்தை நேரில் பார்ப்பவர்கள் 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்கும்.

திருவண்ணாமலை தீபத்தன்று மலையை பார்த்து நமசிவாய சொன்னால் அந்த மந்திரத்தை 3 கோடி முறை உச்சரித்த புண்ணியம் கிடைக்கும்.

திருவண்ணாமலை உச்சியில் தீபம் ஏற்றப்படும் போது மலைக்கு உள் பகுதியிலும், பூஜைகள் நடக்கும் ஒலி கேட்டதாக ரமணர், சேஷாத்திரி சுவாமிகள் உள்பட பல அருளாளர்கள் கூறியுள்ளனர்.

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்ட பிறகு அதைப் பார்த்து வணங்கிய படி கிரிவலம் வந்தால், அந்த ஜோதியின் கதிர்கள் நம் உடம்பில் பட்டு ஆன்மசக்தி அதிகரிக்கும் என்பது ஐதீகம்.

தீபத் திருநாளில் 5 முறை (மொத்தம் 70 கி.மீ. தூரம்) கிரிவலம் வந்தால், அவர்கள் எவ்வளவு பெரிய பாவம் செய்திருந்தாலும், அவற்றில் இருந்து முழுமையான விமோசனம் கிடைக்கும் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது.

மலை மீது தீபம் ஏற்றப்படும் போது,'தீப மங்கள ஜோதி நமோ !நம' என்ற பாடலை பாடி வழிபட்டால் வாழ்வில் மங்களம் பெருகும்.

கார்த்திகைத் தீபத்துக்கு மூன்றாவது நாள் மலையை பஞ்ச மூர்த்திகளும் வலம் வருவது மிகச்சிறப்பாக நடைபெறும். அப்போது நாமும் கிரிவலம் வருவது மிகப் பெரிய புண்ணிய பலனை தரும்.

கார்த்திகை தீபத்தன்று கிரிவலம் செல்பவர்களுக்கு ஆயிரம் அசுவமேத யாகம் செய்த பலன் கிடைக்கும்.

கார்த்திகை தீபம் தினத்தன்று சிவலிங்கம் முன்பு நெய்தீபம் ஏற்றி வழிபாடு செய்தால், அவர்களது வாழ்க்கை பிரகாசமாக இருக்கும் என்பது நம்பிக்கை.

கார்த்திகை தீபம் ஏற்றப்படும் காட்சியை நேரில் பார்த்து வழிபடுபவர்களுக்கு, சகல தானம் கொடுப்பதால் கிடைக்கும் புண்ணியங்கள் கிடைக்கும்.

கார்த்திகை மாதம்,கார்த்திகை நட்சத்திரத்தில் திருவண்ணாமலை தலத்தில் ஏதாவது ஒரு இடத்தில் தீபம் ஏற்றி வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

Read More