வரதராஜப் பெருமாள் கோவில்

மூன்று திவ்ய தேச பெருமாள்கள் எழுந்தருளியிருக்கும் தலம்

சென்னையில் இருந்து சுமார் 25 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது, பூந்தமல்லி வரதராஜப் பெருமாள் கோவில்.

ஸ்ரீராமானுஜரின் குருவான திருகச்சி நம்பிகளின் அவதாரத் தலம் இதுவாகும். இந்த ஆலயத்தில் திருக்கச்சி நம்பிகள் கையில் விசிறியுடன் காட்சி தருகிறார். இங்கு மூலவரான வரதராஜப் பெருமாள், புண்ணியகோடி விமானத்தின் கீழ், பின் தலையில் சூரியனுடன் இருக்கிறார். இதனால் இது சூரிய தலமாகவும் கருதப்படுகிறது.

இந்த ஆலயத்தில் திருப்பதி வேங்கடேசர், திருவரங்கம் அரங்கநாதர், காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் ஆகியோருக்கும் சன்னிதிகள் உள்ளன. மூவருக்கும் தனித்தனியாக பிரம்மோற்சவமும் நடை பெறுகிறது. அப்போது மூவரும் திருக்கச்சி நம்பிக்கு, கருடசேவை காட்சி தருவர்.

இத்தல தாயார், மல்லிகை மலரில் அவதரித்ததால் 'புஷ்பவல்லி' என்று பெயர். இவள் பூவில் இருந்தவள் என்பதால், இந்த ஊர் 'பூவிருந்தவல்லி' என்றானது. அதுவே மருவி 'பூந்தமல்லி' என்று அழைக்கப்படுகிறது.

திருமாலுக்கு விசிறி சேவை செய்ய எண்ணிய திருக்கச்சி நம்பிகள், முதலில் திருவரங்கம் சென்றார். அரங்கநாதரோ, தான் காவிரிக்கரையில் குளிர்ச்சியாகவே இருப்பதாக சொல்லி விட்டார். பின்னர் திருக்கச்சி நம்பிகள், திருப்பதி சென்றார். அங்கிருக்கும் வேங்கடேசனோ, தான் மலை மீது இருப்பதால் எப்போதும் குளிரில் இருப்பதாக கூறினார். இதனால் காஞ்சிபுரம் வந்த திருக்கச்சி நம்பிகள், அங்கு உக்கிரமாக இருந்த வரதராஜருக்கு தன்னுடைய விசிறி சேவையை செய்து வந்தார்.

திருக்கச்சி நம்பிகள், தினமும் காஞ்சிபுரம் சென்று விசிறி சேவை செய்து வந்தார். அதோடு இங்கு நந்தவனம் அமைத்து மலர்களைத் தொடுத்து மாலையும் அணிவித்து வந்தார். வயதான பின்பும் இதே போன்று அவர் காஞ்சிபுரம் சென்று வந்து கொண்டிருந்தார். அவரது தள்ளாத வயதை கருத்தில் கொண்ட வரதராஜப் பெருமாள், பூந்தமல்லிக்கே வந்து காட்சி தந்தார். அந்த இடத்தில்தான் தற்போதைய ஆலயம் இருக்கின்றது.

 
Previous
Previous

சாட்சி கணபதி கோவில்

Next
Next

சிவசைலநாதர் கோவில்